பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

 

பெண்கல்வியிலிருந்து தன்னறம் நோக்கி

https://www.jeyamohan.in/182820/

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் எழுத்தாளர் லோகமாதேவி,ஜெயந்தி ஆகியோர் எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதங்கள் உள்ளன. அவர்களுடைய கல்வி வேலை சார்ந்த போராட்டங்களை,கல்வியால் தாங்கள்  பெற்றவைகளை எழுதியிருந்தார்கள். உண்மையில் அவர்களுடையது நிறைவான வெற்றிக்கதைகள். 


                           எழுத்தாளர் லோகமாதேவி


லோகமாதேவியை கவனிக்கும் போது 'இந்த மாதிரி நானும் பள்ளி அளவிலாவது ஆசிரியராகியிருந்திருக்க வேண்டும்' என்று எனக்குத் தோன்றும்.

ஆனால் மூன்று நான்கு முறை ஆசிரியர் தகுதி தேர்வுகள் எழுதியும் ஒருமதிப்பெண் ,இரண்டு மதிப்பெண்கள் என்று வழக்கம் போல கணிதம் காலைவாரிவிட்டது . தனியார் பள்ளி வேலை பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு மாதிரி சக்கையாகப் பிழிந்து வீட்டிற்கு அனுப்புவது. என் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இரு வண்டிகளை ஒரு மாட்டை வைத்து ஓட்டுவதற்கு இயலாத என் திறமையின்மையும் ஒரு காரணம்.

இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு கொஞ்சம் தள்ளி இன்னொரு பக்கம் உள்ளது என்பதற்காக இந்தப்பதிவை எழுதுகிறேன். என்னுடையது  ஒரு மாதிரி லௌகீகத்திற்கு அருகில் இல்லாத வாழ்க்கை. என்றாலும் கூட தன்னறத்தின் பின்னால் சென்றுகொண்டிருக்கும் பரவசம் கொண்ட வாழ்க்கை. குட்டிக்குட்டியான மனநிறைவுகளை  தொட்டுப் பார்த்து ,ருசிக்கத் தொடங்கியிருக்கிறேன். 

சென்றவாரம் தம்பி பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு, இரவு காட்சி முடிந்ததும் எனக்கு வாட்ஸ்ஆப்பில் இருபது செய்திகளுக்கு மேல் அனுப்பியிருந்தான். இரவு பதினோரு மணிக்குப் பிறகு வாட்ஸ்ஆப் பார்ப்பதில்லை என்பதால் இணையத்தை துண்டித்து அலைபேசியை அப்பால் வைத்துவிட்டு நாடகஆசிரியர் டி.கே சண்முகனாரைப் பற்றி வாசிக்கத் தொடங்கினேன்.
காலையில் எழுந்ததும் பார்த்தால் முதல் செய்தியே யூ ஆர் எ ஃபெய்லியர் என்று தொடங்கி அது போன்ற நான்கைந்து செய்திகள். போலிஎழுத்தாளர் என்பது மாதிரியான சிலசெய்திகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தான். பள்ளிவயதில் கல்கி நாவல்களை நானும் தங்கையும் வாசிக்கும்போதே கேலி செய்வான். பொன்னியின் செல்வன் படத்தின் மீது இப்போது வைக்கப்படுகின்ற விமர்சனம் அவனுக்கும் உண்டு. அங்கிருந்து என் மீது பாய்கிறான் என்று தெரிந்தது. என் மூலமாக அவனுக்கு எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியும். இணையத்தில் கிடைக்கும் மேலோட்டமான செய்திகளை வாசித்திருப்பான். மொத்தம் முப்பத்தி இரண்டு ஒருவரி குறுஞ்செய்திகள்.  அப்படியே டெலிட் சாட் கொடுத்துவிட்டு அணிலாடும் முன்றிலார் பாடலை வாசிக்கத்தொடங்கினேன். 

இது வாசிப்பு, எழுத்து பற்றிய இன்றைய பொதுவான நிலை. நாம் இருக்கும் இடத்தில் இருந்துதான் நாம் பேசமுடியும். நான் புரட்சி பேசிக்கொண்டிருந்தால் இன்னேரம் இவனை மாதிரியே ஒரு சராசரியிடம் அகப்பட்டு குடும்பத்தலைவியாகி என்னை விட அறிவின் கீழ் உள்ள ஒருவரின் எகத்தாளமான கேலி பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பே அதிகம். திருமணம், குடும்ப அமைப்பின் மீது கசப்பு எனக்கில்லை. குடும்பம் ,உறவுகள் மீது மிகுந்த பற்று உள்ள ஆள். ஆண் பெண் இருவருக்குமே பெரும்பாலும்  குடும்பமே பாதுகாப்பு என்பதில் என்னளவில் மாற்று கருத்தில்லை. சிலவற்றை சரி செய்ய வேண்டும். புரியவைக்க வேண்டும். இதனுடைய சராசரித் தன்மை  எரிச்சலூட்டுவது. 

