விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான்.
ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி ஐந்தாண்டுகள் இருக்கலாம்.
நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன.
ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு விடுதிக்கு சென்ற போது நூலகம் மட்டுமே வாசிப்பதற்கான வாய்ப்பாக இருந்தது.
நல்ல வேளை உயர்நிலை பள்ளியில் புதுமை பித்தன், சூடாமணி, சுந்தர ராமசாமி, கி. ரா ,கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன் , வண்ணநிலவன் என்று வரிசையாக இருபது இலக்கிய முன்னோடிகளின் கதைகள் ஒவ்வொன்று அறிமுகமாகி இருந்தன. இந்தியா டுடே வழியே சில இலக்கியவாதிகளின் கதைகள் அறிமுகம் இருந்தது. ஆனால் புத்தகங்களுக்கு நூலகத்தை நம்பியிருந்தேன்.
சாகித்திய அகாதமி, ஞனபீடம் போன்ற இலக்கியவிருதுகள் சரியான படைப்பாளிக்கு அளிக்கப்பட வேண்டியது மிக முக்கியம். அவர்களின் அனைத்து புத்தகங்களும் நூலகங்களில் இடம்பெறும். புதிதாக வாசிக்க வருபவர்களின் கைகளுக்கு சட்டென்று கிடைக்கும்.
இங்கிருந்து தானே தொடங்குகிறது... வாசிப்பும்.. சிந்தனையும்... மொழியின் மீதான மையலும்.
ஞானபீட விருது பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு அளிக்கப்படுவது சரியில்லை என்று ஏன் சொல்கிறோம் என்று படித்தவர்களுக்கே புரியவில்லை.
காரணம் என்ன...
இலக்கியம் என்ற தொடர்ச்சியான செயல்பாட்டின் அடிப்படையான அறிமுகமில்லை.
அப்படியே அறிமுகமிருந்தாலும் வணிக இலக்கியம் வரை தான் தெரிகிறது.
என் கல்லூரி காலத்தை விட இன்றைக்கு தொழில் நுட்பம், வாய்ப்புகள், ஊடகங்கள் பெருகிவிட்டன.
ஆனாலும் என்ன... அதே பாடலாசிரியர் வைரமுத்து தான் விரல்தொடும் இடத்தில் இருக்கிறார்.
இந்த வலைப்பூவில் நம் முன்னோடிகளின் படைப்புகள் மற்றும் சமகால படைப்புகள் பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளேன் . அந்தத் தகுதியில் ஒரு தமிழ் இலக்கிய வாசகியாக ,எழுத்தாளராக இதை சொல்கிறேன். பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அளிக்கப்படுவது தமிழின் இலக்கிய தகுதியை மிகக்குறைத்து மதிப்பிடும் செயல்.

Comments
Post a Comment