Skip to main content

இதழ்கள்

 

 இந்த மார்ச் மாதத்துடன் புரவி இதழ் தன்னுடைய முதல் ஆண்டை நிறைவு செய்கிறது.


                    ஓவியம்: பார்கவி


சிறுவயதில் விடுமுறையில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்களுக்காக அஞ்சல்கார அய்யாவுக்காக காத்திருப்போம். அவர் பெயர் ராமராஜ். என்னுடைய பள்ளி வகுப்பு தோழன் பாஸ்கரனின் தந்தை. அஞ்சல்காரர்களின் சைக்கிள் மணிஒலிக்கு என்று விஷேசமான தன்மை உள்ளது. 'சீக்கிரம் வா' என்று கண்டித்து அழைப்பது. அவர் எங்கள் ஊர் மட்டுமல்லாது இரண்டு மைல் தொலைவில் உள்ள கொல்லிமலை அடிவார பசலிகோம்பை வரை செல்லவேண்டும். அந்தப்பதட்டத்தில் அதட்டிக்கொண்டே இருப்பார். 

அஞ்சலில் வரும் இதழ்கள் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. சிறுவயது பரவசங்கள் மெல்ல  மெல்ல இயல்பான விஷயங்களாக மாறிவிடுவதுதான் வாழ்வின் இயல்பான அபத்தம் அல்லது துயரம் அல்லது முதிர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. சில பரவசங்கள் இயல்பாகவே எந்த முயற்சியும் இன்றி உதிராமல் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள். 

எனக்கு அந்த மாதிரியான சில விஷயங்களில் ஒன்று இதழ்கள். எங்கள் ஊர் நூலகத்தின் மேசைகளில் கிடக்கும் இதழ்களை முதன்முதலில் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. சின்ன பிள்ளைகளுக்கான இடம் செய்திதாள்களுக்கு அடுத்ததாக உள்ள மேசை. சிறுவர்தங்க மலர்கள் மற்றும் காமிக்ஸ்களும் உள்ள மேசை. வயதாக ஆக மெல்ல மெல்ல இந்தப்புறம் நகர்ந்து வரலாம்.

நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே அமுதசுரபி,முத்தாரம்,கலைமகள்,கல்கண்டு,கல்கி என்று நீண்டு தொடர்ந்து இந்தியா டுடே,பாக்யாவின் முதல் சில இதழ்கள் என்று அய்யாவின் நீளும் ஒரு பட்டியலில் எங்களின் மாயாவி,கரும்புலி காமிக்ஸ்களுக்காக மணி சத்தம் கேட்டதும் ஓடி  ராமராஜ்அய்யாவிடம் கைநீட்டுவோம்.

இன்று நான் மட்டும் ஓரிரு இதழ்கள் வாங்குகிறேன். அஞ்சல் துறை தான்  இன்றுவரை கிராமங்களுக்கு கைக்கொடுக்கும் ஆபத்பாந்தவர்.

நான் முதன்முதலாக ஒரு இதழ் துவங்கப்பட்டு நடத்தப்படுவதை கண்முன் காண்கிறேன். அதன் பின்னுள்ள எந்த விஷயங்களும் எனக்கு தெரியாது என்றாலும் கூட அது எத்தனை சிரமமான பணி என்பதை உணர முடிகிறது. 



'ஒரு இதழ்' என்பது பாரதி முதல் எத்தனை எத்தனை பேருடைய ஆசை. புரவி  வாசகர்களால் நடத்தப்படும் இதழ் என்பதே அதன் மீதுள்ள மதிப்பிற்கும் அன்பிற்கும் காரணம். 

உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்க ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்று அமரும் உள்ளங்கள் குறைவு. அந்த வகையில் புரவியின் ஓராண்டு நிறைவை மகிழ்வுடன் பார்க்கிறேன். இனிமேலான பயணத்தில் புரவி தன் தனித்த பாதைகளை,இலக்கியத்தில் தான் அடைய வேண்டிய இடத்தை கண்டு கொள்ளும் என்று நம்புகிறேன். 

கனவுகளுடன் தொடங்கப்படும் முயற்சிகள் இலக்கை அடைதல் என்பது காலத்தின் கைகளின் உள்ளது. காலம் தரத்திற்கு கைக்கொடுக்கும் என்பது மாறாத உண்மை.


பின்குறிப்பு: புரவியை  வரைந்திருக்கும் பார்கவி பள்ளி மாணவியாவார்.

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...