Skip to main content

2022 _ மீண்டும் மீண்டும்;1

                   மீண்டும் மீண்டும்

எப்போதும் ஒரு ஆண்டின் இறுதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப்பார்க்கும் போது புத்தகம் வாசித்தது தான் அந்த ஆண்டின் பொருள் உள்ள செயலாகத் தோன்றும். இந்த ஆண்டு என்ன வாசித்திருக்கறேன் என்பதும் , என்ன எழுதியிருக்கிறேன் என்பது முக்கியமானது. முன்பெல்லாம் டைரியின் பின்புறம் எழுதி வைப்பேன். இப்பொழுது அந்த நல்லப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மீண்டும் தொடங்க வேண்டும்.

எப்பொழுதும் போல வாசிக்காத ஒரு நாள் இல்லை என்பது நிறைவளிக்கிறது. எழுத்தாளர் அஜிதனின் முதல் நாவலான மைத்ரியை என் பிறந்தநாளன்று வாசித்தேன் என்பது சட்டென்று நினைவிற்கு வருகிறது. அன்றே நாவல் பற்றி பேரெழிலின் சங்கமங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது புரவி இதழில் வெளியாகியது. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் நாவல் வெளியான உடனே வாசிப்பது இது தான் முதல் முறை. அதுவே மனதிற்கு பரவசமாக இருந்தது. அதுவுமில்லாமல் அஜிதனை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்து நாவல் பற்றி பேசியதும் நிறைவளிக்கிறது. புத்தம் புதிதாக எழுதுபவர்களை பார்ப்பதே உற்சாகமளிக்கும் என்று அன்று உணர்ந்தேன். நான் சுனிலை,கார்த்திக்கை,அகரமுதல்வனை,விஷால் ராஜாவை,ஷங்கரை,சுரேஷ் ப்ரதீப்பை இன்னும் சில எழுத்தாளரகளை எப்படி முதன்முதலாக ஒரு புது எழுத்தாளராக பார்த்தேனோ அதே போல் தான் அஜிதனையும் பார்க்கிறேன். 

ஒரு இளைஞனை பின்புலத்துடன் பார்ப்பது என்பது அவன் திறமைகளையும் அவன் முயற்சிகளையும் பற்றி சரியாக புரிந்து கொள்ள உதவாது. நாம் எப்படி நம் சூழல்களை வெட்டிக்கொண்டு உலகின் முன் நிற்கிறோமோ அப்படித்தான் அவனையும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலத்தின் முன் எப்போதும் படைப்புகளினாலேயே ஒரு படைப்பாளி நிற்க முடியும் என்பதால் முதல் படைப்புடன் நம் முன்னால் வந்து நிற்கும் இளம் படைப்பாளிக்கு அவருக்குரிய கவனத்தை அளிக்க வேண்டும். நான் எழுத வந்த இரண்டு ஆண்டுகளில் வாசகசாலை என்னை கண்டு கொண்டு சிறுகதை தொகுப்பு கொண்டு வரலாம் என்று கேட்டதை நினைத்துக்கொள்கிறேன். நான் எழுத வந்த இந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு தொகுப்புகளை கொண்டு வர முடிந்தது அவர்களின் கவனத்தினால் தான்.

"சின்னப்பையனால இப்படி எழுத முடிஞ்சிருக்கேன்னுதான் வாசிச்சதும் மனசுல தோணுச்சு," என்று அஜிதனின் தோளில் கைவைத்து கூறியது இன்னும் காட்சியாக மனதில் இருக்கிறது. [நான் பெரும்பாலும் அண்ணன் தம்பி தங்கை அக்கா நண்பர்களிடம் பேசும்  போது ஒரு முறையாவது தோளில் தொட்டு பேசக்கூடிய ஆள். விஷ்ணுபுரம் விழாவில் அஜிதனிடமும் சக்திவேலிடமும் நான் இயல்பாக வெளிப்பட்டேன்] . அஜிதன்  நாவலில் கொண்டு வந்திருக்கும் அகத்தனிமையும், இயற்கையும் மிக முக்கியமானது என்று ஒரு வாசகியாக தயக்கம் இன்றி சொல்வேன்.

