Skip to main content

Posts

Showing posts from May, 2024

அந்த கிச்சிலி மரத்தடியில்

        [ஜனவரி 30, 2023 தமிழினி இணைய இதழில் வெளியான கதை] அந்த கிச்சிலி மரத்தடியில் யுவான் தன்சிவந்த மெல்லிய இடது கரத்தை நீண்ட மரத்திண்டின் மீது அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்த சிறுவீட்டின் வடக்கு புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக்கேட்டது. அந்த ஒலியை கேட்டபடி அவன் வலது கரத்தின் இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டை சீவி கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன்  லயித்திருந்தான். அதன் பின்ணனியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் புன்னகைக்கொண்டது. அந்த மரவீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைக்கபடி இருக்க வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையை பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியில் இருந்த வலி படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடி சன்னலருகே சென்று நின்றான். கண்முன்னால் ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கணேமுன்னே தூய வெள்ளை...

முதல் குயிலோசை

 எப்பொழுதும் கோடை முடியும் தருணத்தில் ஜூன் மாதத்துவக்கத்தில் குயிலின் முதல் குரல் கேட்கும். ஒரு வாரமாக தினமும் மதிய நேரத்தில் மழை துவங்கி பெய்வதும் நிற்பதுமாக இருக்கிறது. திடீரென்று நல்ல மழை. பின் தூரல். வெயில் இல்லாத புழுக்கம். இன்று காலையில் சமையலறையில் இருக்கும் போது கூகூகூ என்று இந்த ஆண்டின் முதல் குயில் குரல். ஒரே ஒரு கூவல் தான். பின்பு கேட்கவில்லை. வீட்டின் மேற்கு புறம் பின்வாசலின் பக்கவாட்டில் பெரிய காலிஇடம் உண்டு. முருங்கை ,தென்னை, பெரிய நுணா மரம், செடிவகைகள் வளர்ந்த இடம். அங்கு குயில்களை பார்க்கமுடியும்.  குயில் குரலை கேட்தும் முதலில் 'ஐ' என்று ஒரு குதூகலம். அது ஒரு வெயிலின் குரல் என்று என் மனதில் பதிந்துவிட்டது. ஒரு ஆண்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம்படி பலமுறை தொடங்கும். சிலருக்கு அவர்களின் பிறந்தநாள். சிலருக்கு வேலை கிடைத்தநாள். பலருக்கு திருமண நாள் என்று பலவிதங்களில் மீண்டும் மீண்டும் நம்மை புதிதாய் துவக்கிக்கொள்ள முயல்கிறோம்.  எப்போதும் ஓடக்கூடிய வண்டி என்றாலும் காற்று குறைவது போல...டயர் மாற்றுவது போல...ரயில் தண்டவாளங்களை பழுது பார்ப்பது போல ஒன்று. அவர...

அம்பையின் படைப்புலகம் 4

 நீலி இணைய இதழில் பிப்ரவரி 2024 ல் வெளியான கட்டுரை [அம்பையின் துப்பறியும் கதைகளை முன்வைத்து...] தடயங்கள் துப்பறியும் கதைகளை வாசிக்கும் போது நமக்கு உலகம் முழுவதுமே தடயங்களால் ஆனது தானோ என்று தோன்றும். தொல்படிமங்கள், எச்சங்களில் இருந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ,கோவில்கள் என்று அனைத்தும் ஒருபார்வையில் தடயங்களும் கூட. தனியளவில் நாமே கூட ஒரு தடயம். நம் மரபணு எவ்வளவு பெரிய உயிரியல் தடயம். தடயம் என்பது அடையாளம் காணுதல் என்றும் பொருள்படுகிறது.  இலக்கியத்தை உளவியல் தடயங்களாக உயிரியல் துறை எடுத்துக்கொள்ளும். விட்டுச்செல்லுதல் ஒரு முனையில் கலையாகவும், அடையாளமாகவும், நிலைநிறுத்திக் கொள்ளுதலாகவும் இருக்கும் போது இன்னொரு முனையில் அதுவே குற்றப் பின்னணியில் தடயங்களாக ஆகிறது. நான் முதன்முதலில் வாசித்த க்ரைம் நாவலின் வரி இன் னும் நினைவில் இருக்கிறது. பம்பாய்க்கு பத்தாவது மைலில் என்று அந்தக்கதை தொடங்கியது. என்னளவில் சிறுவயதில்  க்ரைம்புத்தகங்கள் ஒரு வரண்ட தன்மையை கொண்டதாகத் தோன்றும். வீட்டில் ஒருகட்டத்தில் குவிந்த க்ரைமிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன். கொரானா ஊரடங்கின் போது மறுபடியும் நிறைய து...

