அந்த கிச்சிலி மரத்தடியில்

        [ஜனவரி 30, 2023 தமிழினி இணைய இதழில் வெளியான கதை]

அந்த கிச்சிலி மரத்தடியில்

யுவான் தன்சிவந்த மெல்லிய இடது கரத்தை நீண்ட மரத்திண்டின் மீது அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்த சிறுவீட்டின் வடக்கு புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக்கேட்டது. அந்த ஒலியை கேட்டபடி அவன் வலது கரத்தின் இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டை சீவி கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன்  லயித்திருந்தான். அதன் பின்ணனியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் புன்னகைக்கொண்டது. அந்த மரவீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைக்கபடி இருக்க வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையை பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியில் இருந்த வலி படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடி சன்னலருகே சென்று நின்றான்.


கண்முன்னால் ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கணேமுன்னே தூய வெள்ளையான பனித்துகள்கள் விழுந்து கொண்டிருந்தன. 

“யுவான்…”

தாயின் குரல் சிந்தையை எங்கோத் தொட்டு அவனை நிமிண்டியது. உடலை உதறிக்கொண்டு திரும்பினான்.

“எப்போதும் அந்த மலைகளில் என்னத்தை காண்கிறாய் மகனே,” என்று அவனுடைய செம்பட்டை நிற முடிகள் அடந்த தலையை தனது இடதுகரத்தினால் கோதினாள். வலதுகையிலிருந்து ஆவிஎழுந்து கொண்டிருந்த காய்கறிரசம் நிறைந்த  கோப்பையை அவனிடம் நீட்டினாள். அவன் தன் தாயின் முகத்தைப் பார்த்து பேசத்தொடங்கினான். சுருக்கங்கள் பரடத்தொடங்கியிருந்த வட்டமுகம் அவளுக்கு. அதில் நெற்றி சுருக்கம் ஒன்று மட்டும் மாறாத வேதனையைப்போல நிரந்தரமாக தங்கியிருந்தது. அவன் இடது கையின் ஆள்காட்டி விரலால் அந்த சுருக்கத்தை இருமுறை தடவினான். அவள் அவன் கையை விலக்கிவிட்டு புன்னகைத்தாள்.

“அம்மா..எங்கோ அறியாத வெளியில் இருந்து பனித்துகள்கள் எதைத்தேடி இத்தனை தொலைவு வருகின்றன? இத்தனை தொலைவு வந்து சேர்ந்த அவைகள் தங்களை உதிர்த்துக்கொள்ள இந்த நிலம் போதுமா? இந்த நிலத்தில் உள்ள எது அவைகளை இங்கு இப்படி பொழியச்செய்கின்றன? யார் இத்தனை பனியை இங்கே வரச்செய்தார்கள்?”

“யாரும் வரச்செய்யவில்லை மகனே…அவை தானாகவே இங்கே வருகின்றன,”

“தானாகவே வருகின்றன என்றால் யாரைத்தேடி, எதைத்தேடி.. இத்தனை தூய நிறத்தில், இத்தனை தூயக்குளிராக இங்கு  வருகின்றன,”

அவள் அதற்கு மேல் பதில் சொல்லத்தெரியாதவளாக  அமைதியானாள். அவன் தொண்டையில் ரசத்தின் இதமான வெப்பம் இறங்கியது. அவன் கண்களைத்திருப்பி பனிமூடி மறைந்திருந்த செடிகளை, அங்கங்கே தெரிந்த சிறிய வீட்டுக்கூரைகளை, உறைந்த அல்பைன் மலைச்சிகரங்களை  பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பனிப்பொழிவினூடே, வீசும் காற்றில், தொலைவில் உள்ள வீட்டின் முன்பு கோரையால் செய்யப்பட்ட விண்மீன் ஒன்று காற்றாடி போல அசைவது அவனுக்குத் தெரிந்தது. அறுந்து விழக்காத்திருக்கும் அதை காற் று அசைப்பதன் அதிர்வு தாங்காது அது ஊசலாடியது. அதை காணக்இயலாமல் அவன் பார்வையை தழைத்துக் கொண்டான்.

அவன் மீண்டும் இழைப்புளியை எடுத்து மரத்தை இழைக்கத் தொடங்கினான்.

“யுவான்...”

அவன் காதில் விழவில்லை. அவன் ஒரு செவியில் தன் அன்னையின் அழைப்பு கேட்க, மறு செவியில் எங்கிருந்தோ ஒரு செந்நாரையின் ‘தவக் தவக்’ குரல்ஒலி தாயின்  குரலை கேட்கவிடாது அவனை தான் அழைத்தது.

அவன் தன்னுள் ஆழ்ந்தான். தூயவெண்மையில் குருதி கலந்ததைப் போன்று வெண்சிவப்பான பறவை. அது யாருடைய இரத்தம். என் தலைவன் சிலுவையில் சிந்திய குருதியின் ஒருதுளியை இந்த பனிக்கு அளித்து செந்நாரையாக மீண்டும் உயிர்கொண்டானோ? கூட்டமாக பனிக்கு எங்கோ ஒதுங்கி நிற்கும்  அவையெல்லாம் அவன் உயிர்த்தெழுகைகளா? அவற்றை தூது விட்டு அவன் எதற்கு என்னை அழைக்கிறான்? இந்தக்குரல் ஏன் என் தொண்டையை வலிக்கச்செய்கிறது? என் உயிரும் அவனுக்கானது தானோ? என்று அவன்  நினைக்கும் போதே“யுவான்..என்ன செய்கிறாய் நீ,” என்றபடி அவனுடைய தாய் அந்த சொற்களின் குறுக்கே வந்து நின்றாள். 

