Skip to main content

இதழ்கள்

 

 இந்த மார்ச் மாதத்துடன் புரவி இதழ் தன்னுடைய முதல் ஆண்டை நிறைவு செய்கிறது.


                    ஓவியம்: பார்கவி


சிறுவயதில் விடுமுறையில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்களுக்காக அஞ்சல்கார அய்யாவுக்காக காத்திருப்போம். அவர் பெயர் ராமராஜ். என்னுடைய பள்ளி வகுப்பு தோழன் பாஸ்கரனின் தந்தை. அஞ்சல்காரர்களின் சைக்கிள் மணிஒலிக்கு என்று விஷேசமான தன்மை உள்ளது. 'சீக்கிரம் வா' என்று கண்டித்து அழைப்பது. அவர் எங்கள் ஊர் மட்டுமல்லாது இரண்டு மைல் தொலைவில் உள்ள கொல்லிமலை அடிவார பசலிகோம்பை வரை செல்லவேண்டும். அந்தப்பதட்டத்தில் அதட்டிக்கொண்டே இருப்பார். 

அஞ்சலில் வரும் இதழ்கள் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. சிறுவயது பரவசங்கள் மெல்ல  மெல்ல இயல்பான விஷயங்களாக மாறிவிடுவதுதான் வாழ்வின் இயல்பான அபத்தம் அல்லது துயரம் அல்லது முதிர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. சில பரவசங்கள் இயல்பாகவே எந்த முயற்சியும் இன்றி உதிராமல் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள். 

எனக்கு அந்த மாதிரியான சில விஷயங்களில் ஒன்று இதழ்கள். எங்கள் ஊர் நூலகத்தின் மேசைகளில் கிடக்கும் இதழ்களை முதன்முதலில் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. சின்ன பிள்ளைகளுக்கான இடம் செய்திதாள்களுக்கு அடுத்ததாக உள்ள மேசை. சிறுவர்தங்க மலர்கள் மற்றும் காமிக்ஸ்களும் உள்ள மேசை. வயதாக ஆக மெல்ல மெல்ல இந்தப்புறம் நகர்ந்து வரலாம்.

நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே அமுதசுரபி,முத்தாரம்,கலைமகள்,கல்கண்டு,கல்கி என்று நீண்டு தொடர்ந்து இந்தியா டுடே,பாக்யாவின் முதல் சில இதழ்கள் என்று அய்யாவின் நீளும் ஒரு பட்டியலில் எங்களின் மாயாவி,கரும்புலி காமிக்ஸ்களுக்காக மணி சத்தம் கேட்டதும் ஓடி  ராமராஜ்அய்யாவிடம் கைநீட்டுவோம்.

இன்று நான் மட்டும் ஓரிரு இதழ்கள் வாங்குகிறேன். அஞ்சல் துறை தான்  இன்றுவரை கிராமங்களுக்கு கைக்கொடுக்கும் ஆபத்பாந்தவர்.

நான் முதன்முதலாக ஒரு இதழ் துவங்கப்பட்டு நடத்தப்படுவதை கண்முன் காண்கிறேன். அதன் பின்னுள்ள எந்த விஷயங்களும் எனக்கு தெரியாது என்றாலும் கூட அது எத்தனை சிரமமான பணி என்பதை உணர முடிகிறது. 



'ஒரு இதழ்' என்பது பாரதி முதல் எத்தனை எத்தனை பேருடைய ஆசை. புரவி  வாசகர்களால் நடத்தப்படும் இதழ் என்பதே அதன் மீதுள்ள மதிப்பிற்கும் அன்பிற்கும் காரணம். 

உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்க ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்று அமரும் உள்ளங்கள் குறைவு. அந்த வகையில் புரவியின் ஓராண்டு நிறைவை மகிழ்வுடன் பார்க்கிறேன். இனிமேலான பயணத்தில் புரவி தன் தனித்த பாதைகளை,இலக்கியத்தில் தான் அடைய வேண்டிய இடத்தை கண்டு கொள்ளும் என்று நம்புகிறேன். 

கனவுகளுடன் தொடங்கப்படும் முயற்சிகள் இலக்கை அடைதல் என்பது காலத்தின் கைகளின் உள்ளது. காலம் தரத்திற்கு கைக்கொடுக்கும் என்பது மாறாத உண்மை.


பின்குறிப்பு: புரவியை  வரைந்திருக்கும் பார்கவி பள்ளி மாணவியாவார்.

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...