Posts

Showing posts from October, 2022

எஞ்சும்சூடு

Image
    2021 ஜூன் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான  சிறுகதை.                                                               எஞ்சும்சூடு                              தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்றுகுனிந்து களைகளை பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது.  வெயில் ஏற ஏற தண்ணீரின் ஆவிஅடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும் போது ஒருவருஷம் போல ஊருக்குவந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசிதங்கம் இருந்த இடத்தை சைகையில் காட்டி எடுத்து, தருமனுக்கு முதல்தங்கமாக கொடுத்து அம்மாவுடன் திருப்பூருக்கு அனுப்பினார். திருப்பூரில் இல்லாத ஒருவித காங்கை இங்கு வந்தால் பேய்  ஏறுவதைப்போல மனதில் ஏறிக்கொள்கிறது. பொழுது உச்சிக்கு வந்ததும் வேலைக்காட்டிலிருந்து வரப்பேறினோம். “கவிதாக்கா...இன்னிக்கி நான்

நிழற்குடை

Image
     2020 டிசம்பர் 1 பதாகை இணைய  இதழில் வெளியான சிறுகதை.                                                    நிழற்குடை                                வழியெங்கும் காய்ந்து கிடந்தது நிலம். மழைக்கான தவக்காலம் என அசையாமல்  உயிரை பிடித்து நின்றன ஓரிரு நுணா மரங்கள். ஈரமில்லாத காற்று சுழன்று சுழன்று புழுதியை பறத்திக்கொண்டிருந்தது. ஒற்றைத்துளிக்கு ஏந்திய கரங்களென குறுசிறுத்த இலைகளை நீட்டி நின்றன புதர்கள். கரட்டு நிலம். வரும் ஓரிரு மழைகளை நம்பி வள்ளிக்கிழங்குகள் மட்டுமே பிழைக்கும். காடுகள் காய்ந்து வரப்புகள் சிதைந்து நிலம் விரிந்து கிடந்தது. கண்ணெட்டும் தொலைவு வரை வெற்றுநிலமாய் நீண்டு கிடந்தது. இவற்றையெல்லாம் நோக்கி கண்களை சுழற்றிவிட்டு வறண்ட தளுகையாற்றை பார்த்தபடி சுவாதி அந்த சிறிய தடுப்பணையின் கரைமேட்டில் அமர்ந்திருந்தாள். நான்குமணிவெயில் கனன்றது. நிலையில்லாமல் தவித்த துப்பட்டாவை எடுத்து இடப்புறம் நின்ற புங்கையின் கிளையில் முடிச்சிட்டாள் . பத்துநிமிட நடை தொலைவில் இருந்த சின்னவர் வீடு பூட்டிக்கிடக்கிறது.  அவர் மகன் வீட்டிற்கே சென்றுவிட்டார். அவரிடம் உங்கள் நினைவு வந்தது ,பார்க்கவேண்டும் என்று த

கடல்

Image
      2020 நவம்பர் 1 பதாகை இணைய இதழில் வெளியான  சிறுகதை.                                                                      கடல் அப்பொழுதுதான்  நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ? பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம். லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள். “நித்யா…எனக்கு அத்தானி ங்கற ஊர்.மணல்மேல்குடி தாலுக்கா.இதெல்லாம் எங்க இருக்கோ.அத்தான்..அத்தான்னு பழைய பட டயலாக் மாதிரி இருக்கு,” புடவையை சரி செய்தபடி நித்யா சிரித்தாள்.இருவரின் அப்பாக்களும் பேசி சிரித்தபடி உற்சாகமாக வந்

ரீங்கரிப்பு

Image
    2020 அக்டோபர் 24 சொல்வனம் இணையஇதழில்  வெளியான சிறுகதை.                                                                 ரீங்கரிப்பு காற்றுக்காக அழகன் வீட்டிற்கு வெளியே வேம்பின் அடியில் நின்றார்.வானம் அடைத்துக் கொண்டு புழுங்கியது.ஒருவாரமாக மனதிற்கு ஊசலாட்டமாக இருக்கிறது.மரத்தில் தேனீக்களின் ரீங்கரிப்புகள் பதட்டம் கொண்டன.பக்கத்து மச்சிலிருந்து மணீஷ்பயல் விட்டெறிந்த குச்சி கீழே விழுந்தது.வேம்பு பூத்து நிறைந்த இந்தக்கோடையில் கட்டிய கூடு. தான் சேர்த்த அமுதத்தை காக்க கொடுக்குகள் நீட்டி சுழன்று பறந்து தவிக்கும் அணு அணுவான விஷங்கள் என்று மனதிற்குள் தோன்றியது.சட்டென்று இப்படித்தான்  சென்னையின் பேரரவமான சாலைகளில்,வேலைசெய்யும் சந்தடிகளில் வார்த்தைகள் காதுகளுக்குள் ஒலித்து சங்கடத்தை விளைவிக்கும்.தேனீக்களின் ரீங்காரம்  நின்றபாடில்லை. மரத்திலிருந்து தள்ளி கம்பிவேலிப்பக்கம் சென்றார்.“வணக்கண்ணே…தேன்கூட்டுக்கு தீய வைங்க.வூட்டுக்கு முன்னாடி நல்லதில்ல,”என்றபடி கையில் தூக்குவாளியுடன் சைக்கிள் கேரியரிலிருந்து சாமி கையுயர்த்தினான்.தலையாட்டி புன்னகைத்தார்.மஞ்சு ஆரஞ்சுப்புடவையில் இன்றைய புதுஒப்பனையில் வெளி

