Skip to main content

Posts

Showing posts from 2024

கட்டுமரங்கள் [2024 ஆம் ஆண்டு]

சரியாக பத்துஆண்டுகளுக்கு முன் 2014 ஜனவரியில் கன்னியாகுமரிக்கு சென்றோம். உறவுகளில் ஒரு இருபது பேர் சேர்ந்த பயணம். அண்ணன் மகனிற்கு திருச்செந்தூரில் மொட்டை போடுவதாக வேண்டுதலை முடித்துக்கொண்டு நாகர்கோயில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி குமரியம்மன் கோயில் மற்றும் விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம் காமராஜர் நினைவகம் காவிரி பூம்பட்டினம் போன்ற இடங்களுக்கு சென்றோம். சிறுவயதிலிருந்து பள்ளி கல்லூரி சுற்றுலாவில் ஐந்தாறு முறை இந்த இடங்களுக்கு சென்றுள்ளேன். கொற்றவை வாசித்தப்பின் காவிரி பூம்பட்டிணம் கடற்கரையில் செயற்கை அலைதடுப்பு கற்களில் அமர்ந்திருந்த போது மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். காலத்தின் மடியில் தன் செல்வங்களை ஒப்படைத்து அமர்ந்திருந்த கிழவி போல காவிரி பூம்பட்டிணம் அமர்ந்திருந்தது. நாலங்காடி அல்லங்காடி சதுக்க பூதம் எல்லாம் இங்கு தானே இருந்திருக்கும் என்று சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அதே போல திருச்சேந்தூர் தேரிகாட்டு செந்நிலம் மனதை வியாப்பித்திருந்தது.  விவேகானந்தர் பாறைக்கு படகில் ஏறி லைஃப் ஜாக்கெட்டை மாட்டியதும் மனம் துறுதுறு என்று இருந்தது. வள்ளுவரையும் விவேகானந்தர் பாறைய...

இற்றைத்திங்கள் அந்நிலவில் :18

  பெருமழைகாலத்துக்குன்றம் ஔவையார் நற்றிணையில் ஏழு பாடல்கள் பாடியுள்ளார்.  தலைவியை பிரிந்து சென்ற தலைவன் தேரில் திரும்பிவிருகிறான். அவன் கண்களுக்கு தலைவி காத்திருக்கும் குன்று புலனாகிறது. காயாம்பூ பூத்து நிறைந்திருக்கும் குன்றில் அப்போது தான் பூக்கும்  கொன்றை  போல நீலமலையை பொன்மின்னலின் வெளிச்சம் வெட்டிச்செல்கிறது. அந்த வெளிச்சத்தில் குன்றின் பிளவுகளும் கூட கண்களுக்கு துலக்கமாகிறது. தலைவியின் மாமை நிறத்தை ஒத்த நிறமுடைய மேகங்கள் குன்றை சூழ்ந்து கொள்ள மழை பெய்கிறது. அன் தன் பாகனிடம் மழை காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். என்னை நினைத்து இந்த அந்தியில் தலைவி கோபம் கொள்ளத் தொடங்கியிருப்பாள். ஆநிரைகளை ஒன்று சேர்த்து இல்லம் திரும்புவதற்காக கோவலர்கள் குழல் ஊதத்தொடங்கிவிட்டனர். இரவு முற்றி செறிவதற்கு முன் நாம் இல்லம் சேர வேண்டும்  சொல்கிறான். மின்னலை காயாங் குன்றத்து கொன்றை என்று ஔவை சொல்கிறாள். மின்னலை பொன் பூவாக மாற்றக்கூடிய அழகிய காதல் இந்தப்பாடலில் உள்ளது. பெயல்தொடங் கினவே பொய்யா வானம் நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங் கினளே ஆயிழை  ...

லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

  எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் பற்றி ஆதியிலிருந்தே காட்டிற்கும் மனிதர்களுக்குமான  பிடிமானமும் விலகமுமான உறவே மனிதகுலத்தை இன்றுவரை நகர்த்தியுள்ளது. ஒரு உக்கிரமான விட்டுவிட முடியாத பிணைப்பும், தவிர்க்கவே முடியாத விலகலுமான உறவு என்று சொல்லலாம். காட்டிலும் இருக்க முடியாது, காட்டை தவிர்க்கவும் முடியாத வாழ்வு நம்முடையது. முற்றிலுமாக நகரமாகிவிட்ட இடத்தையும் ‘கான்க்ரீட் காடு’ என்று தான் சொல்வோம். எவ்வளவு இடப்பற்றாக்குறையிலும் சிறுதுளசி செடி அல்லது டேபிள் ரொஸ் தொட்டிக்காவது வீட்டில் இடம் தேடுவோம். இல்லாவிட்டாலும் நமக்கு சுவற்றிலாவது பச்சையாக வரைந்துவிட வேண்டும். கடுமையான போக்குவரத்து நெரிசல் மையம் கொள்ளும் இடங்களிலும், அதிவேகமெடுக்கும் சாலைகளின் நடுவிலும் பூச்செடிகளுக்கும் தீக்கொன்றை மரங்களுக்கும் இடம் கிடைக்கிறது. கொஞ்சம் முன்னால் சென்றால்  சாலைகளின் இருபக்களிலும் புளியமரங்கள் அணிவகுத்து நிழல் காத்து நின்றன. இன்று சாலைகளை அகலப்படுத்தி விரைவாக வளரும் மரங்கள், அழகாக பூக்கும் மரங்கள், கரும்புகையை அதிகமாக உறிஞ்சுவதாக நம்பப்படும் செடிகள் நடப்படுகின்றன. பெரும்பாலும் வண்ண வண்...

இற்றைத்திங்கள் அந்நிலவில் : 17

  நீர்த்துறை படியும் பெருங்களிறு ஔவையார் புறநானூற்றில் சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை குறித்து பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளார். சங்ககாலத்து ஔவை இளம் வயது விறலி என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஔவையும் அதியனும் பாடி பரிசில் பெற்ற புலவரும்,புரவலன் மட்டுமல்ல.  கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்,பாரி கபிலர் போன்று ஆத்ம நண்பர்களும் கூட. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை நட்பாய் நடத்திய அரசனை குறித்த இலக்கியம் நம்மிடம் உள்ளது.  இதை நம் பண்பாட்டின் பெருமிதம் என்று தயங்காமல் சொல்லலாம். பரத்தை என்று குலம் வகுத்து பெண்களை பயன்படுத்தி கொண்ட நம் சமூகத்தில் ஒரு அரசன் ஒரு பெண் புலவரை தன் நட்பிற்குறியவளாகியிருக்கியிருக்கிறான். ஒரு குலத்தை பரத்தையாக வகுத்த சமூகத்தில் ஒரே ஒரு பெண்ணை நட்பிற்கு உதாரணமாக காட்டுவதை பற்றி இன்று நமக்கு மனக்குறை இருக்கலாம். ஆனாலும் சங்ககாலம் என்ற மரத்தில் அந்த ஒரே ஒரு மலர் மலர்ந்து கனிந்திருக்கிறது. அறிவால், புலமையால் ஒரு பெண் ஒரு ஆணுக்கு நட்பாகியிருக்கிறாள். சிலபாடல்கள் நமக்கு சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் அறிமுகப்படுத்தப்படுவதனால் அவற்றின் உணர்வ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

இற்றைத்திங்கள் அந்நிலவில் : 16

 [2024 அக்டோபர் சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரை] தளிர் பெருமரம் ஔவையார் அகநானூற்றில் நான்கு பாடல்கள் பாடியுள்ளார் . நான்கும் பாலைத்திணை பாடல்கள் . பிரிவ   பாடும் தலைவி கூற்றுகள் . ஓங்கிய மலைகளையும், வரண்ட காடுகளையும் , மணல் வெளிகளையும் கடந்து தலைவன் பொருள் தேடி செல்கிறான் . தலைவி தன் நிலத்தை விட்டு வெளியே சென்றவள் இல்லை . கதைகளாக மற்றவர் சொல்லக் கேட்கும் தலைவி தன் ஊகத்தாலும் ,   கற்பனையாலும் , கனவாலும் விரித்துக்கொள்ளும் நிலவெளி இந்தப்பாடல்களில் உள்ளது . தலைவியின் மனதில் விரியும் நிலமும் , பிரிவு சார்ந்த உணர்வுகளும் பாடல்களாகியுள்ளன . பிடவம் பூக்களையும் , வேங்கை மலர்களையும் காணும்   தலைவிக்கு தலைவன் நினைவு வருகிறது . அவன் செல்லும் வழியில் புலிகள் இருக்கிறது . அதுவும் குட்டிகளை ஈன்று பசியுடன் இருக்கும் புலி . அந்தப் பெண்புலியின் இணையான ஆண் புலி தன் ஐந்துபொறிகளும் உச்சநிலையில் விழித்திருக்க இரைக்காக காத்திருக்கும் காட்டு வழியில் தலைவன் சென்றுள்ளான் என்று தலைவி பதறுகிறாள் . ஓங்கு மலை...