Skip to main content

உயிர்த்தெழும் சொற்கள்

 நினைவு நாளான 16 ம் தேதி எழுதி இன்றுதான் வெளியிட முடிந்தது.

இன்று கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நினைவுநாள். ஏனோ இறப்பிற்கு பின் கவிஞர்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார்கள். 



என் படுக்கையின் கைத்தொடும் இடத்தில் கவிதை புத்தகங்கள் இருக்கின்றன. 

விழித்ததும் கவிஞர் தேவதேவனோ,பிரான்சிஸோ,சங்கக்கவிதைகளோ இன்னும் யார் யாருடைய கவிதை வரிகளையோ தான் முதலில் வாசிக்கிறேன். வரிகள் எல்லாம் மறந்து விடுகின்றன. ஆனாலும் ஆழத்தில் எங்கோ சென்று அதன் உணர்வு நிலைகள் மட்டும் என்னை ஆள்கின்றன என்று நினைக்கிறேன். என்னால் ஒரு வரியைக்கூட திருப்பி சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். என்னுடைய பதினாறாவது வயதிலிருந்து  கவிதைகளை வாசிக்கிறேன். 

என் தங்கையின் திருமணத்தன்று காலையில் வாசிக்க முடியவில்லை. அனைவரும் அயர்ச்சியில் உறங்கும் இரவில் ,கழிவறையின் முன்பிருந்த சிறு வெளிச்சத்தில் கவிதை வாசித்தேன். எதிர்பாராத விதமாக அன்று பிராசிஸ்ஸின் கவிதை புத்தகம் தான் கையில் அகப்பட்டது. 


யாரவன்?

அலகில் காலம்

காலில் பூமி

வாலில் வானம்

தோளில் சிறகு

நாவில் இசை

கண்ணில் ஓளி

சின்னஞ்சிறு கிளையில்

மின்னல் தனிமையில்

பறவைபோல் ஒருவன்

ஏறக்குறைய இறைவன்.

இதோடு இன்னும் சில  வாசித்தேன். கவிஞனும் ஏறக்குறைய இறைவன் தான் என்று இன்று தோன்றுகிறது. என்னை பொருத்தவரை கவிதை வாசிப்பு அந்தரங்கமானது. சிறுவயதிலிருந்து வாசிக்கும் போது ஒரு எல்லையில் கவிதையில் நமக்கான பிடி கிடைக்கும். 

ஒரு காட்டுமரம் வளர்வதைப்போல தான் கவிதை வாசிப்பும். மிகத்தொடக்க நிலையில் யாராவது கைக்காட்டலாம். அவ்வளவு தான்.

என் பதினாறு வயதில் நானாகவே கவிஞர் வைரமுத்து புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்தேன். இரண்டு ஆண்டுகள் வைரமுத்துவின் அத்தனை புத்தகங்களையும் வாசித்திருந்தேன். இப்போது வைரமுத்துவிடமிருந்து விலகி வந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்றாலும் கூட அவர் காட்டியது தான் எனக்கு கவிதை வாசிப்பிற்கான ருசி. 

அது போல பிரான்ஸிஸை நான் கல்லூரி நூலகத்தில் கண்டு கொண்டேன். செய்தித்தாளில் அவர் எனக்கு பாடலாசிரியாகத்தான்  முதலில் அறிமுகமானார்.

பின் அவரை நீண்ட நாட்கள் கழித்துதான் வாசிக்கத்தொடங்கினேன். அவர் கவிதைகளில் வரும் இயேசு எனக்கு மிக முக்கியமானவர். ஒரு கட்டத்தில் அவரின் கவிதைகள் அனைத்துமே சிலுவையில் அறையப்பட்ட துயரத்தை தரவல்லவையாக உணரமுடியும்.

துயரங்கள் அல்லது துயரம் தரக்கூடிய 'தெளிவு' என்று ஒன்று உண்டு. கவிஞன் துயரங்களில் கிடந்து உழன்று அலைகழிபவன். ஆனால் வாசிப்பவனுக்கு ஔியை அருள்பவன்.  


                    பவளப்பழி

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள் என்று

பொய் சொல்கிறார்கள்

அவர்தான் அவரைச் சிலுவையில் அறைந்து கொண்டார்


அவருக்கு முள்முடி சூட்டினார்கள் என்று

பொய் சொல்கிறார்கள்

முள்முடியை அவர்தான் சூட்டிக் கொண்டார்


அவரை சவுக்கால் விளாசினார்கள் என்று

பொய் சொல்கிறார்கள்

அடுத்தவன் கையால் அவர்தான் தன்னையே அடித்துக்கொண்டார்


அவரது சிவப்புஅங்கியைப் பறித்துக்கொண்டார்கள் என்று

பொய் சொல்கிறார்கள்

அவர்தான் அதைக் கிழித்துப் பங்கிட்டார்


நம்பத் தயங்குகிறவர்கள்

நான் பொய் சொல்கிறேன் என்று கருதினால்

பதில் சொல்லுங்கள்

அவரை அவர்களா உயிர்த்தெழச் செய்தார்கள்?


இந்தக்கவிதை நான் ஐ.சி.யூ விலிருந்து வீட்டிற்கு வந்த நாளில் வாசித்தேன். பெரிசா எதுவும் இல்லை. சும்மா ஒருநாள் தான். உடல் வலிகளுக்காக அங்கே சென்று படுக்க வேண்டியிருந்தது. அப்பல்லோ ஐ.சி.யூ வில் படுத்துக்கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்தவள் நானாகத்தான் இருப்பேன். மருத்துவரைப் [Dr.Jos Jasper] பார்த்து சிரித்தவளும் நானாக இருக்கக்கூடும். வீல்ச்சேரை பார்த்து அலறி அடித்து 'நானே நடந்து போயிக்கறேன்' என்று எழுந்து நடந்து மருத்துவரின் பேரன்பையும்,அழகான பார்வையையும் [அப்படி பார்த்தார்] பெற்றவளும் நானே என்று நினைத்துக்கொள்வதில் எந்தப்பிழையும் இல்லை.

நமக்கு  துயரம் என்றால் காதல் தான் என்ற பிழையான புரிதல் உண்டு. வாழ்க்கை எவ்வளவு  சிடுக்கானதோ..அத்தனை சிடுக்கான துயரங்கள் உண்டு. 

நான் ப்ரான்ஸிஸின் கவிதைகளை காதல் என்ற தளத்திலிருந்து மாற்றி வைக்கிறேன். அதை 'அன்பின் துயரம்' என்று புரிந்து கொள்கிறேன். அந்தத்துயரம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிடமும் உள்ளது. உப்பை போல. அன்பு உப்பாவதால் தான் அது தாகமாகிறது. தாகமே ருசியாகி வாழ்வாகிறது.

கண்ணீரின் சுவை. இரத்தத்தின் சுவை. வாழ்வின் சுவை.

ப்ரான்சிஸ்சின் வரிகளை அத்தகைய துயரை கடந்து ருசியை அடையும் வழியாக நான் கொள்கிறேன்.

கவிஞன் தன் வரிகளின் என்றும் இருக்கிறான். ப்ரான்சிஸை வணங்குகிறேன்.

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...