2021 செப்டம்பர் சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை
நீள்ஆயுள் நிறைசெல்வம்
வாசுகி வாசலைப் பெருக்கி கால்படாத தலைபாகத்தில் துளியாக கண்ணன்பாதம் வரையும் பொழுதே அம்மா தொலைக்காட்சியில் கந்தர்சஸ்ட்டி கவசத்தை மாற்றினாள்.
“வாசுகி...போட்டு முடிச்சுட்டு வந்து மத்த வேலயப்பாரு…காக்கா குருவியக்கண்டா அங்கயே நின்னுக்கிட்டு…தெனமும்தான் பாக்கற,” என்று அம்மா சத்தம் வைத்தாள். அவள் முழுநேரசெய்தி தொலைக்காட்சிகளில் எதைத்தேர்வு செய்வது என்று மாற்றிக்கொண்டே இருக்கும் சத்தம் மாறி மாறி கேட்டது. தெய்வங்கள், வழிபாடுகள் விஷயத்தில் அம்மாவை புரிந்து கொள்வது கடினம். எல்லாம் அப்பா கொடுத்த பயிற்சி. அம்மாவின் பதின் வயதிலேயே திருமணமாகியதால் அவருக்கேற்பது போல அம்மாவை மாற்றிவிட்டார் என்று தோன்றும். அவளை ஒத்த பெண்களைப்போல அல்லாமல் சடங்குகள், ஜாதகம், நேர்ச்சை, பரிகாரம் இதிலெல்லாம் அவள் மனசுக்குள் சின்ன எள்ளல் இருக்கும். கடனே என்று ஊர்உறவுகளுக்காக செய்து வைப்பாள். பக்கத்துவீட்டு அத்தை சோற்று தட்டுக்கூடையை தலையில் வைத்தபடி வயலுக்கு செல்ல கதவைப்பூட்டுகிறாள்.
கோலத்தை முடித்துவிட்டு நடைஅறையைத்தாண்டி வரவேற்பறையில் நுழையும் பொழுதே கரிசல்எழுத்தாளர் கீ.ரா இன்றுஅதிகாலை காலமானார் என்ற குரல் காதில்விழுந்ததும் இன்னொரு முறை உறுதிபடுத்த அங்கேயே நின்றாள். தொண்ணூற்றுஒன்பது வயசாச்சே. நிறைவா வாழ்ந்திருக்கார் என்று அவள் மனம் கீ.ரா வின் இறப்பை சட்டென்று ஏற்றுக்கொண்டது.
“கீரையா…இப்பிடில்லாமா பேரு வைப்பாங்க…
என்ற அப்பாயி வரவேற்பறையின் கோடியில் நாற்காலியில் காலை தூக்கி வைத்து அமர்ந்திருந்தது. கி.ரா வின் பிறந்தநாள் காணொளியில் அவரும் இப்படித்தான் அமர்ந்திருந்தார்.
வாசுகியின் முறைப்பைக்கண்டதும் கிழவி அமைதியானது. ஏதோ பலமான விசயம் காலங்காத்தல இதுகிட்டல்லாம் எதுக்கு? ‘நாம்பாக்க ஒன்னுக்கடிச்சு அதுமேல கிடந்த சின்னபிள்ளைக்கிட்டெல்லாம் வம்பு’ என்று நினைத்திருக்கலாம். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து மேற்குபுற வாசல்படிகளில் வீதியை பார்த்து அமர்ந்து கொண்டது.
“அந்த மாஸ்க்கை போட்டுகிட்டு தெருவுல ஒக்காந்து பேசுங்கன்னு ஆயிரம்வாட்டி சொல்லியாச்சு…”
சித்தி அவளின் சமையல்அறையிலிருந்து எட்டிப்பார்த்து சொன்னாள்.
‘என்னமோ நாங்க காணாதத கண்டுடீங்க. நாங்க பாக்காத ரோகமா? எழவெடுத்த க்ரான ரோகம் வந்து இந்தப்பாடு… அந்த காலரா காலத்துல எங்கம்மா போனாங்க…பெரியம்மை ,காசம் ன்னு எத்தன ரோகத்துக்கு தப்பி பொழச்சிருப்பேன்,” என்றபடி எழுந்து தன்அறைக்கு சென்றது.