பெண்களுக்கு இங்குள்ள திருமண அழுத்தம் சாதாரணமானதில்லை. கல்லூரியில் 
படிக்கும் வரை பெண்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். லோகமாதேவியின் கல்லூரி காலகட்டத்திலாவது   பெண்களுக்கு  சமூக சூழல் தெரியும்படியான, நேர்மையான காலகட்டமாக இருந்திருக்கிறது. இன்று சகுனிகளின் காலம் [சிரிப்பு வந்தாலும் அதுதான் உண்மை]. இன்றைக்கான குடும்ப விவேகம் என்பது பெண்பிள்ளைகளை கல்வி கற்க வைத்து, செல்லம் கொடுத்து,கேட்டதை எல்லாம் உடனே வாங்கிக்கொடுத்து திருமணம் வரை அவர்கள் யார் என்றும்,அவர்களுக்கான சமூக அழுத்தம் என்ன என்றும்  தெரியாமல் பார்த்துக்கொள்வது. அதற்காகத்தான் இன்றும் எழுத்தாளர் அம்பை வேண்டும். கல்லூரியில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

ஒருவர் அய்யாவிடம் அடிக்கடி., "பொட்டப்பிள்ளைக்கு வெவரம் தெரியறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சு விட்டிருக்கனும்," என்று அறிவுரை சொல்வார்.
அம்மாவிடம் ஒரு அம்மாள் பெண்நாய்குட்டியை எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் அது வீட்டில் தங்காது என்று சொல்வதை என் காதில் கேட்டிருக்கிறேன். [பழமொழியை நாகரீகமாக மாற்றியிருக்கிறேன்] என் பெற்றோர் மீது நான்  கண்மூடித்தனமான பற்று வைத்திருப்பதன் காரணம்...அவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்கள்,உறவுகள் சொல்வதை நம்பாமல் என்னை நம்பியதால் தான். அந்த நம்பிக்கை கிடைக்காத என் தலைமுறையின் சில பெண்களின் வாழ்க்கை, திசைமாறி தவிப்பதை கண்முன்னால் காண்கிறேன். 

என் தலைமுறையின்
காதல் திருமணங்களை கவனிக்கிறேன். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திற்கும் அதற்கும் பெரிய வேறுபாடில்லை. முன்பு வாசிக்கும் பழக்கம் இருந்த ஓரிருவர் கூட இன்று  புத்தகத்தை எடுக்கும் பழக்கமில்லாமலாகி விட்டார்கள்.
எனக்கு திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்று நான் யோசித்தது இலக்கியத்திற்காகத் தான். ஒரு அத்தை, "கல்யாணம் முடிஞ்சா இந்த புத்தகத்தையெல்லாம் தூக்கி போட்டுட்டு ஒழுங்கா குடும்பத்துக்கு லட்சணமா இருக்கனும்," என்றார். புத்தகத்தை தூக்கி போட முடியாது. பெற்றவர்களின் பிள்ளையாய் 'ஒழுங்கா' இருந்து கொள்கிறேன் என்று நான் வாழும் வாழ்க்கையே அவருக்கு  சொல்லிக்கொண்டிருக்கும் பதில் . நான் என்னை நோக்கி வரும் எவ்வளவு கூரான வார்த்தைகளுக்கும் பதில் சொல்லியதில்லை. [மேலும் என் குரல் தீவிர விஷயங்களைக்கூட சிரிப்பிற்குரிய விஷயமாக்கி என்னை கைவிட்டுவிடும். ] என் தலைமுறையில் என் சூழலில் நான் ஏன் சரியாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றால்...நான் முதல் தலைமுறை பட்டதாரி, முதல் தலைமுறை இலக்கியபடைப்பாளி என்பதால் தான்.

