Skip to main content

சக்யை

 ‘சக்யை’ என்னுடைய முதல் தாெகுப்பு. ஜனவரி 2019 ல் வெளியாகியது. மூன்றாவது தொகுப்பான 'கடுவழித்துணை' க்கு பிறகு முதல்தாெகுப்பிற்கு முகமறியா வாசகியின் பகிர்வை காண்பது நிறைவளிக்கிறது. கோமதிக்கு என் அன்பு.



சிறுகதைத் தொகுப்பு


ஆசிரியர் : கமலதேவி


‘வாசக சாலை’  வெளியீடு



கமலதேவி அவர்களின் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பூடகம் பேசுபவை. நேரடியாகக் கதை சொல்லலைப் பின்பற்றியவை ஆனாலும் ஆழமான வாசிப்பை வேண்டுபவை.

பாய்ச்சல் நடையில் மொழி கதைகளில் ஓடுகிறது.. பெரும்பாலான தருணங்களில் இந்தத் தாவிப் பாய்ந்து கதை சொல்லும் தன்மையால் கதைப் போக்கினில் நாம் தடுமாறிக் கொண்டு சமநிலைக்கு வருவதற்காக மீண்டும் கடந்து போன வாக்கியங்களுக்கு வந்து விரும்ப வேண்டியுள்ளது..


கதாசிரியருக்குத் தமிழ்த் தொல்லிலக்கியங்களில் ஆழ்ந்த புரிதலும் பழக்கமும் இருப்பது அவரது மரபுசார் சொல்லாடல்களில் வெளிப்படுகிறது..


எழுத்தாளர் சிறந்த கதைசொல்லி என்பதற்கு கதைக் களங்களும் கருக்களும் கட்டியம் உரைக்கின்றன.

கதாசிரியரே முன்னுரைப்பது போல¸’ அவரைப் பாதித்த மனிதர்களின் கதைகள்.. அவற்றை நிகழ்வென்றும் புனைவென்றும் அடையாளப் படுத்தலாகும்’. ஆம்..நிகழ்புனைவுகள்…


கமலதேவி சித்தரிக்கும் பெண்கள் அலாதியான துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் நடை பயிலுகிறார்கள்.. தொகுப்பிலுள்ள 16 கதைகளில் சில பற்றி…


ஜென்சி டீச்சர் (நெடுஞ்சாலைப் பறவை) நீர் ஒட்டாத தாமரை இலையாய் துறவற்ற துறவியாய் பணிமுடித்து ‘எத்தனை பேரையோ கைதூக்கிவிட்டு’ திருப்தியுடன் நகர்கிறாள்..அடுத்த என்ன என்ற கேள்வியை அவள் வலுவாகப் பின்தள்ளினாலும் அது முன்வந்து உறுத்துகிறது..


“முழுசாச் செய்யணும்னா தனியாத்தான் இருக்கணும்”¸ ஜென்சி டீச்சரைப் போல…


பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரை விட்டேற்றியாக எதிர்கொள்ளும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் மிளிரும் மிகத் தேர்ந்த பாத்திர வார்ப்பு கார்த்தி (உள்புண்).. 

மதிப்பு மிகுந்த அரசு அதிகாரிப் பணியை கல்யாணப் பந்தலில் உதறிவிடுவதற்கில்லை என்பதைக் குறிப்பாலும் சொல்லாலும் உணர்த்திவிடும் பாங்கு அற்புதம்..ஆனாலும் பார்க்கவந்த பிள்ளை சலனத்தைக் கிளப்புவதை புறந்தள்ளிப் பார்க்கிறாள்..


