Skip to main content

கடல்_ பற்றி ஒரு வாசிப்பனுவம்

 எழுத்தாளர் சாரோ லாமா விற்கு நன்றி.

இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கிய குறைவான நூல்களில் கமலதேவியின் ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. இதற்கு முன் சில கதைகளை இணைய இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது வேறு ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது.


கமலதேவியின் கதை சொல்லல் முறை நிதானமான நடையைக் கொண்டது. உணர்ச்சித் தீவிரங்களோ உறவு மோதல்களின் பெருவெடிப்புகளோ இல்லாதது. மனம் ஆழ்ந்து கனத்துக் கிடக்கும்போழ்தில் திடீரென வானில் வெளிப்படும் கீற்று நிலவைப் போல கமலதேவியின் சொற்கள் மேலெழுந்து ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அந்தச் சித்திரம் வாழ்வின் மாயாஜாலச் சித்திரமாக தோற்றம் கொள்கிறது. மனித மனம் கொள்ளும் விசித்திரங்கள், இயலாமைகள், இயலாமையை மீற விரும்பும் மனித இருப்பு, குறிப்பாக பெண் இருப்பு இந்தக் கதைகளை முக்கியானதொன்றாக்குகின்றன. ‘அவரவர் மனத்தின் இயலாமைகளை மீறவே சக மனிதர்களிடம் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம்’ கமலதேவியின் கதைகளைப் படிக்கையில் எனக்குள் உறுதிபெற்று நின்றது.


கச்சிதமான சொற்களால், கச்சிதமான உணர்வெழுச்சியைப் பின்னல் போல நெய்து இத்தொகுப்பில் சில பிரமாதமான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. குறிப்பாக தொகுப்பின், ‘தையல்’ கதையைச் சொல்லலாம். அறுபதைக் கடந்த பின் மனிதர்களுக்குள் எழும் மூர்க்கம் குறிப்பாகத் தன் அடுத்த தலைமுறை மாந்தர்கள் மீது எழும் மூர்க்கத்தைப் பின்னணியாக வைத்து சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை இது. வாழ்வின் நடைமுறை சாத்தியங்கள் மனிதர்களைப் பிரித்து வைக்கும்போது அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அன்பும், வன்மத்தை நிதானமாக வெளிப்படுத்தும் கோபமும் அழகாக வெளிப்படுகிறது இந்தக் கதையில். கீரை விற்பவரின் மயில் குரலை எழுத்தில் அதே வாசனையோடும் வாஞ்சையோடும் கமலதேவியால் சொல்ல முடிந்திருக்கிறது. பசுங்கீரை இலைகள் மூங்கில் முறத்தில் நிறைய நிறைய அந்த வாழ்ந்து செறிந்த மனிதர்களின் வார்த்தைகள் அதன் பின்னாலிருக்கும் காயங்கள், முன் முடிவுகள், ஏமாற்றங்கள், இயாலாமைகள்  என எல்லாமும் நம் முன்னே குவியத் தொடங்குகின்றன. ”புளிச்சக்கீரையில் கிடக்கிற வெங்காயம் அமுதமில்ல”, ”சும்மா பழுத்த பலாப்பழத்தை இல்லைங்காதே”, ”பாம்போட ரோஷம்தான் அதனோட விஷம் தெரியுமா? அதனாலதான் சிவனே கழுத்தில் போட்டிருக்கான் ” – செறிவும் அர்த்த அழகுணர்ச்சியும் நிரம்பிய உரையாடல்கள். அதன் வழி வெளிப்படும் அவரவர் கோணங்கள், குணச்சித்திர வாழ்வனுபவங்கள் நிச்சயம் வாசகனைப் புதியதொரு  வாசிப்பு அனுபவத்தால் நிரப்பும் என்று நான் நம்புகிறேன். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு ஊரில். மனிதர்களை மனிதர்களே அறிய முயலும் இந்தத் தொடர் ஓட்டத்தில் வெளிப்படும் அன்பும், அன்பு அதிகமாகிக் கசிந்துருகும் விஷமும். ஐம்பது பேர்கள் சூழ்ந்திருக்க அவர்களின் வலிமை முன்பு ஒன்றுமில்லாமல் போகக்கூடிய ஒரு நல்ல பாம்பு, துளி பயமில்லாமல் அந்த மனிதர் கூட்டத்தை [தன் விஷத்தை இறுகப் பற்றிக்கொண்டு] கடந்துபோகும் சித்திரத்தை கமலதேவியின், ‘தையல்’ என்ற கதை எனக்களித்தது என்றே சொல்ல வேண்டும். யாருமில்லாத நிலவெளியில் ஊர்ந்து திரியும் பாம்புகளென மனித மனங்கள் அசைகின்றன. கமலதேவியின் கதைகளின் ஆதார உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுக்கும் நதியல்ல. மாறாக ஆழத்து நீரோட்டம் போல சலனத் தொடர்ச்சியுடன் முழுக்கப் பரவும் குளிர்ச்சி. எளிமையான வாக்கியங்கள், இடையிடையே ஒளிரும் அதன் அர்த்த சேர்மங்கள், அந்த அர்த்த சேர்மானங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் தோற்ற வெளி [LANDSCAPE] – ஒரே நேரத்தில் மனித மனங்களின் தோற்றப் பரப்பாகவும் மனித வாழ்வின் தோற்றப் பரப்பாகவும் விரிகிறது. வாழ்வின் பெருநிலப்பரப்பில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்தானோ? நானறியேன்.


தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தீர்மானமாக ஒரு முடிவை நோக்கி நகரும் கதைகள் அல்ல. வாழ்வின் சலனங்களை ஒரு எளிமையான மொழியில் எளிமையான விரிப்பில் சொல்லிப்போகும் கதைகள். பெண் மனத்தைச் சூழும் மாயக்கரங்களை விலக்கி விலக்கி தன் மென் இருப்பை இறுகப் பற்றிக்கொள்ளப் போராடும் பெண்களின் கதைகளாக இவை முடிவில் தோற்றம் கொள்கின்றன. ‘மயில்தோகை’ கதையில் படிக்காத, காதலித்து திருமணம் செய்த கணவனை விலக்கி காதலனுடன் மனதால் நெருங்க விழையும் பெண்ணின் மனப்போராட்டங்கள்தான் கதைக்களன். அதனூடே இளைய மகளை எந்தச் சலனமுமின்றி தத்துக்கொடுக்கும் பெண்ணாகவும் அவள் இருக்கிறாள். நாற்பத்தைக் கடந்த பின் ஆண்/பெண் உறவில் எழும் சிக்கல்கள், மனதை நிறைக்கும் பனிப்படலங்கள், நிறைவைத் தேடும் காமம் என பெண் மனதின் ஏற்ற இரக்கங்களோடு கதை பின்னப்பட்டிருக்கிறது. சரி தப்புக்கு அப்பால் ஆண் பெண் உறவின் சூட்சுமம் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்று  தெரியவில்லை. ஆனால் மனதை இயக்கும் மாய நூல் எப்போது எந்தப் பக்கம் சரியும் என்று யாரால்தான் சொல்ல முடியும்? உடன் போக்கு, கடல், பனிப்பொழிவு, மயில்தோகை எனப் பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பெண் மனதின் ஆழங்கள், விசித்திரங்கள், கடவுள் தன்மை கொண்ட பிசாசு ரூபம், இயலாமை என இவர் உருவாக்கும் பின்னல்கள் இந்தக் கதைகளை கவனமாக வாசிக்கக் கோருபவை. கொடார்ட் படங்கள் மட்டுமல்ல, கமலதேவியின் கதைகளும் கூட பெண் மனதின் அசலான ரூபங்களை அதன் அசலான கவிச்சியை நமக்குப் புரிய வைக்கும் என்பது இந்தத் தொகுப்பை நான் வாசித்த பின் உணர்ந்துகொண்டேன். கமலதேவியின்  இன்னபிற சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்க ஆவல் கூடுகிறது. 


- எழுத்தாளர் சரோ லாமா( Saro Lama ) 

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...