இன்று தீபாவளி. நேற்றிலிருந்து சத்தங்கள் அதிர்ந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் தள்ளி சென்றால் தலை தப்பிக்கும் என்று நினைத்தேன். தம்பியின் நண்பனின் குடும்பம் 'பெரியண்ணசாமிய பாத்துட்டு அப்பிடியே அய்யாத்து தண்ணியப் பாத்துட்டு வரலாம்' என்று அழைத்து சென்றார்கள்.
சற்று தள்ளியிருந்து கண்டாலும் அருகிருந்து உணர்ந்தாலும் கொல்லிமலை தரும் ஆசுவாசம் மனதை அமிழ்த்தி வைக்கக்கூடியது. 'வேறெதையும் நினைக்காது என்னுடன் இரு' என்று அது முதலில் தன் குளிர் காற்றால் தொடும். மேற்கே ஊர்எல்லையை கடந்த உடன் சில்லென்று காற்று சட்டென்று தழுவும். அப்போதே நம் அன்றாட மனதை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. முன்பெல்லாம் இங்கு உயிர்வளியின் அளவு உச்சத்தில் இருக்கிறது அதனால் மூளை நல்ல உயிர்வளியை பெறுவதால் இப்படி இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் இந்த சில ஆண்டுகளில் உயிர்வளியின் அளவு அதிகரிக்கும் என்றால் சுறுசுறுப்பாகாமல் மனம் எப்படி அமிழ்கிறது என்று கேள்வி எழுகிறது. கொல்லிமலையின் அடியில் அய்யாற்றின் கர்ஜனையில், அதன் வேகத்தில் மனம் அமிழ்ந்து விடுகிறது. மௌனமாக அடுக்கடுக்காக எழுந்து நிற்கும் மாமலை. கடந்த இருமாதங்களின் ஓயாத மழையால் எப்பொழுதும் பனிமூட்டமும் சில்லென்ற காற்றுமாக இருக்கிறது. மழை வரும் முன் மட்டும் புழுக்கம். மலைஅடுக்குகள் எங்கும் அங்கங்கு நீராவி இணைந்து மேகம் போலாகி தவழ்கிறது. அந்த நீராவி விரிந்து பரவி மலைசிச்சிகரங்களை மூடி விட முயற்சித்து நழுவுகிறது.

சித்தர்கள் உலவும் மலை. இந்த மலை அடுக்கங்களே அவர்களை இங்கு வரச்செய்கிறது.
கர்ஜிக்கும் அய்யாறும், மௌனமாய் எழுந்து நிற்கும் மலைஅடுக்கங்களும் இயற்கையின் ஆகிருதிகள். அவற்றின் முன் எண்ண சுழற்சி அப்படியே சட்டென்று மறைந்துவிடும்.
மற்றவர்களுக்கும் அப்படிதான் என்று சொல்லமுடியவில்லை. எங்கேயும் போல இங்கேயும் பசங்களின் அட்டூழியங்கள் எரிச்சலடைய செய்கிறது.
[பெரியண்ணசாமிக்கான அந்திபூசைக்காக அய்யாற்றிலிருந்து நீரெடுக்கும் பூசாரி]
பெரியண்ணசாமி கொல்லிமலை பாதத்தின் காவல் தெய்வம். அங்கு அமர்ந்திருக்கிறோம் என்ற துளிஉணர்வும் இல்லாது வருவோர் போவோரை எரிச்சலையடை செய்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். எங்கும் உள்ள கும்பல் அது. அந்த கும்பல் எந்த இடத்தையும் இயல்பாக இருக்கவிடாது. அதை கடந்து சென்றால்தான் நமக்கானதை காணமுடிகிறது.
அந்த கும்பல் பைக்குகளில் அமர்ந்திருந்த ஆலமரத்தடியில் நானும் அய்யாவும் நிறைய நாட்கள் அமர்ந்திருக்கிறோம். அங்கிருந்து மாசிக்குன்றை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அய்யா சொல்வார். இன்று அங்கு சென்று நிற்க முடியவில்லை.
இந்தசந்தடிகளுக்கு கடந்து மலைப்பாதைக்குள் நடந்து அய்யாற்று கரையை அடைவதற்கு முன்பே கர்ஜனை கேட்கத்தொடங்கியது. ஒரு மாதமாகவே வெள்ளம். சுழித்து ஓடுகிறது. மனம் அடங்கி அதன் கரையில் அமர்கிறது. இதற்காகத்தான் இங்கு வரத்தோன்றுகிறது.
மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அய்யாவிற்கு பிறகு ஈசனே மனதறிந்து அனுப்புவதைப் போல ஏதோ ஒரு துணை வந்து சேரும். ஆண்டுக்கு இருமுறையாவது அவன் பாதத்தில் அமர்ந்து கொள்கிறேன். எஞ்சும் என்னில் அவனே ஔிரட்டும்.
Comments
Post a Comment