Skip to main content

கவிதைக்கு காலமில்லை

 [ 2025 ஏப்ரல் கவிதை இதழில் வெளியான கட்டுரை]

நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக்கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.


                                  கவிஞர் இசை

உன்னை காணவே……

சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவிதோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது,முல்லை மலர்ந்துவிட்டது,காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது,அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக்கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும் வாரார்

குறுந்தொகை :118

உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வேண்டியோ,இருப்பிடம் வேண்டியோ யாரேனும் வாயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்கும் நேரமும் வந்துவிட்டது இன்றும் தலைவன் வரவில்லை என்றாள் தலைவி.

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே

குறுந்தொகை :67

நம் வாசலில் வேம்பு பழுத்திருக்கிறது. கள்ளிகாட்டு வழியில் செல்றான் தலைவன். அங்கும் வேம்பு பழுத்திருக்கும் தானே. மங்கல நாணில் உள்ள காசுகளை  போன்ற பழத்தை கண்டும் ஏன் இன்னும் வரவில்லை என்று தலைவி கேட்கிறாள்.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே

குறுந்தொகை: 172

தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. இரும்பு உலை துருத்தியை உவமையாக்கி அந்த துயரை தலைவி உணர்த்துகிறாள். சங்ககாலம் போர்கள் நடைபெற்ற காலம். கொல்லர் பட்டறைக்கு ஓய்வு கிடையாது. அதுவும் ஏழு ஊர்களுக்கு பொதுவாக உள்ள பட்டறையின் துறுத்தி போல முடிவிலாது துயருற்றேன் என்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் [குறுந்தொகை 2]

வருவதாய் சொன்ன காலத்தில் வராது போன தலைவனால் காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று போன எள் செடி போல அனேன் என்று இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள்.

என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே [குறுந்தொகை :261]

இந்தப்பாடலில் தலைவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி 

தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் 

மருங்கிற் கொண்ட பலவிற்

பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே

இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. தலைவன் வருகைக்காக ததும்பும் அருவி.

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று

என் குறைப் புறனிலை முயலும்

அண்கணாளனை நகுகம் யாமே 

தலைவன் வரமாட்டானோ என்று அஞ்சும் தலைவியிடம் தோழி ‘தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா…’ என்கிறாள். 

இன்னும் இன்னும் பல பாடல்களில் இந்த உணர்வு கையாளப்பட்டுள்ளது. தற்செயலாக வாசித்த அல்லது பாடலாக கேட்ட கவிஞர் இசையின் கவிதை ஒன்று இந்தக் கவிதைகளை நினைவுபடுத்தியது. சங்கபெண்கவிகளின் கவிதைகள் இவை. இந்தப்பாடல்களுக்கு பதிலாக இந்த நவீன கவிதை  ஒலிக்கிறது. தலைவன் கூற்றாக சில பாடல்கள் உண்டு. தன் பாங்கனிடம், தேரோட்டியிடம் விரைந்து செல்லுமாறு தலைவன் கூறும் பாடல்கள் அவை. ஆனாலும் என் வாசிப்பின் எல்லைக்குள் தலைவி கூற்றாக வரும் இத்தனை பாடல்களின் கவித்துவத்திற்கு ஈடாக அந்த பாடல்கள் இல்லை. தலைவி பேரருவியாக கலங்கும் போது தலைவனிடம் சொற்கள் இல்லையோ என்று தோன்றும். அல்லது தலைவி போல சொல்வதில் தலைவனுக்கு ஏதோ ஈகோ சிக்கல் இருக்க வேண்டும். இந்த நவீனகவிதைக்கு அந்த சிக்கல் இருந்த போதும் இறுதியில் கவிதை சென்று தொடும் இடத்தில் அந்த சிக்கலே கவித்துவமாகிருக்கிறது. வார்த்தைகளின் இணைப்பு,குறிப்புணர்த்துதல்,உணர்வமைதி,சொல்லமைதி என்று பல விஷயங்கள் கவிதைக்கு உண்டு. இந்த நவீனக்கவிதையை.மேற்சொன்ன சங்கக்கவிதைகளுடம் இணைக்கும் போது சொல்முறை யும்,கவிதையின் படிப்படியான விரிதலும்…எதற்காக வீட்டிற்கு வந்தேனில் தொடங்கி ,எதற்காக இவ்வுலகிற்கிற்கு வந்தேன் என்று முடியும் இந்தக்கவிதை இனியவாசிப்பனுபவமாகிறது,

கச்சிப்பட்டு நன்னாகையோ,அள்ளூர் நன்முல்லையோ,நல்வெள்ளியோ  இருந்தால் புன்னகைத்திருக்கக்கூடும். இந்த நவீன கவிதையை மையப்படுத்தினால் மேற்சொன்ன சங்கக்கவிதைகள் நவீன கவிதைகளாக முகம் காட்டுகின்றன. கவிதை என்றும் புதியது.

ஆம்

உன்னையல்ல

நீ.வாழும் வீட்டைக் காணவே

உன் தெருவில் அலைந்தேன்.

உன்னையல்ல

நீ வசிக்கும் தெருவைக்

காணவே இந்த ஊரில்

திரிந்தேன்.

உன்னையல்ல

நீ திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம்

வந்தேன்.

உன்னையல்ல

உன் ஊருக்கு செல்லும் வழியைக்காணவே காடு

மலை கடந்தேன்.

உன்னையல்ல

நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு

வந்தேன்.

_ கவிஞர் இசை

மேலும் உன்னையல்ல என்று சொல்லி எத்தனை உன்னைகளை காண்கிறது இந்த மனம்.புறப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் போல மனம் விரியும் கவிதை இது. ஒற்றை அன்பை கொண்டு இந்த பூமி முழுவைதயும்,இந்த முழு வாழ்வையும் நேசிக்கும் அளவுக்கு.




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...