அவன் மீண்டும் இழைக்கும் மரத்திலேயே கவனமானான். அவள் சன்னலில் சாய்ந்து நின்றாள்.

“அம்மா..இந்த ஓக்மரம் இப்போது நிர்வாணமாக எத்தனை அழகாக உள்ளது…வெளியே அந்த செடிகளை பனி போர்த்தி அழகற்று கிடக்கின்றன,”

“இறைவனின் குழந்தைகள் இப்படி சொல்லலாகாது மகனே,”

“நிர்வாணம் அழகுதானே தாயே,”

“அது பாவம் மகனே,”

“எனக்கு அழகாகத் தெரிகிறதே..”

அவள் ஒன்றும் சொல்லாமல் அருகில் கிடந்த பெரிய மரத்திண்டில் பெருமூச்சுடன் அமர்ந்து கொண்டாள். அவளின் மெலிந்த உடலில் இருந்து மூச்சு விசையாக வெளியேறிக் கொண்டிருந்தது. வறுமையும், பசியும் எரித்த உடலின் மிச்சத்தை அவனுக்காக வைத்திருந்தாள். மகனின் ஓயாத சிந்தனைகள் அவளையும் அலைகழித்தன. காற்றில் உழையும் கடலும், அதனுடன் சேர்ந்து உழையும் பெருங்கலம் போல அவனுடன்  அவளும் ஆட்டம் கண்டாள். மகனின் புன்னகைக் கசியும் முகம் தனக்கு ஏன் பதற்றத்தை அளிக்கிறது என்று எண்ணி எண்ணி மருண்டாள்.

 பிள்ளையின் சிரிப்பை அஞ்சும் தாயென என்னை துரத்தும் அச்சம் எது? என்ற கேள்வியை தனக்குத்தானே தினமும் கேட்டுக்கொண்டாள். அவனுடைய இளம்சிவப்பான உதடுகளின் மீது மெல்லிய சிவந்த பூனைமயிர்கள். வெள்ளை முகத்தின் சிவந்த பருக்களை மேலும் அழகாக்கும் அந்தத் தூயப்புன்னகை என்னை ஏன் கலவரப்படுத்துகிறது? பேரழகு தரும் அச்சம். அவனை பேரழகாக்குவது எது? இவனிடமுள்ள இதே அழகுதான் இவன் வயது பிள்ளைகள் அனைவரிடமும் உள்ளது. இவன் கண்களில் உள்ள அந்த வெறிப்பும், எதையோ தொலைத்தவன் அதை நிரந்தரமாக ஒவ்வொரு கணமும் தேடுவதைப் போன்ற கண்கள் தான் அவனை இத்தனை அழகாக்கி வைக்கிறது. முலை தேடும் சிசுவின் பரிதவிப்புள்ள கண்கள் இவை. பால் வற்றிப் போனமுலை சப்பிய குழந்தை பசியுடன் தாய் முகத்தை அன்னாந்து பார்க்கும் கண்கள் இவை. இந்தப்பார்வையை தாள முடியாமல் தான் நான் இவனை எப்போதும் அதட்டுகிறேன். அருகில் இருந்து விலக்கி வைக்கறேன். தாய் அஞ்சும் பிள்ளை யாரைத் தேடுகிறது?

அதற்குள் யுவான் மரச்சிம்புகளை இணைத்து ஒரு மரவாளியை செய்யத் தொடங்கினான். அவன் கைகள் அனிச்சையாக இயங்கின. மெதுவாக அழகாக அவன் மரச்சிம்புகளை கண்முன்னே இணைத்தான். அது மரத்தை கொண்டே மரத்தை இணைத்து கட்டப்பட்ட அகலமான வாளி. 

“இன்று இதை நிக்கோலாவின் வீட்டில் கொடுத்தால் நாம் பசியாறும் அளவு கோதுமைமாவு கிடைக்கும்,”

“ஆமாம் அம்மா.. ஒரு லில்லிப்பூ பூத்ததைப்போல இந்த வாளி விரிந்து பூத்திருக்கிறது..லில்லிப்பூவும் கூட நிர்வணமானது தானே தாயே,”

