Skip to main content

தும்பி அறியும் பெருங்காடு

 நான் செய்த நேர்காணல்களை 'தும்பி அறியும் பெருங்காடு  '   என்னும் நூலாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது. வாசகசாலை நண்பர்களுக்கு அன்பு. நூலிற்கு நான் எழுதிய என்னுரை.



எழுதியவர்களுடன் ஒரு உரையாடல்

நண்பர்களுக்கு…


இந்த நூலில் உள்ள நேர்காணல்களில் முதல் மூன்று நேர்காணல்கள் கொரானா உலகத்தொற்றின் இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. நேர்காணல்கள் புரவி அச்சிதழ், வாசகசாலை இணைய இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. இந்த நூலில் நேர்காணல்கள் வெளியான காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலும் நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்கள். இவை இரண்டாயிரமாவது ஆண்டிற்கு பின்னர் எழுதப்பட்ட படைப்புகள்.


2006ல் வெளியான கானல் நதியும், 2010ல் வெளியான துயிலும் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்கள்.


நீலகண்டம், பேய்ச்சி, கங்காபுரம் என்று மூன்று நாவல்களும் 2019ல் வெளிவந்துள்ளன. இந்த மூன்று நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்கள். தொன்மத்தையும், நாட்டார் தெய்வங்களையும், வரலாற்றையும், நவீன கால சிக்கல்களையும் பேசும் நாவல்கள்.


காயாம்பூ 2021லும் ஹரிலால் 2022லும் வெளிவந்துள்ளன. காயாம்பூ _ குழந்தையின்மை சிக்கலை தற்கால மருத்துவத்துறையுடனும் சமூகச் சூழலுடனும் அணுகுகிறது. ஹரிலால் _ தந்தை மகன் உறவின் நாவல். நீலகண்டமும் இந்த நாவல்களின் பேசுபொருளின் இன்னொரு கிளை.


துயில் _ நோய்மை மூலம் வாதைகளின் வழியே மெய்மையை தொட்டுப் பார்க்கும் நாவல். மனைமாட்சி _ மாறிவரும் காலகட்டத்தில் ஆண் பெண் உறவுகள் மற்றும் குடும்ப அமைப்பை பற்றிய நாவல். கானல் நதி இசைக் கலைஞனின் அலைகழிப்புகள் மற்றும் இசை என்ற கலை சார்ந்த நாவல்.


எழுத்தாளர் கா. சிவாவின் நேர்காணல் அவருடைய சிறுகதைகள் மற்றும் அவரை எழுத வைக்கும் தூண்டுதல்கள் பற்றிய பதில்களைக் கொண்டது.


இந்தப் படைப்புகளை கொரானா காலகட்டத்தில் தொடர்ந்து வாசித்தேன். படைப்புகளை மையமாகக் கொண்ட இந்த நேர்காணல்கள் படைப்புகளை மேலும் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும், படைப்பாளிகளையும் அவர்களின் பார்வையையும் நாம் தெரிந்து கொள்ள உதவும்.


பெரிய காட்டில் பறந்து திரியும் சிறு தும்பியின் நினைவிலிருக்கும் மழை நாட்களில் சுவைத்த தேன்துளிகளும், மழை நனைத்த காடும் போல இந்த புனைவுகளை வாசித்த நாட்களும் நேர்காணல்களைச் செய்த நாட்களும் இனிப்பானவை. அதே சமயம் தீவிரமானவை. 


நேர்காணல்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த படைப்பாளிக்களுக்கு அன்பு. நேர்காணல்களை வெளியிட்ட புரவி, வாசகசாலை, சொல்வனம் இதழ்களுக்கு நன்றி. தொகுப்பாக வெளியிடும் வாசகசாலை பதிப்பகத்திற்கு நன்றி.


இந்த நூலை எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 


இந்த நேரத்தில் சங்க காலத்திலிருந்து சம காலம் வரையுள்ள மூத்த படைப்பாளிகளை வணங்குகிறேன். இளைய படைப்பாளிகளுக்கு அன்பு. படைப்புகள் மீதுள்ள மாறாத பிரேமை இலக்கியத்தின் மீதான பிரேமையாகிறது. இலக்கியத்தின் மீதுள்ள பிரேமை வாழ்வின் தீர்ந்து போகாத பிரேமை. இந்தப் பிரேமையே வாழ்வை இனியதாக்குகிறது.

என் பெற்றோருக்கு அன்பும் வணக்கங்களும். அவர்களால் எழுதுகிறேன். எப்போதும் உடனிருக்கும் தங்கை நிவேதிதாவிற்கு அன்பு.

                                                                               அன்புடன்,

                                                                               கமலதேவி

                                                                               kamaladevisakyai@gmail.com

பா.மேட்டூர்

15/11/2025


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...