 இன்னும் எங்கள் ஊரில் கலை இலக்கியம் என்று ஒன்று உள்ளது என்ற பிரக்ஞை இல்லை. கல்வியே இப்போதுதான் இயல்பாகி இருக்கிறது. என்னை ஒரு சமூகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இனிமேல் இங்கு எதாவது ஒரு பிள்ளைக்கு ,எதாவது ஒரு கலை அல்லது இலக்கிய துறையில் ஈடுபாடு இருக்குமானால்,திருமணத்திற்கு முன்பு உயர் கல்விக்கு அதிக காலம் தேவைப்படுமானால் , என்னை என் பெற்றோர் நம்பியதை போல அவளுக்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். 'சரியாக இருத்தல்' என்ற வார்த்தைக்கு வாய்விட்டு சிரிப்பதில் இருந்து எதிர்த்து பேசாமல் இருப்பது வரை பல அர்த்தங்கள் உண்டு. சாதாரணமாக ஒரு குடும்பம் பெண்களுக்கு என்று உருவாக்கி அளித்திருக்கும் அனைத்து சட்டதிட்டங்களையும் ஒத்துக்கொள்வது.

வேறுவழியில்லை நான் எழுத வேண்டும். இந்த அன்றாட ஆணவங்களில் ஈடுபட்டு வாசிப்பை, எழுத்தை இழக்க விரும்பவில்லை. அதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயல்பாக, கொஞ்சம் கீழிறங்கியும், சராசரிகளின் ஈகோவை என்பக்கம் இருந்து விலக்குகிறேன். எனக்குப்பின் ஊரில் உறவில் ஒரு பெண் சராசரியில் இருந்து விலகி எதாவது செய்ய நினைக்கும் போது, அதற்கு தடை போட என்னை சாக்காக சொல்லக்கூடாது. என் நிலத்தில் இருந்தால் தான் என்னால் எழுத முடியும் மற்றும் இன்னும் சில உளவியல் ரீதியான பதட்டங்களுக்கு நான் வாழும் நிலமே எனக்கு நல்லது. இங்குதான் நான் காந்தியின் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கிறேன். இங்குதான் காந்தி எனக்கு ஆன்ம பலத்தை தருகிறார்.

தாத்தாவின் சொந்தத்தில் உள்ள அந்த அத்தை சொல்வது மாதிரி புத்தகம் எடுக்காமல் என்னால் இருக்க முடியாது. புத்தகம் வாசிக்க முடியாத வாழ்வில் எனக்கென எதுவுமில்லை. முரட்டுத்தனமான மிடில்க்ளாஸ் மென்டாலிட்டி பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். ஒரு குண்டுமணிக்கு மாற்றில்லாமல் அனைத்தும் லௌகீக பயன் சார்ந்தது மட்டுமே. 'எழுதி என்ன கிடைக்குது' என்ற கேள்வி உறவில் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சிறு புன்னகையுடன் மௌனமாகவே இருக்கிறேன். உறவுகளில் இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்து படித்த ஆண்கள் உண்டு. ஆனால் மனநிலையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

முன்பு காதலுக்கு வைக்கப்பட்ட அதே நிபந்தனை இன்று பெண்களின் தன்னறம் சார்ந்த செயல்களுக்கு வைக்கப்படுகிறது. இதற்கு அப்பால் தம்பி என் உடல் மனநலன் மீது மிகுந்த அக்கறையும் பதட்டமும்  கொண்டவன்.  இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்காக ஒரு சிறு உதவியும் செய்யமாட்டேன் முடிந்தால் நீயே பார்த்துக்கொள் என்று கைவிடுவதுதான் இது. [ தன்னறமும் தீவிர காதல் தானே]
மாத்திரைகளை தவறாமல் அவனே நினைவு வைத்திருந்து வாங்கிவருபவன்.
இலக்கியம் தான் அவனுடைய சிக்கல். இன்றைய  இளைஞர்களுக்கு இலக்கியம் மீதுள்ள இந்த எதிர்மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. கல்வி அறிவு இல்லாதவன் என்றால் கூட பரவாயில்லை. உயிர்தொழில்நுட்பவியலில் உயர்கல்வி பயின்றவன். பிறந்ததில் இருந்து உடன் இருக்கும் இவனுக்கே புரியவைக்க முடியவில்லை என்ற அழுத்தம் எனக்கு உண்டு. தங்கை சரியாக புரிந்து கொள்வதால் தான் என்னால் சமாளிக்க முடிகிறது. அவள் வேலை, திருமணம் ,குழந்தைகள் என்று வாசிப்பதை விட்டுவிட்டாள். டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்று திரும்பியதில் இருந்து மறுபடி வாசிக்கத்தொடங்குவதை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அவள் திருமணத்திற்கு பரிசளித்த அறம் தொகுப்பை மறுபடியும் எடுத்துக்கொடுத்தேன். இந்த விடுமுறையில்  மறுபடியும் வாசிக்கத்தொடங்கியிருக்கிறாள்.