“யுவான்..எதையாவது நினைத்துக் கொண்டிருக்காமல் படுத்து ஓய்வெடு..நான் நிக்கோலா வீட்டிற்கு சென்று வந்து உணவு தயாரித்து தருகிறேன்,” என்றபடி தலைமூக்காடை எடுத்துக்கொண்டு, மொத்தமான அங்கியை போர்த்தியபடி தோல் காலணிகளைத் தேடினேன். வீட்டைவிட்டு வெளியே வந்ததும்  பனியால் உடல் சிலிர்த்தது. யுவானைப் பற்றிய நினைவு மறுபடியும் சூழ்ந்து கொள்ள பனிஉதிர்ந்து கொண்டிருந்த சாலையில் நடந்தேன். அனைவரும் சொல்வதைப்போல இவன் இளைஞனாகி விட்டதால் இப்படி பேசுகிறானா? ஆனால் இளைஞனான எவனும் இப்படி வெகுளியாக பேசி அறிந்ததில்லையே. இல்லை மற்றவர்கள் சொல்வதைப்போல இவன் பித்தனா? ஒரு பித்தனால் இவ்வளவு அழகான மர வாளியை செய்துவிடமுடியுமா! என்று என் வலது கையிலிருந்து வாளியை உயர்த்திப் பார்த்தேன். அவன் சொல்வதைப் போலவே இது ஒரு பெரிய லில்லிமலர் தான். அவன் சொல்வதில் பிழை என்ன? செதுக்க செதுக்க மரப்பட்டைகள் உதிர்ந்த தண்டு எத்தனை வழுவழுப்பாக, எந்த முரடுகளும் அற்று அழகாகிறது. அது மரத்தின் நிர்வாணம் தானே என்று மனம் நினைத்த உடன் அங்கேயே நின்று மன்னிப்பிற்கான வார்த்தைகளை முணுமுணுத்தேன். என் கால்கள் உதிரும் பனிப்பூக்களை மிதித்து தரையாக மாற்றிக்கொண்டிருக்க நடந்தேன். 

யுவான் வீட்டு வாசலின்  மரப்படிகளில் அமர்ந்து பனித்துருவல்களை உதிர்த்து பூக்களாக்கினான். அந்தப் பூக்கள் மண்ணில் உறைந்த தெய்வத்தை தொட்டு சிலிர்த்து வெப்பமில்லாத சூரிய ஔியில் நட்சத்திரங்கள் போல மின்னின. அவன் அதன் ஔியில் திளைத்தவனாக மீண்டும் மீண்டும் பனியை அள்ளி அள்ளி உதிர்த்தான். குளிரில் அவன் கைகள் மரத்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்தில் அவனால் விரல்களை வளைக்க முடியவில்லை. பத்துவிரல்களும் விரிந்தபடியே நின்றன. அவனால் கொஞ்சம் கூட விரல்களை மடக்க இயலாது ஆனப்பின் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். விரல்களில் இருந்த வலி ஊர்ந்து கைகளுக்குச் சென்றது. பின் தோளில் ஏறியது. அவன் புன்னகைத்தான். 

***

இப்போது யுவான் மருத்துவமனையில் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தான். அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்லத் தொடங்கியதும் அவன் தாய் நிம்மதி அடைந்தாள். சாலமன் பள்ளியில் அவன் படிக்கச் செல்வதை ஊரார் பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். அவன் தாய்க்கு இனி அவன் திரும்பி இந்த இல்லத்திற்கு வருவானா என்ற எண்ணமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பனியும் வெயிலுமான ஒரு இளம் காலையில் அவன் அங்கிருந்து கிளம்பிச்சென்றான். தன்வீட்டை திரும்பிப் பார்க்காமலேயே  செல்லும் அவனைத் அந்தத்தாய் அந்தச்சிறு மரவீட்டின் வாயிலில் தலைசாய்த்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மார்பகங்கள் அதிர்ந்து துவண்டன. அவன் ஒரு நெருப்புத்துண்டம் போல இருந்ததை அவள் எப்போதும் உணர்ந்திருந்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் பற்றிக்காள்ளும் நெருப்புத்துண்டம். அவன் பற்றி எரிவதைப்போல கனவு கண்ட அந்த நாளில் அவள் தேவாலயத்தில் ஒரு முழுநாளும் மண்டியிட்டுக் கிடந்தாள். கூப்பியக்கரங்களை கீழிறக்காது ஈரமான கண்களுடன் அன்னாந்து பார்த்தபடி இருந்தாள். இரவு அணைந்து விண்மீன்கள் பூக்கத்தொடங்கிய பொழுதில் திடுக்கிட்டு கண்களை மாற்றி தேவாலயத்தின் மேற்கு வாயிலைப் பார்த்தாள். எரிவதாலேயே அவை விண்மீன்கள் என்று சொல்லி சிரித்தபடி யுவான் அவளிடம் வந்தான். அவளின் தோளை பற்றியிருந்த அவன் கைகளின் குளுமை அவளை சிலிர்க்க வைத்தது. அந்தத்தொடுகையில் எப்போதும் இருக்கும் ஆறுதலை உணர்ந்தவளாக அவள் அவனுடன் அந்த இருள் மின்னும் ஒற்றையடிப்பாதையில்  வீட்டைநோக்கி நடந்தான். நடந்த வழியெங்கும் இவன் இப்படியே இருந்துவிட்டால் என்ன? என்று அவள் மனம் விம்மிக்கொண்டிருந்தது. அவள் கண்களில் மீண்டும் மீண்டும் ஈரம் சேர்ந்தது. அந்த ஈரம் அவள் கண்களை எரித்து மறைக்க இன்று அவள் கண்முன்னால் அவன் சூரியனின் வெள்ளை வெயிலிற்குள் மறைந்து, எங்கோ தான் தேடும் தொலைவை நோக்கி சென்றிருந்தான்.