அம்பையின் படைப்புலகம் 3

 [ஆகஸ்ட் 2023 நீலி இதழில் வெளியான கட்டுரை] காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து.                  நீரெல்லாம் கங்கை  அவள் எந்தச் சேறும்,சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம்,முடிவு இல்லாதவள்                                      _அம்பை [பிரசுரிக்கப்படாத கைப்பரதி கதையில் இருந்து] அம்பையின் காட்டில் ஒரு மான் என்ற சிறுகதைத் தொகுப்பு பரவலாக வலுவான பெண் கதாப்பாத்திரங்களை கொண்டுள்ளது. இந்தத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் அடுத்தடுத்த வாசிப்புகளிலும் வாசிப்புசுவை குறையாதவை. இதில் உள்ள சில கதைகளை வெவ்வேறு வயதுகளில் தொடர்ந்து வாசிக்கிறேன். பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர், அடவி, பிரசுரிக்கப்படாத கைப்பிரதி போன்ற கதைகள் முக்கியமானவை. இந்தத்தொகுப்பில் அம்பையின் மொழி வசீகரமான ஒரு இறகைப்போல இயல்பாக பறக்கிறது. அம்பையின் ஆழ்உள்ளத்தை கட்டமைக்கும் புராண இதிகாச கதைகள் மற்றும் கதைமாந்தர்கள், மரபிசை, தமிழ் இலக்கிய பாடல்கள்,...

மழைமுகம்

பனிநீர்,குளிர்,தண்மை,நளிர்,அளி என்று பல சொற்கள் நம்மிடம் உண்டு. எனக்கு தண்மை என்ற சொல் மீது ஈர்ப்பு உண்டு. அந்த சொல்லிலேயே அந்த உணர்வு தெரியும். குறைச்சல் கூடுதலில்லா ஒரு இதநிலை. அன்பு போல. இங்கு அனைத்து பருவநிலைகளுமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோடை, குளிர், மழை,காற்றுகாலம் என்று அனைத்துமே.  கோடை மழைக்கான முதல் முழக்கமே எங்காவது பக்கத்தில் இடிவிழும் சத்தத்துடன் நம்மை அதிரவைத்தடி வரும். இந்த கோடைமழையும் எப்பொழுதும் போல இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் இடிவிழுந்தபடி வந்தது. சென்ற முறை ஒரு பனைமரத்தை எரிய வைத்தது. இரண்டுநாட்களுக்கு முன் மழைப்பெய்யாமல் முழக்கமாக மட்டும்  அமைதியாகிவிட்டது. அடுத்தநாள் காலையில் மாடியில் படிந்திருந்தன புழுதியில் நீர்சொட்டுகளின் தடங்கள். கண்ணன் தன் மழைக்கால்களுடன் சீராக நடந்து விளையாடியது போல தூரலின் காய்ந்த தடங்கள். மாடியின் சிவப்பு ஓட்டுத்தரை முழுவதும் ஏதோ ஒரு லிபியை தூரல்கள்  எழுதி சென்றிருந்தன. நேற்று இரவு அரைமணி நேரத்திற்கு மேல் மழை. ஒரு உழவு மழை. காய்ந்து கிடக்கும் மண்ணை கலப்பையால் மேலாக ஒரு கீறுகீறிப்போடலாம். ஆனால் பெரும்பாலும் இங்கு அ...

சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு.  அப்படி ஒரு சொல் அறம். https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post.html மேற்கண்ட பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது.  அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது. மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்...

வெளிச்சம் கதை பற்றிய உரையாடல்

 [அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.] கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு... கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின்  சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்ப...