எழுத்து சார்ந்த புதிய  கனவுகள் முளைவிடும் இந்த பரவசமான நேரத்தில் யாருடனும் எதற்காகவும் வாதிட விரும்பவில்லை. அடிக்கடி தம்பியின் வாட்ஸ்ஆப் சாட்டிற்கான என்னுடைய பதில் க்ளியர் சாட் தான்.

எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் எனக்கு உள்ள  ப்ரியத்தை நான் உணர்ந்து கொண்டே இருக்கிறேன். லோகமாதேவியின் ஆசிரியர் சொல்லியதைப் போல வாழ்க்கையில் கஸ்ட்டம் இருக்கும்தான் இல்லையா? அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். லோகமாதேவியின் காலகட்டத்தைப் போல கல்விசார்ந்த தடைகள் இன்று குறைவு. பெண்களை விரும்பி படிக்க வைக்கிறார்கள். நடைமுறை சார்ந்த பயன்களை கருத்தில் கொண்டு பெண்களுக்கான உயர்கல்வி,வேலை ஏற்கப்பட்டு விட்டது.

ஆனால் இன்று பெண்களுக்கு தன்னறம் சார்ந்த தடைகள் உடைக்கமுடியாத அளவுக்கு உள்ளது. அழுத்தம் தாங்காமல் தாங்கள் விரும்பிய புத்தகவாசிப்பை விட்டு விலகிய ஒருசில தோழிகள் எனக்கு உண்டு. கல்லூரியில் படித்து முடிக்கும் பெண்கள் நிதானமாக தங்களை சுற்றி நடப்பவைகளை, தங்கள் கண்முன் இருந்து மறைக்கப்படுபவைகளை ,தங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களை கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காதலில் கூட மிக கவனமாகவே இருக்க வேண்டும். காதல்... காதலிற்கு பிறகு ஒன்றுமில்லாமல் போவதை கண்கூடாக காண்கிறோம். அதற்காக  நம்முடைய passion ஐ விலைகொடுக்க வேண்டுமா? அந்த தகுதி அதற்கு உண்டா என்று யோசிக்கலாம். காதல் வேண்டாம் என்று சொல்லக்கூடியதல்ல. ஆனால் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், முதலில் கேட்பவருக்கு சரி சொல்வது என்பது மாதிரியான விஷயங்களை பெண்கள் யோசிக்கலாம். 

நம்மை அதிகபடியாக உலகியலில் தள்ளிக்கொண்டே இருக்கும் விசைகளின் சுயநலத்தை புரிந்து கொள்ளலாம். [ஆண்களை மட்டும் குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம்..இவை அனைத்தையுமே பெண்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்]. 
சூழலை, நம்மை நிதானமாக அணுகி நம் தன்னறத்தை எப்படி பொத்தி  பாதுகாத்து வைத்து கொள்வது என்பதை அவரவர் சூழல்களுக்கு ஏற்ப தெரிந்து கொள்ள வேண்டியது இன்றைய சுதந்திரமான சூட்டிகையான தைரியமான பெண்களுக்கான தேவை என்று தோன்றுகிறது. என்னை பற்றி எழுத நினைத்து திசை மாறிவிட்டது என்றாலும் சரியான இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

நானும் ஜெ வின் புனைவு களியாட்டு கதைகளை தொடர்ந்து வாசித்தேன். 
அதில் உள்ள 'தேவி' கதைகள் கல்லூரி பாடங்களாக வைக்க வேண்டியவை. 

இந்தப்பிள்ளைகளுக்கு முதலில் என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும். அதற்கு பிறகு நிறைய பெண்கள் லௌகீக பயன் சாராத இலக்கியம் போன்ற துறைகளுக்கு வரக்கூடும். வந்துவிட்டால் பதினாறு அடிக்கு மேல் பாயக்கூடியவர்கள் தான்.

கீழே லோகமாதேவியின் இணைய பக்கத்திற்கான சுட்டி இணைக்கப்பட்டுள்ளது. தாவரவியல் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் செறிந்த கட்டுரைகளை  எழுதுகிறார்.



இனி வரும் பெண்களுக்கு தன்னறத்தின் பாதை இன்னும் கொஞ்சம் எளிதாக மாறும் என்னும் அசட்டு நம்பிக்கை உள்ளது. 
என் முடிவுகளை இங்கு வைக்கவில்லை. வாழ்க்கையின் பாதையில் ஒருவரின் கருத்துகளும், முடிவுகளும் மற்றவருக்கு பொருந்தாது. அவரவர் சூழல்கள் வேறு வேறு. தேடலுக்கான விருப்பம், நிதானமும் கொண்டால் அவரவருக்கு தனி வழிகள் திறக்கும்.