அடுத்ததாக எழுத்தாளர் வெண்ணிலாவின் கங்காபுரம்,எழுத்தாளர் கலைச்செல்வியின் ஹரிலால் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயாம்பூ மற்றும் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி போன்ற நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்களை செய்துள்ளேன். 

இதற்காக சொல்வனம் ஆசிரியர் மைத்ரேயன் மற்றும் வாசகசாலை கார்த்திகேயன் மற்றும் அருணிற்கு என் அன்பு. இவர்களிடம் நான் தயக்கமின்றி  அவர்களின் இதழில் என் நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளுக்கான இடத்தையும் சுதந்திரத்தையும் கேட்கவும் பெறவும் முடிகிறது. நான் வாசிக்கும் நாவல்கள் சிறுகதைகள் பற்றி எழுதி அனுப்புவதை இவர்கள் ஒருமுறை கூட மறுத்ததில்லை.

எழுத வந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான் நிறைய கட்டுரை முயற்சிகளை செய்திருக்கிறேன். வாசகசாலை இணைய இதழில் அகமும் புறமும் என்ற சங்கக்கவிதைகள் பற்றிய தொடரும்,புரவியில் மூத்தப்படைப்பாளிகளான கி.ரா மற்றும் அழகிரிசாமி நூற்றாண்டிற்காக எழுதும் வெந்ததழலால் வேகாது என்ற கட்டுரைத் தொடரும் இந்த ஆண்டில் முக்கியமானவை. 

நான் எழுதிய கட்டுரைகளில் அக்கமகா தேவியின் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரையை இந்த ஆண்டின் கட்டுரைகளில் முக்கியமானதாக நினைக்கிறேன்.

2022 ன் துவக்கத்தில் தமிழினி இலக்கிய இதழில் இந்த ஆண்டு தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். அது முடிந்திருக்கிறது.

அன்றாடத்தில் குடும்ப சூழலில், வாழ்வின் பின்னால் திரிபுரம் போல காலனின் இருப்பை உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. இலக்கியமே கைப்படித்துக் கொண்டிருக்கிறது. இலக்கியம் தந்த வாழ்விது. இல்லை என்றால் உழன்னு ஒன்றுமில்லாமல் போயிருக்கூடிய ஒரு எளியவளை இன்றுள்ள நானாக மாற்றியது இலக்கியமே.

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விழா  எனக்கு முக்கியமானது. நான் தனியள் இல்லை என்று உணர்ந்தேன். 


மூத்த எழுத்தாளர்களின் சொற்கள் எனக்கு முக்கியமானவை. அவர்களிடம் பேசியவற்றை மனதில் ஊறப்போட்டிருக்கிறேன். 

விஷால் ராஜாவின் சொற்கள் என்னை 'ஏன் சப்ரஸ் பண்ணி எழுதுகிறாய்' என்று கறாராக கேட்கிறது.

'என்னத்தை செய்யலாம்' என்றோ எதையும் செய்யலாம் என்றோ  ஆர்வத்துடன் நிற்கும் ரம்யா,தீவிரமாக இருக்கு சுனில்,கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் சாந்தமான நிதானம்,கார்த்திக் புகழேந்தியினுள் இருக்கும் துறு துறுப்பான சிறுவன் ,சுரேஷ் ப்ரதீப்பின் தீவிரம்,விக்னேஷ் ஹரிஹரனின் தேடல் என்று இன்னும் பலமுகங்கள் மனதில் கொந்தளிக்கின்றன.


