Skip to main content

சினிமாவில் பொருட்வயப்பிரிவு

 சங்ககாலத்திலிருந்து இன்று வரை பொருட்வயப்பிரிவு ஒரு நிரந்தர வாழ்வியல் சிக்கல். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்தப்பிரிவு அதிகமாகி உள்ளதாக நினைக்கிறேன். இயக்குனர் ராம் இந்தப்பாடலில் அதை அழகாக காட்சிபடுத்தியுள்ளார். காட்சிகள் கவிதைகளாகும் பல தருணங்கள் இந்தப்பாடலில் உள்ளன. என்றைக்குமே எனக்கு சலிக்காத ஒரு பாடல். இந்தப்பாடலில் மற்றும் படத்திலும் ராம் மற்றும் செல்லம்மா இருவரும் தந்தை மகளாகவே மாறியிருப்பார்கள்.



இந்தப்பாடலில் வருகிறமாதிரி சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து அய்யாவுடன் காடு மேடெல்லாம் சுற்றி இருக்கிறேன். கம்பியில் அமர்ந்தால் பின்புறம் வலிக்கும். அதற்காக ஒரு ஆரஞ்சு நிற தேங்காய்ப்பூ  துண்டு மடித்து வைப்பார். நாள்முழுதும் சைக்கிளில் கொல்லிமலையடிவாரம்,வயல்பாதைகளில் சுற்றி இருக்கிறோம். இந்த மாதிரி சைக்கிளில் அமர்வது கோழியின் சிறகிற்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதை ஒத்தது. இந்தப்பாடலிற்கு முன் ராம் சில வசனங்களை சொல்வார். 

சைக்கிளில் தந்தையுடன் அதிகம் பயணித்த பிள்ளைகளும்,அந்த அளவு ஆரோக்கியமாக இருந்த தந்தைகளும் பாக்கியவான்கள் என்று எனக்குத்தோன்றும். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் இரண்டு ஊர் தாண்டி பள்ளிக்கு சைக்கிள் மிதிக்க வேண்டும்.  நான் பெரியபிள்ளையானதும் ஒருமாதம் சைக்கிள் மிதிக்க வேண்டாம் என்று அய்யா கொண்டு வந்து விடுவார். அவரும் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால் காலையில் அவசரமாக டி.வி.எஸ் 50 டியில் கொண்டு வந்து விட்டு விட்டு சாயுங்காலம் சைக்கிளில் வந்து நிதானமாக அழைத்து செல்வார். அந்த ஒரு மாதப்பயணம் இன்னும் மறக்கவில்லை. கதைகள்,வழியில் உள்ள மரங்கள்,அவர் பள்ளிக்கு சைக்கிள் இல்லாமல் நடந்து சென்ற நினைவுகள்,கல்கியின் சிறுகதைகளை கதைகளாக சொல்வது என்று அவரும் நானும் நன்றாக ஒரு புரிதலுக்குள் இருந்த காலகட்டம். அற்புதமான பரஸ்பர ப்ரியம் நிறைந்த அனுபவம் என்று இப்போது தோன்றுகிறது. வீட்டில் சைக்கிளை நிறுத்தும் போது அவருக்கு லேசாக மூச்சுவாங்கும். உடனே அடுத்த பத்தாவது நிமிடம் அவர் ட்யூசனிற்கு கிளம்பிவிடுவார். அப்போது அவருக்கு வயது நாற்பத்து நான்கு. 

https://youtu.be/yIU3YoPDqMU

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...