இவை அனைத்தையும் கடந்து பெண்கள் தங்களுடைய வெகுளித்தனத்தை காப்பாற்றி வைத்துக்கொள்ளவும் வெண்டும். அது இல்லாமல் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க இயலாது என்று நினைக்கிறேன்.

Comments

  1. அன்புள்ள கமலதேவி, உங்களுடைய இந்த பதிவு ஓமிக முக்கியமான சில அவதானிப்புகளை கொண்டது. ஓர் எழுத்தாளரின் குரல். சென்ற தலைமுறை பெண்களைவிட இந்தத் தலைமுறை பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும் அவர்கள் சமூக அழுத்தங்கள் தெரியாமலேயே வளர்க்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது அதில் தலையாயது. இதை நானும் கவனித்திருக்கிறேன், ஏன் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். வாழ்க்கையின் நிதர்சனங்கள் தெரியாமலேயே வளர்ந்தால், சொகுசுக்கு பழகி வளர்ந்தால் பிறகு கேள்வி கேட்க மாட்டார்கள், வாழ்க்கைக்குள் 'வளைந்து' வந்து விடுவார்கள் என்ற கணக்கு அவர்களுக்குள் இருக்கலாம். அது அவர்களே அறியாமலும் கூட செயல்படலாம். சில அம்மாக்கள் 'எப்படியும் கஷ்டப்படத்தான் போகுது இப்பவாவது கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமே' என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் மொத்தத்தில் பார்த்தால் வாழ்க்கையென்றால் என்ன என்ற யதார்த்த நோக்கு இல்லாமலேயே பெண் குழந்தைகள் வளர்கிறார்கள் - என் தலைமுறையிலோம் அப்படித்தான் வளர்ந்தோம். ஏட்டுக்கல்வி, தொழிற்கல்வி போன்றவை தான் யார் என்றோ, இந்த சுற்றத்துக்கும் நமக்குமான உறவு என்ன என்றோ, இந்த உலகத்தில் தன்னை இழக்காமல் வாழ்வதெப்படி என்ற கலையையோ சொல்லித்தருவதில்லை. பெண்களுக்கு சூழல் தரும் அழுத்தத்துக்கு நிகராக அவள் உள்ளம் அழுத்தங்களை கொடுக்கிறது. பாதுகாப்புக்கான நாட்டம், பெண்ணாக தன் ஈகோ திருப்தியடையவேண்டும் என்ற வேட்கை, மற்ற பெண்களுக்கு முன்னால் வென்றிவிட்டவளாக தோற்றமளிக்க வேண்டும் என்ற முனைப்பு இப்படி பல விஷயங்கள் உள்ளனவே. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தான் இன்று ஒரு பெண் தன் தன்னறம் நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்வது போல் 'டெலீட் சாட்' - இதை தான் எனக்கான வழியாக நானும் கொண்டிருக்கிறேன். உடனுக்குடன் மனதை கிளியர் செய்துவிட்டால் காலியாகி காற்று வர வழி கொடுக்கிறது. இதில் நல்ல விஷயம் ஒன்று தான். நம் மனதை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் ஒன்று எப்போதுமே பேரின்மபானது (தன்னறமும் ஒரு தீவிர காதல், உங்கள் வரியில் சொன்னால்). அந்த பேரின்பத்தை அனுபவித்தவர்கள் அது நீட்டிக்கவேண்டும் என்றே விரும்புவார்கள். அதை நோக்கித் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அது ஒரு வெகுளித்தனம் தான், நமக்குள் இருக்கும் நாமேயென்றான பரிசுத்தமான ஒரு பகுதி. அந்த இன்பத்தை அறிவதென்பது எல்லோருக்கும் அவரவர் வழியில் வாய்க்கட்டும் என்றே வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அன்பு சுசி,
    என் பதிவின் நீட்சியாக உங்களுக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்கிறது. நல்லது. இந்த பதிவு அதற்காகத்தான். பெண் கல்வி,விடுதலை என்ற பதிவிற்கு பதில் எழுதுவதற்காக பெண்களை பற்றி மட்டுமே இதில் எழுதியிருக்கிறேன். தன்னறம் என்று வநனதுவிட்டால் இருபாலருக்குமே தடைகள் பல உண்டு. உண்மையில் அந்த தடைகளுமே கூட தன்னறம் நோக்கி நம்மை சேலுத்தும் விசையே. சுசிக்கு அன்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்