Skip to main content

எஞ்சும்சூடு

    2021 ஜூன் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான  சிறுகதை.

                                                             எஞ்சும்சூடு                            

தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்றுகுனிந்து களைகளை பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது. 

வெயில் ஏற ஏற தண்ணீரின் ஆவிஅடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும் போது ஒருவருஷம் போல ஊருக்குவந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசிதங்கம் இருந்த இடத்தை சைகையில் காட்டி எடுத்து, தருமனுக்கு முதல்தங்கமாக கொடுத்து அம்மாவுடன் திருப்பூருக்கு அனுப்பினார். திருப்பூரில் இல்லாத ஒருவித காங்கை இங்கு வந்தால் பேய்  ஏறுவதைப்போல மனதில் ஏறிக்கொள்கிறது. பொழுது உச்சிக்கு வந்ததும் வேலைக்காட்டிலிருந்து வரப்பேறினோம்.

“கவிதாக்கா...இன்னிக்கி நான் பருப்புத்தொவையல் அரைக்கிறேன்…நீ சோறாக்கி ரசம் வச்சிரு. கூத்துல இன்னிக்கு அருக்காணிக்கு வளைகாப்பு. நடுவலூராங்க வூட்ல கூத்துக்காவ புளிசோறுகிண்ட வரச்சொன்னாங்க…” என்றபடி சாந்திஅக்கா ஓடையில் இறங்கினாள்.

“பிறவு எதுக்குக்கா வூட்ல சோறாக்கறீங்க. இருக்கறதோட விட வேண்டியதுதானே…” என்று நான் ஓடை புங்கையின் அடியில் நின்று கைகால்களை கழுவினேன். மலையிலிருந்து நிழலில் தவழும் தண்ணீரின் சில்லிப்பில் உடல் சிலிர்த்துக்கொண்டது. பூவூதிர்ந்து இலைகளுடன் நீரில் சுற்றி வருவதை காலால் தள்ளியபடி சீலையை நன்றாக இறுகிக்கொண்டிருந்த கவிதாஅக்கா,“எங்க ரெண்டுவூட்டு பயலுங்களும் ராங்கனுங்க. வூட்ல சோறு இல்லாதப்பதான் வம்பிழுப்பானுங்க. அவசரத்துக்கு சோத்துவேலைய மாத்திக்குவோம்…இவ இல்லைன்னா சோத்து வேலையிலயே கெடக்கனும்…”என்றாள்.

“லஜபதிராமரு பெரியாளு வூட்ல எலும்பிச்சம்பழசோறும், கத்திரிக்கா கூட்டுமாம்…என்னிட்ட காலையிலயே அந்த அத்தை வரசொன்னுச்சு. அவங்க வயல்லருந்து ரெண்டுகூடைகாய் இப்பதான் எடுத்துட்டுபோறாங்க…பாக்கல…” என்ற சாந்திஅக்கா கரையேறினாள்.

“ஆமா…அவரு மவன் செந்திலு கூடைய வண்டியில கட்டிட்டு போனாப்ல…கூட்டு செய்யத்தெரியுமாடீ சாந்தீ…”

“குழம்பு வச்சுதான் பழக்கம். கொண்டைக்கடலை ஊற வச்சிருக்காங்க…நாம காய்கசவு அரியறது. நம்மள மட்டும் நம்பியா இருப்பாங்க…கூடவே இருந்து இன்னிக்கி கத்திரிக்காகூட்டு வைக்கறத படிச்சுட்டா போச்சு…”

இரண்டுக்கை ஓடைத்தண்ணீரை அள்ளிக்குடித்தேன். திருப்பூர் தண்ணிக்கு இந்த ருசி எட்டாது.  வயல்வேலை நிறைஞ்ச ஊர்.  தொழில்காரங்க வாழ்க்கைதான் சிதறிப்போகிறது. விவசாயம், மாடு ஆடு, விவசாயக்கூலிகள் மனம் நிறைஞ்சு வாழும் ஊரில் கூத்துக்கென்ன குறை. முப்பது நாட்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

“யக்கா…நம்ம ரண்டுபேரும் கூத்துகாரவுங்களுக்கு ஒருசிப்பம் அரிசி குடுக்கலமா? இன்னிக்கெல்லாம் வயவஞ்சிக்காரவுங்க சிப்பம் சிப்பமா அரிசியை கொண்டு வருவாங்க. நம்மது நிக்காது. கூத்துல விசேசம் இல்லாத நாளா பாத்து குடுப்பம்…அப்பதான் பொன்னரு கண்ணுக்குத் தெரியுவோம்,”

