Skip to main content

அம்பறாத்தூணி [கவிஞர் இசை கவிதைகள்]

 [மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை]

இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு. 

அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம். 


          கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள். 

அதளபாதாளம்

உறுமிக்கொண்டிருக்கிறது.

சொல்லைப் பிடித்துத்

தொங்கிக்கொண்டிருக்கிறேன்.


பழுக்கக் காய்ச்சிய

சொல்லை எடுத்து

நெஞ்சில்

ஒரு இழு இழுத்தேன்


கூவி வருகிறதொரு சொல்

அதனெதிரே

ஆடாது அசையாது

உறுதி காத்து நிற்பேன்

பிறகு

துண்டு துண்டாவேன்.


கடைசிச் சருகும்

காற்றில் பறந்த பிறகு

சொல்லை சொல்லில் கலந்து குடி.


நஞ்சு திரண்டுவிட்டது

சொல்லே

நீலகண்டன்.


பச்சைநாவி அம்பு என்ற ஒருவகை உண்டு. விஷம் தடவப்பட்டது. அது எந்த வகை அம்பு என்றாலும் அதன் இலக்கு உயிர். சொல்லே நீலகண்டன் என்ற வரியை வாசித்ததும் புத்தகத்தை மூடி வைக்கவே தோன்றும். மறுபடி ஈர்க்கும் வசீகரம் அதே சொல்லிற்கு உண்டு.

விஷமி

புழங்கும் சொல்தான்

என்றாலும் பொருள் தேடிப்பார்த்தேன்

விஷமம் பிடித்த அகராதியொன்று

‘பிரிவு என்பது

இமைப்பொழுதும் நீங்காதிருத்தல்’ என்றது.


இந்தக் கவிதையில் உள்ள சொல்லை வட்சந்தம் [ எதிரில் உள்ள வில்லின் நாணை அறுப்பது] என்று சொல்லலாம். ஒருவனை நிராயுதபாணியாக்கும் ஒன்று இக்கவிதையில் உள்ளது. இசையின் கவிதையை இப்படியும் பார்க்க முடிகிறது. நிராயுதபாணியின் சொல். காலகாலமாக கவிஞன் களத்தில் நிற்கிறான். காலம் அவனுக்கு அளிக்கும் களம். அல்லது அவனே உருவாக்கிக் கொள்ளும் களம். 

ஆனால் கவிஞன் ஒருபோதும் பிறனை நோக்கி ஆயுதம் எடுப்பவன் அல்லன். அதனாலேயே அர்ஜூனன்களின் அம்பில் தெரியும் இன்னொரு முகம் கர்ணனுடையதும் கூட. அவன் எடுத்ததெல்லாம் இருமுக அம்பு.

ஆனால் கர்ணன் விடுத்த எல்லா பாணங்களும் தன்னை நோக்கியவையே. அவன் தொடுத்த கணைகளும், விடுத்த கணைகளும், தொடுக்காது விட்ட கணைகளும் என்று அனைத்து கணைகளும் அவனில் பாய்ந்த கணைகளே. கவிஞர்கள் காலகாலமாக களத்தில் நிற்பது கர்ணனின் இடத்தில் என்று சொல்லலாம். கவிஞன் தன்னை நோக்கியே காலம் தரும் பிரம்மாஸ்திரங்களை தொடுத்துக்கொள்பவன். 

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவறவிடுகிறார்.

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குக்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலில் ஏற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கிடையே

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை”

பிதாவே ! தயவு பண்ணி எம்மைக் கைவிடும்

இருபத்தோறாம் நூற்றாண்டில் கவிஞர்கள் நிற்கும் களம் இது. இதில் இசையின் கவிதைகள் அன்பிலிருந்து, நம்பிக்கையில் இருந்து விலக்கம் கொள்ளப் கொள்ளப் பார்க்கிறது. சொந்த நகங்களை பற்களை பார்த்து பேசுகிறது. தன்னை சில நேரங்களில் சிறுஔியைக் கூட தாங்காது கண்களை மூடிக் கொள்ளப் பார்க்கிறது. தொட்டாச்சுருங்கி சிறு தொடுகையையும் மறுதலிப்பது போல.  என்றாலும் கூட அம்பும், அம்பு நிழலும் போல கவிதையும் அதன் ஔியும். கவிஞனின் அம்பு எய்யப்படாத அம்பும் கூட. அது தன் நுனியை தாழ்த்தி மானுடன் தலையின் வைப்பது.

கவிதையின் ஆசி

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ அந்தப்பூவின் பெயரைச் சொல்.

என்று மத்தகம் தாழ்த்தி தும்பிக்கை தலையில் வைக்கும் கவிதைகளாக இசையின் கவிதைகள் உள்ளன. அவை தன் மத்தக சொற்களை தணித்துக்கொண்டன. கசப்பால் பிளர உயர்ந்த தும்பிக்கையை மானுடத்தின் பொருட்டு தாழ்த்தி கொண்ட கவிதைகள் இவை. காலத்தின் தும்பிக்கையில் உள்ள அந்தப்பூவின் பெயர் கவிஞன் என்றும் சொல்லலாம். காலகாலமாக கவிஞர்கள்  அம்பாறாத்துணிகளே. உயர்த்திய வில்லை விட சில சந்தர்ப்பங்களில் தாழ்த்திய வில் அருள் கொண்டது. அதற்காக கவிஞர் இசைக்கு அன்பு. 


[ கவிஞர் இசையின்  2008_2023 கவிதைகள் என்ற தொகுப்பில் உள்ள சில கவிதைகளை முன் வைத்து எழுதியது]







Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...