Skip to main content

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் சிறுகதை

      இந்தியாடுடே இலக்கியஆண்டுமலர் சிறுகதை 2            


              எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம்

பைத்தியக்காரப்பிள்ளை என்ற சிறுகதையை எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். இக்கட்டான காலக்கட்டங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள் நிறம் இழக்கின்றன. இந்தக்கதை வறுமையில் தாய் மகனின் உறவை விசாரிக்கிறது.



கும்பகோணத்தின் சௌராஷ்ரா தெருவின் நெருங்கிய குடியிருப்பு ஒன்றின் அதிகாலையில் கதை தொடங்குகிறது. நாலறை மணிக்கு எழுந்த ராஜம் சந்தடி செய்யாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு காபிகடைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா விழித்துவிடுகிறாள்.

அவன் எழுந்ததிலிருந்தே அம்மா மீதான சலிப்பில் ஏன் இப்படி இருக்கிறாள்? இவள் ஒரு அம்மாவா என்றே எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து பத்துபிள்ளகளை பெற்ற அம்மா. பத்தாவது பிள்ளை பிறந்ததும் குடித்தே இறந்து போகும் அப்பா.



எப்பொழுதும் பிள்ளைகளை திட்டவும் பேச்சால் அவமானப்படுத்தவுமாக வேலைவாங்கும் அம்மா. இந்தக்கதை வறுமை பீடித்த வாழ்வில் தாய்மகனின் அன்பை பரிசீலிப்பதாகவோ தாய்மை சார்ந்த கேள்வியை எழுப்புவதாகவோ கொள்ளலாம்.

கும்பகாணத்தின் சௌராஷ்ரா தெரு என்றதும் நமக்கு தி.ஜாவின் பாபுவின் யமுனா நினைவிற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. தி.ஜா காட்டாத கும்பகோணத்தின் மற்றொரு முகம். அதே மகாமகம் குளம். அதே மாதிரியான தற்கொலை எண்ணத்துடன் செல்லும் இளைஞன். இவன் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை அம்மா அவமரியாதையாக பேசிவிட்டதற்காகவும்,தன்னை தன்கடமை உணர்வை, பொறுப்புணர்வை உதாசீனம் செய்யும் அம்மாவை அழவைக்கவும் தன்னை மாய்த்துக்கொள்ளும் இளைஞனின் தற்கொலை செய்துகொள்ளும் அந்தநாள்தான் கதை. 



காலையில் எழுந்ததிலிருந்து மிக மெல்ல அவனின் மனஅழுத்தம் தொடங்கி வலுப்பெறுவதும்,அவன் அதை விலக்கி விலக்கி தவிர்க்க முயன்றும் பழையநினைவுகளும் சுயபச்சாதாபமும் இணைந்து அதை மூடுவதுமான போராட்டம் கதையில் கைக்கூடியுள்ளது. இறுதியில் தங்கையிடம் ஒருரூபாய் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் போதுதான் வாசிப்பவர்களுக்கே ஒருபதட்டம் ஏற்படும். இயல்பாக தோன்றும் தற்கொலை உணர்வு அனைவரும் எப்போதாவது கற்பனை செய்து பார்ப்பதுதான். 



அதிலிருந்து உண்மையான அதை நோக்கி மனம் செல்வதை கதை இயல்பாகத் தொடுகிறது. எண்பதுகளின் இளைஞர்கள் கதை. அதிலும் மூத்தஆண்பிள்ளைகளுக்கு அன்றிருந்த குடும்பபாரம். மேலும் அன்றிருந்த மனநிலை. மூத்தப்பிள்ளை என்றால் தந்தைக்குப்பிறகு பொறுப்பேற்க சமூகமும்குடும்பமும் அவர்களை தள்ளுகிறது அல்லது அதை ஒரு இன்றியமையா கடமையாக கட்டமைக்கிறது. அதை எதிர்கொள்பவர்களை இன்று புரிந்து கொள்வது கடினம். 

அந்தத் தலைமுறையின் எச்சங்களான முதியவர்களை இன்று காண்கிறேன். அவர்களின் வாழ்க்கை மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது. பிள்ளைகளிடமும் ஏச்சு,இளையவர்களும் எரிச்சலுமாக அவர்கள்அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்கள் 'லௌகிகத்தின் ஏமாளிகள்' என்று நான் சொல்வேன். இன்னும் மீறிசென்று அடுத்தத்தலைமுறை மிதித்தேறிய தோள்களைக் கொண்ட வலியவர்கள் என்றும் சொல்லலாம். பொதுவாக அந்தத்தலைமுறையின் இளம்வயதின் மனநிலையை காட்டும் இந்தக்கதை உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மனிதமனம் எதிர்பாராது தன்னை மாய்த்துக்கொள்ளும் உளநெருக்கடி என்றைக்கும் உள்ள மானுடசிக்கல் என்பதால் அதை எந்தமிகையும் இன்றி இந்தக்கதையில் வெளிப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...