Skip to main content

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் சிறுகதை

      இந்தியாடுடே இலக்கியஆண்டுமலர் சிறுகதை 2            


              எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம்

பைத்தியக்காரப்பிள்ளை என்ற சிறுகதையை எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். இக்கட்டான காலக்கட்டங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள் நிறம் இழக்கின்றன. இந்தக்கதை வறுமையில் தாய் மகனின் உறவை விசாரிக்கிறது.



கும்பகோணத்தின் சௌராஷ்ரா தெருவின் நெருங்கிய குடியிருப்பு ஒன்றின் அதிகாலையில் கதை தொடங்குகிறது. நாலறை மணிக்கு எழுந்த ராஜம் சந்தடி செய்யாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு காபிகடைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா விழித்துவிடுகிறாள்.

அவன் எழுந்ததிலிருந்தே அம்மா மீதான சலிப்பில் ஏன் இப்படி இருக்கிறாள்? இவள் ஒரு அம்மாவா என்றே எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து பத்துபிள்ளகளை பெற்ற அம்மா. பத்தாவது பிள்ளை பிறந்ததும் குடித்தே இறந்து போகும் அப்பா.



எப்பொழுதும் பிள்ளைகளை திட்டவும் பேச்சால் அவமானப்படுத்தவுமாக வேலைவாங்கும் அம்மா. இந்தக்கதை வறுமை பீடித்த வாழ்வில் தாய்மகனின் அன்பை பரிசீலிப்பதாகவோ தாய்மை சார்ந்த கேள்வியை எழுப்புவதாகவோ கொள்ளலாம்.

கும்பகாணத்தின் சௌராஷ்ரா தெரு என்றதும் நமக்கு தி.ஜாவின் பாபுவின் யமுனா நினைவிற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. தி.ஜா காட்டாத கும்பகோணத்தின் மற்றொரு முகம். அதே மகாமகம் குளம். அதே மாதிரியான தற்கொலை எண்ணத்துடன் செல்லும் இளைஞன். இவன் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை அம்மா அவமரியாதையாக பேசிவிட்டதற்காகவும்,தன்னை தன்கடமை உணர்வை, பொறுப்புணர்வை உதாசீனம் செய்யும் அம்மாவை அழவைக்கவும் தன்னை மாய்த்துக்கொள்ளும் இளைஞனின் தற்கொலை செய்துகொள்ளும் அந்தநாள்தான் கதை. 



காலையில் எழுந்ததிலிருந்து மிக மெல்ல அவனின் மனஅழுத்தம் தொடங்கி வலுப்பெறுவதும்,அவன் அதை விலக்கி விலக்கி தவிர்க்க முயன்றும் பழையநினைவுகளும் சுயபச்சாதாபமும் இணைந்து அதை மூடுவதுமான போராட்டம் கதையில் கைக்கூடியுள்ளது. இறுதியில் தங்கையிடம் ஒருரூபாய் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் போதுதான் வாசிப்பவர்களுக்கே ஒருபதட்டம் ஏற்படும். இயல்பாக தோன்றும் தற்கொலை உணர்வு அனைவரும் எப்போதாவது கற்பனை செய்து பார்ப்பதுதான். 



அதிலிருந்து உண்மையான அதை நோக்கி மனம் செல்வதை கதை இயல்பாகத் தொடுகிறது. எண்பதுகளின் இளைஞர்கள் கதை. அதிலும் மூத்தஆண்பிள்ளைகளுக்கு அன்றிருந்த குடும்பபாரம். மேலும் அன்றிருந்த மனநிலை. மூத்தப்பிள்ளை என்றால் தந்தைக்குப்பிறகு பொறுப்பேற்க சமூகமும்குடும்பமும் அவர்களை தள்ளுகிறது அல்லது அதை ஒரு இன்றியமையா கடமையாக கட்டமைக்கிறது. அதை எதிர்கொள்பவர்களை இன்று புரிந்து கொள்வது கடினம். 

அந்தத் தலைமுறையின் எச்சங்களான முதியவர்களை இன்று காண்கிறேன். அவர்களின் வாழ்க்கை மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது. பிள்ளைகளிடமும் ஏச்சு,இளையவர்களும் எரிச்சலுமாக அவர்கள்அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்கள் 'லௌகிகத்தின் ஏமாளிகள்' என்று நான் சொல்வேன். இன்னும் மீறிசென்று அடுத்தத்தலைமுறை மிதித்தேறிய தோள்களைக் கொண்ட வலியவர்கள் என்றும் சொல்லலாம். பொதுவாக அந்தத்தலைமுறையின் இளம்வயதின் மனநிலையை காட்டும் இந்தக்கதை உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மனிதமனம் எதிர்பாராது தன்னை மாய்த்துக்கொள்ளும் உளநெருக்கடி என்றைக்கும் உள்ள மானுடசிக்கல் என்பதால் அதை எந்தமிகையும் இன்றி இந்தக்கதையில் வெளிப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...