“என்ன சாந்தி…பொன்னர் புராணத்த இன்னிக்கு மதியானமே ஆரமிச்சுட்ட…”

“பின்ன…என்ன ஒசரம்,தாட்டியம்,ஆட்டம்…நம்ம குடுக்கறது அவுங்க கண்ணுக்குத்தெரியனுமில்ல…”

“நேத்து ஒம்மவன் கேக்கும் பன்னும் வாங்கிட்டு வந்து நல்லத்தாங்காவ தேடிப்போயி குடுத்தானே…”

“எம்மவன் மட்டுமா…சின்னபயலுக்க, பெரியாளுங்க,பொம்பளைக எல்லாருந்தான் தீனி வாங்கித்தராங்க…பகல்பூராவும் சும்மா இருக்குங்க. வாய்க்கு எதாச்சும் போடனுன்னு தோணுமில்ல…”

இருவரும் முகம்பார்க்காமல் மேற்கே நின்ற கொல்லிமலையில் கண்ணோட்டிக்கொண்டு முடியை உதறி பின்னினார்கள்.

“உம்மவனுக்கு எத்தனநாளு சோறு போட்டுருப்பேன்…எனக்கு ஒரு கேக்கு உண்டா…பன்னு உண்டா…”

“விடுடீ…நா வாங்கித்தாரேன்…நமக்கு ஆசையின்னா நாம வாங்கிக்க வேண்டியதுதான்…அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிடனும். தலையமுழுகிட்டு சிவனேன்னு இருக்கலாம். சனியன்களை இழுத்துக்கட்டி ஓட்ட முடியல. சோறுநல்லாஇல்ல. கொழம்பு நல்லால்லன்னு உயிர எடுக்கறான். ஒருத்தி வந்துட்டா வூட்ல ஆக்கறத தின்னுடான்னு ஒதச்சி சோறு போடுவால்ல,”

நான் மனசுலேசாகி அவர்களிடம் பொதுவாக,“யக்கா… கூத்துல நேத்து நாள்வசூலு மூவாயிரமாமே…”என்றேன்.

“ நீ வேற பொன்னாத்தா...அருக்காணி கல்யாணத்தன்னிக்கு மொய் பத்தாயிரத்தை தாண்டிருச்சு தெரியுமா? கூத்துக்காரங்க நம்ம ஊரு நல்லாருக்கனுன்னு வாயார எத்தனை கொண்டாட்டமாக பாடினாங்க. அந்த பொன்னரு மாமா மங்குனகுரல்ல என்ன சொன்னாரு தெரியுமா? இம்புட்டு காசு…இப்புட்டு அரிசிக்காவ பாடல. இம்புட்டு கும்பல் தெனமும் வாரியளே.  அதுக்காவ உங்க கால்ல விழறம்யா…இத்தனை கும்பல எங்க அப்பம் காலத்துல பாத்தம்யான்னு கலங்கி சொன்னாரு,”

“பொன்னரு ஒனக்கு மாமான்னா? சங்கர் என்ன பண்ணுனாப்பிடி…”

“சங்கரெல்லாம் மாமா இல்லக்கா. பொன்னரு மட்டுந்தான்…”

“பொன்னருமாமா கண்கலங்கவும் கூட்டத்தில் ஒருபய ‘விடு பொன்னரே…ராசா கலங்கலாமா? எடுவாளை…வீசு தலையை…’ன்னு சொல்ல கூட்டம் சிரிச்ச சிரிப்பென்ன. அத்தனமனுசரும் சேந்து சிரிக்கறத பாக்கனுமே. அதுக்காவவே அவங்களுக்கு என்னமாச்சும் செய்யனுக்கா,”

இருவரும் பேசியபடி ஓடையிலிருந்து மேலேறி வரப்பில் அமர்ந்தார்கள்.

பிறந்தஊர் என்று இங்கு வரும்போதெல்லாம் மனசு எரியும். ஆனாலும் என்னமோ ஈரமா பதமா இருக்கு இங்க. ஓடைக்கரையில் வைத்து கூலிக்காசு இருநூற்றைம்பதை கைகளில் தரும் போது சீனியம்மா,“பொன்னாத்தா…இந்தத்தோடு உங்கப்பாரு செஞ்சுக்குடுத்ததுதான்…எங்கஅப்பன்வூட்ல கல்யாணத்துக்கு போட்டது. இன்னும் காதுல கெடக்கு,”என்றாள். நிமிர்ந்து பார்த்தேன். எட்டுகல் கெட்டித்தோடு. எண்ணெய் ஊறி ஒளிமங்கியிருந்தன சிவப்புக்கற்கள்.

