நேர்காணல்: லாவண்யா சுந்தரராஜன்

 வாசகசாலை ஏப்ரல் மாத இணைய இதழில் வெளியான நேர்காணல் இது.

எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் முதல்நாவல் காயாம்பூ . அந்த நாவலை மையப்படுத்திய நான் செய்த நேர்காணல். குழந்தையின்மை என்ற பேசுபொருளை அணுகியிருக்கும் விதம் சார்ந்து தமிழ் நாவலில் செய்யப்பட்டுள்ள முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.

எழுத்தாளருக்கும் வாசகசாலை இணைய இதழிற்கும் என்  அன்பு.



1. கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி சொல்லுங்க


இந்த நாவலை எழுத ஆரம்பித்த போது இதெல்லாம் எழுதலாமா? நாவலின் மைய பாத்திரமான நந்தினியை போன்ற பெண்களின் இவ்வளவு பெரிய வலியை படைப்பாக்கும் போது அது புலம்பல்களின் திரட்டு போல ஆகிவிடுமா? இதில் எதை எல்லாம் சொல்லலாம். எதைச் சொல்லாமல் விடுவது. வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி பல மனத்தடைகள் இருந்தன. மேலும் புனைவுகளை வாசிக்கும் போது அதில் நாவலாசிரியரை தேடும் வழக்கம் எல்லா வாசகர்களுக்கும் இருக்கும். நிஜம் போல எழுதப்பட்ட புனைவு தான் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. அப்போது நாவலாசிரியர் அல்லது கதைசொல்லியின் சாயலை அதில் உலவும் கதைப் பாத்திரங்களுடன் எளிதாக பொருத்திப் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம். நாவலாசிரியராய் எந்த பாத்திரத்திலும் பொருந்திவிடாமல் எழுதுவது மிகவும் சிரமம் தரும் ஒன்றாக இருந்தது. எல்லா கதாபாத்திரங்களிலும் எனது குணாதிசியங்களில் ஏதேனும் ஒன்றை கொஞ்சமேனும் கலந்துவிட்டேனா என்பது எனது அடிப்படை சந்தேகம். அப்படி என்னிலிருந்து நீங்கி இதை வெறும் புனைவாக்கமாக எழுதுவது மிகவும் சவாலாக இருந்தது. எழுதும் போது மட்டுமல்ல இப்போதும் சவால்கள் அதிகம். எனக்கு இந்த நாவலை என் வீட்டில் இருக்கும் யாரிடமும் கொடுத்து படிக்க சொல்ல முடியாது. நாவல் வெளியானது எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதை விட இன்னும் இருமடங்கு சங்கடம் இதை என் குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வைத்திருப்பது. எதைப் பற்றி நாவல் எழுதியிருக்கிறேன் என்று என் கணவர், அம்மா, அக்கா யாரிடமும் இன்னும் சொல்லவில்லை. இனிமேலும் சொல்ல முடியுமா என்பதும் தெரியாது.      


2. காயாம்பூ என்றைக்கும் உள்ள குழந்தையின்மை என்ற சிக்கலை இன்றைய தளத்தில் வைத்து பேசுகிறது. இப்பொழுது இந்த சிக்கல்  அதிகமாகியிருப்பதாக  மருத்துமனைகளை ,விளம்பரங்களை பார்க்கும் போது தோன்றுகிறது. வரும்காலத்தில் இது முக்கியமான சிக்கலாக உருவெடுக்கும் என்று தோன்றுகிறதா?


கண்டிப்பாக இது மிகப் பெரிய சிக்கலாக உருவாகும். கல்லூரியில் பொறியியலில் எந்த பிரிவைப் படித்தாலும் மென்பொருள் துறையை தேர்தெடுக்கும் நிலை இன்னுமும் நீடிக்கிறது. மென்பொருள் துறையில் பணிபுரியும் பலர் முக்கியமாய் கைபேசி தகவல் தொடர்பு பொருட்களை உருவாக்கும் துறையில் இயங்குபவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமிருக்கக்கூடும். மேலும் இந்த காலகட்டத்தின் உணவு பழக்கவழக்கம். சூழலில் தட்பவெட்பநிலையில் ஏற்படும் மாறுதல் எல்லாமே இந்த பிரச்சனையை இன்னும் அதிகமாக்கக் கூடும். குழந்தையுள்ளவர்கள், குழந்தையில்லாதவர்கள் இப்படி இரண்டு தரப்பட்ட மக்களை சமூகம் ஒரே மாதிரி பார்க்க ஆரம்பித்தால் இந்த சிக்கல்கள் கொஞ்சம் குறையலாம். குழந்தைகள் இல்லாத தம்பதியினர் எல்லோரின் அதிகப்படியான அக்கறைக்கும், பரிதாபத்துக்கும் உள்ளாவது குறைந்தாலன்றி இந்த சிக்கல் தீரப்போவதில்லை. குழந்தையில்லாத தம்பதிகள் ஆமாம் எனக்கு குழந்தையில்லை அதனால் என்ன குறைந்து போனது என்ற மனநிலைக்கு வரும் போது மட்டுமே இது குறையும். அப்படி அவர்கள் தானாகவும் நினைக்க முடியாது மிகவும் முற்போக்காய் அப்படி நினைக்கும் போது சுற்றியிருப்பவரின் அக்கறை அவர்களை இந்த சிக்கலை நோக்கி உந்தித் தள்ளும். என் தாய்மை தந்தைமை என் குழந்தைகளுக்கு மட்டும் என்ற சுயநல வட்டம் விரிந்து உலகின் எல்லா பிறப்பும் மீதும் அன்பு என்றாகும் போது இந்த பிரச்சனை கொஞ்சம் குறையும் வாய்ப்புள்ளது.




