'இமைகணத்தில்' ஒரு சம்பவத்தை கிட்டி [கிருஷ்ணவிகா] நடத்திவிட்டாள். அவளுடைய மூத்தகூட்டாளியான தனுஷ் ஆவணியாவட்டத்திற்காக பள்ளிக்கூடத்தை 'கட் ' அடித்துவிட்டு ஜாலியாக தங்கை பப்லுவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிட்டி நான்கு நாட்களுக்கு ஊருக்கு சென்று திரும்பியிருந்தாள். அவளைக் கண்டதும் ,"கிட்டு.."என்று அவன் ஓடி வரவும், இவள் அவனைக் அவனைக் கண்ட குஷியில் தாறுமாறாக என் முகத்தில் அடித்துக் குதித்தாள். நான்கு நாட்கள் பிரிவிற்கு இத்தனை வலிமை இருக்கும் என்று நினைக்கவில்லை. என் கண் கண்ணாடியின் சட்டம் உடைந்து கீழே விழுந்ததை கண்டுகொள்ளாமல் இரண்டும் குதித்து விளையாடத் தொடங்கியது. என் கண்கள் புகைமூட்டமாகி பார்வை கலங்க திகைத்து அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கூட கண்ணாடியில்லாது ஜீவிக்க முடியாத ஜீவன். மணி காலை பதினொன்று. இனி துறையூர் வரை செல்வது சாத்தியமில்லை. குழந்தைகளும் மூத்தவர்களுமாக குடும்பம் அப்படி. முதல் நாளே 'திட்டம்' போட வேண்டும்.
புதிதாக நடைபயின்ற குழந்தையும் ஊர்சுற்றும் பப்பியும் ஒன்று என்று பழமொழி உண்டு. [நாய் என்று சொல்ல மனம் துணியவில்லை]. நாள் முழுதும் நடந்து கொண்டே இருப்பது. காந்தி இப்போது இருந்தால் கண்டிப்பாக எதாவது ஒரு சத்தியா கிரக போராட்டம் தினமும் நடக்கும். இதுகளை நடக்க அனுப்பலாம். கிட்டி குட்டிநாய் போல வீடெங்கும் உச்சா அடித்து வைப்பாள். தன் நடை பயணத்தில் எங்காவது உச்சாவில் வழுக்கி விழுந்தால் அல்லது தட்டிக்கொண்டு விழுந்தால் உடனே அழமாட்டாள். மீண்டும் ஒன்றிரண்டு முறை வலிக்கும் இடத்தை, இடித்த இடித்தில் மீண்டும் இடித்துப் பார்த்துக்கொண்டு உச்சஸ்தாயில் அழுவாள்.
அவள் பின்னாலேயே நாமும் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். கண்ணாடி இல்லாமல் டைல்ஸ் தரையில் சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. இரு முறை விழுந்தப்பின் அவளே, "மமலா..உச்சா," என்று துடைக்கும் துணியை எடுத்துக்கொடுத்தாள்.
இது சரிவராது என்று பாபநாசம் கமல்ஹாசன் போல ஆயுதங்களை தேடத்தொடங்கினேன். பெட்டியில் ஒன்றும் சரியாகத்தெரியவில்லை. அலைபேசி ஔியில் கட்டுகம்பித்துண்டை தேடி எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். இப்போதுதான் கண்ணாடி வேலை எத்தனை சிரமம் என்று தெரிகிறது. கிட்டப்பார்வை சரியாக இருப்பதால் தப்பித்தேன். வெளியே பப்லு சத்தம் கேட்டது. அவளின் அம்மா வழி தாத்தா தான் ஊரின் கடைசி பொற்கொல்லர்.