எத்தனை சொற்களை காரணங்களை அனுபவங்களை போட்டு மூடினாலும் அந்தக்கனல் மெதுவாக புகைந்து எரியத்தான் செய்கிறது. கீ.ராவிற்கு வயசாவதால் மட்டும் இறப்பு இழப்பில்லை என்று ஆகிவிடுமா என்று தெரியவில்லை. ‘வாழற வயசில சாகக்கூடாது’ ‘எட்டுல போகலாம். எண்பதிலே போகலாம் பதினெட்டுல போகக்கூடாது’ என்பது போன்ற சமாதானங்களை சிறுவயதிலிருந்து கேட்கிறதுதான். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தேநீருக்காக சமையலறைக்குள் நுழைந்தாள்.
பசுவிற்கு உடம்பு சரியில்லை என்று அழும் அயிரக்கா, செவந்தி பூக்களை கருவளையல்களை தன் அன்பனிடமிருந்து வாங்கி சிரிக்கும் கோமதி செட்டியார்,கோபத்துடன் பம்புசெட்டை சுற்றிவரும் ராமசாமி நாயக்கர்,நாச்சியாரு என் ப்ரியே…நீ எங்கிருக்கிறாய் என்று காய்ச்சலில் புலம்பும் ரங்கய்யா,கோனேரி,துரைசாமி நாயக்கர், சிவகாமி ஆச்சி என்று கி.ராவின் ஊர்சனங்களே வாசுகியை சுற்றி சுற்றி வந்தார்கள். ஒருகட்டத்தில் கி.ராவே கிண்டல் கலந்த புன்னகையுடன் அவள் முன்னால் வந்து விட்டார்.
“தூக்கக்கலக்கத்துல இன்னைக்கும் பாலை பொங்கவிட்டேன்னா பாரு…”என்ற அம்மாவின் குரல் கேட்டு சுதாரித்துக்கொண்டேன். “என்ன நெனப்புல இருக்க நீ,” என்று பாத்திரங்களை ‘நங்’ என்று வைத்தாள்.
அடுப்பை குறைத்துவிட்டு சன்னல்வழியே வானத்தைப் பார்த்தாள். கடைசி இருட்டும் ‘இந்தா போறேன்’ என்று நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காக்கைகளின் கரைதல்களும் இணைந்த சக்சக்…சக்சக் குரல்கள். கோபல்ல கிராமத்தின் அதிகாலையை நாவலில் அவர் எழுதியது நினைவிற்கு வந்தது. பறவைகளின் குரலை கெச்சட்டங்கள் என்றும் மனிதர்களின் குரலை செல்ல சிணுக்கட்டங்கள் என்றும் எழுதியிருப்பார்.
தானே நிறைவதை நிறுத்த முயற்சிப்பது வீண் என்று மனதை அதன்போக்கில் விட்டுவிட்டு தேநீர் கோப்பையுடன் முக்காலியில் அமர்ந்தாள்.
“ஏம்மா…கீரைன்னு ஒரு பேரா…என்னோட வயசுக்கு இப்படி ஒரு பேர கேட்டதில்ல,” என்றபடி பால்டம்ளருடன் அப்பாயி சமையலறை நிலைக்காலை பிடித்துக்கொண்டு நின்றது. எப்படியும் விசாரித்து அறியாமல் விடாது.
“ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் ன்னு பேரு. உன்னைய வெங்கிடுன்னு கூப்புடுறாங்கல்ல…அந்த மாறி கி.ரா…”
“இப்ப யாரு வெங்கிடுன்னு கூப்புடற வயசுல இருக்கா…எல்லாரும் போயிட்டாங்க. டீ.வியில போடுறானே… காலமாயிட்டான்னு. யாரு?”