சுற்றி பச்சை நிறைக்கட்டியிருந்தது. வரப்பிலிருந்து இறங்கி பாதையில் நடந்தேன். காத்து கூடவே வந்தது. இங்கதான் காத்துவந்து தொடுறது இப்படி உணர்க்கையாக தெரிகிறது. திருப்பூரில் இப்படி கூடவே வெயில் இருக்கறது தெரியும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணம்.

தார் ஊற்றி பாதை நடக்க சமமாக இருக்கிறது. அன்றெல்லாம் மேடும் பள்ளமுமாக செம்மண் பாதை. மழைநாட்களில் பழகும்வரை பிடிமானம் கிடைக்காது. முதல்நாள் தான்உடன்வராமல் பிள்ளைகளுடன் வேலைக்கு அனுப்பும் போது அம்மா தெருவில் நின்று காய்ச்சல் குரலுடன் சொன்னாள்.

“பாதையப்பாத்து நடக்கனும். வேலக்காட்டுல பேசறத காதுல வாங்கிக்கப்பிடாது. நீ எதாச்சு பேசிறப்புடாது. நம்ம கஷ்ட்டத்துக்கு வேலைக்கு போறம்…அண்ணந்தம்பியா பழகற வரைக்கும் தான் இது நம்ம ஊரு நம்ம ஆளுக…”

“எனக்குந்தெரியும்மா…”என்று சொன்னாலும் ஒவ்வொருநாளும் வேலைக்கும் போகும் போதும், திரும்பவரும்போதும் ஒருபாட்டாய் பாடுவாள். எனக்கு சொல்கிறாளா ஊருக்கு சொல்கிறாளா என்று குழப்பமாக இருக்கும்.

பொன்ஆசாரி பெற்ற பிள்ளைதான் நான். எனக்கு அன்றைக்கு தோடுகளைத்தவிர வேறில்லை. அப்பா மேட்டுப்பாளையத்திலிருந்து தங்கம் வாங்கிவருவார். அங்குதான் அப்பாவின் கூட்டாளிகள் நிறைய இருந்தார்கள். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தின் பக்கவாட்டில் முருங்கைமரத்தை ஒட்டிய சிறிய ஓரறைவீடுதான் நகை செய்யும் உலையறை.

எங்கெங்கோ பெரியபெரிய நகைக்கடைகள் வந்ததால் அப்பாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்பா எம்மாத்திரம் மேட்டுபாளைய ஆசாரிகளே ஆடிப்போய்விட்டார்கள். ஒவ்வொருவராக ஆவணியாவிட்டம் விரதம் கும்பிட்டு உலையை எடுத்து ஆற்றில் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி டவுன்பக்கம் சென்றார்கள்.

அப்படி திருப்பூருக்கு செல்லவிருந்த மேட்டுப்பாளையம் சுக்கிரன்மாமா அப்பாவிடம் சொல்லிவிட்டு செல்ல வந்தார். அவரின் அட்டகாசமான சிரிப்பு மாறி துவட்டமான புன்னகை மட்டும் எஞ்சிய முகத்துடன் உலைவீட்டின் வாசல்படியில் அமர்ந்தார்.

“கண்ணுல பாக்கறவரைக்கும் போட்டு வதச்சு எடுக்குதுடா…உலைய கழட்டி ஆத்துல கரைச்சுவுட்டுட்டு முணுதரம் முழுக்கு போட்டுட்டு திரும்பிப்பாக்காம எங்கூடவே திருப்பூருக்கு வந்துருடா…நெதமும் வேல இருக்காம். மரியாதையா சோறு தின்னுட்டு காடு போய்ச்சேரலாம். சொந்தஊர்ல எறங்கி நிக்கமுடியாது ஆறுமுகம்…”

“இந்தப்பிள்ளை வேலைய முடிச்சுட்டேன்னா வந்துருவண்டா…எம்பிள்ளைய உங்கவூட்டு மருமவளா கூட்டிக்கிறியா…என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு உனக்கே தெரியும்,” என்று அப்பா கையெடுத்து கும்பிட்டார்.