2010 வரை தன் சின்னஞ்சிறு நகைபட்டறையை வைத்திருந்தார். கீழ்புறம் உடைக்கப்பட்டு கவிழ்த்த மண்பானை போன்ற அமைப்பில் தவிடு கொட்டப்பட்டு கங்கு கனன்றுகொண்டிருக்கும். சின்னஞ்சிறிய ஊதாந்தட்டையால் மெல்ல ஊதி கரியை கனியவைத்துக் கொண்டிருப்பார். சின்னஞ்சிறிய இடுக்கியை வைத்துக்கொண்டு உற்று பார்த்தபடி சிறிய நகைகளை அந்த இடுக்கியில் எடுத்து கங்கில் வைத்து வேலைபார்த்துக் கொண்டிருப்பார். பெரிய பெரிய நகைக்கடைகள் வந்து ஊர் பொற்கொல்லர்களின் தொழில் நசிந்த பிறகும் 2010 வரை தாலி மட்டுமாவது அவரிடம் செய்யும் வழக்கம் எங்கள் தெருவாசிகளுக்கு இருந்தது. அவர் பெயர் குப்பம்முத்துஆசாரியார். இறுதி பதினைந்து ஆண்டுகள் தளர்ந்த கொழுசுகளை வெட்டி ஒட்டித்தருவது,உடைந்த நகைகளை ஒட்டித்தருவது,திருமணத்தின் போது பழைய நகைகளுக்கு மெருகிட்டு தரும் வேலைகளையே பார்த்தார். அவர் நுணுக்கமான ஆசாரி என்று வயசாளிகள் சொல்வார்கள். எந்த மாதிரியான தோடு எந்த முகத்துக்கு எடுக்கும் என்று பெண்களின் முக அமைப்புக்கு ஏற்ற தோடுகளை செய்வாராம். அவர் செய்து தந்த சங்கிலிகள், இரட்டைவட சங்கிலிகள்,சரப்பொலிகள் போன்றவை இன்றும் கிழவிகளின் கழுத்துகளில் ஆடிக்கொண்டிருக்கின்றன. 'சோறு போட்டு கட்டை ஏத்தறவனுக்கு தான் இந்த சங்கிலி வடமெல்லாம்' என்று கிழவிகள் 'கெத்தாக' சொல்லிக்கொள்ளும். அப்போதெல்லாம் வாழ்நாளுக்கு ஒரு நகை தான். திருமணம் செய்யும் போது தகப்பனார் செய்து தரும் ஒரு ஜதை தோடும், மூக்குத்தியும் வாழ்நாள் முழுதும் காதில் மூக்கில் கிடக்கும். பி்ன் கட்டினவர் செய்து தரும் தாலியும் அதற்கு மேல் பாடுபட்டு முடிந்தால் ஒரு சங்கிலியோ இரட்டை வடமோ 'சாவு முதல்' என்று கழுத்தில் கிடக்கும். [சாவுமுதல் என்றால் ஒருவர் சாகும் போது செய்யும் செலவிற்கான தொகை]
கொல்லர் அல்லது கருமான் [இரும்பு வேலை]
பொன்னாசாரிகளுக்குப் [தட்டர்கள்]பிறகு தச்சாசாரிகளும் [தச்சர்கள்] தற்பொழுது பழுதுபார்க்கும் வேலைகளுக்கு வந்து விட்டார்கள். இடையில் ஊருக்கு வெளியே இருந்த இரும்பு கொல்லுப்பட்டறை [கொல்லர்கள்] 'களை' இழந்து அதன் ஒலி கேட்காமலாகியது. அந்த பட்டறையின் செந்தீ எப்போதோ லேத்துபட்டறைக் காரர்களால் அணைந்து விட்டது. பசும் வயல்களுக்கு நடுவில் ஒரு குடிசை வீட்டின் முன்பு அய்யாற்று பாசனவாய்க்கால் கரையில் இருந்தது அந்தக் கொல்லுப்பட்டறை. பள்ளி செல்லும் போது அங்கு சூடான இரும்பை வாய்க்காலில் போடும் ஸ்ஸ்ஸ் என்ற தீவிரமான சத்தத்தை கேட்கும். தண்மைக்கும் வெம்மைக்குமான ஒலி. படிப்படியாக வெம்மை தணியும் ஒலி. பெரிய கத்திகள் கொடுவாள்கள்,அரிவாள்,கடப்பாறை,கோடாரி,மாட்டு லாடங்கள்,களைவெட்டிகள்,மண்வெட்டிகள் செய்யும் ஒலிகளுடன் உலைத்தீ அணையாத களம் அது.
தச்சர்[மரவேலை]தச்சாசாரிகளின் உளிகளும்,கொல்லர்களின் இடுக்கியும் போல வாசிப்பவருக்கு இந்தக்கண்ணாடி.