 

3. குழந்தையின்மை என்பது உடல்நலச்சிக்கல் என்பதைத்தாண்டி நம்முடைய மரபுடன் பிணைந்திருப்பதால் மிகவும் அழுத்தமானதாக நம் சமூகத்தில் உள்ளது என்று நினைக்கிறீர்களா?


எந்த ஒரு பாலூட்டியின், ஏன் பிரபஞ்சத்தின் எந்த ஒரு உயிரியின் அடிப்படை நோக்கம் மற்றும் தேவை என்பது இனப்பெருக்கம். சமூகத்தில் அந்தஸ்து என்பது தங்களது வாரிசுகளை எப்படி அவர்கள் வளர்த்திருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது. இராமயண மஹா பாரத காலத்திலிருந்தே வாரிசு என்பது தன் குணத்தின் நீட்சியாய்  குலத்தின் நீட்சியாக தொடர்வது. அரசுகட்டிலில் என் வாரிசே அமர வேண்டும் என்று சத்தியவதி எடுத்த முடிவே பின்னாளில் மாபெரும் மஹாபாரத யுத்தமாக உருவெடுக்கக் காரணமானது. பிஷ்மர் அரியணைக்கு வந்திருந்தால் அம்பையை மணந்திருந்தால் அவர்களுக்கு வாரிசுகள் உருவாகியிருந்தால் பாரத போர் நடந்திருக்க வாய்ப்பில்லை. வாரிசு, வம்சம் என்ற விஷயத்தை அத்தனை எளிமைபடுத்திவிட முடியுமா என்று தெரியவில்லை. உலகில் நடக்கும் மாபெரும் அநியாயங்களுக்கு பின்னால் இயங்கும் மனிதசுயநலத்தின் நீட்சிக்கு குழந்தைபேறு ஒரு முக்கியமான காரணம் என்பேன். குழந்தைகள் உள்ள பெற்றோர் தனது வாரிசுகளை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் இடத்தில் மனிதம் சரியத் தொடங்குகிறது. அதுவே எல்லா சுயநலங்களுக்கு அடிப்படை வித்தாகிறது. அதனை ஓரளவு இந்த நாவலில் தொட்டுக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.


4. இன்றும் கூட கோவில், பரிகாரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெண் மீதே குழந்தையின்மைக்கான முதல் கல் எறியப்படுகிறது. பெண்மீது செலுத்தப்படும் முதல் அடக்குமுறையும் அங்கிருந்தே தொடங்குகிறது. இந்த நாவலில் கூட பெண்ணே தன் சகபெண்ணிற்கு குழந்தையின்மை என்ற பெயரால் தொல்லை கொடுக்கிறாள் இல்லையா? 

ஆமாம். ஒரு பெண், அவள் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவள் உடல் மீது நடத்தப்படும் உட்சப்பட்ச அத்துமீறல் குழந்தையின்மை சிகிச்சையில் கையாளப்படும் மருத்துவமுறைகள். இப்படிப்பட்ட சிகிச்சை முறைகளையா இவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை படிப்பவர்களும் உணர வேண்டுமென்பதே நாவலாசரியர் என்ற முறையில் எனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற பொதுபுத்திக்கு அப்பாற்பட்டது குழந்தையின்மை சிக்கல். குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தையின்மை என்பது அவளுக்கு மட்டுமல்ல அவளை சூழந்திருக்கும் குடும்பத்தார் அனைவருக்குமான சிக்கல். சம்மந்தப்பட்ட பெண்ணை நேரடியாக கேட்பவர்கள், அடுத்து அவள் மாமியாரையும் கேட்பார்கள். அவள் அம்மாவிடமும் நீங்கள் அறிவுரை வழங்கக் கூடாதா என்று ஆலோசனை வழங்குவார்கள். உங்கள் சகோதரிக்கு குழந்தையில்லையாமே என்று அவர்களின் சகோதரிகளிடம் கேட்பார்கள். உங்கள் தோழியிடம் இதை சொல்லுங்களேன், எங்களை விட நீங்கள் அவளுக்கு நெருக்கம் ஆகவே தான் உங்களிடம் சொல்கிறேன் என்பார்கள். முன்னரே சொன்னது போல குழந்தையில்லாத தம்பதியர் மீது சமூகம் கொண்டிருக்கும் அக்கறை அவ்வளவு ஆழமானது. அது சம்மந்தப்பட்ட பெண்ணை மட்டுமல்ல, அந்த பெண்ணோடு சம்மந்தப்பட்ட எல்லோரையும் கேள்விகள் கேட்டு, அந்த கேள்வியை அவளுக்கு கடத்தச் சொல்லி அன்பாக வேண்டுகோள் வைக்கும். ஆகவே சக பெண்களுக்கு வேறு வழியே இல்லை சம்மந்தப்பட்ட பெண்ணை(குழந்தையில்லாத) தொல்லை செய்தே ஆகவேண்டும். மேலும் இந்த சிக்கல் குழந்தையில்லாத பெண்ணுக்கு மட்டும் நிகழ்வதல்ல. அவளுடைய கணவனுக்கு நேரும் அவமானங்கள் மானமுள்ள மனிதர் என்றால் உயிரை விட்டுவிடும் அளவுக்கானது. அத்தகைய அவமானங்களை எல்லாம் கடந்து மழுங்கலாகவே வாழும் கொடுப்பினை அந்த ஆண்களுக்கு வாய்க்கப்பெற்றது. நாவலின் நான் அதையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமிதம் தான்.


