குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது. “ஒக்கரை வந்துருச்சு..” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை முந்தானையால் போர்த்தி அணைத்துக்கொண்டேன். ஆட்கள் தலையையும் காதுகளையும் துண்டால் போர்த்திக்கொண்டு இறங்கினார்கள். உளி சத்தங்கள் நினைவுகளை கொத்துவது போல காதுகளில் மொய்த்தது. கருங்கற்களை இரும்பின் கூர் தீண்டும் ஒலி. தாங்க முடியாமல் இடது புறம் நின்ற குன்றை பார்க்கத்தொடங்கினேன். கருங்கற்களையெல்லாம் பெயர்த்தெடுத்தப்பின் எஞ்சிய மண்ணாலும் கற்களாலும் ஆன குன்று. குட்டை மரங்களும் செடிகளும் பனியில் கருகியிருந்தன. யார்பார்த்தாலும் சீர்குலைந்த குன்று என்று சொல்லிவிடுவதற்கு ஏற்றமாதிரி குன்றில் பாதிபங்கு உயரமுள்ள பெரிய பாறை பாதிஉடைந்து மீதி குன்றுடன் நிற்கிறது. மஞ்சு படர்ந்திருந்த உச்சியிருந்து பார்வையை இறக்கி...