“அப்பாயி…தாத்தாவுக்கு தொண்ணுத்தி ஒன்பது வயசு…கதை எழுதறவரு”
“பெரியவுகளா..சரி..சரி..மேலுக்கு முடியலயா…”
“வயசாயிருச்சுல்ல…நோயெல்லாம் ஒன்னுமில்ல…”
தகவலை அறிந்த நிறைவில் தனக்குள் பேசியபடி திரும்பி சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டது.
அப்பாயிக்கு தன்னைவிட மூத்தவர் நேற்றுவரை இருந்தார் என்பதே ஆசுவாசம் தான். ஊருக்குள் அப்பாயியை விட மூத்தவர்கள் இல்லை. கி.ரா வைவிட அப்பாயி ஐந்தாண்டுகள் இளையவராக இருக்கலாம்.
வாசுகிக்கு இந்த முதியவர்களின் இருத்தலும், மனநிலையும், வாழ்க்கை பற்றின நினைப்புகளும் மலைக்கச்செய்கிறது. நன்கு கனிந்து குழைந்து மெதுவான ஒன்று என்று இப்பொழுது தோன்றுகிறது. வாழ்க்கை என்ற தேன்குடித்த வண்டு என்றும் வைக்கலாம். ஒரு வயதிற்குமேல் சாவுவராதவர்கள், உடல்நலமாக இருப்பவர்கள் தான் உண்மையில் வாழ்க்கையின் இனிப்பை கொஞ்சமாவது மனம்விட்டு சொல்கிறார்கள். அப்பா இந்த சிடுக்குளில் இருந்து ஒருமாதிரி விலகிவிட்டார்.
ஐம்பது வயதிற்கு மேலான வாழ்க்கை நெருக்கடிகள், நோய் போன்றவை வீட்டில் மற்றவர்களை இறுக்கிச்சுற்றுவதால் வீட்டில் ஒருஅமானுஷ்யம் போல சோர்வு கவிழ்ந்திருக்கிறது. அப்பாயியும் புதிதாக பிறந்துள்ள குழந்தையும் அந்த படலத்தை கிழித்து ஔி பரப்புகிறார்கள். அவர்களால்தான் வீடு தினமும் துலங்கிஎழுகிறது. இதை வீட்டில் சொன்னால் இருக்கிற கோபத்தில் பிய்த்துவிடுவார்கள். ஆனால் அதுதான் உண்மை.
அம்மா காலையிலேயே ஹைப்பரில் எழுந்திருப்பாள். ஒரு தீ மற்ற தீயை பற்ற வைக்கத்தானே செய்யும். அப்பாயி அங்கும் இங்கும் இரண்டு நடை நடந்து ,வாசுகிக்கு சைகை காட்டி புன்னகைத்துவிட்டு போகவில்லை என்றால் அந்தநாளிற்கு விடியல் இல்லை. சித்தப்பா குரல் கேட்டு அவள் பதறி எழுந்தால், “ அவன் மேககர்ப்பத்துல உதிச்சவன் அப்படித்தான் கடமுடாம்பான். நீ பாட்டுக்கு மெதுவா போய் கேளு,” என்று சொல்ல அவளுக்கு அப்பாயி கூட இருக்க வேண்டும்.
அவள் திருமணத்தில் ‘இன்ட்டரஸ்ட்’ இல்லை என்று கூறிய நாளில் வரவேற்பறை பதறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல அப்பாவுடன் ஒருஆண்டாக ஆறஅமர பேசியிருந்தாள். அவர், “வீட்ல மத்தவங்கள நீதான் கன்வின்ஸ் பண்ணனும்,” என்று சொல்லிவிட்டு எழுதும் அட்டையுடன் மேசையில் அமர்ந்துவிட்டார்.
“இன்ட்டரஸ்ட்ன்னா…என்னாது….” என்று அப்பாயி பலமுறை கேட்டுக்கொண்டிருந்தது.
பொறுமை இழந்த சித்தப்பா,“யம்மா…உங்களோட வேற எழவா இருக்கு. கல்யாணத்துல விருப்பமில்லையாம்…எங்களையெல்லாம் கேட்டுக்கிட்டா தள்ளிவிட்டீங்க…”என்றார்.