5. நாம் ஏன் இதை இவ்வளவு சிக்கலாக மாற்றிவிட்டோம். ஒரு செடி பூக்காமல் ஆகிறதோ, ஒரு பறவை தன் இனத்தை விருத்தி செய்யாமல் போகிறதோ நடக்கும் தானே…நம்மால் ஏன் இதை இயல்பாக  எடுத்துக்கொள்ள முடியவில்லை


இந்த கேள்விக்கு சொல்லவேண்டிய பதிலை மேலே ஒரு கேள்வியில் சொல்லிவிட்டேன். வாரிசு என்ற தலையாய கூறு எப்படி போர்களை வரவழைக்கும் என்று நம் புராணங்களிலேயே உதாரணம் உண்டு. ஆனால் இதனை நான் ஒரு மனவியல் சார்ந்த சிக்கலாகப் பார்க்கிறேன். ஒருவரின் உயர்வும் தாழ்வும் அவர்களது எல்லா வளங்களை சேர்த்து கணிக்கப்படும் சமூகத்தில் தான் இருக்கிறோம். செல்வங்களில் ஒன்று குழந்தை செல்வம் என்பது போய் குழந்தைக்காக மட்டுமே எல்லா செல்வமும் என்ற இடத்திலிருந்து தொடங்கிறது இந்த சிக்கல். வாரிசு என்பது நாம் இந்த பூமியின் ஜனித்ததன் நீட்சியாக, நமது செல்வங்களை கட்டி காக்கும் அல்லது செலவு செய்யும் உரிமைகளுக்காக, நம் வீட்டு விஷேசங்கள் தொடர அதன் வழி பிறர் வீட்டு விஷேசங்களில் சிறு சேமிப்பு செய்த செல்வங்களை வட்டியுடன் வசூலிக்க, நம் மறைவுக்கு பின்னர் நம் நினைவை போற்ற வாரிசுகள் தேவை. என்னுடைய பிள்ளை, என்னுடைய செல்வம் இந்த இரண்டும் முடிச்சும் சம்மந்தமற்றது என்ற சமூக அமைப்பு வரவேண்டும். சமூகத்தில் சிலருக்கு சொந்த வீடு இல்லை. சிலருக்கு வாழ்க்கை ஆடம்பரமாய் நடத்த பணமில்லை. இப்படி பல இல்லைகளோடு ஒன்றாய் சிலருக்கு குழந்தையில்லை என்பது எப்போது சாதாரணமாக மாறுமோ அப்போது நம்மால் பூக்காத செடியை, இனத்தைபெருக்காத பறவையை எப்படி எடுத்துக் கொள்வோமோ அதே போல இந்த விஷயத்தை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியும். அப்போது கூட முடியுமா என்று தெரியவில்லை. குழந்தையின்மையை நம்மால் ஏன் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை என்ற கேள்வியை நோக்கிய இந்த நாவல் எழுதப்பட்டது. அதற்கான விடையை இன்னும் நான் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.


6. நம் வாழ்வின் செயல்களம் குடும்பம் பிள்ளைகள் என்று மட்டுமே இருப்பதால் தான் இப்படி ஆகிறதா?


ஆமாம் நமது குடும்ப அமைப்பு இந்த பிரச்சனை இவ்வளவு தீவிரமாவதற்கு காரணமாகிறது. குடும்ப அமைப்பின் மிக முக்கியமான கூறு வயதான பிறகு வாழ்கைக்கு பாதுகாப்பு வேண்டும். நம்மை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும். இறந்த பின்னர் மூன்று தலைமுறைக்காவது நமது குலம் நம்மை நினைத்திருக்க வேண்டும். இதை தாண்டி மீறி செயல்படும் சிலரை இந்த உலகம் பைத்தியக்காரத்தனம் கொண்டவர்களாக பார்க்கத் தொடங்குகிறது. இப்போது சிலரைப் பார்க்க முடிகிறது. நாங்கள் எந்த பந்தமும் கொண்டு எங்கள் வாழ்க்கையை செலுத்த மாட்டோம் எங்களின் சுதந்திரத்தை பறிக்கும் எங்கள்  பொறுப்பை அதிகரிக்கும் .குழந்தை என்ற செல்வம் வேண்டாம் என்கிற புதிய தலைமுறையினரைப் பார்க்கிறேன். அப்படி எல்லோரும் நினைக்கத் தொடங்கிவிட்டால் இரண்டு தலைமுறைக்கு பிறகு உலகம் என்னவாகும்? எந்த ஒரு உயிரின் ஆதார  நோக்கமே தன் இனத்தை பூமியில் நீடித்திருக்க செய்வது தானே? செடியில் பூக்கள் பூப்பதும் மகந்தர சேர்க்கை நடப்பது காய், கனிகள் உருவாக்குவது விதைகள் பரவி மறுபடி செடி பூப்பதும் அதனால் தானே? அதன் பின்னர் தானே மற்ற எல்லாமே விஷயங்களும்.


7. இந்த நாவலை முடித்தப்பின் எனக்கு முதலில் தோன்றியது… ஒரு உயிர் இந்த பூமிக்கு வர வேண்டும் என்பதற்காக இங்கு வாழ்கிற இன்னொரு உயிரை இத்தனை துன்புறுத்த வேண்டுமா? என்று தான்..அப்படி ஒரு துன்பம் தேவையில்லை இல்லையா?


குழந்தையை பிரசவிக்கும் போது ஏற்படும் பிரசவ வலியை விட மனதளவில் வலியை சுமக்கும் குழந்தையில்லாத ஒரு பெண்ணை கேட்டுப் பாருங்கள். உன் உயிர் போனால் தான் ஒரு உயிரை இந்த உலகுக்கு உன்னால் கொடுக்க முடியும் என்று நிலையிருந்தால் என்ன செய்வாய் என்று கேளுங்கள். கட்டாயம் எனக்கு குழந்தை தான் வேண்டும் என்பாள். அவளுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தை விட சுமந்தோம் பெற்றோம் பிறகு என்ன பெரிதாய் என்றே இருக்கும். அப்படியொரு பதிலை சொல்ல அவளை உருவாக்குவது எது? குழந்தையின்மை சிகிச்சையில் இத்தனை துன்பங்கள் இருக்கின்றன. அதனால் இயற்கையாக குழந்தை பிறந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். செயற்கை முறை (இயற்கைக்கு எதிரான எதுவுமே இயல்பானதில்லை.) குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ள முயற்சி செய்வதை, செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதை சார்ந்து யோசியுங்கள் என்பதையே இந்த நாவல் சொல்லத் துணிகிறது.  


8. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் அப்படி என்ன நமக்கு தலைமுறை தொடர்ச்சியின் தேவை இருக்கிறது என்று தெரியவில்லை…வாரிசு வேண்டும் என்ற மனநிலை மேல்தான் நாவல் தன்னுடைய கேள்வியை வைப்பதாக நினைக்கிறேன்


இல்லை இந்த நாவல் வாரிசு வேண்டுமா என்ற மனநிலையின் மீது கேள்வி எழுப்பவில்லை. உலகில் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் போக்குவரத்து. என்னால் முடிந்தவரை இந்த காற்றில் இன்னும் கூடுதலாக மாசு சேர்க்க மாட்டேன் என்று வீட்டோடு இருக்கும் மனிதர் யாருமே இருக்க முடியாது. அதே போல தான் உலகின் மக்கள் தொகை இவ்வளவு இருக்கும் போது நந்தினி ஒருத்திக்கு குழந்தையில்லையென்றால் என்ன என்பது என் கேள்வியில்லை. குழந்தையிருக்கும் ஜெயந்தி ஏன் சபிக்கப்பட்டவளாக இருக்கிறாள். நல்ல மனநிலையில் இருக்கும் தேன்மொழியும், அலமேலுவும் ஏன் சுயநலமிகளாகின்றார்கள். குழந்தையின்மை இயல்பானது அது சாபம் அல்ல. பெற்றவர்கள் இல்லாத குழந்தையை இயல்பாக ஏற்கும் சமூகம். குழந்தைகள் இல்லாத தம்பதியினரை இயல்பாக ஏன் எடுத்துக் கொள்வதில்லை, அக்கறை என்ற பெயரிலும், வாழ்க்கையின் அர்த்தம் என்ற பெயரிலும், என்ன இருந்தென்ன மகிழ்ந்து வாழ வாரிசில்லையே என்ற பரிதாப உணர்வு எழுப்புவது தேவையானதா என்பதே நாவல் எழுப்ப விரும்பும் கேள்விகள்.


9. ஒரு மனிதன் சகமனிதனுக்கு உண்டாக்கும் துயரம் இது. குழந்தையின்மையை, குழந்தைபெறுதலை முடிந்த அளவு இயல்பாக கையாண்டால், இவ்வளவு பெரிய குறையாக திரிக்காமல் இருந்தால்,மக்கட்பேறு அடைதலை மகத்தான பேறாக மாற்றாமல் இயல்பான விஷயமாக எடுத்துக்கொண்டால் அது அமையாதவர்கள் இத்தனை வலிமிக்க மருத்துவமுறைகளை நோக்கி செல்வது குறையலாம் தானே…


நிச்சயம். இது கேள்வியில்லை. நாவல் உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். நாவல் இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதையே நீங்கள் கேள்வியாக கேட்டிருக்கின்றார்கள். அல்லது நாவலில் உங்கள் கண்டடைதலாக பார்த்திருக்கின்றீர்கள். ஆம் குழந்தையின்மையை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் என்பதாக திரிக்காதீர்கள் என்பதையே இந்த நாவல் மூலம் நான் தீர்க்கமாக பதிவு செய்ய விரும்பினேன். அப்படி நடந்தால்  முற்றிலும் வியாபாரமாக்கப்பட்ட மனிதநேயம் துளியுமற்ற சில செயற்கை கருமையங்களின் அட்டூழியங்கள் குறையலாம்.

 

10. இந்த நாவலில் நந்தினியும் துரையும் தங்கள் வாழ்வின் இளமையில் தொடங்கி, இளமையின் கடைசி வரை மருத்துவமனைக்கு சென்று திரும்பி கொண்டே இருக்கிறார்கள்? குழந்தையின்மை ஒரு நோய்மை மாதிரி இப்போது ஆகிவிட்டது.  அது நோய்மை இல்லை என்றே நினைக்கிறேன்..


நிச்சயமாய் குழந்தையின்மை நோய்மையில்லை. ஆனால் அந்த சிகிச்சை முறையை மேற்கொண்டால் நோய்வாய்படும் வாய்ப்புகள் உண்டு. இங்கே யாருக்குமே இதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இருப்பது போல தெரியவில்லை. இல்லாத வியாதிகளுக்கு கூட மருந்து உட்கொண்டு பின்னர் செயற்கை கரு ஊட்டலுக்காகவும் மருந்துண்டு அது ஒரு பித்து பிடிக்க செய்யும் செயல்முறை. ஆகவே தாம் குழந்தை இயற்கையாக பிறந்தால் கொண்டாடுங்கள். இல்லையென்றால் தத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் பல மானியங்கள் வழங்குவதற்கு பதில் பிள்ளையில்லாத தம்பதியர்க்கு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் துயரப்படும் ஏழ்மை நிலையில் இருப்பவரிடமிருந்தும் பெற்றோர் இல்லாத குழந்தைகளை அவர்களே முன்னின்று ஆலோசனை வழங்கி குழந்தைகளை சேர்ப்பிக்க ஒரு தரமான நியாயமான வழியை, அதிக காத்திரும்பும் அலட்சியப்படுத்தாத முறையை ஒருங்கிணைக்கலாம். அப்படி நடந்தால் இந்த சிகிச்சையை எந்த தம்பதியினரும் மேற்கொள்ள மாட்டார்கள்.