மயில்தோகை

Image
     2020 செப்டம்பர்  12 சொல்வனம் இணைய  இதழில் வெளியான   சிறுகதை                        மயில்தோகை                                                                                                                                         வெற்றி வீட்டின் பக்கவாட்டு தகரத்தாழ்வாரத்திலிருந்த டி.வி.எஸை நகர்த்தி வாசலில் நிறுத்தினாள்.  துப்பட்டாவை பின்னால் முடிச்சிட்டபடி வண்டியை கிளப்பினாள்.அது முரண்டுபிடித்தது.அதற்குள் சின்னவள் ஓடிவந்து சீட்டிற்கு முன்னால் ஏறி நின்று கொண்டாள்.வாடாமல்லி நிற கவுன் முட்டிக்காலுக்கு மேல் பூப்போல விரிந்து நின்றது.பெரியவள் பின்இருக்கைக்கு அருகில் காத்து நின்றாள். வெற்றிக்கு அவள் முகத்தை ஏறிட்டுப்பார்க்க என்னவோ போல இருந்தது.ஆறுமாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இவளுக்கு விவரம் தெரிந்து விட்டதா? என்ற நினைப்பு.இப்பொழுது எட்டுவயது பிள்ளைகளுக்கு என்னத்தெரியும் ,என்னத் தெரியாது என்பதே குழப்பமாக இருக்கிறது. வண்டி கிளம்பி அமர்ந்ததும் அலைபேசி அழைத்தது. “நாங்கல்லாம்  வந்தாச்சு…சரவணனும் மோகனாவும் எரகுடி தாண்டிட்டாங்களாம்..வந்து சேரு,”என்ற அம்மா பதிலை எதிர்பார்க்காமல் பேச்சை முடித்

முதல்துளி

Image
       2020 அக்டோபர் 12 பதாகை இணைய இதழில் வெளியான கதை.                                                                   முதல்துளி ராமச்சந்திரன் என்ற அழைப்பு முடியும் முன்பே, “ ப்ரசன்ட் டீச்சர்,” என்ற குரல் எழுந்தது. “என்ன அவசரம்?” என்ற கவிதா அவனை பார்த்துக்கொண்டே, “ ரவி..”என்றாள்.ராமச்சந்திரன் அவளைப் பார்த்தபடி நின்றான்.அவள் தலையசைத்ததும் அமர்ந்தான். ப வடிவிலாக அமைந்த மூன்று கட்டிடங்களின் வகுப்பறைகளில் இருந்து வெளிவந்த குரல்கள் இரைச்சலாக ஒலித்தது.சிறிது நேரத்தில் வெவ்வேறு ஒற்றை இரட்டை குரல்களாக மாறியது.அவை எங்கோ வேறு இடத்தில் அதற்கும் இங்குள்ள அவர்களுக்கும் தொடர்பில்லை என்று இருந்தது. பூட்டப்பட்ட பழைய வகுப்பறையின் முன்னிருக்கும் அகன்ற நடைப்பாதை அவர்களின் தற்போதைய வகுப்பறை.நேற்று மழை பெய்திருந்ததால் ஆஸ்பெட்டாஸின் காந்தல் குறைந்திருந்தது.சமேதா மைதானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.அளக்கும் கண்கள் அவளுடையது.கண்களை உருட்டி உருட்டி பார்ப்பாள்.முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மூளையும் ஒரு ரகம்.வழக்கம் போல முதல் வேலையாக வாய்ப்பாடு எழுதத் தொடங்கினார்கள். அவளுக்கு படித்துமுடித்ததும்  வேலைக்கு செ

அலைவு

Image
  2020 ஜூன் 1 பதாகை இதழில் வெளியான சிறுகதை.                                                                       அலைவு நிலாவெளிச்சத்தில் மாரியம்மன் கோவிலின் பெரிய வேப்பமரத்தை கண்டதும் கண்களை கசக்கிக்கொண்டு கண்ணன் எழுந்து நின்றான்.முந்தின நிறுத்தத்தில் இறங்கியிருக்க வேண்டும். வலதுபுறம் சென்ற வயல்பாதையில் நடந்தான்.இன்னும் மேற்கே நடக்க வேண்டும்.வியர்வையில் கசகசத்த முரட்டுசட்டைக்குள் காற்று புகுந்து எளிதாக்கியது.வரிசையாக நுணா, புங்கை,பனை,ஈச்சம் மரங்கள்.மேட்டுக்காடு. சற்று தொலைவில் களத்தில் மின்விளக்கின் ஔி தெரிந்தது.  வெளிச்சம் அருகில் வரவர அவன் கால்கள் தயங்கின.எதிரே காற்றுபுகுந்த சோளக்காடு பேயாட்டமிட்டது.இங்கே பாதையில் படுத்துக்கொள்ளலாம் அல்லது  வந்தபாதையில் திரும்பலாம்.ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தாவது கிடைக்கும். ஊரில் மட்டும் என்ன இருக்கிறது.வீட்டில் தங்கை குடும்பம் இருக்கிறது.ஒருநாளைக்கு சலிக்காமல் சோறு போடுவாள்.எதற்காக திரும்ப திரும்ப இங்கு வர வேண்டும்.ஒருநாள் விடுமுறையில் கடைவிடுதியிலேயே தூங்கியிருக்கலாம்.ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றால் எட்டிஉதைக்கப்பட்டு இந்த களத்தில் வந்து விழவேண்டும்