விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான். ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி ஐந்தாண்டுகள் இருக்கலாம். நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன. ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு வ...