சுக்கிரன்மாமா  அப்பாவை இறுகக்கட்டிப்பிடித்துக்கொண்டார். அம்மா கூப்பிய கைகளை இறக்காமலேயே தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

அவள்தான் பெரியகாரியத்திற்காக தர்மனின் பைக்கில் சென்று வேகத்தடையில் நழுவி விழுந்து, கட்டிலோடு கிடக்கிறாள். முகத்தில் இருந்த காயங்கள் ஆறி மாதங்களாகின்றன. உடல் நிலைக்கவில்லை. ஒருமாதத்திற்கு மேல் இருந்தும் ஒன்றும் நடக்காமல் நாமக்கல் அரசுமருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். கழுத்துநரம்பு அடி. அதுவாகவே சரியாகலாம் என்று சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கு பின்னால் நடந்து வந்தவர்கள் பேச்சுக்கொடுத்தார்கள்.

“ஏப்பிள்ள உங்க அம்மாவுக்கு ஒடம்பு தேவலையா?”

“தலையாட்டுது…கேக்கறது புரியுது…ஆனா ஒடம்பு நிக்கல. ஒக்காரவச்சா சரிஞ்சு விழுது…”

“ஆம்பளைப்பிள்ள இல்லாத வூடு…பொட்டப்புள்ளைக தான் பாத்துக்கனும். உம் புள்ள புருசனுக்கு சோறு…”

“எங்கவூட்ல சோறு வச்சிருவாங்க. அந்தஊர்ல கொழம்பு, பொரியல் தனித்தனியா இருவதுரூவா குடுத்தா வாங்கலாம். இப்ப ஆறுமாசமாச்சா…நான் போய்வர்றப்ப ஆக்கறத பாத்துக்கிறாங்க. அப்படி இப்படி செஞ்சுக்குறாங்க…”

“எங்கவூட்லகூட இப்பெல்லாம் சோறாக்குது. வயசு காலத்துல காலர தூக்கிக்கிட்டு திரிஞ்சது. மூத்தப்பய பக்கத்துலயே தனிக்குடித்தனம் பண்றத பாத்து இதுக்கும் கொஞ்சம் மனசு மலந்திருக்கு…” என்ற சீனியம்மாவை பார்த்து புன்னகைத்தார்கள்.

“மனசப்போட்டு ஒலட்டாத புள்ள…சாய்ந்தரமா கூத்துபாக்க வா. நம்ம ஊர்ல பத்துவருஷத்துக்கு முந்தி பொன்னர் சங்கர் கூத்து போட்டது. இன்னிக்கு அருக்காணிக்கு கட்டிசோறு கட்டிப்போடறாங்க தெரியுமில்ல…”

“சரிக்கா…அன்னிக்கு ஒருநா வந்தேன்,”

“நாமளாபாத்துதான் சிரிச்சுக்கிடனும்…உங்காத்தாளுக்கு எதாச்சுன்னா இந்தஊருல உனக்குன்னு சொந்தமில்லன்னு பதறாத. உங்கம்மாவுக்கு எதுன்னாலும் கூடமாட நாங்க இருக்கோம். தனியா விட்ரமாட்டோம்…காரியம் முடியறவர வந்து வேல செஞ்சி தர்றோம் பிள்ள, ” என்று சாந்திஅக்கா கையைப்பிடித்துக் கொண்டாள்.

வீட்டில் அம்மா வெறித்து பார்த்தபடி படுத்திருந்தாள். தூக்கி தலையணையில் சாத்திவைத்து படுக்கையெல்லாம் அலசி வெயிலில் போட்டுவிட்டு  சோறுஊட்டி படுக்கவைத்தேன். சோற்று தட்டுடன் அம்மா முன்னால் அமர்ந்தேன்.

“ம்மா…பொன்னர்சங்கர் கூத்துக்கு போயிட்டு வரேன்…நாளக்கி அக்கா வறேன்னு போன் பண்ணுனா…”

அம்மா பார்த்துக்கொண்டேயிருந்தாள். உடல்வலி தீர படுத்து எழுந்தேன். குளித்துவிட்டு அம்மாவின் பச்சை சேலையை எடுத்துக்கட்டிக்கொண்டு கூத்துநடக்கும் மாதாயி கோயில் முற்றத்திற்கு நடந்தேன்.

ஜனங்கள்வீட்டுவாசலில் கயிற்றுக்கட்டிலில் நான்குபுறங்களிலும் சீவி செதுக்கிய புங்கை குச்சிகளை செறுகி கொசுவலை கட்டி படுத்திருந்தார்கள்.