****

அந்த வசந்தகால தொடக்கத்திற்கு அனைவரும் தயாராக இருந்தனர். தானியங்களை அரைத்து மாவாக்கி வைத்திருந்தார்கள். இரவெல்லாம் கணப்பின் முன் அமர்ந்து உலர்ந்த மாவை இனிப்பிட்டு பிசைந்தார்கள். மாவை உருண்டைகளாக்கினார்கள்.  குறைத்து எரியவிட்ட கணப்பின் கல்சுவரில் மாவுஉருண்டைகளை  வில்லைகளாக தட்டி வைத்தனர். பக்குவமான வெப்பம் தொடத்தொட மாவு பூரித்து எழுந்தது. அவர்கள் தங்களின் தேவனிற்காக கடல் வழிவிட்ட நிகழ்வை பாடல்களாக படியபடி தங்கள் அப்பங்களுக்கு தேவையான பழங்களை எடுத்து  விண்மீன்களைப்போல சிறுசிறு துண்டங்களாக்கி தட்டுகளில் வைத்தார்கள். 

அந்த நகரத்து தேவாலயத்தில் பாதிரியான யுவான் தன்னுடைய தேவாலயத்தில் பரவசமாக இருந்தார். அவர் தன்னுடைய ஏடுகளில் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர்களிடம் சிக்கியிருந்ததை கூட கவனிக்காதவராக அவர் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருந்தார். சாலமனின் வரிகள் அவருக்குள் ஒரு ஊற்று போல பிய்ச்சி அடித்துக்கொண்டிருக்க அதை தாளாத அவர் எப்போதும் சிரித்தபடியும், அந்தப்பாடல்களை பாடியபடியும் வலம் வந்து கொண்டிருந்தார்.

‘உமது பெயரோ உன் வாசனையைவிட

மேலாக எங்கும் பரவியுள்ளது..

திராட்சை ரசத்தைவிட மேலானது

உனது காதல்..

திராட்சை ரசத்தைவிட தூயது

உன்னுடைய காதல்’ என்ற சாலமனின் வரிகளை அப்போது அவர் பாடிக்கொண்டிருந்தார்.

உறைந்த பனி அமைதியாய் இருளில் நிற்க, கவிதை வழிந்து பெருகும் நெஞ்சத்துடன் யுவான் தன் கைகளை கட்டிக்கொண்டு இருளை பார்த்தபடி நின்றார். உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒன்று அவரை ஆட்கொண்டிருந்தது. 

‘கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன்..

அங்கேயல்லவா உன் தாய் உன்னை வலித்துப்பெற்றாள்..

உன் நெஞ்சில் என்னை முத்திரையாக பொறித்துக்கொள்..

உன் கைகளில் என்னை இலச்சனையாய் அணிந்துகொள்..

ஆம் காதல் சாவைப் போலவே மகத்தானது’

என்ற சாலமனின் கவிதையை பாடத்தொடங்கினார். அந்த கவிதையில் வரும் தலைவி நானே என்று கூவினார்.

மேலும் மேலும் அந்த சூரியன் பனிவெளியை தன் கதிர்களால் தொட்டு உருக வைத்துக் கொண்டிருந்தது. பனியாக உறைந்திருந்த நீர் உருகி வழிய நகரவாசிகள் தங்கள் அப்பங்களை மற்றவருடன் பகிர்ந்து கொண்டார்கள். யுவான் மேலான பரவசத்தில் ‘ஆம் காதல் சாவைப்போலவே மகத்தனது’ என்று பாடிக்கொண்டிருந்தார். அன்று அந்த மேலான காதலே அவர் சாவை தொடங்கி வைத்திருந்தது.

திடீரென்று அவரின்  உள்ளுக்குள் ஓடிய சாலமனின் வரிகள் நின்றுவிட்டிருந்தன. அவர் கண்கள் நிறைந்து கொண்டிருக்க கண்களை மூடித்திறந்தார். அந்த தேவாலயத்தின் பெரிய முற்றத்தில் வெயில் வழிந்து அந்த பனிவெளியை தொட்டதும் அவர் உடலை உலுக்கிக்கொண்டார். ஔி விழுந்த இடத்தின் பனி உருகிக்கரைந்தது. அந்த நீரில் ஔி கலந்து சிவப்பு நிறமாய் தன்னைக் காட்டியது. கிச்சிலி பழங்களின் புளிப்பானது  இனிப்பாய் மாறும் காலம் அது. கிச்சிலி மரத்தின் பச்சைபழங்களில் இனிமை ஊறத்தொடங்கும் காலை அது. அவர் அவரை அறியாது அவரின் பாடலை பாடத்தொடங்கியிருந்தார்.

***

யுவான் எங்கோ ஒரு இருள் வெளிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே ஒலிகள் இல்லை. அவர் தன்னுள் ஔிர்ந்த மிகப்பெரிய வெளிச்சத்தால் தன் கண்களை மூடியபடி இருந்தார். அவர் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன. அங்கே அவரை தரையில் மண்டியிட செய்தார்கள்.

“நீ சொல்வது உண்மையா யுவான் ,”

“ஆம்,”

“அதை மீண்டும் சொல்,”

“நான் அந்த ஆண்டவரின் காதலி…இந்த நாளில் அதை நான் இந்த உலகிற்கு அறிவிக்கிறேன். காதலியாகியே அவரை நான் முழுமையாக சென்று அடைகிறேன்.  மூத்தவர்களே..அது பொறியில்  எழுந்த நெருப்பாகும்,”என்று அவர் சொல்லும் பொழுதே அவரின் மேல் அங்கி கலையப்பட்டது. அவரின் வெற்று முதுகில் சாட்டையின் கரம் சூளீர் என்று தொட்டது. 

‘பெருங்கடலும் அணைக்காது பெருங்காதலை’ என்று மீண்டும் சொன்னார்.

