Skip to main content

அகமும் புறமும் : 4

                வாசகசாலை இணைய  இதழில் செப்டம்பர் 1 ல் வெளியான கட்டுரை.


            கொற்றவையாக்கும் காதல்


முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!

ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு

ஆ! ஒல்! கூவுவேன் கொல்!

அலமர அசைவு வளி அலைப்ப என்

உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே


குறுந்தொகை_28

பாடியவர்: ஔவையார்

திணை: பாலை


வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்தகாலத்தில் மீளாமையால் உண்டான துயரை தலைவி தோழிக்கு உரைத்தது.

இயற்கை நிகழ்வு ஒன்றின் மீது உணர்வுகளை ஏற்றிக்கூறும் சங்கக்கவிதைகளில் இதுபோன்ற நேரடியான கவிதையை கண்பது அரிது.

‘நீர் வார் கண்ணை’ 

‘உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி’ 

‘நோம் என்றால் நோம் நெஞ்சே’ 

என்ற வரிகளுக்கு மத்தியில் முட்டுவேன்,தாக்குவேன் என்று உரத்துக் கூறி ‘மனதின் முச்சந்தியில்’ வந்து நிற்கும் குரல் இது.

சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை. காமம் என்ற சொல் மட்டும்தான். இன்று நாம் காதல் என்றும், காமம் என்றும் பிரித்து கூறும் உணர்வுகளை இந்தப்பாடல்களில் உள்ள வரிகளை முன்பின்னாக வைத்து புரிந்து கொள்ளலாம்.

சங்ககால சொல்லாட்சியில் காதல் உணர்வுகளை ‘நோய்’ என்ற சொல்லால் குறிப்பது குறித்து எனக்கு வியப்பு உண்டு.

கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு இறுதி பருவத்தில் எங்களுக்கு நோய் என்ற சொல்லின் மீது ஒரு முனையில் ஆர்வமும்,மறுமுனையில் மிகுந்த சோர்வும் இருந்து. அப்போது மருத்துவ நுண்ணுயிரியல் [Medical Microbiology] மற்றும் நோய் எதிர்ப்பியல் [ Immunology ] எங்களுக்கு முக்கிய பாடங்களாக இருந்தன. நிறைய மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். திடீரென்று தூக்கத்தில் எழுந்தால் வரிசையாக நுண்ணுயிர்களின் பெயர்களும், நோய்களின் பெயர்களும்,மருந்துகளின் பெயர்களும் மூளையில் ஓடும். நாளின் இறுதிவகுப்பாக தமிழ் வகுப்பு நடைபெறும்.

களவியலின் தகையணங்குறுத்தல்,குறிப்பறிதல்,புணர்ச்சி மகிழ்தல்,நலம் புனைந்துரைத்தல்,காதல் சிறப்புரைத்தல் என்ற ஐந்து அதிகாரங்கள் பாடப்பகுதியாக இருந்தன.

ஒருநாள் தமிழ் வகுப்பில் நிஷா  தமிழாசிரியர் ராதாவிடம் ‘காதலும் ஒரு ‘நோயா’ மேம் ’ என்று சலிப்பாக கேட்டாள். 

“க்ளாசா இது? பக்கத்து டிபார்ட்மெண்ட்ல எவ்வளவு சிரிப்பு சத்தம் கேக்குது. உங்களுக்கு களவியலும், காதல் சிறப்புரைத்தலும்  நடத்தி நான் நாசமா போக,” என்றார்.

“மேம்… நீங்க டைவர்ட் பண்ணாதீங்க..காதல் ஒரு டிசீசா,” என்று நிஷா பிடிவாதமாக நின்றாள். 

நான் கொட்டாவியை மறைக்க வாயில் கைவைத்ததை பார்த்த தமிழாசிரியர் முறைத்தபடி,“அம்மணிக்கு நல்ல தூக்கம்.. நிஷாவுக்கு  பதில் சொல்லு. இல்லாட்டி க்ளாஸவிட்டு வெளியப்போ,” என்றார்.

நிஷாவிடம்“டிசீஸ்ன்னா என்ன..” என்றேன்.

“Unusual physical and mental conditions in living being..”

