கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய வம்ச விருட்சம் [வம்சவிருட்சா. தமிழில் மொழிஆக்கம் கே. நல்ல தம்பி]என்ற நாவலையும், மலையாள எழுத்தாளர் ஹெப்சிபா ஜெசுதாசன் எழுதிய புத்தம் வீடு நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். வம்சவிருட்சம் நாவல் சீனிவாச பண்டிதர் தன் மகன் நஞ்சுண்ட பண்டிதரை கபிலை ஆற்று வெள்ளத்தில் இழப்பதிலிருந்து தொடங்குகிறது. நஞ்சுசுண்ட பண்டிதரின் மனைவி காத்தியாயினி கைக்குழந்தையுடன் கணவனை இழந்து நிற்கிறாள். தன் பொறுப்புகளை மகனின் தோளுக்கு மாற்றிவிட நினைத்திருக்கும் சீனிவாச பண்டிதர் மறுபடியும் குடும்ப பொறுப்புகளை ஏற்க நேர்கிறது. காத்தியாயினியின் அப்பாவும் மாமியாரும் கணவனை இழந்த காத்தியாயினியிக்கு முடி மழித்து மடியுடுத்தி விதவைக்கான நோன்புகளை ஏற்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால் சீனிவாச பண்டிதர் 'நோன்புகளை ஒருவர் மனம் உவந்து ஏற்க வேண்டும்...நாம் கட்டயப்படுத்தக்கூடாது' என்று மறுத்துவிடுகிறார். காத்தியாயனி கல்லூரிக்கு செல்ல விரும்பும் போது சீனிவாசபண்டிதர் அவளுக்கு ஆதரவு தந்து தன் மனைவி பாகிரதி அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். தினமும் ரயிலில் பத்து மைல் தொலைவி்ல் உள்ள மைசூர் கல்ல...