“ஆமா….எழவு அதுஇதுன்னு பேசறதுக்குதான் உன்னிய புத்தனாம்பட்டிக்கு அனுப்பி பெரியபடிப்பு படிக்க வச்சனா…”
“வாயமூடிக்கிட்டுஇருங்க. இங்க என்ன நடக்குது…உங்க புராணத்த ஆரமிக்காதீங்க…பெருசா படிக்க வச்சுட்டீங்க…”
அப்பாயியின் வசவுபேச்சுக்கள் ஊரறிந்தது. வீட்டில் ஒருசொல் மாறினால் எகிறும்.
“நம்ம குடும்பத்துத்துல இதுமாதில்லாம் கல்யாணம் ஆகாதவங்கல்லாம இல்லவே இல்ல…கேக்றவங்களுக்கு என்னா பதில் சொல்றது…என்ன பெரியவங்க நீங்க? வாயத்தெறக்காம இருக்கீங்க…சொல்லுங்கத்த,”என்ற சித்தியிடம் அவ்வா,“இப்டியும் இருக்கலாம் தப்பில்ல. இருந்துமிருக்காங்க…கொத்தம்பட்டியில எங்கவூட்டுகாரு வகையறாவில ஒரு நாத்துனா இப்பிடி இருந்தா…அதுக்கும் முந்தின வம்சத்துல ஒருத்தி இருந்தா. ஒடக்கரை புளியாமரம் பக்கத்துல பதிவு இருக்கு. அங்கதான் நம்ம கல்யாணகடுதாசு வச்சு படைக்கிற வழக்கம். உங்கல்யாண கடுதாசுதான் கடசியா படைச்சது…அதுமில்லாம இந்தப்பிள்ள தாய் தகப்பனுக்கிட்ட அனுமதி வாங்குனப்பிறவு நாம அனுமதிகுடுத்தா என்ன? குடுக்காட்டிஎன்ன?” என்றது.
பிரிக்குமிடத்தில் பிரித்து சேர்க்குமிடத்தில் சேர்த்து தைக்கும் அன்பின் உரிமைஎல்லை வித்தையை இந்த மாதிரி அனுபவஸ்த்தர்கள் நுணுக்கமாக செய்வார்கள்.
ஒரு அத்தை, “கல்யாணம் கட்டிக்கலன்னு ஒரு பொட்டப்பிள்ள சொல்லும் அத நம்ம கேட்டுக்கனுமா? ஊருல என்ன சொல்லுவாங்க. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசமாட்டாங்க…வூட்ல இத்தன பேரு பெரியவங்க இருந்துக்கிட்டு என்னத்த….”என்று கோபமாக வந்ததும் வராததுமாக கத்தினாள்.
அப்பாயி நிதானமாக அமர்ந்திருந்தது.
“எவனாச்சும் ஏமாத்திப்புடுவான்…அன்னிக்கு எல்லாரும் கைக்கட்டி நிக்கப்போறோம்,”
வாசுகி வாய்த்திறப்பதற்குள் கையமர்த்திய அப்பாயி மெதுவாக, “ஏமாத்தலங்கறதுதானே நமக்கு வைகொலையா வந்து நிக்குது…நம்மளாட்டமா பூத்துபூக்காத வயசுல கல்யாணம் முடிச்சுவிட்டுட்டாக. இந்தப்பிள்ளக்கி வயசென்ன? படிக்கறதுக்கு வேலக்கின்னு எங்கெங்க போவுது, வருது..ஒருத்தருமா!” என்றதும் அவள் தான் முதலில் சிரித்தாள்.
வாசல்படியில் நிக்காத,அங்கஎன்ன பார்வை,ரோட்டுல நடந்தா கண்ணு சுழலக்கூடாது..வாய்விட்டு சிரிச்சா குடும்பம் விளங்காது என்று எந்தநேரமும் அதட்டும் அப்பாயியா இது! என்று அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். கனிவுடன் அவளைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தது.