“போன செமஸ்டர்ல்ல  குறுந்தொகை  படிச்சோம்ல. அதுல பசலை படர்தல்…மட நெஞ்சே அப்படில்லாம் வரும். அதெல்லாம் டிசீசோட ஒத்துப்போகும். இப்ப படிச்ச திருகுறள்ல தலைவி தன்னை பார்க்கறதே ‘ஒரு நோக்கு நோய் நோக்குன்னு’ சொல்றான். அந்தப்பார்வையே தலைவனுக்கு பிசிக்கலி… மெண்டலி ஹார்மோன் இன்ட்யூசரா ஆகுது. அதைத் தான் வள்ளுவர் நோய்ன்னு சொல்றார். ஷார்ப்பா சொல்லனுன்னா.. அப்நார்மல் ஹார்மோனல் ஆக்டிவேஷன்,”என்றேன்.

தமிழாசிரியர்,“திருமணம்  முடித்து பிள்ளைபேறுக்குப் பிறகு பரத்தைக்கிட்ட போயிவான். இந்த நோயெல்லாம் சரியாகி நார்மலாகிடுவாங்கன்னு சொல்லி முடிக்க வேண்டியது தானே ,”என்று கூறி என் தோளில் தட்டி சிரித்தார்.

“இந்தப்பாடல்கள் எல்லாமே அழகான கற்பனைகள் தானே மேம்,”

“இப்பதான் முழிச்சிருக்க... நிஷாவுக்கு  நோயான்னு சந்தேகம்.  இவ இன்னும் கொஞ்ச நேரத்துல காதல் பொய்ன்னு சொல்வா பாத்துக்கங்க,”

உடனே காயத்ரி எழுந்து, “ஆமாம் மேம். இமேஜினேசன் தான்..பபுள் மேக்கிங் மாதிரி”என்றாள்.

“பபுள் மேக்கிங்கா,”

“வள்ளுவரே காதலை எவ்வளவு ஜியெண்ட்டா மாத்தறார் பாருங்க மேம்…அனிச்சப்பூவை விட மென்மையானவர்கள்,சூடான உணவை சாப்டா நெஞ்சத்தில் இருக்கும் காதலருக்கு சுடுமாம். இப்படி சொல்றதெல்லாம் பபுள்மேக்கிங் தானே மேம். சின்னப்பிள்ளையிலருந்து அவர சீரியஸான ரைட்டராவே நினைச்சுட்டேன் மேம்,”

தமிழாசிரியர் புன்னகை மாறாமல் “அவர் சீரியஸ் ரைட்டரா இருக்கறதாலதான் அறம்,பொருள் மாதிரி காதலையும் இவ்வளவு சீரியஸா எழுதியிருக்கார். இது ஒரு எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்…அதனாலதான்  தக்கவச்சிக்கறது சவாலா இருக்குன்னு நினைக்கிறேன்,” என்றார்.

“திருக்குறள்ல்ல,குறுந்தொகையில வருகிற ஃபீல் எல்லாம் டீன்ஏஜ் ப்ராளம் மேம்..ட்ரெய்ன் அவுட் குயிக்ளி,” என்றாள் காயத்ரி.

[காதலில் இருக்கும் மக்கள் எல்லாம் சர்வ ஜாக்கிரதையாக சிவனே என்று அமர்ந்திருந்தார்கள். கேள்விகளெல்லாம் ஆர்வகோளாறுகளுக்கானது. தமிழாசிரியர் உட்பட. அவரும் அப்போது மணமாகாத இருபத்து எட்டு வயது பெண்]

ஔவையாரின் இந்தப்பாடல்  காதல் என்ற தன்நிலையழிதல் மனநிலையில் எடுத்துக் கொள்ளத் தக்கது. 

எனக்கு சமிக்ஷாவை எட்டு வயதில் இருந்து தெரியும். மிக மெல்லிய உடல்வாகும் அதற்கு எதிரான குரலும் கொண்டவள். ஒன்பதாம் வகுப்பில் நம்மை நோக்கி பாய்ந்து வரும் ஆங்கில இலக்கணம்,அல்ஜீப்ராவை எல்லாம் கடந்து காதல் வந்து நிற்கும் என்றால் அது வலிமையானது என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதுவும் பதினொன்றாம் வகுப்பு ‘சூப்பர் சீனியரை’ காதலிக்கும் தைரியமெல்லாம் அவளுக்கு வரும் என்று குடுகுடுப்பைக்காரன் கூட நினைத்திருக்க மாட்டான். 

