Skip to main content

Posts

உடன்போக்கு சிறுகதையின் மொழியாக்கம்

  என்னுடைய உடன்போக்கு என்ற சிறுகதை  மொழிபெயர்ப்பாளர் சஹாவால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள முதல்கதை. கதைக்கான சுட்டி https://vishnupuramusa.org/2025/11/28/elopement/
Recent posts

மலர்வு

 ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார்.  யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கையை கொஞ்சம் மாற்றினாலும் சட்டென்று அய்யாவை  பிடித்து...

அகத்தின் வெளிச்சம்

ஒரு வாரம் போல மழை. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நேற்று வரை அடை மழை. பக்கத்துவீட்டு அம்மா யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்தால் 'வானம் நெனைச்சு நெனச்சு பெய்யுது' என்று வைதுகொண்டிருந்தார். வயல் வேலை எதாவது இருக்கும்.  மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள்.  திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல.  ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்...

அன்னை அமர்ந்திருந்த பீடம்

 மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான்.  எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.  இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது.  இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான்.  முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும்.  தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்...

விளையாட்டு

  கலைத்து விளையாட ஒரு கோலம் கூட இல்லை. துரத்தித்தியோட யாருமில்லை. தலைகொடுத்து மரங்களும் செடிகளும் தேமே என்று நிற்க.. தனியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது மழை.

ஔியை மறந்து விட்ட பயிர்

 காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல.  ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான்.  புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது. நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.  பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்....

இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம். அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன். இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்...