“இது அந்த மாமன்னரின் வரிகள்..ரகசியமாக ஒழிக்கப்பட்டது என பேரட்டில் பார்த்துள்ளான். அந்தப் பக்கங்களை இவன் பார்த்துவிட்டான்.  ஔித்தாலும்,அழித்தாலும் அவை வந்து சேர்ந்துவிட்டன  இவனை,”

“அதை அடைந்தவனுக்கு இங்கே சாவைத்தவிர வேறு ஒன்றில்லை,”

“இல்லை…இவன் அத்தனை உயர்ந்தவனில்லை. இவன் பித்தன்..காமுகன். சிறையில் அடைந்து கிடக்கட்டும்,”

அவரின் முதுகை அவர்களின் சாட்டைகளால் சிவப்பாக்கிக் கொண்டிருந்தன. அவர் ‘ஆம் காதல் சாவைப்போல மகத்தனது’ என்றே முனகிக் கொண்டிருந்தார். அவரை அவர்கள் அந்த இருட்டு அறையில் தள்ளி கதவுகளை என்றைக்குமாக  மூடினார்கள். முதுகுத்தண்டில் மின்னல் வெட்டுவதைப்போல வலி மின்னிக்கொண்டிருக்க அவர் குளிர்ந்த தரையில் கிடந்தார். அந்த வலி கால்களில் பரவியது. உடல் துடித்துத் துள்ளியது. உடலெங்கும் குளிர் நிறைந்து உறைந்தது. அவருக்கு சிறிய கோதுமை அப்பமும், தண்ணீரும் ஒரு சதுரவழி வழியே தரப்பட்டன. சிலநாட்களில் அவர் காதுகள் தரைக்குக்கீழே நடமாட்டத்தை உணர்ந்தது.

அவருக்கு தன் கால்களால்  ஒருஅடி எடுத்துவைப்பது அத்தனை கடுமையானதாக இருந்தது. நேராக நிற்பதற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. மனம் ஊற்றாக பொங்கிக் கொண்டிருந்தது. உடலெங்கும் வலியைத் தாண்டிக்கொண்டு ஏதோ ஒன்று அவரை நிலைகொள்ளாமல் ஆக்கியது.

‘ஓர் இருண்ட இரவில்

காதலால் எரிந்தபடி

நான் என் வீட்டை விட்டுச் செல்கிறேன்

எத்தனை இனிய வாய்ப்பு!’

என்று அவர் தனக்குத்தானே பாடிக்கொண்டார். 

அவர் வெளியேறி சென்ற வழியெங்கும் பனி அவருக்கு வழிவிட்டு சென்றது. அவர் பனிமீது நடந்து கொண்டே தன் உயிர் எரிக்கும் வெம்மையை பற்றி பாடினார். அவர் அந்த வெம்மையில் தானே எரிந்து சுடர்ந்து கொண்டிருந்தார். எங்கும் முடியாத சாலைகளில் தன் கால்களை இழுத்து இழுத்து நடந்தபடி அவர் சென்று கொண்டேயிருந்தார்.

அவர் தனக்கு மேலானவனை, எங்கோ இருப்பவனைத் தேடி அடையும் காதலியானார். எந்த நேரமும் அவர் விழிகள் வானத்தைக் கண்டு புன்னகைத்தன. தன்னை பித்தன் என்றவர்களுடன் இணைந்து தானும் சிரித்தார். பனி படர்ந்த கிராமங்களில் மடாலயங்களில் தங்கினார். மடாலயங்கள் இல்லாத ஊர்களில் தன் தச்சுஉளியை அவர் கையிலெடுக்கும் தோறும் அவருக்குள்ளே பாடல்கள் பெருகின. அவரின்  கைகளில் இருந்து சின்னஞ்சிறு சுடரைப் போன்ற மடாலயங்கள் எழுந்து வந்தன. அவர் முழுமையாக அவனின் காதலியானார். 

அவரின் பாடல்களில் அவன் ஔியானான்.

‘என்னைக் கொண்டு சேர்க்கும்

என்னைக்காத்திருக்கும் ஒருவனிடம்.

நான் நன்கறிந்தவன். என் உள்ளத்திற்கு இனியவன்.

எவருமே இல்லாத இடத்தில் எனக்காக காத்திருப்பவன்’

 என்று இருளை ஒளியாக்கினார். பாடல்களை தன்னை அவன் அருகில்  கொண்டு சேர்க்கும் ஔிமிக்க பாதையாக்கிக் கொண்டார்

அவரின் வழி எங்கும் பாடல்களால் அவனை நோக்கியே சென்று கொண்டிருந்தார். உள்ளுக்குள் பொங்கிய ஊற்று அவரின் உடல் வலிகளை பாடல்களாக மாற்றியது. தன் பாடல்களில் அவருக்கானவனாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தான். வழியெங்கும் பனிநிலத்தில் குளிர்முட்கள் தங்களின் கூர் முனைகளுடன் அவருக்காக  காத்திருந்தன. அவரின் சொற்களே அவரை வேட்டையாடின. 

மீண்டும் ஒரு உறைபனி காலத்தில் அவர் வயிற்றுக்குள் உண்டாகிய கத்தி தொண்டை வரை குத்திப்புண்ணாக்கி அவரை அறுக்கத் தொடங்கியது. எங்கும் வலி. அவன் நிறைந்து ஊறும் ஊற்றானது அவர் உடல். நோயும் வலியும் கூட அவனே என்று அவர் பாடினார்.

