Skip to main content

அணி நிழற்காடு

              மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் இந்தக்கட்டுரை மனதை சஞ்சலமாக்குகிறது. 


கட்டுரைக்கான சுட்டி:

http://vallinam.com.my/navin/?p=5673


அணி நிழற்காடு



உலகம் முழுவதுமே இது போன்ற அழித்தல்கள்  நடைபெறுகின்றன. ஒருமுறையேனும் தன்னை சுற்றியுள்ள இயற்கை அழிக்கப்படுவதை பார்த்தவர்களுக்கு இந்த பதட்டம் புரியும். நேசித்த ஒரு மரம் வெட்டப்படுவதை, புயலில் அடியோடு சாய்வதை கண்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். எங்கோ நடப்பதல்ல இது. என்னென்னவோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கண்ட மரங்கள் ஒரு நாளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.

மனிதனால் காட்டிற்குள் இருக்க முடியாமல் தான் வீடுகட்டிக்கொண்டான். நமக்கு காட்டினுள் நிற்க, அங்கே போராடி வாழ முடியவில்லை. அதிலிருந்து பாதுகாப்பு சுவரை உண்டாக்கிக் கொண்டோம். அதனுள் ஔிந்து கொள்வது நமக்கு நிம்மதி. ஆனால் நம் மனம் காட்டை விழைவது. அதனால் மீண்டும் அதை நோக்கி சென்று.. சென்று...  திரும்பி வருகிறோம்.

அதையும் வேவ்வேறு காரணங்களை முன் வைத்து அழிப்பது எந்த வகையில் அறம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் இயற்கையின் ஒரு சிறு அங்கம். இயற்கை என்பது நமக்காக, நம் பயன்பாட்டிற்கானது மட்டுமல்ல. 

இது போன்ற அலையாத்தி காடுகளை ஏன் அழிக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்திருந்தால் அந்த முயற்சி முளையிலேயே மறைந்திருக்கும். தேவை என்ன என்பதில் தெளிவு இருந்திருக்கலாம்.

வாழ இடமே இல்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

உணவிற்காக விவசாயம் செய்ய நிலமில்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

ஒரு உயிர் சூழல் என்பது அத்தனை எளிதான ஒன்றாக நமக்கு ஆகிவிட்டதா?

 ஒரு காட்டை அழிப்பது என்பது காட்டை அழிப்பது மட்டும் தானா? 

நாம் சுற்றிப்பார்க்க, பொழுது செலவு செய்வதற்காக ஒரு உயிர்சூழலை அழிக்க வேண்டுமா? 

பின்விளைவுகள் பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் இயற்கையை அழிக்கும் முடிவுகளை எடுக்கலாமா?

வள்ளுவர் ஒரு நாட்டின் அரண் என்ன என்று இப்படிக்கூறுகிறார்.


'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்'


பொருள்: மணி போல தெளிந்த நீரும்,வெட்ட வெளியான நிலமும்,மலையும்,அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண்.

இந்த அலையாத்திக்காடுகளை இப்படியே அதன் இயல்பு மாறாமல் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அவசியம் பன்முகம் கொண்டது. நாட்டின் பாதுகாப்பு,காட்டில் உள்ள அலையாத்தி மரங்கள் அந்த இடத்திற்கு தரும் பாதுகாப்பு,அது தரும் உயிர் வளி என்று பலகாரணங்கள்.

ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் பாதையை,சின்னஞ்சிறு மின்மினிகள் ஔிர்ந்து உலவும் அவற்றின் வாழ்விடத்தை 'நாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்' எந்தவித அறமும் இன்றி எடுத்துக்கொள்ளலாமா? அப்படி  எடுத்துக்கொள்வதற்கு பெயர் என்ன?

 அந்த மரங்களும்,மின்மினிகளும்,சிற்றுயிர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழப்பிறந்தவை. அவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதை பற்றிய குற்ற உணர்வோ,அறமோ,மனசான்றோ அல்லது அவற்றின் மீதான சிறிய அளவிலான அன்போ அவற்றை காக்கட்டும்.







Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...