“எங்க அப்பன் பாட்டனெல்லாம் இத்தன போட்டா எடுக்க கூத்தாடுனதில்ல…அரும்பு மீச வச்ச அழகனும்…அவனப்பாக்கற அழகிகளும் எங்களை இத்தனைப்போட்டோ எடுக்க ஆடுற நாங்களும் நல்லகதிக்கு பெறந்திருக்கமய்யா…”என்ற சங்கர் மஞ்சள்ஆடை சரசரக்க கூத்துபந்தலைவிட்டு முன்னால் வந்து ஆடினார். நடுநடுவே அலைபேசியை உயர்த்திப்பிடித்திருந்த கல்லூரி பிள்ளைகள் குனிந்து சிரித்தன.


பொன்னர்சங்கர் சிலைகளுக்கு முன்பாக வளைகாப்பு சீர்தட்டுகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வளையல் தட்டுகள்,சாக்லெட்தட்டுகள்,கொய்யப்பழம்,தேங்காய்,மாம்பழம்,நெல்லிக்காய்,கம்மஉருண்டை,இளநீர்,நுனி சீவிய நுங்குகாய்கள் என அவரவர்கள் கொண்டுவந்திருந்தார்கள். போகினிகளில் ஐந்துவகை சோறுகள். புளி,எலுமிச்சை,தயிர்,தேங்காய் மற்றும் சீரகசம்பா அரிசியில் வெல்லப்பொங்கல். மணம் பசியை கிளத்தியது. 

கோவில் முற்றத்தில் பெண்களும் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள். எஞ்சிய கூட்டம் கல்சாலையில் சணல்சாக்குகளை விரித்தும், முக்காலிகள் பலகைகட்டைகள் இட்டும், பாய்கள் விரித்தும், வெறும் தரையிலுமாக அமர்ந்திருந்திருந்தார்கள். 

தாளம் தட்டிக்கொண்டிருந்த பூசாரிபாட்டா, “எதுக்கு கலங்குறீரு. அதான் எங்கள கண்டுட்டீருல்ல ராசா. கஷ்ட்டன்னு வந்தா எங்கஊருக்கு வா…சும்மா வேணாம். ரெண்டுநாளு கூத்து ஆடு. எங்கள நல்லாருன்னு நாலு நல்லசொல்லு சொல்லி உன் காசை எடுத்துட்டு போ. காசு இல்லைன்னாலும் அரிசி குறையாது பாத்துக்க… ”என்றார். 

“மரக்கா நிறைய,

பக்கா வளர,

படி படியா லாபம் ஏறும் மண்ணு…” என்று சங்கர் பாட கூட்டம் அமைதியானது. ஒலிபெருக்கியில் குரல் தெளிவாகக் கேட்டது. தாளங்கள் ஒலிக்க ராகமாய் பாடியும், பேசியும் கூத்தை நடத்தினார்கள்.

ஒருகட்டத்தில் கூத்துக்காரர்கள் சிரமப்பரிகாரத்திற்காக அங்கங்கே அமர்ந்தார்கள். முதலில் குழந்தைகளுக்கு சர்க்கரைப்பொங்கல் உணவு விநியோகம் நடந்துகொண்டிருந்தது. அப்படியே வயசுப்பிள்ளைகளும் குழந்தைகள் கணக்கில் சேர்ந்துவிடும்.

ஒலிவாங்கியை கைகளில் வைத்துக்கொண்டு இளஞ்சிவப்பு ஆடை மினுமினுக்க பொன்னர் தன் முன்னால் அமர்ந்திருந்த சாந்தியிடம், “ வயவேலைக்கு நாள்கூலி என்னத்தா…”என்றார்.

“எறநூத்தி அம்பது மாமா…”

கூட்டம் சிரித்தது.

“வேல நேரம் எப்பத்தா…”

“எட்டுமணிலந்து ஒருமணி…”

“நிக்காம வேலசெய்வியா…”

“சோத்துக்கு, டீக்குடிக்கன்னு நிக்காம இருக்க முடியுமா? நான் என்ன உன்னப்போல டான்சா ஆடுறேன்…”

“அப்பாடி..”என்று வாயில் கைவைத்தார்.

“நீ வந்து வெட்டவெயில்ல… தண்ணி ஆவிஅடிக்க சேத்துல நில்லு பாப்பம். குளுகுளுன்னு சட்டை போட்டு நிழல்ல ஆடுற பாடுற… உம்பாட்டுக்கென்ன…நல்ல விதிக்கு வந்திருக்க…”

“நீ வந்து இங்க மணிக்கணக்கா நின்னு ஆடிப்பாரு. ஒரு வசனம் சொல்லித்தாரேன் சொல்லு பாப்பம்…”என்று சங்கருக்கு கைக்காட்டினார்.

