Skip to main content

வெயில் பறந்தது

                    சின்னஞ்சிறு கதிர்கள்

வெயில் பறந்தது என்ற தலைப்பை பார்த்ததும்,வெவ்வேறு அதிகாலைகளின் நிறத்திட்டுக்கள் நினைவிற்கு வந்தன. அங்கங்கே ஔியாக எழுந்து பறக்கும் வெயில்.

கவிஞர் மதார் 

மதாரின் கவிதைகள் ஒருகாட்சி அல்லது நிகழ்ச்சியை காட்டி, அதுநீளும் கவிமனதின் வேறொரு தளத்தை சொல்கிறது. புறமாக நிகழ்வது அனைவருக்கும் அகத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா. அந்தவகையில் இந்தக்கவிதைகள் ஒருகாட்சியின் வழக்கமில்லாத இன்னொரு சாத்தியத்தை காட்டுவதால் வாசிக்கும் தோறும் புன்னகை எழுகிறது.

வாசல் தெளிப்பவள்

மழையாக்குகிறாள் நீரை ....

என்று தொடங்கும் கவிதையை மதாரின் கவிதைகளின் பாவனையாக கொள்ளலாம். கைநீரை மழையாக்கும் கரங்கள்.

முகமறியா காற்றில்

என்ன அழகைக்கண்டு

இப்படிக் கொஞ்சிக் கொஞ்சி பறக்கிறது

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியின் அழகை கண்டு, பேசி அதை எழுதியது போக, அது இத்தனை அழகாக இருக்க வேண்டுமென்றால் அதுகாணும் அழகென்ன? என்று கவிதை கேட்கிறது. வண்ணத்துப்பூச்சிக்கு உலகே வண்ணமயமாக இருக்கலாம் என்ற சாத்தியம் உலகையே ஒரு ஓவியப்பலகையின் வண்ணங்களாக்குறது.


கூப்பிய கரங்களில் மன்றாட எதுவுமில்லை...

கடந்து செல்லும் காற்றை உணரும் எடையற்ற தருணமாக கவிதை உருமாறுகிறது.


அழகிய காட்சியாக நின்று கவிதையாகும் வரிகள்.

சருகின் நிழல்

தரையில் விழும்

காற்றின் நிழலென

யார் கண்டார்?


எடையில்லை என்று நினைத்த மதாரின் கவிதைகளில் தனித்த ஒன்று.

துக்கம் ஒரு பரிசுபொருள்

நெடுநாள் என் மேசையில் கிடக்கிறது...

ஒவ்வொரு நாளும் அதைப்பிரிக்கிறேன்....................

.....

அதன்தொனி மௌனம்.


'ஔி' எழுதும் அனைவராலும் ஒருவித மோகத்துடன் பயன்படுத்தப்படும் படிமம். எடையேறிக் கிடக்கும் படிமங்களில் முக்கியமானது. நிறைய குழந்தைகளால் விளையாடப்பட்ட அழகிய உறுதியான பொம்மை என்பதால் விளையாடிய அனைத்து கைரேகைளும் பதிந்தது. ஆனால் மதாரின் கவிதையில் நேரடியாக ,எந்தகாரணமும் இன்றி ஔியாகவே மீண்டு, அதன் மீது ஏற்றப்பட்டுள்ள அனைத்தையும் இறக்கி ஔியை ஔி ஆக்குகிறது.

எந்தக்காரணமும் இல்லாமல்

ஒரு தீக்குச்சியை கொளுத்து

அதன் பெயர்தான் 'ஔி'

பலூன் கவிதைகள் தொகுப்பில் உள்ளன. வளர்ந்தவர்களில் உள்ள குழந்தையை காப்பாற்றி வைப்பதில் பலூனிற்கு முக்கிய பங்குண்டு.

பெண்ணான எனக்கு சன்னலில் தெரியும் வானம் ஒரே சமயத்தில் விரிந்த பரவசமாகவும், செவ்வக குறுகலாகவும் ஆகும். அதிலிருக்கும் செவ்வகத்தை அழிக்கும் இந்தக்கவிதை எனக்கு வாசித்ததிலிருந்து சன்னல், கதவு, இரவு, பகல், மதியம்,சாயுங்கால வேளைகளில் பரவசத்தைத் தருகிறது. கவிதை இப்படி உடனிருக்க வேண்டும் என்று நினைப்பேன். மதாரின் இந்தக்கவிதை எப்போதும் உடன் இருக்கும்.

சன்னலைத் திறந்ததும்

ஒரு பெரும் ஆச்சரியம்

ஆகாசத்தின் கதவா

என் எளிய ஜன்னல்.

குழந்தைக்கு பெரிய பொருட்களை விட கையடக்கமாக தன் உள்ளங்கைகளில் ஔித்துகொள்ள வசதியான பொருட்கள் மீது பெரும் மோகம் உண்டு. சில நேரங்களில் வாசகரும் அப்படிதான். இந்தக்கவிதைகள் அதன் எளிமையால் ,எடையற்ற தன்மையால் ,அளவால், பட்டம் போல அதுநீளும் தொலைவால் மனதிற்கு நெருக்கமாகின்றன.



கவிஞர்கள் கொஞ்சமாக எழுத வேண்டும் என்று மறைமுக விதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் மதார் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். கடலென்பதால் கடல் ஒன்றும் தன் புதுமையை, கம்பீரத்தை, அழகை,அலைகளை இழப்பதில்லை.

முதல் தொகுப்பிற்காக கவிஞர் மதார் க்கு வாழ்த்துக்கள். இனிய துவக்கம்.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...