11. சிறுவயதிலிருந்து தன்னை காதலித்த ஹரியிடம் நந்தினி விந்துதானம் கேட்பது என்பது நம் புனைவுலகம் இதுவரை சந்திக்காத ஒரு புனைவு தருணம் என்று நினைக்கிறேன். அந்த இடத்தின் உணர்வுநிலைகளும் கூட அழகானவை…

புனைவிலாவது குழந்தையற்ற ஒரு பெண்ணுக்கு அப்படி நிகழட்டும் என்ற ஆர்வம் மிகுதியால் எழுதப்பட்ட பகுதிகள் அவை. அந்த காவிய காதலின் இன்னும் சில பகுதிகளை நாவலின் பக்கங்களை குறைக்கும் முயற்சியில் வெட்டி எரிந்தேன். அவை எனக்கு பிடித்த பகுதிகள். நந்தினியின் ஹரி போல இன்றும் பலர் இருக்கின்றார். காதலித்த பெண்ணுக்கு குழந்தையில்லை. நம்மிடம் ஒன்றுக்கு மூன்று இருக்கிறதே ஆனாலும் அந்த பெண்ணுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் பலர் இருக்கின்றார். அப்படியானவர்களில் ஒருவன் தான் ஹரி. மாதொருபாகனில் வரும் பதினான்காம் நாள் திருவிழாவுக்கும், IUI முறைமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதுவே இந்த நாவலில் முதல் வித்து. எழுதத் தொடங்கும் போதே விந்துதானம் கேட்கும் பெண் பாத்திரம் தான் முதல் சித்திரமாக துலங்கியது. மாதொருபாகன் முன்னுரையில் அந்த திருவிழாவின் மூலம் கருவுற்று பிறக்கும் பிள்ளைக்கு சாமியின் பிள்ளை என்று சொல்லியழைப்பார்கள் என்ற பெருமாள் முருகன் எழுதியிருப்பார். அப்படியொரு வரம் கொடுப்பவனாகவே ஹரியை படைத்தேன். கட்டிய மனைவியை தவிர வேறு யாருக்கும் நான் இல்லை என்று நிலையில் இருக்கும் உத்தமன் கலவியின்றி காதலிக்கு பிள்ளை தரமுடியும் என்று நினைத்து ஹரியும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பான் என்றே தோன்றுகிறது. அந்த விதத்தில் யோசித்தால் இந்த செயற்கை கருவுறல் ஓரளவு நல்லது. ஆனால் அதுவே சோதனை குழாய் சிகிச்சைமுறை முற்றிலும் இயற்கைக்கு எதிரானது. என்னைக் கேட்டால் அப்படிப்பட்ட சிகிச்சை முறையை தடை செய்யலாம்.

12. எனக்கு மறுபடி கல்லூரியில் ஒரு அறிவியல் பிரதியை படிக்கற மாதிரி சில அத்தியாயங்கள் இருந்தன. Intra unine insemination,Embiro implant,Azoospermia,Hormnal imbalance,HSG test      என்று நாவல் முழுக்க மருத்துவ முறைகள்,மருத்துவம் பற்றியும் குறிப்பாக அவை எல்லாம் ஏற்படுத்தும் மனத்தொந்தரவுகள்,கனவுகள்,உடல் தொந்தரவுகள் என்று இந்த நாவல் உயிர்அறிவியல் தளத்தில் காலுன்றி குழந்தையின்மை சிக்கலை சொல்கிறது. அது பற்றி..


இந்த நாவலின் பேசுபொருள் இரண்டு. ஒன்று குழந்தையின்மை அடுத்தது குழந்தைகள் வரமா, சாபமா? இந்த நாவலின் குழந்தையின்மை சரடின் நோக்கம் குழந்தையின்மை சிகிச்சை முறையின் நிகழும் அபத்த கொடூரங்களைச் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அந்த சிகிச்சை முறையின் பிரச்சனைகளை சொல்ல அது என்ன சிகிச்சை என்று சொல்ல தானே வேண்டும். அதற்கு அதன் அறிவியல் பெயர்களை வைத்து தானே பேசமுடியும். அதற்கு இணையான கலைச்சொல்லை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவை என்ன என்று தேடினால் கூட கிடைக்காது. என்னுடைய கண்டுபிடிப்பாக மட்டுமே இருக்கமுடியும். இவை வாசகர்களுக்கு புரியவில்லை என்றால் இணையத்தில் தேடி என்னவென்று படிக்க ஏதுவாக இருக்கும். அதனால் தான் இந்த மருத்துவ அறிவியல் சொற்களை அப்படியே பயன்படுத்தினேன். அந்த மருத்துவம் ஏற்படுத்தும் மன உளைச்சல், உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் இதை எல்லாம் வாசிக்க உகந்த ஒரு புனைவாக கொடுக்க நினைத்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். நாவல் குழந்தையின்மையை தாண்டி இன்னும் என்னென்னவோ பேசுகிறது. இதில் குறைந்தபட்சம் ஐந்து தம்பதியினரின் முழு வாழ்க்கை சார்ந்த சித்தரிப்புகள் இருக்கின்றன. விதவிதமான மனிதர்கள், அவர்களின் குணாதிசியங்கள், இந்தியாவின் தென் மாநிலங்கள் வட மாநிலங்களின் நிலப்பரப்பு, அங்கே நிகழும் கலாச்சாரம் இவை எல்லாமே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மீறி எல்லோர் மனத்தையும் கீறுபவளாக நந்தினியின் கதாபத்திரமும் அவள் எதிர்கொள்ளும் சிக்கலும் இருக்கிறது. அவள்படும் துயரம் வாசகர் உள்ளே ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறாள் என்பது இங்கே கேட்கப்பட்டிருக்கும் இருபது கேள்விகளில் கிட்டதட்ட பதினாறு கேள்விகள் நந்தினி துரை சார்ந்த கேள்விகளாக இருக்கிறது. மீதமிருக்கும் நான்கு கேள்விகளில் தாய்மையின் முக்கியத்துவம் என்னவாக இருக்க வேண்டுதுமாக இருக்கிறது. நான் நாவலை எந்த நோக்கத்தோடு எழுதினேனோ அது ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்ற நம்பிக்கை இது ஏற்படுத்துகிறது.


