Skip to main content

ஈசனின் பாதங்களில்

 


இன்று தீபாவளி. நேற்றிலிருந்து சத்தங்கள் அதிர்ந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் தள்ளி சென்றால் தலை தப்பிக்கும் என்று நினைத்தேன். தம்பியின் நண்பனின் குடும்பம் 'பெரியண்ணசாமிய பாத்துட்டு அப்பிடியே அய்யாத்து தண்ணியப் பாத்துட்டு வரலாம்' என்று அழைத்து சென்றார்கள்.

சற்று தள்ளியிருந்து கண்டாலும் அருகிருந்து உணர்ந்தாலும் கொல்லிமலை தரும் ஆசுவாசம் மனதை அமிழ்த்தி வைக்கக்கூடியது. 'வேறெதையும் நினைக்காது என்னுடன் இரு' என்று அது முதலில் தன் குளிர் காற்றால் தொடும். மேற்கே ஊர்எல்லையை கடந்த உடன் சில்லென்று காற்று சட்டென்று தழுவும். அப்போதே நம் அன்றாட மனதை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. முன்பெல்லாம் இங்கு உயிர்வளியின் அளவு உச்சத்தில் இருக்கிறது அதனால் மூளை நல்ல உயிர்வளியை பெறுவதால் இப்படி இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் இந்த சில ஆண்டுகளில் உயிர்வளியின் அளவு அதிகரிக்கும் என்றால் சுறுசுறுப்பாகாமல் மனம் எப்படி அமிழ்கிறது என்று கேள்வி எழுகிறது. கொல்லிமலையின் அடியில் அய்யாற்றின் கர்ஜனையில், அதன் வேகத்தில் மனம் அமிழ்ந்து விடுகிறது. மௌனமாக அடுக்கடுக்காக எழுந்து நிற்கும் மாமலை. கடந்த இருமாதங்களின் ஓயாத மழையால் எப்பொழுதும் பனிமூட்டமும்  சில்லென்ற காற்றுமாக இருக்கிறது. மழை வரும் முன் மட்டும் புழுக்கம். மலைஅடுக்குகள் எங்கும் அங்கங்கு நீராவி இணைந்து மேகம் போலாகி தவழ்கிறது. அந்த நீராவி விரிந்து பரவி மலைசிச்சிகரங்களை மூடி விட முயற்சித்து நழுவுகிறது.



சித்தர்கள் உலவும் மலை.  இந்த மலை அடுக்கங்களே அவர்களை இங்கு வரச்செய்கிறது. 

கர்ஜிக்கும் அய்யாறும், மௌனமாய் எழுந்து நிற்கும் மலைஅடுக்கங்களும் இயற்கையின் ஆகிருதிகள். அவற்றின் முன் எண்ண சுழற்சி அப்படியே சட்டென்று மறைந்துவிடும். 

மற்றவர்களுக்கும் அப்படிதான் என்று சொல்லமுடியவில்லை. எங்கேயும் போல இங்கேயும் பசங்களின் அட்டூழியங்கள் எரிச்சலடைய செய்கிறது. 

[பெரியண்ணசாமிக்கான அந்திபூசைக்காக அய்யாற்றிலிருந்து நீரெடுக்கும் பூசாரி]

பெரியண்ணசாமி கொல்லிமலை பாதத்தின் காவல் தெய்வம். அங்கு அமர்ந்திருக்கிறோம் என்ற துளிஉணர்வும் இல்லாது வருவோர் போவோரை எரிச்சலையடை செய்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். எங்கும் உள்ள கும்பல் அது. அந்த கும்பல் எந்த இடத்தையும் இயல்பாக இருக்கவிடாது. அதை கடந்து சென்றால்தான் நமக்கானதை காணமுடிகிறது.

அந்த கும்பல் பைக்குகளில் அமர்ந்திருந்த ஆலமரத்தடியில் நானும் அய்யாவும் நிறைய நாட்கள் அமர்ந்திருக்கிறோம். அங்கிருந்து மாசிக்குன்றை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அய்யா சொல்வார். இன்று அங்கு சென்று நிற்க முடியவில்லை.

இந்தசந்தடிகளுக்கு கடந்து மலைப்பாதைக்குள் நடந்து அய்யாற்று கரையை அடைவதற்கு முன்பே கர்ஜனை கேட்கத்தொடங்கியது. ஒரு மாதமாகவே வெள்ளம். சுழித்து ஓடுகிறது. மனம் அடங்கி அதன் கரையில் அமர்கிறது. இதற்காகத்தான் இங்கு வரத்தோன்றுகிறது. 

மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அய்யாவிற்கு பிறகு ஈசனே மனதறிந்து அனுப்புவதைப் போல ஏதோ ஒரு துணை வந்து சேரும். ஆண்டுக்கு இருமுறையாவது அவன் பாதத்தில் அமர்ந்து கொள்கிறேன். எஞ்சும் என்னில்  அவனே ஔிரட்டும்.





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...