Skip to main content

சினிமாவில் பொருட்வயப்பிரிவு

 சங்ககாலத்திலிருந்து இன்று வரை பொருட்வயப்பிரிவு ஒரு நிரந்தர வாழ்வியல் சிக்கல். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்தப்பிரிவு அதிகமாகி உள்ளதாக நினைக்கிறேன். இயக்குனர் ராம் இந்தப்பாடலில் அதை அழகாக காட்சிபடுத்தியுள்ளார். காட்சிகள் கவிதைகளாகும் பல தருணங்கள் இந்தப்பாடலில் உள்ளன. என்றைக்குமே எனக்கு சலிக்காத ஒரு பாடல். இந்தப்பாடலில் மற்றும் படத்திலும் ராம் மற்றும் செல்லம்மா இருவரும் தந்தை மகளாகவே மாறியிருப்பார்கள்.



இந்தப்பாடலில் வருகிறமாதிரி சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து அய்யாவுடன் காடு மேடெல்லாம் சுற்றி இருக்கிறேன். கம்பியில் அமர்ந்தால் பின்புறம் வலிக்கும். அதற்காக ஒரு ஆரஞ்சு நிற தேங்காய்ப்பூ  துண்டு மடித்து வைப்பார். நாள்முழுதும் சைக்கிளில் கொல்லிமலையடிவாரம்,வயல்பாதைகளில் சுற்றி இருக்கிறோம். இந்த மாதிரி சைக்கிளில் அமர்வது கோழியின் சிறகிற்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதை ஒத்தது. இந்தப்பாடலிற்கு முன் ராம் சில வசனங்களை சொல்வார். 

சைக்கிளில் தந்தையுடன் அதிகம் பயணித்த பிள்ளைகளும்,அந்த அளவு ஆரோக்கியமாக இருந்த தந்தைகளும் பாக்கியவான்கள் என்று எனக்குத்தோன்றும். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் இரண்டு ஊர் தாண்டி பள்ளிக்கு சைக்கிள் மிதிக்க வேண்டும்.  நான் பெரியபிள்ளையானதும் ஒருமாதம் சைக்கிள் மிதிக்க வேண்டாம் என்று அய்யா கொண்டு வந்து விடுவார். அவரும் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால் காலையில் அவசரமாக டி.வி.எஸ் 50 டியில் கொண்டு வந்து விட்டு விட்டு சாயுங்காலம் சைக்கிளில் வந்து நிதானமாக அழைத்து செல்வார். அந்த ஒரு மாதப்பயணம் இன்னும் மறக்கவில்லை. கதைகள்,வழியில் உள்ள மரங்கள்,அவர் பள்ளிக்கு சைக்கிள் இல்லாமல் நடந்து சென்ற நினைவுகள்,கல்கியின் சிறுகதைகளை கதைகளாக சொல்வது என்று அவரும் நானும் நன்றாக ஒரு புரிதலுக்குள் இருந்த காலகட்டம். அற்புதமான பரஸ்பர ப்ரியம் நிறைந்த அனுபவம் என்று இப்போது தோன்றுகிறது. வீட்டில் சைக்கிளை நிறுத்தும் போது அவருக்கு லேசாக மூச்சுவாங்கும். உடனே அடுத்த பத்தாவது நிமிடம் அவர் ட்யூசனிற்கு கிளம்பிவிடுவார். அப்போது அவருக்கு வயது நாற்பத்து நான்கு. 

https://youtu.be/yIU3YoPDqMU

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...