Posts

Showing posts from April, 2022

நதிப்பயணம்:ஜானகிராமம்

Image
      எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த   'ஜானகிராமம்' என்ற நூலிற்காக நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . தி.ஜா நண்பர் சிட்டியுடன் இணைந்து எழுதிய பயணநூலான 'நடந்தாய் வாழி காவேரி ' என்ற நூல் குறித்த கட்டுரை.  ஜானகிராமம் நூலை தொகுத்தவர்  பேராசிரியர் கல்யாணராமன். கொரானா பெருந்தொற்று கால ஊரங்கு நாட்களில் வெளியிடப்பட்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவரது இல்லத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் நூற்றி இரண்டு கட்டுரைகள் உள்ளன. தி.ஜா வின் நூற்றாண்டு மலருக்காக கட்டுரை எழுதியது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.                                நதிப்பயணம் கதைசொல்லுதல் வழி உலகம் கண்களுக்கு தெரியாத வலையால் வரலாற்றுடனும், வரலாற்றுக்கு முந்தைய புராணகாலத்துடனும், அதன்மனிதருடனும், அந்த வாழ்வுடனும், நிகழ்காலத்தில் இணைந்திருக்கிறோம்.கதைகள் காலத்தை கோர்த்துக்கட்டும் பூஞ்சரடு.நேற்றும் இன்றும் நாளைகளுக்குமான சரடு. அவ்வகையில் பயணஇலக்கியம் ஒரு கதைசொல்லல் வகை.மேற்கொண்ட பயணத்தில் எதிர்பார்த்தது, நிகழ்ந்தது, நிகழசாத்தியமிருந்தது என அனைத்தையும் இணைத்த

கடுவழித்துணை சிறுகதை தொகுப்பின் முன்னுரையும் என்னுரையும்

Image
 என்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பு கடுவழித்துணை. அதற்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் முன்னுரை எழுதியிருந்தார். இந்தத்தொகுப்பு 2020 செப்டம்பரில் வெளியானது. 2021 லிருந்து தான் வலைப்பூவில் எழுதுகிறேன். மெதுமெதுவாக எழுதியவைகளை பதிவேற்றி தொகுப்பதால் காலத்தாமதமாகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி  நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே    ” அற்புத உலகில் ஆலிஸ்  “என்ற நூலை லூயிஸ் கரோல் எழுதினார் என்று சொல்வார்கள். அந்த நூலின் ஆரம்பத்தில் ஒரு பெரிய குழியில் விழுவது பெரும்பாலும் வலிப்பு நோய்க்காரர்களுக்கு சாதாரணமான ஒரு அனுபவம் .அற்புத உலகத்தின் ஊடாக ஆலிஸ் பயணிக்கும்போது பொருட்கள் பறப்பதை அவள் அடிக்கடி பார்க்கிறாள். அவளும் இறக்கை கட்டிக் கொண்டது போல ஆகிவிட்டதாக உணர்கிறாள்.இதுவும் வலிப்பு நோய் தாக்குதலின் விளைவாக விவரிக்கும் இன்னொரு அம்சம் என்று பலர் சொல்வார்கள் .வலிப்புநோய் கலைக்குச் சாதகமாக இருப்பதாக பல எழுத்தாளர்களின் வாழ்க்கையை முன்வைத்துக் குறிப்பிடுவார்கள் நோய்த்தன்மை அப்படித்தான் கலைக்கு சாதகமாக இருப்பதாக தோன்றும்.

ஜீவா:சிறுகதை

Image
   தமிழினி 2022 பிப்ரவரி இதழில் வெளியான கதை                              ஜீவா ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேலை.  ஓரறை ஓட்டுவில்லை வீடு அது. கதவுக்கருகில் படுத்திருந்த அப்பாயி தலையைத் தூக்கிப் பார்த்தது. அவள் வடித்து வைத்திருந்த சோற்றை தட்டில் போட்டு புகையடுப்பில் சுண்டிக்கிடந்த தக்காளிக்குழம்பை ஊற்றிக்கொண்டு ஜீவா திண்ணையில் அமர்ந்தான்.  “பாப்பாவை எழுப்பிவுடுய்யா…” “இன்னிக்கி பள்ளிக்கூடம் இல்லப்பாயி…வேலைக்குப் போறேன்…” “இதுகள படிக்கவச்சி கரையேத்தலான்னு பாத்தா மாசக்கணக்கா பள்ளிக்கூடத்த மூடி போட்டுட்டானுங்க…நோவுநோவுன்னு ஊரே பதறிக்கெடக்கு. எட்டடியானுக்கு ஒரு பொங்க பூச வச்சி, ஊர்க்கெடா வெட்டி ஊருக்கு சோறு போட்டா எல்லாம் சரியா போயிரும். அத ஒருபயலும் நெனக்க மாட்டிக்கிறான்…” “நம்ம ஊர்ல மட்டுமில்ல எல்லா நாட்டுலயும் தான் கொரானா…” “ஆமாண்டா…அவுகவுக சாமிக்குண்டானத செய்யனும்…இப்பிடியே பள்ளிக்கூடம், பஸ்ஸூன்னு எல்லாத்தையும் நிறுத்திப்போட்டா எப்படி பொழைக்கறது…”என்றபடி எழுந்து கதவில் சாய்ந்து அமர்ந்தது. மூன்றாவது வீட்டில் இருந்து செந்தில்சித்தப்பா குரல் கொடுத்தார். “டேய்…ஜீவா….” “என்னப்பா…”

