https://youtu.be/blH2dOlKzpY?si=2l0dqQvPv1VlrStE
எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமை அறிவு யூட்யூப் சேனலில் வரும் காணொளி இது.
பொதுவாக நம் சமூகத்தில் மகிழ்ச்சியாக உற்சாகமாக மனநிறைவுடன் வாழ முயற்சிப்பவர்களை அல்லது இயல்பாகவே அப்படி உணர்பவர்களை கவலையில்லாதவர்கள்,பொறுப்பற்றவர்கள்,சுயநலவாதி என்று சொல்வதுண்டு.
இந்த காணொளியில் ஜெ சொல்லும் உற்சாகத்தை தினமும் ஈட்டிக்கொள்ள முயன்றவர் என்னுடைய தந்தை. அவர் எத்தனை பொறுப்பாக இருந்தும் அவருடைய உற்சாகத்தை காணும் உறவினர்கள் கவலையில்லாத மனுஷர் என்பார்கள். அவர் வாழ்வின் ஆற்றமுடியாத காயங்கள் பல உண்டு. திருமணமாகி சில மாதங்களில் அக்கா தங்கை இருவருமே தற்கொலை செய்துகொண்டது முதல் பல.
உண்மையில் அவரை கவலை இல்லாதவர் சொல்லும் இவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இல்லையா...எப்போதும் 'சீரியஸாக' இருக்கிறார்களா? என்று வியப்பாக இருக்கும். அனைவருமே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரிந்த வகையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் மனநிறைவில்லை என்று ஒரு கட்டத்தில் என்பது புரிந்தது .
மற்றவர்களின் உற்சாகத்தை கவலையின்மை என்று சொல்வது ஒரு வகை வன்மம். ஜெ சொல்வது போல இந்த வாழ்க்கை ஆதிதெய்வீகத்தாலோ , நடைமுறையினாலோ,மரபு கூறுகளாலோ இயல்பாகவே துயரும் வலியும் கொண்டது. அதிலிருந்து ஒருவர் மீண்டு வாழ்வை உற்சாகமாக்கிக்கொள்வது என்பது அவரவர் மன இயல்பை சார்ந்தது.
எல்லா தந்தைகளின் விருப்பமும் தன் பிள்ளைகள் எந்த சிரமத்தையும் தாங்கி கடந்து மகிழ்ச்சியாக மனநிறைவாக இருக்க வேண்டும் என்பதே. சிறுபிள்ளையில் உடல்பலகீனத்தால் சோர்வுறும் என்னை அனுதினமும் உற்சாகமாக்க அய்யா முயற்சி செய்வார். அவரின் அன்பின் வலிமையால் என்னை உற்சாகமாக்க முடிந்தது. எந்த நிலையிலும் மனதிற்குள் அவர் அளித்த ஊற்று ஈரமாகவே இருக்கிறது.
இந்த காணொளியில் இருப்பது அனைவர் மீதும் உள்ள கரிசனம்.

Comments
Post a Comment