சங்கர் இடையில் கைவைத்து சிரித்தபடி எழுந்து நின்றார். ஒலிவாங்கியில் வசனத்தை சொன்னார்.

“காடு மலை மேடெல்லாம்

நாங்க பறந்து போனோமே…

ஒருகுருவி பறக்காத கரடெல்லாம் அலஞ்சு திரிஞ்சமே…

ஏன் அலஞ்சு திரிஞ்சம்…”

சாந்தி எழுந்து நின்றதும் கைத்தட்டல் பறந்தது. அவளுக்கு காடு மலைக்குமேல் வசனம் வாயில் வரவில்லை.

“லே…சாந்தி…உம்மாமன் சொன்ன வசனத்த சொல்லிக்காட்டாம வூட்டுப்பக்கம் வந்திராத…”என்று சாந்திபுருசன் பின்னாலிருந்து குரல் கொடுத்தார். அவரின் சிரிப்பு சத்தம் வந்த திசையை பார்த்து சாந்தி முறைத்தாள்.

“வம்பை இழுத்து விடாதய்யா பொன்னரு…சிறுசான வசனமா சொல்லேய்யா…”என்று பெரியாளுக பக்கமிருந்து குரல் கேட்டது. பொன்னர் விடுவதாயில்லை.

“என்ன…பேசிக்கிட்டுருக்கத்தா. பாடி ஆடு…”

சாந்தி ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டாள். 

“அங்க ஒக்காந்து பேசுனில்ல…இங்க வாத்தா…”

“நாளைக்கு உச்சிபொழுதுக்கு கருவாட்டுக்கொழம்பு வச்சு அப்பளம் பொறிச்சு, பொன்னிஅரிசி சோறு போடறேன்…விட்ருய்யா மாமா…”

“அப்ப விட்ருவோம். பொண்ணு வூட்டுல மாமனுக்கு நாளைக்கு சோறு...”

என்று பாட தாளங்கள் ஒலித்தன.

“ஏபிள்ள சாந்தி... திரும்பி கொஞ்சம் பாரு…மாமா மாமான்னு முதவரிசையில ஒக்காந்து கிடக்கிறியே… கடைசியில உன்ன சின்னப்பிள்ளைன்ட்டாரு  மச்சான்…ராசான்னா ராசாதான்,”என்று சாந்தியின் கணவர் சொல்ல அவருடன் கூட்டாளிகளும் சிரிக்கும் ஓசை அலையென எழுந்து மறைந்தது.

வலது கைப்பிடிக்க பெரியண்ணரு,

இடது கைப்பிடிக்க சின்னண்ணரு,

மனசுப்பிடிச்சுக்க வேறென்ன வேணும்…

தலைக்கு மேல் எரியும் வெங்காடென்ன பண்ணும்

காலுக்கு கீழே நெருஞ்சியென்ன செய்யும்?

பெறந்தவனுங்க கை பிடித்து என் விதி கடப்பேன்…

மக்களே…கூடபெறந்த உறவுக்கும் உரிமைக்குமேல ஒன்னுண்டா சொல்லுங்க…”

என்று அருக்காணி பாடினாள். கத்தரிப்பூநிற கரை சேலையும், மாலையும், கைநிறைய வளையல்களுமாக முன்னால் வந்து நின்றாள். பொன்னரும் சங்கரும் இருப்பக்கமும் நின்றார்கள்.


பெண்கள் பக்கமிருந்த சிரிப்புகளும், கேலிகளும், கசகசப்புகளும் நின்று உறைந்திருந்திருந்தன. கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்திருந்த கவிதா உடலை முறுக்கிக்கொண்டு அம்பென எழுந்தாள். 

“எவண்டா…பொறந்தவன். நெதமும் நாரத்தண்ணிப்பக்கம் போறவன கண்ணெடுத்து பாக்கவும் பயமா இருக்கு. யாரிருக்கா பெறந்தவன்னு எனக்கு …”என்று அவளுடனே அவள் சண்டையிடுபவளாக அவள்உடல் முறுக்கி வலியில் திமிறியது. பொன்னர் தட்டிலிருந்த திருநீற்றை அவள் தலையில் தெளித்து நெற்றியில் அழுத்தினார். அவள் அழுதுகொண்டிருந்தாள். இருபெண்கள் அவளை பிடித்திருந்தார்கள்.

“நான் இருக்கேன்…அங்க வீரப்பூர்ல உங்களுக்காவதான் மொட்டவெயில்ல சிவந்த நெலத்துல நிக்கறேன்…”

“நீரு எனக்காவ இருப்பீரா…பெரியண்ணரே…”என்று அவள் குரல் கரைந்தது. அவர் அவள் நெற்றியிலிருந்து தலையை வலதுகையால் தடவினார்.

