Skip to main content

மகிழ்ந்திரு

 https://youtu.be/blH2dOlKzpY?si=2l0dqQvPv1VlrStE

எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமை அறிவு யூட்யூப் சேனலில் வரும் காணொளி இது. 

பொதுவாக நம் சமூகத்தில் மகிழ்ச்சியாக உற்சாகமாக மனநிறைவுடன் வாழ முயற்சிப்பவர்களை அல்லது இயல்பாகவே அப்படி உணர்பவர்களை கவலையில்லாதவர்கள்,பொறுப்பற்றவர்கள்,சுயநலவாதி என்று சொல்வதுண்டு.

இந்த காணொளியில் ஜெ சொல்லும் உற்சாகத்தை தினமும் ஈட்டிக்கொள்ள முயன்றவர் என்னுடைய தந்தை. அவர் எத்தனை பொறுப்பாக இருந்தும் அவருடைய உற்சாகத்தை காணும் உறவினர்கள் கவலையில்லாத மனுஷர் என்பார்கள். அவர் வாழ்வின் ஆற்றமுடியாத காயங்கள் பல உண்டு. திருமணமாகி சில மாதங்களில் அக்கா தங்கை இருவருமே தற்கொலை செய்துகொண்டது முதல் பல. 

உண்மையில் அவரை கவலை இல்லாதவர் சொல்லும் இவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இல்லையா...எப்போதும் 'சீரியஸாக' இருக்கிறார்களா? என்று வியப்பாக இருக்கும். அனைவருமே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரிந்த வகையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் மனநிறைவில்லை என்று ஒரு கட்டத்தில் என்பது புரிந்தது . 

மற்றவர்களின் உற்சாகத்தை கவலையின்மை என்று சொல்வது ஒரு வகை வன்மம். ஜெ சொல்வது போல இந்த வாழ்க்கை ஆதிதெய்வீகத்தாலோ , நடைமுறையினாலோ,மரபு கூறுகளாலோ இயல்பாகவே துயரும் வலியும் கொண்டது. அதிலிருந்து ஒருவர் மீண்டு வாழ்வை உற்சாகமாக்கிக்கொள்வது என்பது அவரவர் மன இயல்பை சார்ந்தது.

எல்லா தந்தைகளின் விருப்பமும் தன் பிள்ளைகள் எந்த சிரமத்தையும் தாங்கி கடந்து மகிழ்ச்சியாக மனநிறைவாக இருக்க வேண்டும் என்பதே.  சிறுபிள்ளையில் உடல்பலகீனத்தால் சோர்வுறும் என்னை அனுதினமும் உற்சாகமாக்க அய்யா முயற்சி செய்வார். அவரின் அன்பின் வலிமையால் என்னை உற்சாகமாக்க முடிந்தது. எந்த நிலையிலும் மனதிற்குள் அவர் அளித்த ஊற்று ஈரமாகவே இருக்கிறது. 

இந்த காணொளியில் இருப்பது  அனைவர் மீதும் உள்ள கரிசனம். 





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...