2018 ஜீலை பதாகை இதழில் வெளியான சிறுகதை. சொல்பேச்சுக் கேட்காத கரங்கள் பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது.அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தது.கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏறமுடியாமல் பேருந்தில் ஏறினார்.பேருந்தில் நல்ல கூட்டம்.அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள்.வேட்டியை மடித்துக்கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தப்பின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலையகட்டிக்கிட்டு நிக்க முடியாது…வேணாம்,”என்ற குரல் தடுக்கையிலேயே எழுந்து கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமர சொன்னதும் அமர்ந்து கொண்டார்.பக்கத்தில் அமர்ந்திருந்தஅம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார்.இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான்.கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறிய கற்றிருக்கிறது.அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,”என்றாள்.நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்...