உள்ளிருக்கும் சக்திமாதாவுக்கு பூசைக்காட்டியப்பின் பொன்னர் சங்கருக்கு கைக்காட்டினார். பனைமரத்தின் நுனியை மட்டும் வெட்டிவிட்டு வேண்டுதல்தூண் நடப்பட்டிருந்தது. பணம் வைத்துக் கட்டப்பட்ட சிவப்புதுண்டுகளின் நுனிகள் காற்றில் அசைந்தன.

“இன்னிக்கு அருக்காணிக்கு வளைகாப்பு பாத்துக்கங்க. யாருக்கு புள்ளவரம் வேணுமோ வேண்டிக்கிட்டு உங்களுக்குன்னு இருக்கப்பட்ட காசை துண்டுல முடிஞ்சு கட்டலாம்…” என்று சங்கர் அழைத்தார்.

அதற்குள் கண்ணாடி வளையல்கள் சாமிக்கு படைக்கப்பட்டு பெண்களுக்கும், வேண்டுதல்காரர்களின் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கூத்துத் தொடங்கியது.

“இந்தநிறம் உனக்கு எடுக்கும்பிள்ள, அந்தகலர் வளையலை எனக்குத்தா,” என்று மாற்றிக்கொண்டிருந்தவர்களை பார்த்தபடி பந்தலின் கீழ் ஒலிவாங்கி முன்னால் நின்ற பொன்னர், “வளையல் அழகு பாத்தது போதும். எங்க அழகப்பாருங்க. ஆடையப்பாருங்க…நடையப்பாருங்க…எங்க தங்கைக்கு வளைகாப்பு…”என்று தொடங்கினார். சங்கர் வந்து இணைந்து கொண்டார். அருக்காணி வேடமிட்டவர் நாற்காலியில் பொன்னர்சங்கர் சிலைகளுக்கு கீழ் அமர்ந்தார்.

இடைஇடையில் வெட்டிய வாழையிலையில் சோற்றை வைத்து ஆட்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யாரும் எழுந்து நிற்காமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூத்தே கண்ணாக இருந்தார்கள். கல்யாணம் ஆனவர்களுக்கு ஒருநினைப்பு,ஆகாதவர்களுக்கு மறுநினைப்பு,இழந்தவர்களுக்கு வேறுநினைப்பு,பிள்ளையில்லாதவர்களுக்கு பலநினைப்பு என்று அந்த கூத்துசடங்கு அத்தனை பேரையும் தனக்குள் இழுத்துக்கொண்டது.

கடைசியாக சங்கர், “ஊருபிள்ளைக்குட்டி நலமா இருக்கட்டும், ஊர் பெருகட்டும், ஆடு மாடு ஈத்துஎடுக்கட்டும்,கோழியா நிறையட்டும், வீட்டு சால் குறையாதிருக்கட்டும்,நெல்லம் பயிரு பால்பிடிக்க,தென்னம்மரம் பாளைவிட,மரமெல்லாம் செடிகொடியெல்லாம் பூத்து செழிக்கட்டும் ஊர்,”என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அங்கங்கே சிலர் கைக்கூப்பி நின்றார்கள். ஒருசிலர் கண்கள் கலங்க ஊரை வாழ்த்தி முடிந்தது அன்றையகூத்து.

குனிந்து பார்க்கையில் நானும் அழுதுகொண்டிப்பதைக் கண்டு முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டேன். ஆட்கள் மெதுமெதுவாக கூத்திலிருந்து விடுபட்டவர்களாக எழுந்தார்கள். பொன்னர், சங்கர், அருக்காணி என்று தங்கள் மனம் தொட்டவர்களிடம் திருநீரு பூசிக்கொண்டு சென்றார்கள்.

நான் மெதுவாக உயர்ந்துநின்ற வேண்டுபனையை சுற்றிக்கொண்டு பொன்னரிடம் சென்றேன். பெருவிரலால் திருநீரை பூசிவிட்டு தலையில் கைவைத்து, “பொட்டப்பிள்ளைக்கு கூடுதல் வைராக்கியம் வேணுத்தா,”என்றார். கண்களை துடைத்தபடி தள்ளிநின்றேன். என்னைப் பார்த்து ஒரு அப்பாயி ஆடிஆடி அருகில் வந்தது.