அகரமுதல்வனின் அந்த கோபத்தின் வேகத்தின் பின்னால் இருக்கும் காலம் தொந்தரவு செய்கிறது. எனக்குப் பின் பிறந்தவர். எந்த விதமான வாழ்க்கை. எழுத்தாளரின் தனிவாழ்க்கை ஒரு புறம் இருக்கட்டும். எழுத்தாளனுக்கு தனி வாழ்க்கை மட்டுமா வாழ்க்கை. ஒரு சமூகத்தின் கேள்விகளை, அக அலைகழிப்புகளை, துயரங்களை, பாடுகளை நாம் உணர்வதாலேயே எழுதுகிறோம். அகரமுதல்வன் ஒரு போரை சுமக்கிறார். அது அத்தனை எளிதா என்ன?  தொந்தரவு பட்ட சமூகத்தின் ஆன்மாவை கண்முன்னால் காண்பது பதட்டமடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளன் எழுத்திற்கு அப்புறமும் நம்மை பாதிப்பதை, நாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

எழுத்தாளர் வெண்ணிலாவின் இருபத்தைந்து ஆண்டு கால இலக்கிய வாழ்க்கையும், தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறேன். வாசகிகளின் மலர்ந்த முகங்கள் கண்முன்னே வருகின்றன. விழாவில் சிறுமிகளைப் போல எந்த கவலையும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்த நடுவயது பெண்களின் முகங்கள் கண்முன்னே வருகி்ன்றன. இதற்காகவே இந்த விழா எப்போதும் நிகழவேண்டும்.

அழிசி  ஸ்ரீநிவாசனில் என்னை நான் பார்த்தேன். அதை எப்படி என்று சொல்ல முடியவில்லை. அவர் வயதில் அவர் இருந்த மனநிலையில் தான் நான் இருந்திருப்பேன் என்று உள்ளுணர்வு சொல்கிறது.


நான் சுணக்கம் கொண்டிருக்கும் பக்கத்தை ஜெ இருமுறை காட்டித்தந்தார். 'இவ்வளவு வாசிக்கறேன்னு சொல்றியே இவங்களை வாசிச்சியா நீ' என்று கேட்பது மாதிரி இருந்தது. இனிமேல் தொடர்ந்து பெண் படைப்பாளிகளை வாசிக்க வேண்டும். 

பொதுவாக மனிதர்கள் பற்றி எழுதும் உங்களை பற்றி ஆன்ட்டி  ஃபெமினிஸ்ட் என்ற கருத்து வந்தால் அதற்கு பதில் என்ன ? என்று கேட்பதன் வழியே என் எழுத்தைப்பற்றிய புரிதலுக்கான புள்ளியை வைத்திருக்கிறார். இதைத்தான் நான் இத்தனை கதைகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அறுபதிற்கும் மேற்பட்ட கதைகள்.

இது ஒரு நிறுத்தம் என்று தோன்றுகிறது. என்னைப்பற்றி நானே பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நேரம். என் இயல்புடன் நான் நகர வேண்டும்.



விழா முடிந்து வந்தப்பின் விழா நாயகர் சாருவுடன் இரண்டு நாள் அலைபேசியில் பேசினேன். பெரும்பாலும் நான் தான் பேசினேன். அவர் கேட்டார். சாருவிடம் நான் சொன்ன சொற்களுடன் முடிக்கிறேன்.

"நான் இங்க இருக்கனுங்கறதுக்கு...எனக்கான வேலை ஒன்னு இங்க இருக்கு. நிறைய வாசிக்கனும். நிறைய எழுதனும் சாரு" என்றேன்.

சாரு அவரின் அழுந்திய ஆழமான குரலில், " ம்ம்ம்ம்.."என்றார்.


[நினைவில் சட்டென்று பளிச்சிட்டதை எழுதியிருக்கிறேன். இனிமேல் ஆழத்தில் உள்ளவை மெதுவாக மேல்மனதிற்கு வரும். இதையே எழுதிக்கடத்தல் என்று சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது]

_தொடரலாம்


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...