Skip to main content

Posts

மொட்டு மலர் அலர்

 [வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை] மொட்டு மலர் அலர் பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது.  நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என்  கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள். வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள். “உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,” “ம்,” “ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,” “முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”  பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள். வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநே...
Recent posts

அந்தராளம்

[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை] அந்தராளம் இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில்  நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது. மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவ...

பொய்த்தேவு [வாசிப்பனுபவம்]

               [ 2020 தில் பதாகை இணைய   இதழில் வெளியான வாசிப்பனுபவம்]   என்னதான் வேண்டும்! நாவல்:பொய்த்தேவு       ஆசிரியர்:க.நா.சுப்ரமணியம் பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.           கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு× சர்வமாணியஅக்ரஹாரம். தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியாக சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அது...

பிள்ளையார்

ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன்.  அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான். தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள்  பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள். இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள்...

உன்னிப்பூக்கள்

உச்சிப்பொழுதின் வெயிலில் வாய்க்கால் தண்ணீரின் பளபளப்பு. அம்மாச்சியின் ஊதாப்பூ சேலைக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தேன்... கண்கள் கூசிக்கொண்டே இருந்தது. மூன்று நாட்களாக எந்தநிமிஷத்திலும் விட்டு போய்விடுவாள் என்று தெரியும். வாய்க்காலிற்கு மேலே  களத்திலிருந்து குரல்கள்.. சேலையை அலசி கல்லில் வைத்துவிட்டு பெருமூச்சுடன் நின்றேன். கால்களை தழுவி நீர் ஓடியது. உன்னிப்பூ கொத்து காற்றிலாடி உசுப்பியது... இருட்டிலும் வெளிச்சத்திலும் பளபளக்கும் அம்மாச்சியின் பத்துக்கல் மூக்குத்தி போல.

உலராத கண்ணீர்

 [ 2025 ஜூலை கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்]                 [ கவிஞர் போகன் சங்கர்] கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித்தில்லை என்றாள் அவள் இங்கு பறவைகள் இருக்கின்றன என்றாள் நூற்றுக்கணக்கில் பிறகு  ஊழிவரும்வரை  உறங்க முடியாத தெய்வங்கள் ஆயிரக்கணக்கில் காலத்தில் உறைந்த விழிகளை மூட முடியாமல் பார்த்துக்கொண்டே இருக்கின்றன எப்போதும் எல்லாவற்றையும் என்று சிரித்தாள். அது வீசப்பட்டது போல பெருகி வெளியங்கும் நிறைந்தது அந்த சிரிப்பின் முடிவில் வைரம் போல் மின்னும் இரண்டு கூர்க் கொடும்பற்களை நான் ஒருகணம் பார்த்தேன் அஞ்சி ஓவென்று அலறினேன் அவள் வாய்மீது விரல் வைத்து அஞ்சாதே என்று புன்னகைத்த போழுது யாரோ எய்தது போல இளவெயில் நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி இறங்கி அவள் உதடுகள் மேல் அமர்ந்தது. நான் அது சிறகுகள் அசைய அசைய மது உண்பதைப் பார்த்தேன். அப்போது ஒரு புத்தனின் கண்கள் அவளிடம் இருந்தது அல்லது முலை கொடுக்கும் தாயின் கண்கள் ஆனால் ஒரு ஓவியத்தின்...

காட்சி...

  https://youtu.be/_YNIG1TKMdk?si=GqsGmIiSuEyU1LU9 இந்தப்பாடல் பதினோரு வயதிலிருந்து வெவ்வேறாக மனதில் நீங்காமல் உள்ளது. பதினோரு வயதில் பாடலில் வரும் காட்சிகள்  பிடித்தது. இப்போதும் காட்சிகள் தான் இந்தப்பாடலை திரும்ப பார்க்க வைக்கிறது. ஒரு Break தேவைப்படும் போது  இந்தப்பாடலின் காட்சிகள் சலிக்காதவை. இந்தப்பாடல் நான் ஐந்தாம் வகுப்பு முடித்து  புதுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது கேட்டப்பாடல். அப்போது தான் சன் டி.வி கனெக்ஷன் உப்பிலியபுரம் என்ற ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வீடுகளில் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் தூர்தர்ஷன் மட்டும். ட்யூஷன், பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த வீட்டு முற்றங்களில் நின்று கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்போம்.  ஒரு நாள் இரவு ட்யூஷன் முடிந்து அப்போது பிரபலமாக இருந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் பார்த்த பாடல் இது. அய்யா ட்யூஷன் ஹாலை பூட்டிவிட்டு சைக்கிளில் வருவார். வீட்டிற்கு நான்கு தெருக்கள் நடக்க வேண்டும். பாடல் முடிந்ததும் வழியெல்லாம் வானத்தை நிலாவை பார்த்துக்கொண்டு தனி...