ராதேயன்: சிறுகதை

Image
    சொல்வனம்  2018 ஜனவரி இதழில் வெளியான கதை. இந்தக் கதை குறித்து வாசிப்பவர்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் தினமும் ஒரு அத்தியாயமாக வெண்முரசை வெளியிட்டு அதை தினமும் வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதியது. வெண்முரசின் தாக்கம் அப்படியே நேரடியாக அப்பட்டமாக இந்தக்கதையில் உண்டு. என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'குருதியுறவு' தொகுதியில் இந்தக்கதையை சேர்க்க வேண்டுமா? என்று ஒருபகலும் ஒரு இரவும் யோசித்தேன். இதை எழுதி முடித்ததும் எனக்குள் இருந்த நிறைவு நினைவிற்கு வந்தது. அப்பட்டமான 'காப்பி அடித்தல்' என்று பின்னால் எப்போதைக்குமான கேலிகள் இருக்கும் என்று தெரிந்தேதான் தொகுப்பில் சேர்த்தேன். இப்போதும் எந்தத்தயக்கமும் இல்லாமல் ஒரு வார்த்தையும் திருத்தாமல் பதிவிடுகிறேன். எழுதத்தொடங்கி ஓராண்டிற்குப்பின் எழுதிய கதை. ஒரு மூத்தஎழுத்தாளர் இளம் எழுத்தாளரின் எழுத்தை எந்த வகையில் முழுமையாக பாதித்தார் என்பதற்கான அடையாளம். இதற்கு பெயர் 'காப்பியடித்தல்' என்றால் அப்படியாகவே இருக்கட்டும். இந்தக்கதையின் உணர்வு நிலை முழுமுற்றாக என்னுடையது.  மாடியில் நின்று கொண்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி: கவிஞர் ஆனந்த்குமார் கவிதைகள்

Image
 கவிஞர் ஆனந்த்குமார் இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறுகிறார். அவருக்கு வாழ்த்துகளும் அன்பும். கையில் ஔித்து வைத்துக் கொண்டு சுவைக்கும் இனிப்பை மற்றவர்களுக்கும் காட்டலாம் என்ற பெருந்தன்மையை இது போன்ற விருது அறிவிப்புகள் அளிக்கின்றன என்று நினைக்கிறேன். ' நிச்சலனமாய் ஏந்திக்கொள்கிறது நீ்ண்ட மடி.... பெருந்துயரென வழிவிட்டு வழிவிட்டு வருகிறது கரைதட்டி எழவியலா அலைகள்' இந்த கவிதைத்தொகுப்பை இரண்டாம் முறை வாசிக்கும் போது இந்தவரியையே ஆனந்த் குமார் வெவ்வேறு காட்சிகளாக  எழுதியிருக்கிறாரோ என்று தோன்றியது. வயது கடந்து சென்று கொண்டிந்தாலும் வெகுளித்தனம் என்ற நீண்டமடியில்  அமர்ந்து அலைகளில் நம்மை நாமே காண்பது.  அவ்வப்போது அதிக உயரம் எழும் அலைகளின் அழகை, அதைக்கண்ட அனுபவத்தை,அது கொடுத்த அனுபவத்தை எழுதி பின்னால் அந்த வெகுளித்தனத்தை கவிதையாக்குகிறார். அந்த மடியில் அமரும் போது மட்டுமே.... சைத்தானின் தலையில் விண்மீன் ஔிரும்,பழைய பாசி படிந்த வீடு சிறகு கொள்ளும்,அம்மாவின் தலைவலி மருந்து வீட்டை மலை மேல் ஏற்றும்,மூன்று வளையல்களை முடிவில்லாமல் எண்ணமுடியும்,சோகையான குழந்தைக்காக விளையாட்ட