“ஆறுமுவம் பிள்ளையா…”

“ஆமா அப்பாயி…நீங்க…”

“வடக்காலத்தெருவு… இன்னிக்கி நம்ம வூட்லருந்துதான் பொங்கச்சோறு,”என்று திரும்பி அங்கு நின்ற பயலிடம், “தம்பி…ஒரு எலையில சோறு கொண்டா…”என்றாள்.

“அம்மா விழுந்துட்டாளா?”

“ஆமாப்பாயி…”

“யாருக்கு என்ன விதியோ…அதா அந்தப்பெரிய திண்ணையில ஒக்காந்துதான் உங்கப்பாரு தொழிலு தொடங்குனாங்க. அப்ப கல்யாணம் ஆவாத சின்னப்பையன் அவரு. எனக்கு ரெண்டாங்கல்யாணம் பாத்துக்க. மூத்தவரு தென்னமரத்துலருந்து விழுந்துட்டாரு. எனக்கு பதினஞ்சு பிராயந்தான்…அவுங்க பங்காளிக்கு கட்டிவச்சாங்க. உங்கப்பாரு எனக்கு தாலி செஞ்சி தொழில் தொடங்குனாங்க…தாலி நிலைக்கனுன்னு கொல்லிமல தாயம்மாட்ட வச்சி வேண்டி எடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொன்னாவ. கூடப்பெறந்தாதானா…”என்று தாலியை எடுத்துக்காட்டியது.

“பாட்டா வரலையா?”என்றபடி தாலியைப்பார்த்தேன். இரண்டுபவுனிற்கு மேலான பழையகாலத்து கெட்டித்தாலி. கொம்புத்தாலியின் செதுக்கல்கள் அப்படியே இருந்தன.

“அவுகளுக்கு காலுவலித்தா…இம்புட்டு பொழுது ஒக்கார வைக்காது…”என்றபடி மார்பின் மீது தாலிமின்ன இலையில் இருந்த சோற்றை வாங்கி, “ஆத்தாளுக்கு குடுத்தா,”என்றது. நான் தலையாட்டினேன். கிழவி என்னிடம் பேச ஆசையாய் இருப்பதை அதன்முகம் காட்டியது.

“இந்தப்பாதையில நடந்து போறப்பை உங்கஅப்பாரு மூச்சுபிடிச்சு ஊதாந்தட்டைய ஊதற மூச்சுசத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அது உண்டாக்குன கங்குல ஒன்னுதான் இந்தநெஞ்சு மேலே மின்னுது…அவரு நெனப்பு அது. நான் இனி ஒருக்கா தாலி அறுத்தறப்பிடாதுன்னு அந்த மனசு நெனச்சது,”என்ற கிழவி பேச்சை நிறுத்திவிட்டு நின்றது. பின் என்கன்னத்தை வழித்து முத்தமிட்டது. 

சித்திரை கனலை அதுவரை ஊதிக்கொண்டிருந்த காற்று தண்மைக்கு மாறும் இரண்டாம் ஐாமம் எழுந்திருக்கும் பொழுதாகிவிட்டது. கூட்டம் கலைந்து அனைத்தும் ஆனப்பின் பொன்னர், சங்கர், அருக்காணியை நிற்கவைத்த சம்பூரணம்அக்கா ஆரத்தி எடுத்து பொட்டுவைத்து கண்திருஷ்டி கழித்தாள். ஆரத்தி நீரால் அவர்களுக்கு முன்னால் குறுக்காக நீண்ட படிரேகை வரைந்தாள். ரத்தத்தால் வரைந்ததைப்போல அடர்சிவப்பில் தெரிந்தது. அவர்கள் கைக்கூப்பியபடி அந்த கோட்டைதாண்டி தாங்கள் தங்கியிருந்த காரைவீட்டுப்பக்கமாக நடந்தார்கள். நான் திரும்பி வீட்டிற்கு நடந்தேன்.

அம்மா உறக்கத்திலிருந்தாள். இலைசோற்றை பழையசாமான்கள் கிடந்த உலையறையின் வடகிழக்கு மூலையில் வைத்தேன். அடுப்புமேட்டிலிருக்கும் கதகதப்பு போல ஒருசூடு கால்களுக்குகீழே ஏறியதும் கால்களை உதறிக்கொண்டு தள்ளிநின்றேன். என் முகம் பூத்திருந்ததை, கண்களின் ஈரத்தை துடைக்கும் போது உணர்ந்தேன். இருகன்னங்களில் இன்னும் மிகமெல்லிதான சூடு எஞ்சியிருந்தது.









Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...