***

நான் தாயுடன் வாழ்ந்த அந்த ஊரைப்போன்ற இந்த ஊரிலிருந்து என்னால் விலகிச்செல்ல முடியவில்லை. இந்த வாழ்வில் நடந்து செல்வதற்கான வழிகள் இங்குடன் முடிகிறது என்று என் மனம் சொல்கிறது. தீராத தாகம். அருகில் யாரும் இல்லை. கேட்கவும் தோன்றவில்லை. அவனுக்கான பல்லாயிரம் ஆலயங்களில் ஏதோ ஒன்றின் மூலையில் கிடக்கிறேன்.

‘அவனுடைய கரம் மிக மென்மையாக

என் தொண்டையை வெட்டிச்செல்கிறது. 

என் உணர்வுகள் குருதியென வழிந்தோட நான் நினைவிழந்தேன்.

என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்.

என் தலைவன் தோள் சாய்ந்து என்னை உணர்கிறேன்.

இதோ எல்லாம் மறைகின்றன.

எஞ்சியவை எல்லாம்

என் ஆசைகள் முழுக்க.

ஏன் நானேகூட!

நான்  இறந்த அந்த லில்லிமலர் வெளியில்

அனைத்துமே தொலைந்து போயின!’

என் உடல் குளிர்ந்து கொண்டிருக்கிறது. என் கால்களில் வலியில்லை. கைகளில் வலி இல்லை. வயிற்றிலிருந்த கத்தி எங்கோ கிழித்து வெளியேறியிருந்தது. மெல்ல மெல்ல நான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன். லில்லி மலர்கள் வெண்மையாய் பூத்திருக்கும் காட்டின் எல்லையில் கையில் ஒரு லில்லி மலருடன் அவன் நிற்கிறான். அந்த கிச்சலி மரத்தடியில் நான் கண்டு கொண்டது இவனைத்தான். இன்றூ அவன் எனக்காகத்தான் நிற்கிறான். நான் இதற்காகவே என் வீட்டைவிட்டு வெளியேறி இத்தனை தொலைவு வந்தேன்.






யுவான் தன்சிவந்த மெல்லிய இடது கரத்தை நீண்ட மரத்திண்டின் மீது அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்த சிறுவீட்டின் வடக்கு புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக்கேட்டது. அந்த ஒலியை கேட்டபடி அவன் வலது கரத்தின் இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டை சீவி கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன்  லயித்திருந்தான். அதன் பின்ணனியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் புன்னகைக்கொண்டது. அந்த மரவீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைக்கபடி இருக்க வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையை பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியில் இருந்த வலி படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடி சன்னலருகே சென்று நின்றான்.

கண்முன்னால் ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கணேமுன்னே தூய வெள்ளையான பனித்துகள்கள் விழுந்து கொண்டிருந்தன. 

“யுவான்…”

தாயின் குரல் சிந்தையை எங்கோத் தொட்டு அவனை நிமிண்டியது. உடலை உதறிக்கொண்டு திரும்பினான்.

“எப்போதும் அந்த மலைகளில் என்னத்தை காண்கிறாய் மகனே,” என்று அவனுடைய செம்பட்டை நிற முடிகள் அடந்த தலையை தனது இடதுகரத்தினால் கோதினாள். வலதுகையிலிருந்து ஆவிஎழுந்து கொண்டிருந்த காய்கறிரசம் நிறைந்த  கோப்பையை அவனிடம் நீட்டினாள். அவன் தன் தாயின் முகத்தைப் பார்த்து பேசத்தொடங்கினான். சுருக்கங்கள் பரடத்தொடங்கியிருந்த வட்டமுகம் அவளுக்கு. அதில் நெற்றி சுருக்கம் ஒன்று மட்டும் மாறாத வேதனையைப்போல நிரந்தரமாக தங்கியிருந்தது. அவன் இடது கையின் ஆள்காட்டி விரலால் அந்த சுருக்கத்தை இருமுறை தடவினான். அவள் அவன் கையை விலக்கிவிட்டு புன்னகைத்தாள்.

“அம்மா..எங்கோ அறியாத வெளியில் இருந்து பனித்துகள்கள் எதைத்தேடி இத்தனை தொலைவு வருகின்றன? இத்தனை தொலைவு வந்து சேர்ந்த அவைகள் தங்களை உதிர்த்துக்கொள்ள இந்த நிலம் போதுமா? இந்த நிலத்தில் உள்ள எது அவைகளை இங்கு இப்படி பொழியச்செய்கின்றன? யார் இத்தனை பனியை இங்கே வரச்செய்தார்கள்?”