இதே கனிவை அதன் தொடுகையில் உணர்ந்தத நாள் அவள் பூப்பெய்திய நாள். முதல் தொடுகை. என்ன ஏதென்று தெரியாது பதறி விழித்துக்கொண்டிருந்தாள். முற்றத்தில் குளியல் சடங்கிற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. பெட்டிக்கோட்டுடன் சற்றுத்தள்ளி முற்றத்து மறைவில் அமர்ந்திருந்தாள். முதன்முதலாக அவள் அப்பாயியை பார்த்துவிடக் கூடாது என்று கிழவி ஒதுங்கியிருந்தது. குளிர் போன்ற ஒன்றால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த அவளுடைய மெல்லிய புஜங்களை அணைத்துபிடித்தபடி, “ பயப்படாத…எல்லாருக்கும் உள்ளதுதான். எனக்கு, உங்கம்மாவுக்கு, சித்திக்கு, அத்தைக்கு…எல்லாவளுக்கும்,” என்று சிரித்த அந்த முதல் தொடுகை காலகாலத்திற்கு இந்த உடல்என்னும் உணர்வு உள்ளவரை மறக்கமுடியாதது. எவ்வளவு ஆசுவாசமான தருணம்.
கூட்டுக்குடும்பம் உடைந்த நாளிற்கு அடுத்துவந்த நாட்களில் வாசுகி நினைத்து நினைத்துஅழுதுகொண்டிருந்தாள்.
“சோறுதான் தனியா ஆக்குவாங்க. ருசியா திங்கலாம். விடும்மா. பிரிச்சுவிட விதி இருந்திருக்கு. எல்லாம் ஒன்னா பூவாவே மலந்தமேனிக்கே காலத்துக்கும் இருக்குமா? இப்ப விதி அடிபட்டு போச்சு. இனிமே இன்னொரு பாகுபாடு வராதுன்னு வச்சிக்க. இவனுங்களும் இவனுங்க பொண்டாட்டிகளும் பாத்துக்காம, சிடுசடுன்னு பேசிக்காம,கூடி குழாவாம இருக்க மாட்டாங்க. இந்த நாலும் இந்தவூட்டுக்கு நாலுதெசய எணச்சு வரஞ்ச சதுரக்கணக்கு. சேந்தே தான் இருக்கும்…”என்ற அப்பாயியின் சொல் இத்தனை ஆண்டுகளாக உண்மை என்று காலம் அவளுக்கு சொல்கிறது.
“இங்க பாரு இனிமேரெண்டுவூட்டு சோறு எனக்கு. உங்கம்மாவும் சின்னாத்தாளும் நீகுடு, நாங்குடுன்னு பெரும்போக்கா என்னைய விட்டாலும் விட்ருவாளுங்க. எத்தன குடும்பத்தப்பாக்கறேன். அதனால நாங்கொஞ்சம் பிகு பண்ணி சண்டை இழுப்பேன். அவனுங்க ரெண்டுபேரும் உன்னியத்தான் என்னிட்ட துறத்துவானுங்க…அனுமார விட்டா ராமனுக்கு கதியேது. சும்மா அழுதுக்கிட்டிருக்கப்படாது…”
கிழவியின் அகந்தைக்கும் வீட்டில்உள்ளவர்களின் மனஅழுத்தத்திற்கும் பதிலாக அவள் ஒன்றை நடைமுறைபடுத்தினேன். சாப்பாட்டை தட்டில்எடுத்துக்கொண்டு போய் நேராக கிழவியின் அறையில் கைகளில் தந்துவிடுவது. மின்விசிறி காற்றில் நீண்டகூந்தலை காயவைத்துக்கொண்டு அந்த அறையை பொந்து என்றுதான் கிழவி சொல்லும். “இந்த வூட்டையே ஆச்சி செஞ்சேன். ஆச்சி மாறிப்போச்சு. பொந்துக்குள்ள தள்ளிப்பிட்டானுங்க...” என்று பொழுதுமுழுவதும் மேற்குபக்கம் நீண்ட படிகளில் அமர்ந்து ஓயாது கச்சேரி பண்ணும் கிழவிக்கு தூங்க சாப்பிட மட்டும் தான் பொந்து தேவைப்படும்.