நெடுஞ்சாலை பறவை: சிறுகதை

Image
 2018 ஏப்ரல் பதாகை இதழில் வெளியான கதை நெடுஞ்சாலைபறவை மே வெயிலின் தாக்கம் காலையிலேயே தொடுகையென உறைத்தது. மெத்தையிலிருந்து எழுந்து சேலையை சரிசெய்து விடுதியின் முதல்தளத்தின் நடைபாதையில் வந்து நின்றேன். தொடுதிரையில் மாறும் நிறமென வானம் சட்டென்று ஔிக்கு மாறியது. கிழக்கே பள்ளி மைதானத்தில் நாலைந்து ஆட்கள்  பந்தலைப் பிரித்து பின்னிய தென்னங்கீற்றுகளை ஒன்றின் மேலொன்றாக அடுக்கிக்  கொண்டிருந்தார்கள். தன்வசமில்லாத வேகத்தில் ஒருபயல் ஔியிலிருந்து ஏறுபவன் போல ஒருதூணில் ஏறினான். கீழே ஔி ஒருகுளமென நின்றது. கையிலிருந்த கண்ணாடியை சேலைத்தலைப்பால் துடைத்து கண்ணில் மாட்டிக் கொண்டேன். பயலுக்கு கரியமின்னும் முகம். அடர்ந்து படியாமல் தலைமுடி தலையைவிட தனியாகத் தெரிகிறது. எனக்கான விழாவிற்கான பந்தல். இது போலொரு பந்தலை என் இருபத்தைந்து வயதில் வீட்டில் எனக்காக போட அப்பா ஆசைப்பட்டார். இன்று அறுபதை நெருங்கும் இந்தத் தருணத்தில் அன்று அறுபதிலிருந்த அப்பாவைப் புரிகிறது. இன்னேரம் எங்கோ சேலையை வரிந்து கொண்டு என் பேரப்பிள்ளைகளுக்காக அலைந்து கொண்டிருக்கலாம். எங்கு? என்று நினைத்ததும்…அப்பா பார்த்த வரன்கள் சில பெயர்களாக நினைவிற

புரவி சிறப்பிதழ் வெளியீட்டு விழா

Image
 புரவி இதழின் ஓராண்டு நிறைவை ஒட்டி நடந்த சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை. எப்பொழுதும் போல எஸ்.ரா வின் அன்பும் ஆதுரமும் செறிவும் கனிவும் சிரிப்பும் நிறைந்த உரை.  https://youtu.be/c3-FDGBA3T4 பத்திரிக்கை, எழுத்து சார்ந்த செயல்கள் எப்பொழுதும் நல்ல கனவுகளுடன் தொடங்கப்படுகின்றன. அவை அப்படியே  தொடர வேண்டும் என்று இந்த ஓராண்டு நிறைவில் நினைத்துக்கொள்கிறேன். பத்திரிக்கை நடத்துபவர்களின் கனவு என்பது எழுத்தாளர்களையும் இணைத்த கனவுதான். புரவி ஆசிரியர்கள் கார்த்திகேயன் வெங்கட்ராமன் மற்றும் அருண் இருவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். 

ஹரிலால் நாவல் நேர்காணல்

Image
சொல்வனம் மார்ச் இதழில் வெளியான நேர்காணல். எழுத்தாளர் கலைச்செல்விக்கும் சொல்வனத்திற்கும் என் நன்றி. எழுத்தாளர் கலைச்செல்வியின் ‘ஹரிலால் ‘ என்ற நாவல் தன்னறம் நூல்வெளி பதிப்பாக வெளியாகியுள்ளது. அந்த நாவலை மையமாகக் கொண்ட நேர்காணல்.   1. ஹரிலால் நாவல் எழுத உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது? சமீபத்தில் யாவரும் பதிப்பகத்தின் வழியாக வெளியான எனது ‘ஆலகாலம்’ என்ற நாவலில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அந்நாவல் சங்ககாலத்திலிருந்து சமகாலம் வரை பயணித்திருந்தது. அதில் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை எழுதியபோது அதில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அதற்காக காந்தியடிகள் எழுதிய நுால்கள், காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட நுால்கள் என ஏராளமானவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. அதன் ஊடாக காந்தியை நான் உணரத் தொடங்கினேன். அது என்னை உள்ளிழுத்து போடவே, அந்த புள்ளியில் ஆலகாலத்தை நிறுத்தி விட்டு காந்திய சிறுகதைகளை எழுத தொடங்கினேன். காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல ந