Skip to main content

அகம் என்னும் காடு

 எனக்கு தமிழ் புத்தாண்டு மனதிற்கு நெருக்கமானது. நிலத்தின் வசந்தம். 

அதிகாலையில் தினமும் வாசலில் கோலமிடும் போது கிருஷ்ணர் பாதங்களை படிகளுக்கு கீழே மனிதகால்கள்படாத இடத்தில் வரையும் போது கிருஷ்ணா ரா என்று மனதிற்குள் சொல்வது வழக்கம். பதிமூன்று வயதிலிருந்து சடங்கிற்காக சொல்லத்தொடங்கி, வழக்கமாகி, கவனமில்லாமல் அனிச்சை செயலாகி, இப்போது அனிச்சையான கவனமாகி உள்ளது. கிருஷ்ணா ரா என்று எதை அழைக்கிறேன்? சிறுவயதில் அப்படி அழைக்கும் போது அது வெறும் வார்த்தை. பின்னால் தவழும் கண்ணனின் சிலை மனதில் இருந்தது.  பின் வளர்ந்து உரலை இழுக்கும் தாமோதரன். கதைகளுக்குள் பித்தாக இருந்த நாட்களில் உலகுண்ட பெருவாயன். அதன் பின்னால் தொலைகாட்சிகளில் பார்த்த ராதாகிருஷ்ணர்கள். கல்லூரி நாட்களில் முதன்முதலாக திருப்பாவை படித்த நாட்களில் ஆண்டாளின் மோகனன். பின் வெண்முரசின் கிருஷ்ணன்..குறிப்பாக  நீலம் நாவலின் கிருஷ்ணன்.

 நீலம் வாசிக்கும் போது ஓவியர் சண்முகவேலின் கிருஷ்ணர்கள். தினமும் ஒரு கிருஷ்ணன். அழகான அதிகாலைகள் அவை. சற்று பெரிய மென்நீல பூவின் மீது பூக்கள் உதிர சிவந்த குட்டிப்பாதங்கள். நான் அன்றாடம் வாசலில் வரையும் பாதத்தின் உச்ச வடிவங்களில் ஒன்று. உடைந்த வெண்ணெய் பானையில் இருந்து  வெண்ணையுடன் காற்றில் பறக்கும் நீலன். ராதையின் இடையில் மடியில் அமர்ந்தவன். பூதகியின் மார்பில் ஔிரும் நீலன். பூதகியிடம் இருப்பவன் மிக அழகான கண்ணன். அவளுடைய நஞ்சு முழுக்க இவனில் நிறைய ஔிரும் நீலன் என்று தினமும் ஒரு கண்ணன்.

இத்தனை கிருஷ்ணர்களில் மனதில் தங்கியிருக்கும் ஓவியம் சொல்வளர் காடு நாவலில் வரும் கிருஷ்ணர். வெண்முரசு வாசிக்கும் போது மனதில் தங்கிவிட்ட கிருஷ்ணர். பாண்டவர்கள் பணையமாக அனைத்தையும் இழந்து வனம் புகுந்த பின்னர் கிருஷ்ணர் அவர்களை காண வருகிறார். அவருக்கும் துவாரகையில் அரசியல் குழப்பங்கள். பெருங் கோபத்தின் இன்னொரு முகமாக அலட்சியமாக இருக்கும் திரௌபதியை கடிந்து கொள்கிறார். பின் தருமரிடம் உரையாடிவிட்டு விடைபெறுகிறார். தருமரின் பார்வையில் இருந்து வரையப்பட்ட ஓவியம். கிருஷ்ணர் தனியாக காட்டை பார்த்து நடந்து செல்கிறார். இந்த ஓவியத்தை பலமுறை தேடி எடுத்து பார்த்திருக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு கூட. 


                    ஓவியம் : ]சண்முகவேல் வெண்முரசு நாவலில்]

நம் மனதில் நம்மை அறியாமலேயே சில விதைகள் விழுந்து விடுகின்றன. காலம் செல்ல செல்ல முளைத்து மரங்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அகம் ஒரு காடு. அறியாத வயதில் விழுந்த  விதைகள் வளர்ந்த காடு.  பல ரூபங்களும், நிகழ்வுகளும், சொற்களும், உணர்வுகளும், கனவுகளும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதில் இந்த 'கிருஷ்ணா ரா' வை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

தினமும் கிருஷ்ணா ரா... வென்று எதை அழைக்கிறேன். கண்டிப்பாக அது தூல வடிவமான ஒன்று இல்லை. அந்த வானின் அதிகாலை நிறங்களை,பட்சிகளை,தென்னம்கீற்றின் தலைகுலுக்கலை,வேம்பின் உழைவை,வீட்டின் எதிரில் உள்ள கிணற்று சுவரில் எததனை முறை அழித்தாலும் விடாப்பிடியாக தளிர்க்கும் அரசங்கன்றின் அடர் இளம் சிவப்பான தளிரில்,அதன் அருகில் பூத்துக்குலுங்கும் வாடாமல்லிநிற நித்யமல்லி மலர்களில்,வரையும் கோலத்தில், ஈரமான துளசி செடியின் இலைகளில், வாசிக்கும் புத்தகங்களில் சொல்லாக மொழியாக...

 அன்றாடம் என்னை எழவைக்கும் ஒன்றையே தினமும் அழைக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இரவு வெப்பத்தின் விளைவாக அதிகாலையில் எழுந்ததும் சின்ன சூரைக்காற்றுடன் மழை. சொல்லில் வைக்க முடியாத ஒரு தண்மை. மிக மென்மையான தண்மை. காற்றாக மழையாக...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்ட  பாசுரம் இது. இந்தப்பாடலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இந்தப்பாடகியின் குரலில் இந்த இசையில் அமுதமாய்...

https://youtu.be/aAunpj7yHJQ?si=w8tlGTqS-vm_sagg


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...