என்றாலும் தானே கதவைத்தட்டி, தானே திறந்து, தானே ஆசனமிட்டு அமர்ந்து, அமர்ந்த உள்ளத்தை அலமர வைப்பது தான் காதல் என்று நினைக்கிறேன்.

யாரும் எதிர்பார்க்காத ஒரு கோடைவிடுமுறை மதியம் அது. அவன் வீட்டிற்கு முன்னால் மழையால் கரைந்த மண்சுவர் வீடு ஒன்று உண்டு. அந்த சந்தில் நின்று சமிக்ஷா அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அதனால் அவளின் அம்மாவைத்தவிர மற்றவர்களுக்கு அதிர்ச்சி இல்லை. எங்கள் ஊரை  சங்ககாலத்து மூதூர் என்று தம்பியிடம் அடிக்கடி சொல்வேன். பாட்டனார், முப்பாட்டனார் காலத்தில் இருந்தே நூற்றுக்கு அறுபது திருமணங்கள் உடன்போக்கு திருமணங்கள் தான். 

ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான் காரணம். அப்படி இருந்தும் காதல் உடன்போக்கில் தான் சென்று சேர வேண்டியிருக்கிறது. ஒருவாரத்தில் இருவீட்டாராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பதிமூன்று வயதில் தான் சாதி என்ற ஒன்று முகத்தில் அறைந்து சிறுபான்மை இன பெண்களை மேலும் இற்செறிக்கும். கிராமங்களில் சிறுபான்மை இனம் என்பது ஊர் ஊருக்கு மாறுபடும். என் தலைமுறையில் எனக்கு இருந்த சுதந்திரம் கூட இன்றுள்ளவர்களுக்கு இல்லை என்றே சொல்வேன். ஒரு புறம் காற்றை போலொரு சுதந்திரம். மறுபுறம் பலூன் போல வீங்கி நிற்கும் அடைசல். 

அன்று சமிக்ஷா அவள் அம்மாவிடம், “நம்ம தெருவில் எத்தனை பேர் லவ் பண்றாங்க நான் மட்டும் இவனை ஏன் பண்ணக்கூடாது,” என்று கேட்டாள். அவளை சுற்றி காதல் நுரைக்கும் தன் தலைமுறையை பார்க்கிறாள். அவளால் இன்னும் சாதியை புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஒவ்வொரு முறையும் அவன் வீட்டு வாசலில் சென்று நிற்பவள் அவள் தான். பள்ளி முடித்து நெல்லறுப்பு வண்டி ஓட்டுனரானப்பின் அவனுக்கு சாதி என்பது என்ன என்றும், அதன் வலிமை என்ன என்றும் புரிந்துவிட்டது. 

அவனைத்தேடி சென்று பேசும் இவளிடம் தெரு மக்கள் அனைவரும் இது சரிவராது என்று  புரியவைக்க முயல்கிறார்கள். கோபத்தில்  சுடும் வெயிலில் தெருவில் மாட்டுக்கு நீர் வைக்கும் தொட்டியின் அருகே அமர்ந்திருக்கிறாள். இந்த ஆறுஆண்டுகளில் அவள் மனதின் உறுதியால் தெருவின் உள்ள அம்மாக்களின் மனதிற்கு நெருக்கமாகியிருக்கிறாள். அவன் வீட்டு சொந்தங்களே ‘இந்த பழாப்போன சாதி குறுக்க வரலேன்னா அந்தபிள்ளையை  கட்டி நம்ம கடனை கழிச்சிறலாம்’ என்று சொல்கிறார்கள். இதே வார்த்தைகள் என்னுடைய அப்பா, சித்தப்பாவை நோக்கி இன்றும் சொல்லப்படுவதை கேட்கிறேன். ‘இந்த சாதி மட்டும் குறுக்க நிக்கலேன்னா மாமன் ரெண்டு பேரையும் வேறவுகளுக்கு விட்டு குடுத்திருப்போமா’ என்று சொல்லி அம்மா வயதில் உள்ள பெண்கள் சிரிப்பார்கள். அந்த சொல் வெறும் விளையாட்டல்ல என்று கேட்கும் போது புரியும்.

