Skip to main content

கிருபா விருது



இது எனக்கான முதல் விருது. எப்போதும் போல எதையும் ஏற்கும் முதல் தயக்கம் இதற்கும் இருந்தது. தமிழினி என்ற பெயர் தந்த நம்பிக்கையில் சரி என்று சொன்னேன். சென்னைக்கு இரண்டாவது முறையாக செல்கிறேன். என்னுடைய முதல் தொகுப்பான சக்யை வெளியீட்டு விழாவிற்கு முதல் முறை சென்றேன். அதே இக்சா மையம். இதுவரையான என்னுடைய ஐந்துபுத்தகங்களும் இங்கு தான் வெளியிடப்பட்டன. அந்த மையத்தின் வெளியில் கத்தரிக்கப்பட்டு நிற்கும் ஆலமரம் என் மனதிற்கு இனிய நினைவு. எங்கு நின்றாலும் அது பெருவிருட்சம். கன்னிமாரா நூலகமும் இந்த ஆலமரமும் ஏதோ ஒரு வகையில் தன் கீழ் அமர்ந்தவர்களை மேல் எழ செய்திருப்பவை. நானும் தங்கையும் தங்கையின் கணவர் குமார் மற்றும் சென்னையில் இருக்கும் உறவுக்காரத்தம்பி மோகனபாபுவும் சென்றோம். எழுத்தாளர் பெருமாள் முருகன் குமாரின் கல்லூரி பேராசிரியர். இருவருக்கும் இனிய ஒரு சந்திப்பு.

மனம் ஆழத்தில் இருந்ததால் கண்ணாடியில் இறுக்கமான என் முகம் எனக்கே அன்னியமாக இருந்தது. ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் எனக்குள்ளே காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. சென்னை மேலும் அந்தக்காட்களை தீவிரப்படுத்தியது. நான் அதை தள்ளிக்கொண்டு புறத்துடன் இணைய முயன்று கொண்டே இருந்தேன்.
இந்த விருது சினிமாக்காரர்களால் வழங்கப்படுகிறது. 



கிருபாவின் நண்பர்கள் இவர்கள். அவர்கள் என் கதைகளை வாசித்திருக்கவில்லை. இனி வாசிக்கிறேன் என்று சொன்னார்கள். என்னை இதற்குமுன் பெயராகக்கூட அவர்களுக்குத்தெரியாது. ஆனால் அவர்களுக்கு கிருபாவின் பெயரால் அளிக்கப்படும் விருதும் விருதுப்பணமும் சரியான எழுத்தாளருக்கு சென்று சேர வேண்டும் என்ற தீவிரம் இருந்தது. அந்தத் தேடலில் மூத்த எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களையும்,என்னையும் கண்டு கொண்டார்கள். 
சினிமாக்காரர்கள் எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள மதிப்பு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. முதலில் என்னுடன் பேசியதில் இருந்து இறுதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தது வரை அவர்கள் ஒவ்வொன்றிலும் மிக கவனமாக இருந்தார்கள். 



அந்தக்கூட்டத்தில் தேனிசீருடையான் அவர்களையும்,என்னையும் வாசித்தவர்கள் மிகக்குறைவு. ஆனால் எழுத்து என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. என்னுள் இருந்த தயக்கத்தை அவர்களின் நடவடிக்கைகளே சமனப்படுத்தின.
 சினிமாக்காரர்களின் இயல்புகளான பேச்சும் சிரிப்பும் விழாவில் இருந்தது. அவர்கள் எதையும் கொண்டாடவே நினைக்கிறார்கள். அதன் பின்னுள்ள மனஅழுத்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ப்ரான்சிஸ்ஸின் வாழ்க்கையும் முடிவும் அவர்களை வெகுவாக பாதித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களால் அதில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. 'கிருபாவின் பெயரால் எதாவது பண்ணனும்..'அது சரியான இடத்திற்கு  சென்று சேர வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.   அதன் மூலம் கிருபாவிற்கு எதையோ செய்ய முடிகிறது என்ற நிறைவை பார்க்க முயல்கிறார்கள்.


  [எழுத்தாளர் பெருமாள் முருகன் விருதை அளிக்கிறார். எனக்கு வலப்புறம் இயக்குநர் தமிழ் மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா]

 ஓவியர் ஷ்யாம் கிருபாவின் முகத்தை வரைந்த தருணம் நிகழ்வில் முக்கியமான ஒன்று.  
அதற்கு முன் 
இறப்பை கனவு காண்கிறோம்
பிறப்பை யாராவது கனவு கண்கிறோமா என்ற கிருபாவின் கவிதையை நாடகமாக நடித்தார்கள். 
ஷ்யாம் வரையும் போது ஒரு பிறப்பு நடந்ததாக நான் உணர்ந்தேன். இதன் நிகழ்வின் ஆன்மா இது தான். கவின் மலர் கிருபாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அழகிய பெரியவன் உரையாற்றினார். எழுத்தாளர் பெருமாள் முருகன் கிருபா பற்றியும் என் எழுத்துகள் பற்றியும் பேசினார். 


இவர்கள் அவரை எந்த வகையிலோ அவரை தங்களுடனே வைத்துக்கொள்ள விழைகிறார்கள். அவர் அவர்களுடன் இருக்கட்டும் என்றே நினைத்துக்கொள்கிறேன்.

வாசகசாலை அருணையும்,ஓலைசுவடி இணைய இதழின் ஆசிரியர் கி.ச திலீபனையும் சந்தித்தது இனிய தருணம்.




 

 




Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...