குப்பமுத்து ஆசாரியார் கண்களை இடுக்கியபடி குனிந்து கங்குக்கு நடுவிலிருந்து இடுக்கியில் தங்க உருண்டையை எடுப்பதை பல முறை பார்த்திருக்கறேன்.
சங்கத்தலைவி இதை , " கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்"
[குறுந்தொகை] என்று சொல்கிறாள். அந்த தங்க வேப்பம்பழங்களை இனி வழியில் எங்கும் காணமுடியாது. கிளியின் கால்நகத்தில் பற்றியிருக்கும் வேப்பம்பழமானது ,பொற்கல்லர் பொன்நாணில் தாலி கோர்ப்பதை போல் உள்ளதாம். தலைவர் பொருளீட்ட செல்லும் வழியிலும் வேம்பு பழுத்திருக்கும் தானே தோழி? அதைக்கண்டாவது என் நினைவு வருமா என்று கேட்கிறாள்.
அந்த பொற்கொல்லர்களின் கருவிகளும் பானைகளும் எங்கோ கண்காணா இடத்திற்கு சென்று அமர்ந்துவிட்டன. நடராஜ் ஆசாரியார் தெருவில் அமர்ந்து சூரிய வெளிச்சத்தில் உடைந்த நாற்காலியை உற்றுப்பார்த்து சரி செய்து கொண்டிருக்கிறார்.
நுட்பமான தொழில் செய்து வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிள்ளைகள் இன்றைக்கு வெவ்வேறு வேலைகளுக்கு கூலிகளாக செல்கிறார்கள். இவர்கள் கரங்களில் இன்னும் இருக்குமா அந்த நுட்பம்? இருந்தாலும் நாளை பப்லுவிற்குள்ளிருந்து அது எப்படி வெளிப்படும். பப்புலுவின் முப்பாட்டனார் தேர் செய்வதற்காக எங்கள் ஊருக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டவர். அவர் மரச்சிற்பங்கள் செதுக்குவதில் வல்லவர் என்று அய்யா சொல்வார். இன்றும் இந்தப்பக்கம் தம்மப்பட்டி மரச்சிற்பங்கள் உலகளாவிய தரம் கொண்டவை. தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் மிகுந்த கலைநயமும், நுணுக்கமும், விலையும் கொண்டவை. ஆனால் கிராமங்களில் சுயமாக தனியாக தொழில் செய்தவர்கள் காலப்போக்கில் நசிந்துவிட்டார்கள்.
வாசிக்க முடியாத நாளில் சிறிய இழப்புணர்வு போல ஒன்று இருந்து கொண்டே இருக்கும். நானே கம்பி கட்டி பழுது பார்த்த கண்ணாடி எங்கேயோ பிசகி காண்பவற்றை கோணலாக்கியது. வேறு வழி இல்லை. அதற்கு ஈடுகொடுத்து பயன்படுத்தினேன். அடுத்த நாள் மருத்துவமனையில் மருத்துவர் சிரித்தபடி, "எப்படி சமாளிச்சீங்க,"என்றார். கண்ணில் விடப்பட்ட மருந்தால் கண் மேலும் மங்கியிருந்தது. நான் அவரை 'என்ன பண்றது சார்' என்று சொல்வதைப்போல பாவமாக ஒரு பார்வை பார்த்தேன்.
"எனக்கும் உங்க பவர் தான்..அடிஸ்னலா ஒரு ஸ்பெக்ஸ் வச்சிக்கோங்க," என்றார்.
எங்கே போவது அடிஸ்னலுக்கு? ஒரு கண்ணாடியே எட்டாயிரம் ரூபாய்க்கு முன்னூறு ரூபாய் குறைவு. 'ஒனக்கு கண்ணாடி வாங்கறதுக்கு நகையே வாங்கிறலாம்," என்று அம்மா பெருமூச்சு விடுவார்.
பொன் ஆசாரிகளிடம் 'கைஆடி' ஒன்று இருக்கும். நுணுக்கமான வேலைபாடுகளுக்கானது. வாசிப்பும், கண்ணும் அப்படித்தான்.
Comments
Post a Comment