“யாரும் வரச்செய்யவில்லை மகனே…அவை தானாகவே இங்கே வருகின்றன,”

“தானாகவே வருகின்றன என்றால் யாரைத்தேடி, எதைத்தேடி.. இத்தனை தூய நிறத்தில், இத்தனை தூயக்குளிராக இங்கு  வருகின்றன,”

அவள் அதற்கு மேல் பதில் சொல்லத்தெரியாதவளாக  அமைதியானாள். அவன் தொண்டையில் ரசத்தின் இதமான வெப்பம் இறங்கியது. அவன் கண்களைத்திருப்பி பனிமூடி மறைந்திருந்த செடிகளை, அங்கங்கே தெரிந்த சிறிய வீட்டுக்கூரைகளை, உறைந்த அல்பைன் மலைச்சிகரங்களை  பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பனிப்பொழிவினூடே, வீசும் காற்றில், தொலைவில் உள்ள வீட்டின் முன்பு கோரையால் செய்யப்பட்ட விண்மீன் ஒன்று காற்றாடி போல அசைவது அவனுக்குத் தெரிந்தது. அறுந்து விழக்காத்திருக்கும் அதை காற் று அசைப்பதன் அதிர்வு தாங்காது அது ஊசலாடியது. அதை காணக்இயலாமல் அவன் பார்வையை தழைத்துக் கொண்டான்.

அவன் மீண்டும் இழைப்புளியை எடுத்து மரத்தை இழைக்கத் தொடங்கினான்.

“யுவான்...”

அவன் காதில் விழவில்லை. அவன் ஒரு செவியில் தன் அன்னையின் அழைப்பு கேட்க, மறு செவியில் எங்கிருந்தோ ஒரு செந்நாரையின் ‘தவக் தவக்’ குரல்ஒலி தாயின்  குரலை கேட்கவிடாது அவனை தான் அழைத்தது.

அவன் தன்னுள் ஆழ்ந்தான். தூயவெண்மையில் குருதி கலந்ததைப் போன்று வெண்சிவப்பான பறவை. அது யாருடைய இரத்தம். என் தலைவன் சிலுவையில் சிந்திய குருதியின் ஒருதுளியை இந்த பனிக்கு அளித்து செந்நாரையாக மீண்டும் உயிர்கொண்டானோ? கூட்டமாக பனிக்கு எங்கோ ஒதுங்கி நிற்கும்  அவையெல்லாம் அவன் உயிர்த்தெழுகைகளா? அவற்றை தூது விட்டு அவன் எதற்கு என்னை அழைக்கிறான்? இந்தக்குரல் ஏன் என் தொண்டையை வலிக்கச்செய்கிறது? என் உயிரும் அவனுக்கானது தானோ? என்று அவன்  நினைக்கும் போதே“யுவான்..என்ன செய்கிறாய் நீ,” என்றபடி அவனுடைய தாய் அந்த சொற்களின் குறுக்கே வந்து நின்றாள். 

அவன் மீண்டும் இழைக்கும் மரத்திலேயே கவனமானான். அவள் சன்னலில் சாய்ந்து நின்றாள்.

“அம்மா..இந்த ஓக்மரம் இப்போது நிர்வாணமாக எத்தனை அழகாக உள்ளது…வெளியே அந்த செடிகளை பனி போர்த்தி அழகற்று கிடக்கின்றன,”

“இறைவனின் குழந்தைகள் இப்படி சொல்லலாகாது மகனே,”

“நிர்வாணம் அழகுதானே தாயே,”

“அது பாவம் மகனே,”

“எனக்கு அழகாகத் தெரிகிறதே..”

அவள் ஒன்றும் சொல்லாமல் அருகில் கிடந்த பெரிய மரத்திண்டில் பெருமூச்சுடன் அமர்ந்து கொண்டாள். அவளின் மெலிந்த உடலில் இருந்து மூச்சு விசையாக வெளியேறிக் கொண்டிருந்தது. வறுமையும், பசியும் எரித்த உடலின் மிச்சத்தை அவனுக்காக வைத்திருந்தாள். மகனின் ஓயாத சிந்தனைகள் அவளையும் அலைகழித்தன. காற்றில் உழையும் கடலும், அதனுடன் சேர்ந்து உழையும் பெருங்கலம் போல அவனுடன்  அவளும் ஆட்டம் கண்டாள். மகனின் புன்னகைக் கசியும் முகம் தனக்கு ஏன் பதற்றத்தை அளிக்கிறது என்று எண்ணி எண்ணி மருண்டாள்.

 பிள்ளையின் சிரிப்பை அஞ்சும் தாயென என்னை துரத்தும் அச்சம் எது? என்ற கேள்வியை தனக்குத்தானே தினமும் கேட்டுக்கொண்டாள். அவனுடைய இளம்சிவப்பான உதடுகளின் மீது மெல்லிய சிவந்த பூனைமயிர்கள். வெள்ளை முகத்தின் சிவந்த பருக்களை மேலும் அழகாக்கும் அந்தத் தூயப்புன்னகை என்னை ஏன் கலவரப்படுத்துகிறது? பேரழகு தரும் அச்சம். அவனை பேரழகாக்குவது எது? இவனிடமுள்ள இதே அழகுதான் இவன் வயது பிள்ளைகள் அனைவரிடமும் உள்ளது. இவன் கண்களில் உள்ள அந்த வெறிப்பும், எதையோ தொலைத்தவன் அதை நிரந்தரமாக ஒவ்வொரு கணமும் தேடுவதைப் போன்ற கண்கள் தான் அவனை இத்தனை அழகாக்கி வைக்கிறது. முலை தேடும் சிசுவின் பரிதவிப்புள்ள கண்கள் இவை. பால் வற்றிப் போனமுலை சப்பிய குழந்தை பசியுடன் தாய் முகத்தை அன்னாந்து பார்க்கும் கண்கள் இவை. இந்தப்பார்வையை தாள முடியாமல் தான் நான் இவனை எப்போதும் அதட்டுகிறேன். அருகில் இருந்து விலக்கி வைக்கறேன். தாய் அஞ்சும் பிள்ளை யாரைத் தேடுகிறது?