வாசுகியின் தங்கையை பெண்பார்க்க வரத்ததொடங்கியதும் கிழவி ஒரு திருகாணி வேலை செய்தது. வாசுகியை முதலில் இழுத்துவிடும். எதாவது எக்குத்தப்பாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் கிழவி சலித்து நேருக்கு நேரா பாத்து பேசினா எந்தப்பயலுக்குதான் தோணும். சோதனைக்கு அவள் தங்கைக்கு ஒரு இருபத்தைந்திற்கு மேற்பட்ட வரன்கள் வந்தார்கள். ஒருமாதிரி தங்கைக்கே போர் அடிக்கத்தொடங்கிய போதுதான் அவர்கள் அனைவருக்கும் பிடித்த பொறுப்பு தலைமையாசியர் அவர்கள் குடும்பத்தில் இடிபட வந்து சேர்ந்தார். அந்தவீடு நவகிரகங்கள் திசைக்கொன்றாக அமர்ந்த பீடம். ஒன்றுக்கொன்று சேராது, பிரிந்தும் தொலையாது. ஓயாத சுழற்றலும் இணைதலும் மாறுதலும் எதிர்நிற்றலும் மறைத்தலுமான சலிப்பில்லா ஆடல் கொண்டது. ஒருமாதிரி இதற்கு அவர்கள் செட் ஆனவர்கள். இனிமேல் மற்றவர்களின் குடும்பஅமைப்புகள் அவர்களுக்கு போர் அடிக்கும் என்று தோன்றுகிறது. அவளம தங்கையின் கணவர் முதன்முதலிர் வீட்டில் தங்கின அன்று மிரண்டு போனார். அவர் மூன்றுஆட்கள் உள்ள வீட்டில் இருந்தவர். “இதென்னப்பா ஹாஸ்ட்டல் மாதிரி..ரெண்டு கிச்சன் ஒரு ஹால், மூணுநாலு பாத்ரூம். இவ்வளவு பெரியவீட்டில் எங்கயுமே ப்ரைவசி இல்லயே,” என்றார்.
மாப்பிள்ளைகள் வந்து செல்லுகிற போதெல்லாம் தங்கையை தனியே அழைத்து, “இந்தப்பயலுக்கு உனக்கு நிக்க தகாது சரின்னு சொல்லீறாத…நமக்குன்னு ஒருத்தன் வருவான்…” என்று முதலில் தட்டிக்கழிப்பது கிழவிதான். தன் வேலை மிச்சம் என தங்கை சிரித்துக்கொள்வாள். அசால்ட்டாக மாப்பிள்ளைகளை தட்டிவிட்டுவிட்டு சித்தப்பாவின் முறைப்பை கண்டு கொள்ளாமல் தன்கச்சரி நடக்கும் இடத்திற்குசென்று அமர்ந்துகொள்ளும். “மாப்பிள்ள பாக்குறாங்களாம் மாப்பிள்ளை. பிள்ளைக்கேத்த மாப்பிள்ளையா பாக்காட்டி நாளைக்கு பஞ்சாயத்துபண்ணவே சரியாயிருக்கும். கொஞ்சமாச்சும் பிள்ளையும்பயலும் நேர்நிக்கனும், என்று கச்சேரியை தன் ரசிகைகளுடன் தொடரும்.
“சமூக இடைவெளிங்கறத உங்க வீட்டுக்கு குடும்ப இடைவெளின்னு போடனும். அந்தந்த பசங்க மாமியார் வீட்டுக்குன்னு போனா என்னா மாதிரி இருக்கானுங்க. இங்க என்னடான்னா சந்தையில மாட்டுனாப்ல்ல…முதல்ல உங்க வீட்டதான் தனிமனித இடைவெளி பின்பற்றாத சமூகம்ன்னு கவர்ண்மெண்ட்டுல மாட்டிவிடனும்…”
“கண்ணு வக்காதீங்க. ஏற்கனவே கண்ணுவச்சிதான் பிரிஞ்சு இருக்கம்…”
“நல்லா பிரிஞ்சிருக்கீங்க போங்க…”என்று வீடுஅதிர சிரித்தார்.
