சின்னஞ்சிறு கதிர்கள்
வெயில் பறந்தது என்ற தலைப்பை பார்த்ததும்,வெவ்வேறு அதிகாலைகளின் நிறத்திட்டுக்கள் நினைவிற்கு வந்தன. அங்கங்கே ஔியாக எழுந்து பறக்கும் வெயில்.
மதாரின் கவிதைகள் ஒருகாட்சி அல்லது நிகழ்ச்சியை காட்டி, அதுநீளும் கவிமனதின் வேறொரு தளத்தை சொல்கிறது. புறமாக நிகழ்வது அனைவருக்கும் அகத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா. அந்தவகையில் இந்தக்கவிதைகள் ஒருகாட்சியின் வழக்கமில்லாத இன்னொரு சாத்தியத்தை காட்டுவதால் வாசிக்கும் தோறும் புன்னகை எழுகிறது.
வாசல் தெளிப்பவள்
மழையாக்குகிறாள் நீரை ....
என்று தொடங்கும் கவிதையை மதாரின் கவிதைகளின் பாவனையாக கொள்ளலாம். கைநீரை மழையாக்கும் கரங்கள்.
முகமறியா காற்றில்
என்ன அழகைக்கண்டு
இப்படிக் கொஞ்சிக் கொஞ்சி பறக்கிறது
வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சியின் அழகை கண்டு, பேசி அதை எழுதியது போக, அது இத்தனை அழகாக இருக்க வேண்டுமென்றால் அதுகாணும் அழகென்ன? என்று கவிதை கேட்கிறது. வண்ணத்துப்பூச்சிக்கு உலகே வண்ணமயமாக இருக்கலாம் என்ற சாத்தியம் உலகையே ஒரு ஓவியப்பலகையின் வண்ணங்களாக்குறது.
கூப்பிய கரங்களில் மன்றாட எதுவுமில்லை...
கடந்து செல்லும் காற்றை உணரும் எடையற்ற தருணமாக கவிதை உருமாறுகிறது.
அழகிய காட்சியாக நின்று கவிதையாகும் வரிகள்.
சருகின் நிழல்
தரையில் விழும்
காற்றின் நிழலென
யார் கண்டார்?
எடையில்லை என்று நினைத்த மதாரின் கவிதைகளில் தனித்த ஒன்று.
துக்கம் ஒரு பரிசுபொருள்
நெடுநாள் என் மேசையில் கிடக்கிறது...
ஒவ்வொரு நாளும் அதைப்பிரிக்கிறேன்....................
.....
அதன்தொனி மௌனம்.
'ஔி' எழுதும் அனைவராலும் ஒருவித மோகத்துடன் பயன்படுத்தப்படும் படிமம். எடையேறிக் கிடக்கும் படிமங்களில் முக்கியமானது. நிறைய குழந்தைகளால் விளையாடப்பட்ட அழகிய உறுதியான பொம்மை என்பதால் விளையாடிய அனைத்து கைரேகைளும் பதிந்தது. ஆனால் மதாரின் கவிதையில் நேரடியாக ,எந்தகாரணமும் இன்றி ஔியாகவே மீண்டு, அதன் மீது ஏற்றப்பட்டுள்ள அனைத்தையும் இறக்கி ஔியை ஔி ஆக்குகிறது.
எந்தக்காரணமும் இல்லாமல்
ஒரு தீக்குச்சியை கொளுத்து
அதன் பெயர்தான் 'ஔி'
பலூன் கவிதைகள் தொகுப்பில் உள்ளன. வளர்ந்தவர்களில் உள்ள குழந்தையை காப்பாற்றி வைப்பதில் பலூனிற்கு முக்கிய பங்குண்டு.
பெண்ணான எனக்கு சன்னலில் தெரியும் வானம் ஒரே சமயத்தில் விரிந்த பரவசமாகவும், செவ்வக குறுகலாகவும் ஆகும். அதிலிருக்கும் செவ்வகத்தை அழிக்கும் இந்தக்கவிதை எனக்கு வாசித்ததிலிருந்து சன்னல், கதவு, இரவு, பகல், மதியம்,சாயுங்கால வேளைகளில் பரவசத்தைத் தருகிறது. கவிதை இப்படி உடனிருக்க வேண்டும் என்று நினைப்பேன். மதாரின் இந்தக்கவிதை எப்போதும் உடன் இருக்கும்.
சன்னலைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சரியம்
ஆகாசத்தின் கதவா
என் எளிய ஜன்னல்.
குழந்தைக்கு பெரிய பொருட்களை விட கையடக்கமாக தன் உள்ளங்கைகளில் ஔித்துகொள்ள வசதியான பொருட்கள் மீது பெரும் மோகம் உண்டு. சில நேரங்களில் வாசகரும் அப்படிதான். இந்தக்கவிதைகள் அதன் எளிமையால் ,எடையற்ற தன்மையால் ,அளவால், பட்டம் போல அதுநீளும் தொலைவால் மனதிற்கு நெருக்கமாகின்றன.
கவிஞர்கள் கொஞ்சமாக எழுத வேண்டும் என்று மறைமுக விதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் மதார் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். கடலென்பதால் கடல் ஒன்றும் தன் புதுமையை, கம்பீரத்தை, அழகை,அலைகளை இழப்பதில்லை.
முதல் தொகுப்பிற்காக கவிஞர் மதார் க்கு வாழ்த்துக்கள். இனிய துவக்கம்.
Comments
Post a Comment