Skip to main content

கனியானப்பின்னும் நுனியில் பூ

 மார்ச் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்...



ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள

எதுவும் இல்லை.

எல்லாவற்றையும்

ஔி இருளிடமிருந்துதான்

கற்றுக்கொண்டிருக்கிறது.


ஒரு கவிஞரை,ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது.

எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல்.


கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாதாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று ஒளியை சுட்டுபவர். மீண்டும் மலர்தல் அல்லது மலர்ந்து கொண்டே இருத்தல். உதாரணத்திற்கு இந்த வாசிப்பனுபவத்தில் குறிப்பிட்டுள்ள கவிதைகளை  சொல்லலாம். பாலையில் பூக்கும் இந்தப் பூ கவியின் ஆன்மாவிற்குள் மலர்வது மட்டுமல்ல உடன்பயணித்த அனைவருக்குள்ளும் மலரும் மலர். ஒரு பாம்பு தன் வாயால் தன் வாலை கவ்வும் முழுவட்டம் போல.

 இந்த அனுபவத்தை ஒரு அனுபவம் மூலம் சொல்லலாம்.   நாம் ஒரு பாட்டனாரிடம் கதை கேட்கிறோம். அவர் சொல்வது இராமாயண கதை என்று வைப்போம். அவர் கதை சொல்ல சொல்ல நேர்நிலைக்கு எதிரான ஒரு சின்னஞ்சிறு முள் நமக்குள் நம்மையறியாமலே ஒரு ஓரமாக முளைக்கும். ஒரு கட்டத்தில் ‘இதுக்கு என்ன சொல்றீர்?’ என்று உணர்ச்சிவசப்பட்டு கேள்விகள் கேட்பாம். அது சீதையின் அக்னி பிரவேச தருணமாகவோ, சீதை கர்ப்பவதியாக தனித்து மீண்டும் வனம் புகும் தருணமாகவோ அல்லது வேறெதாகவோ இருக்கலாம். கேள்விகள் அவரவருக்கென்று தனியானது. அந்த இடத்தில் வெற்றிலை சிவந்த வாயும் ,வெண்நரை மென்தாடி மறத்துகாட்டும் புன்னகையுடன் ‘யார்டா இது அறியா பிள்ள.. ராமன் சீதை பிரேமமே அந்த புரியறதும், பிரியறதும் தானே’ என்று சொல்லி அவர் சிரிக்கக்கூடும். அது போன்ற ஒரு அனுபவத்தை காற்றை கேட்கிறவன் தொகுப்பை வாசிப்பவர் உணரலாம். பாலையிலும் சோலையை உணர்ந்த, உணர்த்திய ஈராயிரம் ஆண்டு நீண்ட மரபின் நுனியில் மலர்ந்த சின்னஞ்சிறு அனிச்சத்தின் முன் நாமும் ஈரத்துடன் புன்னகைத்து சுகந்தமாக மலரும் அனுபவம் அது.

ஒன்றுமே நிகழவில்லை

என்று  தவிக்கையில்

ஏதேனும் ஒன்று நிகழ்ந்து

புலன் உச்சியில் எரிகிறது.

இடப்புறம் முழுவதும்

தொடர் சப்பாத்திக்கள்ளி

முளைத்துகிடந்த நெடும்பயணத்தில்

பரவசம் உண்டாக்கியது

ஒரே ஒரு சப்பாத்திப்பூ.

ஒரு பாழின் முடிவில்

ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது

ஓர் அருட்பெருஞ் சோதி.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...