Skip to main content

அன்னை அமர்ந்திருந்த பீடம்

 மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான். 

எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.

 இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது. 

இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான். 



முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும். 

தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.



முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி நிறைய தகவல்கள். இந்திய கலை வரலாற்றில் அறுவகை தெய்வ வழிபாடு என்ற புத்தகத்தில் சக்தி வழிபாடு பற்றி வாசித்ததை திரும்ப எடுத்துப்பார்த்தேன். இந்த நிலத்தின் மாரியம்மனை ..கொல்லிப்பாவையை பற்றி உள்ள பகுதிகளை மறுபடி வாசித்தேன்.

ஆழ் மனதை திறக்கும் திறவு கோல் வரலாறு என்று சொல்லலாம்.

அன்னை அமர்ந்திருக்கும் பீடம் நம் ஆழ்மனம் இல்லையா...

விடிந்தும் இதழ் விரிக்காது மழையில் உறங்கிக்கொண்டிருக்கும் பூத்தளத்தில் ..காக்கை தன் சிறகுகளில் இருந்து சிதறடிக்கும் மழை துளிகளில்...ஐயாற்றின் புது நீராய் இருப்பதும் ..பயிர் உயிராவதும்..கருவின் நீராவதும்...அவள். நீரெல்லாம் கங்கை. 



Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...