“காஃபி குடிக்கிறீங்களா அன்பு…”என்றபடி வாசுகி வந்தாள்.
“நம்ம பேசினது உங்கக்காவுக்கு கேட்ருக்குமோ… தப்பா நெனச்சுப்பாங்களா…இந்த வீட்ல ஒரு ப்ரைவசியும் இல்ல…”
“என்னா…ப்ரைவசி ப்ரைவசின்னு ரொம்ப பேசறீங்க. குடும்பம்ன்னா அப்படித்தான்..உங்க வூட்ல மனுச இருப்பாங்களா… மூணு பேருக்கு அத்தாம் பெரியவீடு…பேய்பங்களா மாதிரி…”
மாப்பிள்ளை மெதுவாக சமையலறையை எட்டிப்பார்த்து,”வாசுகி..தப்பா நெனச்சுக்காதீங்க..சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்…”என்றார்.
“எனக்கு எதுவும் கேக்கலயே…”
“அது சரி…
“அன்பு என்ன சொல்றாரு …பாப்பா…”
“மாமன பேரூ சொல்லி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது. இப்ப கூப்டறதுதான் எப்பவும் வாயில வரும்…”
அவர் சிரித்ததில் கஃபி தரையில் சிந்தியது.
“ஆமா..அந்தப்பிள்ளையே பேரு சொல்லிதான் கூப்பிடுது…என்னைய மட்டும் சொல்ற,”
“இது என்ன பழக்கம் புருசன பேரு சொல்லி கூப்படறது…”என்று கிழவி அவர்களிடம் சென்றது.
“உங்க வீடு..சூப்பர்…”என்று அமர்ந்திருந்த நாற்காலியை அப்பாயிடம கொடுத்துவிட்டு கீழே அமர்ந்து கொண்டார்.
அந்தக்குடும்பம் பாறை. அதன் மேலுள்ள சிறுசெடியா இல்லை இந்தக்கிழவியே அதை பாறையாக்கிவிட்டதே என்பது குழப்பமானது. ஆனால் வரவேற்பறையில் அமர்ந்து மருத்துவமனைக்கு சென்ற சிறியமகன் திரும்பும் நாளிற்காகவும்,மாடியிலிருந்து கீழிறங்கும் தன் பெரியமகனிற்காக சிறிய தட்டில் தீன்பண்டத்துடனும் காத்திருக்கும் தாய் என்பவள் தன்மகன்களின் உடல்நிலையை நினைத்து உள்ளுக்குள் கலங்குபவள். தன் தெய்வத்தின் முன் அதிகாலையில் தினமும் கைவிரித்து நிற்பவளாக, அதன் பொருட்டு தன் நீண்ட ஆயுளை அதிகாலையிலேயே வெறுப்பளாக இருப்பவள்.
வாசல்படிகளில் அமர்ந்து மற்றுமொரு நாளை சாலையில் செல்லும் இளவட்டங்களுடன் தொடங்குகிறாள். பொண்ணுபாக்கட்டுமா,மாப்பிள்ளை பாக்கட்டுமா பேத்தி என்று நையாண்டியுடன் பேசினாலும் தன்மனம் விரும்பும் சொந்த பேத்தியிடம் அவள் மறுப்பதை கேட்கக்கூடாது என்ற விவேகம் அறிந்தவளாக மௌனித்திருக்கிறாள்.
“வயசாவுதே…ஒரு வரைமுறையா பேசுறீங்களா…படிக்கற பிள்ளைங்க்கிட்ட பேசறபேச்சா இது…”
“பெருசா கண்டுட்டான்…வரமுற…”என்று எள்ளலாக சிரித்துக்கொண்டது கிழவி.
Comments
Post a Comment