Skip to main content

அலைபேசி இல்லாத நாட்கள்

 கிட்டதட்ட இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி கீழே விழுந்து செயலிழந்து விட்டது. அதை சரி செய்வது விரயம். அதை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இந்த அலைபேசியில் தான் நான்கு புத்தகங்கள் எழுதி, தொகுத்து, பிழைபார்த்து வெளியாகியிருக்கின்றன.



 நினைவகம் அதிகம் உள்ள அலைபேசி வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு.  Word document ல் நிறைய கோப்புகள் காணாமல் போய்விட்டன. முக்கியமான புகைப்படங்கள் அழிந்துவிட்டன. பட்ஜெட்டிற்குள் அலைபேசி,கிராமத்திற்கு கொரியர் சிக்கல், அதனால் திருப்பிவிடுதல் விடுதல்,என்னுடைய சின்ன கவனக்குறைவு,கொரியர் பாயின் சிறு ஈகோ என்று தாமதமாகி ஒருவழியாக நேற்று வந்து சேர்ந்தது.

இந்த இருபத்தைந்து நாட்களில் கடைசி பத்து நாட்கள் அம்மாவின் அலைபேசியை பயன்படுத்தினேன். திருவிழா வாரத்தில் காலையில் கொஞ்ச நேரம் வைத்திருந்தப்பின் அலைபேசி அம்மாவிடம் சென்றுவிடும். தாயும் பிள்ளையும் என்றாலும் அலைபேசியும் வாட்ஸ்ஆப்பும் வேறுவேறு ...

நான் அலைபேசியில் எழுதி பழகி வழக்கமாகிவிட்டதால் காகிதமும் பேனாவும் மனமும் இணைந்து வரவில்லை. தினமும்  எதையாவது எழுதுவது வழக்கம். பிரசுரமாவதற்காக அல்ல. எழுதத் தோன்றுவதை எழுதிப் பார்ப்பேன். எழுது அதுவே எழுத்தின் ரகசியம் என்ற சு.ராவின் வார்த்தைகளை மனம் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டது. அந்த வார்த்தை விதையின் மீது விழுந்த முதல் துளி தண்ணீர். 

அம்மாவின் அலைபேசியில் காவியம் நாவலை தொடர்ந்து வாசித்தேன். வம்சவிருட்சம் ,புத்தம்வீடு,பதேர் பாஞ்சாலி நாலல்களை வாசித்துக்கொண்டிருந்தேன்.

திருவிழா நாட்களில் காவியமும் ,ஸ்டேட்டஸ் போடுவதும் முடிந்ததும் அலைபேசி அடுத்த நாள் காலை தான் கைகளுக்குக் கிடைக்கும்.

திருவிழா நாட்களின் சுவாரசியமாக கமல்ஹாசனின் Thug life இருந்தது. கோவிலிற்கு சென்ற போது தம்பி ஒருவன் முத்தமழை பாடல் வைரல் ஆவதை பற்றி சொன்னான். 

என்னா பாட்டுக்கா? என்றான். அவனை நம்பி அலைபேசி கடன் வாங்கி பாட்டை கேட்டேன். அவ்வப்போது பின்வீட்டிலிருந்து தெருவிலிருந்து அந்தப்பாடல் காற்றில் மிதந்து வந்தது.

மறுநாள் பாட்டு எப்டி என்றான். 

இந்த பாட்டு பசங்களுக்கு பிடிக்குமாயிருக்கும் என்றேன்.

இல்லக்கா செம வைரல் என்றான்.

பசங்களுக்குள்ள வைரலாகும் என்றேன்.

இல்லக்கா பொதுவாவே வைரல் தான் என்றான்.

இல்லல்ல...பசங்க வைரலாக்கறது பொண்ணுங்களுக்கு பிடிக்கனுமா என்ன? என்று கேட்டேன்.

அவனுக்கு புரியவில்லை. நல்ல வேளை பூமர் என்று சொல்லவில்லை. வீட்டிற்குள் நுழையும் போதே அந்தப்பாடல் சத்தமாகவைத்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி மாடியேறினேன். திரைப்படத்தில் அந்தப்பாடல் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். 

முதல் ஒரு வாரம் எழுதாமல் இயல்பாக இருந்தேன். ஊரில் திருவிழா ஆயத்தங்கள் கலகலப்புகள் இருந்தன. பின்பு அன்றாடத்தில் ஒரு தத்தளிப்பு. அப்படி ஒன்றும் முக்கியமாக நாவலோ சிறுகதையோ எழுதி இடையில் நிற்கவில்லை. ஆனாலும் எழுது என்று எதுவுவோ உந்துகிறது.

இனி அன்றாடம் இயல்பாகும்...







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...