அன்னை தந்தை இருந்தும் அவள்¸ “ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி”


வெள்ளையம்மாள் (சக்யை) 15 ஆம் நூற்றாண்டுப் பெண்மணி;..முஸ்லிம் படையெடுப்பில் தப்பிக்க திருவரங்கன் ஒளிந்து உலாப் போய்விட¸ திருவரங்கம் சின்னாபின்னமாகித் தவிக்கிறது..அரங்கன் போன இடம் அறிய தொடர்ந்து முஸ்லிம் தளபதியின் தாக்குதல்கள்..வெள்ளையம்மாள் தன் அழகால் நளினத்தால் பெண்மையின் ‘சக்யை’யால் (சாதுரியத்தால்) தளபதியைக் கேபாபுரத்திலிருந்து தள்ளிவிட்டுத் தானும் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டு திருவரங்கத்தை காப்பாற்றுகிறாள்…


‘அரங்கனின் சேவகி விண்ணேகினால் கிடைக்கும் மடப்பள்ளி நெருப்பும் துளசிமாலையும் அவளுக்குக் கிடைத்தன.’ அது மட்டுமா..அரங்கனின் கிழக்குக் கோபுரம் அவள் பெயரைத் தாங்கி ‘வெள்ளைக் கோபுர’மாய் நிற்கிறதல்லவா…


வீட்டு வாயிற்படியில் கழுத்தறுபட்டு கிடக்கும் ரேவதியும் (தெருவெங்கும் அவள் நடமாட்டம்)அவள் சடலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மனச்சிதைவுக்குள்ளாகி மரணமுறும் வேம்பும் துணிச்சலோடு துயரத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்..


சங்கரியும் சாந்தினியும் (நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று) அப்புறம் சாந்தினியின் கணவன் ராஜுவும் ஓருவர் பின் ஒருவராய் கதை சொல்லி கடைசியாக கதாசிரியரே வந்து கதையை முடிக்கும் கதை நடை அழகு.. இந்த நடையை விளங்கிக் கொள்ள கொஞ்சம் ஆரம்பத்தில் தடுமாறினேன் என்பதையும் சொல்லவேண்டும்... இது சாந்தினி  கதையா.. ராஜுவின் கதையா.. ஆனால் தொகுப்பிலுள்ள நல்ல கதை...சாந்தினி கணவனைப் பிரியும் முடிவில் கதை தொடங்கி விடுகிறது... கதை முடியும் போது இவர்கள் சேர்ந்து வாழ்வதே சரி எனப் பட்டது..

'ராஜு அன்பானவர்' - சங்கரி

'ரொம்ப... அது மட்டும் போதுமா' - சாந்தினி

'ஆளோடு ஆளா இருக்கையில் என்ன பயம்..? - ராஜு 


மெய்யாயி அம்மாயி ( செங்காந்தளின் ஒற்றை இதழ்) தாண்டவன் பெரியப்பா வீட்டைத் துறந்து போனபின்னும் நம்பிக்கையை கைவிடாத மனுஷி...


' என்ன பண்ணினாலும் ரெண்டு பொழுதுல புல் எட்டிப் பாத்துராது..?'


'புல்லு பூக்குது பாரு.. நல்ல பட்டம்.. விதைக்குறதெல்லாம் தப்பாம முளைக்கும்..'



கமலதேவியின் ஆண்கள் மட்டுமென்ன.. அவர்களும் தாமரையிலைத் தண்ணீர்தான்.. ஒட்டாமல்தான் இருக்கிறார்கள்..

யது (இப்படிக்கு) யாருக்கும் தொந்தரவில்லாத வாழ்தலை நன்கு தீர்மானித்துக் கொண்டவன்.. 


இலங்கை அரசன் இராவணன் (சிதை) கூட எரிந்து போன இலங்கை நகரின் சாம்பல் நாற்றத்தில் சாம்பாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்வதை மொழி அழகுடன் சொல்கிறார் கமலதேவி…


நிதான வாசிப்பைக் கோரும் கதைகள்..நிகழ்வுகளைக் கடத்தும் கவித்துவமான உரையாடல்களோடு கூடிய நல்லதொரு தொகுப்பு...


   -Gomathisankar Gosar


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...