13. நீங்கள் என்னதான் உணர்வுகளை நீர்க்க செய்து எழுதியிருந்தாலும் கூட நாவல் கொடுக்கும் வெறுமை தாளமுடியாத ஒன்றாக தான் இருந்தது. நீங்கள்  சரசரவென்று நிகழ்வுகளை  கொண்டு சென்றாலுமே நிறைய அத்தியாயங்களை கடக்க முடியாமல்  புத்தகத்தை மூடி வைத்தேன். ஒரு பாடல் கேட்டோ,வானத்தை, மலையை பார்த்தோ, சமைத்தோ மனநிலையை சமாதானப்படுத்திதான் மறுபடி வாசிக்க வேண்டியிருந்தது…நாவலின் உணவுர்தளத்தை எழுதும் போது அதை எப்படி கையாண்டீர்கள்


முதல் கேள்வியின் சொன்னது போல இந்த நாவலை தொடங்கும் முன்னர் பல்வேறு மனத்தடைகளும் கேள்விகளும் இருந்தன. குழந்தையின்மை சிகிச்சையை பற்றி எழுதும் போது உடல் உறுப்புகளை சார்ந்த ஒரு வார்த்தைகளை கூட உபயோகபடுத்தாமல் எழுதுவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் எழுதத் தொடங்கி பின்னர் அவை பாத்திரங்களுக்கும் சொல்ல வந்த அவர்களின் கதைக்குமான உறவாக மாறிப் போனது. நாவலை எழுதும் போது நான் எந்த உணர்வு கொத்தளிப்புக்கும் ஆளாகவில்லை. பூப்பறிப்பது போல மிக அழகாக கதையை எழுதிக் கொண்டே சென்றுவிட்டேன். இதன் இரண்டாவது வரைவை அப்படியே நாவலாக ஆக்கியிருந்தால் ஐந்நூறு பக்கங்களை தாண்டியிருக்கும். மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வெட்டியெடுத்து இந்த வடிவத்துக்குள் கொண்டு வந்தோம். உலகின் பல்வேறு துயரங்களின் ஒன்றான குழந்தையின்மை மிகப்பெரிய வெறுமையை கொடுக்கக்கூடியது. அந்த மாபெறும் வலி அழுகையை பிழிந்தெடுக்காமல் அதனை முடிந்த அளவு இலகுவாய் வாசிக்க தேவைப்பட்ட சிலவிஷயங்களை நாவலுக்கு செய்திருந்தேன். நந்தினியும் துரையும் துயர்படும் அத்தியாயங்கள் இடையிடையே அலுமேலுவின் காதல் கதை, ஜெயந்தி என்ற தன்னம்பிக்கையும் கம்பீரமும் கொண்ட பெண்ணின் கதை என்று அமைத்தேன். அதிகாரப்பூர்வமாக நாவல் நந்தினியின் திருமண ஏற்பாடுகளில் இருந்து தொடங்கினாலும், அவள் பிறந்தது முதல் நடுவயதை அடையும் வரையான வாழ்க்கை சம்பவங்களை பூக்களின் பருவப்பெயர்களை கொண்டு அடையாளப்படுத்தின ஒரு இழையாக கொண்டு வந்தேன். நானாக எதுவும் திட்டமிடாமல் கதை சொல்வது முன்னும் பின்னுமாக அமைந்தது போன்ற தோற்றத்தை அது கொண்டுவிட்டது. ஆனால் நான் நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட நான்கு திரிகளை(நந்தினி-துரை, ஜெயந்தி-குமார், தேன்மொழி-அலமேலு-ஹரி, நந்தினி குழந்தை முதல் நடுவயது வயது வரை நடக்கும் வாழ்க்கை சம்பவங்கள்)  பின்னி நாவலை கட்டமைத்தேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த நாவலில் குழந்தையின்மை சிகிச்சை சார்ந்த விஷயங்கள் 10 முதல் 15 சதவீகிதம் தான். ஆனால் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமோ அதை மிகச்சரியாக செய்திருக்கிறது. 


14. சமன் செய்யும் விஷயமாக குழந்தை எவ்வளவு அற்புதமானது என்பதையும் நாவல் பேசுகிறது. நாவல் வாசிக்கும் போது பெரும்பாலும் என் மடியில் தங்கையின் ஏழுமாத பாப்பா இருந்தாள். அவள் மடியில் தூங்கும் நேரங்களில்தான் பாதி நாவலை வாசித்தேன். நாவலின் நிறைய அத்தியாயங்களில் நந்தினியின் தாய்மை உணர்வு நிலைகள் வெளிப்படும் இடங்கள் அழகானவை…அவளின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ,வலி, கோபம், அன்பு என்று அந்தப்பாத்திரத்தை எழுதியதைப்பற்றி..


இது கொஞ்சம் கடினமான கேள்வி. நீங்கள் நாவலின் கண்ட நந்தினி ஒரே ஒரு பெண் அல்ல. எனக்கு தெரிந்த ஐந்தாறு நந்தினிகளின் கதை. ஒவ்வொரு நந்தினியின் கண்களின் நான் பார்த்த ஏக்கம், பதிலளற்ற கேள்விகளை மௌனப் புன்னகையால் எதிர்கொள்ளும் சோகம், மனதை புரட்டும் அவர்கள் வலி மிகுந்த அனுபவங்கள் என்று அவற்றுக்கு கொஞ்சம் நியாயம் செய்ய வேண்டுமென்று தோன்றியது. அதை தான் செய்திருக்கிறேன்.  


