Posts

Showing posts from 2021

தொடக்கம்

Image
  2021 ன் தொடக்கத்தில் எனக்கான ஒரு வலைப்பூவை தொடங்கி எழுத வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஜூலை மாதம்தான் எழுதத் துவங்கினேன்.  தாமதம் என்று நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை இது இயல்பானதே. எதையும் நினைத்ததும் செய்யக்கூடிய இயல்பு எனக்குக் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செய்கிறேனா என்ற பரிசீலனைக்குப் பிறகே எப்போதும் செய்கிறேன். எழுத்து மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு. இப்படி ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை யோசித்தே தீர வேண்டிய வாழ்க்கை சூழல் பெண்களுக்குரியது. பெண்ணியம் பேசுவதாக சலித்துக்கொள்ள வேண்டாம். இந்த இயல்புதான் என் எழுத்து செயல்பாட்டின் ஆதாரமாக சொல்வேன். இல்லை என்றால் என் வாழ்க்கை எழுத்தல்லாத பாதையில் எங்கோ சென்று ஒன்றுமில்லாததாக மாறியிருக்கும். இங்கு பெண்களின் சிறு சிறகசைப்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அது மிகச்சரியாக அவர்கள் அறியாமலேயே களையப்பட வேண்டியதாக முதலில் தாய்  தந்தையர்களை சமூகமும், குடும்பமும் எச்சரிக்கின்றன. "பொம்ளப்பிள்ளய எதுக்கு பள்ளிக்கூட புத்தகத்து மேல கதை புத்தகங்கள் படிக்கவிடனும். சொன்னப்பேச்சு கேக்காது ...வீட்டு வேலையப்பழக்குங்க..

தமிழ் சிறுகதைகள் இன்று

Image
 தமிழினி இதழில் 'தமிழ் சிறுகதைகள் இன்று' என்ற தலைப்பில் இன்றைய  சிறுகதையாளர்களை பற்றிய கட்டுரைத்தொடர் வெளியாகிறது.   இதை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதுகிறார். எழுத்தாளர்கள் தூயன்,சுரேஷ்பிரதீப்,சித்துராஜ் பொன்ராஜ்,ராம்தங்கம்,கிருஷ்ணமூர்த்தி,அனோஜன் பாலகிருஷ்ணன்,கார்த்திக் பாலசுப்ரமணியன்,சுனில் கிருஷ்ணன்,மயிலன் ஜி.சின்னப்பன் ஆகியோரது கதைகள் பற்றிய கட்டுரைகளை தமிழினியில் எழுதியுள்ளார். நவம்பர் இதழில் என் கதைகளை பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. என் பெரும்பாலான கதைகளை தேடி எடுத்து அதன் சிக்கல்களுக்கு தலைகொடுத்து ,சலிக்காமல் சிலமுறை வாசித்து அதற்குரிய அக்கறையை தந்து இந்தக்கட்டுரையை எழுதிய எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். தொடக்கத்திலிருந்து இதுவரை நான் எழுதிய கதைகள் பெரும்பாலானவற்றை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளருக்கும் தமிழினி இதழிற்கும் நன்றி.   https://tamizhini.in/2021/11/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%a

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

Image
 நவம்பர் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல். எழுத்தாளருக்கும் புரவிக்கும் அன்பு. எஸ்.ரா என்று ப்ரியத்துடன் அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்றைய தமிழிலக்கியத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவர். நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய அவரின் சஞ்ரசாரம் எனும் நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது. நோய்கள் பற்றியும் அதன்வேர்க்காரணங்களாக இருக்கூடிய மனிதஆழ்மன சஞ்சலங்கள் பற்றியும்,எது நோய்மை? என்பது குறித்தும் விரிவான பின்புலத்தில் எழுதப்பட்டநாவல் ‘துயில்’. இது துயிலை மையப்படுத்திய நேர்காணல். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல் 1.நோய்மை என்பது வாதையா மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்க சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது?  நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்துவி டுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் சில முடிவுகளை எடுத

சிறுகதை

Image
  மார்ச் 2019  பதாகை இதழில் வெளியான கதை.                          குன்றத்தின் முழுநிலா                                                           மூவேந்தரின் எரி நின்ற  பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து  நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது. பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக்கொண்டார். அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில்  அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது. ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள். மற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள். கபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது.எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன்.உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான்.என் செய்வேன்? என்று தன்னுள்தான் உரையாடிக்கொண்டிருந்தார். வேங்கைமரத்தி

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

Image
                      இசையாகி நின்றாய் புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு. எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர். இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல். 1. நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிருப்பதாக நினைக்கிறீர்களா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதி

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு அஞ்சலி

Image
         கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார். "மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்"                 _பிரான்ஸிஸ் கிருபா        பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன.  "கணங்கள்தோறும்  என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது….ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக்கூடாது" பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது! "நடைபோடும் வழிகள் கடைகள் வரை நினைக்கின்றன பிள்ளைகள் பற்றிக்கொள்ள ஒருவிரல் போதுமென்று ஒற்றை விரலுக்குப் பின்னே முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன் வீணாயிருப்பதை விளக்க முயல்கிறது வீதி முயன