Skip to main content

அணி நிழற்காடு

              மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் இந்தக்கட்டுரை மனதை சஞ்சலமாக்குகிறது. 


கட்டுரைக்கான சுட்டி:

http://vallinam.com.my/navin/?p=5673


அணி நிழற்காடு



உலகம் முழுவதுமே இது போன்ற அழித்தல்கள்  நடைபெறுகின்றன. ஒருமுறையேனும் தன்னை சுற்றியுள்ள இயற்கை அழிக்கப்படுவதை பார்த்தவர்களுக்கு இந்த பதட்டம் புரியும். நேசித்த ஒரு மரம் வெட்டப்படுவதை, புயலில் அடியோடு சாய்வதை கண்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். எங்கோ நடப்பதல்ல இது. என்னென்னவோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கண்ட மரங்கள் ஒரு நாளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.

மனிதனால் காட்டிற்குள் இருக்க முடியாமல் தான் வீடுகட்டிக்கொண்டான். நமக்கு காட்டினுள் நிற்க, அங்கே போராடி வாழ முடியவில்லை. அதிலிருந்து பாதுகாப்பு சுவரை உண்டாக்கிக் கொண்டோம். அதனுள் ஔிந்து கொள்வது நமக்கு நிம்மதி. ஆனால் நம் மனம் காட்டை விழைவது. அதனால் மீண்டும் அதை நோக்கி சென்று.. சென்று...  திரும்பி வருகிறோம்.

அதையும் வேவ்வேறு காரணங்களை முன் வைத்து அழிப்பது எந்த வகையில் அறம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் இயற்கையின் ஒரு சிறு அங்கம். இயற்கை என்பது நமக்காக, நம் பயன்பாட்டிற்கானது மட்டுமல்ல. 

இது போன்ற அலையாத்தி காடுகளை ஏன் அழிக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்திருந்தால் அந்த முயற்சி முளையிலேயே மறைந்திருக்கும். தேவை என்ன என்பதில் தெளிவு இருந்திருக்கலாம்.

வாழ இடமே இல்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

உணவிற்காக விவசாயம் செய்ய நிலமில்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

ஒரு உயிர் சூழல் என்பது அத்தனை எளிதான ஒன்றாக நமக்கு ஆகிவிட்டதா?

 ஒரு காட்டை அழிப்பது என்பது காட்டை அழிப்பது மட்டும் தானா? 

நாம் சுற்றிப்பார்க்க, பொழுது செலவு செய்வதற்காக ஒரு உயிர்சூழலை அழிக்க வேண்டுமா? 

பின்விளைவுகள் பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் இயற்கையை அழிக்கும் முடிவுகளை எடுக்கலாமா?

வள்ளுவர் ஒரு நாட்டின் அரண் என்ன என்று இப்படிக்கூறுகிறார்.


'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்'


பொருள்: மணி போல தெளிந்த நீரும்,வெட்ட வெளியான நிலமும்,மலையும்,அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண்.

இந்த அலையாத்திக்காடுகளை இப்படியே அதன் இயல்பு மாறாமல் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அவசியம் பன்முகம் கொண்டது. நாட்டின் பாதுகாப்பு,காட்டில் உள்ள அலையாத்தி மரங்கள் அந்த இடத்திற்கு தரும் பாதுகாப்பு,அது தரும் உயிர் வளி என்று பலகாரணங்கள்.

ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் பாதையை,சின்னஞ்சிறு மின்மினிகள் ஔிர்ந்து உலவும் அவற்றின் வாழ்விடத்தை 'நாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்' எந்தவித அறமும் இன்றி எடுத்துக்கொள்ளலாமா? அப்படி  எடுத்துக்கொள்வதற்கு பெயர் என்ன?

 அந்த மரங்களும்,மின்மினிகளும்,சிற்றுயிர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழப்பிறந்தவை. அவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதை பற்றிய குற்ற உணர்வோ,அறமோ,மனசான்றோ அல்லது அவற்றின் மீதான சிறிய அளவிலான அன்போ அவற்றை காக்கட்டும்.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...