15. வாசிக்கும் போது தாய்மை என்றால் என்ன என்ற  கேள்வியும் இருந்து கொண்டே இருந்தது. நாவலில் நிறைய பெண்பாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயானதும் சுயநலம் வந்து படிந்துவிடுகிறது. கி.ரா வுடைய கன்னிமை சிறுகதை நினைவில் வந்து போனது…


நாவல் பூடகமான எழுப்பியிருக்கும் கேள்வியை நீங்களும் கச்சிதமாய் கொண்டுவந்திருக்கின்றீர்கள். கன்னிகளுக்குள்ளும், குழந்தை பெறும் முன்பான காலகட்டத்தில் உள்ள பெண்களுக்குள்ளும் பொங்கும் தாய்மையும், தெய்வீக அன்பும், என் குடும்பம் என் வாரிசு என்று பரிமாண மாற்றத்தில் சுயநலம் பொருந்திய லௌகீகமாக மாறிவிடுவது அதிசயம் தான். பெண் குழந்தைகளை ஒரு கட்டம் வரை பார்க்க வளர்க்க அவ்வளவு அழகாய் இருக்கும். திருமணமாகி தாய்மையும் அடைந்து தன் குடும்பநலனில் பெரும் அக்கறை கொண்ட பெண்ணை பார்க்கும் போது இவள் முன்னர் இருந்த பெண் தானா  என்பது நம்மை நாமே கேட்டுக் கொள்ளும், அதிர்ச்சியடைய வைக்கும் மாற்றம். இது இயற்கையாக நடத்துகிறதா அல்லது வயதேற ஏற அனுபவம் மிக மிக, எதன் மீதான பயமோ இப்படி மாற்றுகிறதா என்பது தெரியாத புதிர். கன்னிமை கதை மிக அற்புதமானது. நாவலின் சில பகுதிகளை வாசிக்கும் போது கன்னிமையை நினைவுபடுத்து போல நான் திட்டமிடவில்லை, ஆனால் அப்படி நீங்கள் பார்த்தது மிகவும் நெகழ்வாக உணரச் செய்கிறது. 


16. பெண்ணை போலவே ஆணுக்கும் குழந்தைப்பேறுக்கான மருத்துவமுறைகள் மிகுந்த வலிமிக்கதாக உள்ளதாக நாவலில் உள்ளது. நாம் கல்வி கற்று படிப்பறிவில் முன்னேறிக்கொண்டிருக்கும்  காலகட்டத்தில் இந்த குழந்தையின்மை என்பதை வாழ்நாள் தொந்தரவாக மாற்றிக்கொள்வது சரியா என்று சிந்திக்கலாம் தானே…


குழந்தைபேறு வேண்டாம் என்பதை தற்கால திருமணபந்ததில் இணையாமல் இணையர்களாய் வாழும் சிலர் செய்கின்றார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது குடும்ப அமைப்பின் ஆதாரப்புள்ளி. நாவல் பேச நினைத்த சிலவிஷயங்களில் ஒன்று குழந்தைப்பேறின்மைக்காக ஆண்களுக்கு மேற்கொள்ளபடும் சிகிச்சை மிகவும் வலிதருபவை என்பது. சில சமயம் உயிரை பலி வாங்கக்கூடியவை. அதைச் சார்ந்த சில விஷயங்களை நாவலில் பதிவு செய்திருக்கிறேன். மேலும் குறித்துக் கொடுத்த நாளில் கலவி கொள்ள வேண்டுமென்ற அட்டவணையில் பெண்கள் அடையும் மன உளைச்சலை விட ஆண்கள் அடையும் துயரம் நம்பிக்கையின்மை மிக அதிகம். அதை சார்ந்தும் நான் எழுதியிருக்க வேண்டும் ஆனால் அந்த அளவுக்கான மனத்துணிச்சல் நாவலை எழுதிய போது எனக்கு இருக்கவில்லை.  


17. தாய்மை என்பது பேரன்பை குறிக்கக்கூடிய சொல் அல்லது பேரன்பை உணரக்கூடிய நிலை என்றால் அது தன் குழந்தைகள் என்ற வட்டத்தை விட்டு விரிந்தால், இந்த நாவலில் பிஜீவுக்கு நடந்த child abuse போன்ற விஷயங்கள் குறையலாம் இல்லையா?

ஆமாம் நீங்கள் சொல்வது மிகச்சரி. தாய்மை பேரன்பு என்பது எல்லோர் உள்ளும் வாழும் தெய்வநிலை. ஆனால் பேய் காமம் அதிலும் உடல் இச்சையை அடக்கிக் கொள்ள தெரியாத சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபகரமான சிலர் தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்துக் கொள்ள தேர்ந்தெடுக்கும் முடிவு இப்படிப்பட்ட அபத்தங்களை நிகழ்த்திவிடுவதுண்டு. விபரம் அறியா பெண் குழந்தைகள்  மீது நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு இணையான அளவுக்கு கொடுமை ஆண் குழந்தைகளுக்கும் நடக்கிறது. அது பரிதாபத்துக்குரியது. தவிர்க்கப்பட வேண்டியது. இவற்றுக்கு எல்லாம் தீர்வு உலகத்து அனைத்து குழந்தைகளையும் நேசிக்கப்பழகுவது தான். அது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது 


18. தாய்மையின் இன்னொரு முகம் சுயநலம் மிக்கதாகவும் இருக்கலாம். அது தன் இனம் காக்கும் உயிரியல் பண்பு என்றாலும் கூட அறிவில் முன்னேறிவிட்ட நாம் தாய்மை என்பதை விரிந்து பரவும் ஒரு விஷயமாக உணரலாம். அது குழந்தை என்ற ஒன்றிற்குள் அடங்காதது என்று நாவலை முடிக்கும் போது தோன்றியது…


