Skip to main content

யார் தோழி

                            ஓதற்பிரிவு 😌😇


ஒரு குழந்தை பள்ளிக்கூடம் கூடம் செல்வது அந்தக்குழந்தைக்கு மிக இயல்பாக நடந்துவிடுகிறது. வீட்டில் தான் பரபரப்பு. ஒரு வாரமாகவே அவனை எப்படி பழக்குவது,அவனுடைய பை முதல் சகலபொருட்களையும் சேகரித்தல். தண்ணீர் பாட்டிலை பழக்குதல் என்று அது நீளும். அவன் இயல்பாக காலை எழுந்து பொம்மைகளுடன் விளையாடிவிட்டு, இரண்டு முறையாவது கீழே விழுந்து எழுந்து அழுதப்பின் அடுத்த விளையாட்டிற்கு தாவுவான். அவனை இழுத்து குளிக்க வைத்து கிளம்பும் வரை அவன் கவனமெல்லாம் கையிலிருக்கு பொம்மை மீதோ, பலூன் மீதோ இருக்க வீடே போராடிக்கொண்டிருக்கும். போர்க்களத்தில் பூக்கும் பூவாக அவன் உலகத்தில் அவன் இருப்பான்.  அதையெல்லாம் கடந்து பள்ளி செல்லும் முன் கையசைக்கும் அந்த நொடி இனி இருபத்துஐந்து ஆண்டுகளாவது இப்படி கிளம்புவான் என்று தோன்றியது. முதன் முதலாக தனித்து அவன் வயது சமூகக்குழுவிடம் விடுகிறோம். இனி அவனை சமூகம் கைகளில் எடுத்துக்கொள்ளும். சமூகம் என்றால் நேரடியாக அல்ல. சமூகத்தின் வெவ்வேறு பிரதிநிதிகளான அவனின் சகர்கள்.




ராஜமித்திரன் பள்ளிக்கூடம் சென்றப்பின் சிலநிமிடங்கள் அவனுடைய பொம்மைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று இந்த வரிகள் தோன்றியது. இந்த வார்த்தைகளும் இங்கே இருக்கட்டும்....

சங்கக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பதால் வரும் சிக்கல் இது.

கூறுவார் யார் தோழி

பால்பாட்டிலை கைவிட்டு

பையை எடுத்துக்கொண்டு

பள்ளிக்கூடம் சென்றுவிட்டான்

அவன் கலைத்துவீசி

 பிரிவாற்றாமையால்

முகம்திருப்பி கிடக்கும் 

பொம்மைகளிடம்...தலைவன்

பொன்மதிய பொழுதில்

இல்லம் வந்து சேர்வான் என்று

கூறுவார் யார் தோழி? ☺






Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...