ஜூன் 2023 சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை மூங்கில்காடு அனுமன் எரித்த பொன்இலங்கையின் அதிகாலை அது. கதிரவனின் முதல் கீற்று நிலத்தில் விழும் பொழுதில் முக்கூடல் மலைச்சரிவிலுள்ள அந்த மூங்கில் காட்டின் மூங்கில்கள் பொன் நிறத்தில் பூத்திருந்தன. கதிரவனின் ஔிப்பொறிகளை கோர்த்ததைப் போன்று மூங்கில் காடு முழுவதும் பொன்மலர் சரங்களாக மலர்ந்திருந்தன. இலங்கைவாசிகள் அனைவரும் மூங்கில் பூத்த நிலத்தின் வசீகரத்தை அஞ்சினர். அழிவின் காலம் என்று சாமியாடிகள் சிறுகுடி விழாக்களில் அருள் வந்து கூறினார்கள். அது இலங்கை முழுவதும் பரவியதால் மக்கள் அந்த அதீதமான அழகையும் அபசகுனம் என்று எண்ணினார். அடுத்த ஒருசில நாட்களிலேயே அனைத்தும் இயல்பாக மாறினாலும் இலங்கை எரிந்ததை கண்முன்னால் கண்ட ஒவ்வொருவர் மனங்களிலும் அது அனுதினமும் அணையாது எரிந்தது. அரசன் அரியணையில் இருக்கும் காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட ‘எரிப்பறந்தெடுத்தலால்’ அதிர்ந்திருந்தது இலங்கை. அதிகாலையில் திடுக்கிட்டு விழித்த பெண்...