ஆமாம் உலகின் எல்லா உயிர்களையும் நேசிக்கத் தொடங்கிவிட்டால் பெரும் தாய்மை நிலையை அடைந்து விடலாம். சேவை மனம் கொண்ட பலர் கன்னிகாஸ்திரிகளாக மாறுவது இதன் பொருட்டாக இருக்கலாம். சக மனிதர்கள் எல்லோர் மீது அன்பும் தன்னலமில்லாத நோக்கத்தோடு உதவும் மனமும் எல்லோருக்கும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. சக மனிதர்கள் மட்டுமல்ல பிற உயிர்கள் நடப்பன, பறப்பன, நீர் வாழ் உயிர்கள் எல்லாவற்றின் மீதும் அன்போடு இருப்பது எளிமையானது. பசுமை மலர்கள் இயற்கை எல்லாவற்றையும் ஆராதிக்க கற்றுக் கொண்டால் மனதை தூய்மையாக வைத்திருக்க அவை உதவும். இந்த ஒரு முடிவை நோக்கியே நாவல் நகர்ந்திருக்க வேண்டும். நாவலை முடிந்த பின்னரும் பலர் மனதிலும் அலைவுறும் கேள்வி நந்தினி  அவளுக்கான முடிவு இன்னதென்று சொல்லாமல் விட்டது தான். ஆனால் நந்தினி போன்றோர் வாழ்க்கையில் இந்த பிரச்சனைக்கு அவ்வளவு எளிதாக முடிவை சொல்லி சுபம் போட முடியாதென்பது தான் உண்மை.


19. தயவு செய்து கேள்விகளால் சகமனிதர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்பதை ஆழமாக இந்த நாவல் பதிவு செய்கிறது. தொடர்ந்து நந்தினி கேள்விகளை சந்தித்து களைக்கிறாள். அந்தக்கேள்விகள் இல்லாமலிருந்தால்…  தொடர்ந்து பலஆண்டுகள் மருத்துவம் என்ற பெயரில் தன்னை துன்புறுத்திக் கொண்டிருக்கமாட்டாள். ஒரு குரல் கூடவா இல்லை… உன்னோட உடம்பு முக்கியம்…குழந்தை இல்லாவிட்டால் என்ன? என்று சொல்ல..

முன்னரே சொன்னது போல நந்தினி மட்டுமல்ல, அவள் சிகிச்சைக்கு செல்லும் போது சந்திக்கும் அதே சிகிச்சையை ஆண் குழந்தை வேண்டுமென்று மேற்கொள்ளும் மூதாட்டி ஒருத்தியை சார்ந்தும் ஒரு பதிவு வரும். சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் அளவற்ற அழுத்தத்தில் உடலாவது மண்ணாங்கட்டியாவது என்ற நிலைக்கு தள்ளப்படுவது தான் நிஜம். நந்தினி துரை இருவருமே படித்தவர்கள் எந்த மருந்து என்ன பக்கவிளைவை தரும் என்று தெரியும். தெரியாமல் செய்பவர்களிடம் யாராவது அப்படி உங்கள் உடல் தானே அக்கறையுடன் கேட்டால் கூட அவர்கள் அந்த கேள்வியை கடந்து போவார்கள். குழந்தையில்லை என்பது மிகப் பெரிய பாவம், சாபம் என்ற அழுத்தம் அவர்கள் மீது எப்போதும் கவிந்து கொண்டே இருக்கும் அதுவே இந்த சமூகத்தின் சாபக்கேடு.

20. பெண் என்பவள் தாயானால் மட்டுமே  முழுமை அடைகிறாள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தாய்மை என்பது பெற்றெடுத்து சிற்றுடல்தொட்டு முத்தமிட்டு முலைசேர்க்கும் ஒரு ஸ்தூலமான விஷயம் மட்டும் தானா?


இல்லை. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க இப்படி சொல்லி வைக்கிறேன். சித்திரை மாதத்து வெயில் மிகுந்த நாளில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி மாடி மதில் சுவரில் வைத்தால், சில பறவைகள் வந்து நீர் அருந்திவிட்டு போகும் அதில் தாய்மையை உணரலாம். முகம் அறியாதவர்களுக்கு கூட உதவும் மனம் வாய்க்கும் போது தாய்மையை உணரலாம். பெற்றோர் இல்லாத குழந்தையை அரவணைத்து தாய்மையை துய்க்கலாம். ஆனால் இவை எதுவுமே கரு தாங்கி, வயிற்றில் குழந்தை உதைப்பதை உணர்ந்து, இடை நெழிந்து, வலிகொண்டு பிள்ளையொன்றை பெற்று எடுத்து நொடி நொடியாய் அந்த குழந்தையை ரசித்து வளர்த்து “அம்மா” என்ற அமுதச் சொல் காதில் சேரும் போது கிடைக்கும் தாயின்பம் கண்டிப்பாக இணையாகாது என்பதே கசப்பான உண்மை. அதையே பலரும் பலவிதத்தில் சொல்கின்றார். முழுமை, தாய்மை, வெறுமையின்மை இவை எல்லாவற்றையும் இணைக்கும் ஒன்று குழந்தை செல்வம். உறவினர் குழந்தைகளையோ தத்து எடுக்கும் பட்சத்திலோ அதே இன்பம் கிடைத்தாலும் என் ரத்தம் என்ற அங்காரம், என் பிரதி என்ற பெருமிதம் அது கொடுக்கும் மாயை எல்லாமே ஒரு போதை தரும் புதைகுழி. ஆயினும் உலகை இயக்கிக் கொண்டிருக்கும் ஆதாரவிதியும் அதுவே. 


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்