அன்று மேட்டுப்பாளையம் கோவில் ஐயாண்டிக்கருப்பனுக்கு பெரும் பூசை. பெரும்பூசை முடித்து வந்து தெரு கலகலக்கும் வேளை அது. கல்லூரி முடிந்து அவனுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, தோளில் கைப்போட்டு வரும் அவளை கண்ணெடுக்காமல் பார்க்கிறது தெரு.

எதுவுமே தடுக்கமுடியாத படி அவளை செலுத்தும் அந்த கோபத்தை,அதற்கு காரணமான பேரன்பை இந்தப்பாடலில் நம்மால் பார்க்க முடியும்.



ஒரு குழந்தை இந்த பொம்மை தான் வேண்டும் என்று சொல்வது நமக்கு திமிராகவோ, பிடிவாதமாகவோ தெரியலாம்.  பொம்மை என்பது தாயின் முலைக்குப்பிறகு குழந்தை தன் கையில் எடுத்து சுவைக்கும் முதல் பருப்பொருள். அணைத்து உறங்கும் இனிய துணை. ஆனால் ஒரு பொம்மை கேட்டால் வாங்கித்தரலாம்…இதெல்லாம் முடியுமா?  என்று காலங்காலமாக சொல்கிறோம்.

என்றாலும் கூட காதல் என்பதை களவாகவே வைத்திருக்க வேண்டிய நடைமுறை அவசியத்தை உணர்ந்தே, காலங்காலமாக அந்த மனப்பழக்கத்தை நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அது ஒரு அக்கறை. எதார்த்தத்தின் முன் நிற்கும் கேள்விக்குறி. பரத்தமையை பாடும் அதே சங்கக்கவிதைகள் தான், களவியலை அத்தனை வலுவாக முன்வைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

நம் சமூகத்தின் மனபழக்கம் அப்படியானதாக உள்ளது. எதோ ஒரு காரணத்தால் காதல் பொய்க்கும் எனில் நம் பயல்களின் பூ போன்ற மனம் காலமெல்லாம் அவளை குதறி எடுக்கும் என்று அஞ்சியே அம்மாக்கள் பிள்ளைகளிடம் இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

தன்னை பிடித்த ஒருத்திக்கு இன்னொருவனையும் எப்போதோ பிடித்திருக்கலாம் என்பதை ஏற்கமுடியாத  நொய்மையானவர்களாக  இருப்பதை காண்கிறோம்.  மணமானப்பின் சொல்லால், செயலால் தார்க்கோலை எடுப்பவர்களை நம்பி இந்தப்பெண் இத்தனை சொற்களை எடுத்து வைப்பதை பார்க்கும் போது நமக்கு பதட்டமே ஏற்படுகிறது.

ஒரு பதின் வயது குழந்தையின் தூய வெள்ளை மனதின் முதல் பேரன்பின் சொல்லாகத்தான்  இந்தப்பாடல் இருக்க வேண்டும். அழுது அடம் செய்யும் குழந்தையின் கூச்சல் இது. முடியாது என்றால் தரையில் அமர்ந்து கைகால்களை உதைத்து அழும். பிடிவாதம் செய்யும். இல்லையெனில் அது தன்னையே கூட அழிக்கும்.

இது பாலைத்திணை பாடல். வாகை,பாலை போன்ற மரங்கள் அந்த நிலத்திற்கு உரியவை. வலுத்த அடிமரமும்,இடைவெளி விட்ட நீண்ட  கிளைகளும்  கொண்ட மரம். அது பாலையின் காற்றில்,நண்பகலின் வெயிலில் உழல்வதை மனதில் காட்சியாக்கி பார்க்கலாம். காதல் அதைப் போன்ற உழைதலை ஒரு இளம்மனதில் ஏற்படுத்தும் சினத்தை இந்தப்பாடலில் காண முடிகிறது. 


நான் ஒருத்திமட்டும்

பெறுதலுக்கு அரிய ஒன்றால்

காற்றில் அலைவுறும் மரத்தை போல துன்புறுகையில்

என்காதல் துயரை அறியாது துயிலும் ஊரை

முட்டி எழுப்புவேன்

தாக்கி எழுப்புவேன்

முடியாதெனில்

சத்தமிட்டு கத்தி எழுப்புவேன்.










Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...