அதற்குள் யுவான் மரச்சிம்புகளை இணைத்து ஒரு மரவாளியை செய்யத் தொடங்கினான். அவன் கைகள் அனிச்சையாக இயங்கின. மெதுவாக அழகாக அவன் மரச்சிம்புகளை கண்முன்னே இணைத்தான். அது மரத்தை கொண்டே மரத்தை இணைத்து கட்டப்பட்ட அகலமான வாளி. 

“இன்று இதை நிக்கோலாவின் வீட்டில் கொடுத்தால் நாம் பசியாறும் அளவு கோதுமைமாவு கிடைக்கும்,”

“ஆமாம் அம்மா.. ஒரு லில்லிப்பூ பூத்ததைப்போல இந்த வாளி விரிந்து பூத்திருக்கிறது..லில்லிப்பூவும் கூட நிர்வணமானது தானே தாயே,”

“யுவான்..எதையாவது நினைத்துக் கொண்டிருக்காமல் படுத்து ஓய்வெடு..நான் நிக்கோலா வீட்டிற்கு சென்று வந்து உணவு தயாரித்து தருகிறேன்,” என்றபடி தலைமூக்காடை எடுத்துக்கொண்டு, மொத்தமான அங்கியை போர்த்தியபடி தோல் காலணிகளைத் தேடினேன். வீட்டைவிட்டு வெளியே வந்ததும்  பனியால் உடல் சிலிர்த்தது. யுவானைப் பற்றிய நினைவு மறுபடியும் சூழ்ந்து கொள்ள பனிஉதிர்ந்து கொண்டிருந்த சாலையில் நடந்தேன். அனைவரும் சொல்வதைப்போல இவன் இளைஞனாகி விட்டதால் இப்படி பேசுகிறானா? ஆனால் இளைஞனான எவனும் இப்படி வெகுளியாக பேசி அறிந்ததில்லையே. இல்லை மற்றவர்கள் சொல்வதைப்போல இவன் பித்தனா? ஒரு பித்தனால் இவ்வளவு அழகான மர வாளியை செய்துவிடமுடியுமா! என்று என் வலது கையிலிருந்து வாளியை உயர்த்திப் பார்த்தேன். அவன் சொல்வதைப் போலவே இது ஒரு பெரிய லில்லிமலர் தான். அவன் சொல்வதில் பிழை என்ன? செதுக்க செதுக்க மரப்பட்டைகள் உதிர்ந்த தண்டு எத்தனை வழுவழுப்பாக, எந்த முரடுகளும் அற்று அழகாகிறது. அது மரத்தின் நிர்வாணம் தானே என்று மனம் நினைத்த உடன் அங்கேயே நின்று மன்னிப்பிற்கான வார்த்தைகளை முணுமுணுத்தேன். என் கால்கள் உதிரும் பனிப்பூக்களை மிதித்து தரையாக மாற்றிக்கொண்டிருக்க நடந்தேன். 

யுவான் வீட்டு வாசலின்  மரப்படிகளில் அமர்ந்து பனித்துருவல்களை உதிர்த்து பூக்களாக்கினான். அந்தப் பூக்கள் மண்ணில் உறைந்த தெய்வத்தை தொட்டு சிலிர்த்து வெப்பமில்லாத சூரிய ஔியில் நட்சத்திரங்கள் போல மின்னின. அவன் அதன் ஔியில் திளைத்தவனாக மீண்டும் மீண்டும் பனியை அள்ளி அள்ளி உதிர்த்தான். குளிரில் அவன் கைகள் மரத்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்தில் அவனால் விரல்களை வளைக்க முடியவில்லை. பத்துவிரல்களும் விரிந்தபடியே நின்றன. அவனால் கொஞ்சம் கூட விரல்களை மடக்க இயலாது ஆனப்பின் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். விரல்களில் இருந்த வலி ஊர்ந்து கைகளுக்குச் சென்றது. பின் தோளில் ஏறியது. அவன் புன்னகைத்தான். 

***

இப்போது யுவான் மருத்துவமனையில் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தான். அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்லத் தொடங்கியதும் அவன் தாய் நிம்மதி அடைந்தாள். சாலமன் பள்ளியில் அவன் படிக்கச் செல்வதை ஊரார் பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். அவன் தாய்க்கு இனி அவன் திரும்பி இந்த இல்லத்திற்கு வருவானா என்ற எண்ணமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பனியும் வெயிலுமான ஒரு இளம் காலையில் அவன் அங்கிருந்து கிளம்பிச்சென்றான். தன்வீட்டை திரும்பிப் பார்க்காமலேயே  செல்லும் அவனைத் அந்தத்தாய் அந்தச்சிறு மரவீட்டின் வாயிலில் தலைசாய்த்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மார்பகங்கள் அதிர்ந்து துவண்டன. அவன் ஒரு நெருப்புத்துண்டம் போல இருந்ததை அவள் எப்போதும் உணர்ந்திருந்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் பற்றிக்காள்ளும் நெருப்புத்துண்டம். அவன் பற்றி எரிவதைப்போல கனவு கண்ட அந்த நாளில் அவள் தேவாலயத்தில் ஒரு முழுநாளும் மண்டியிட்டுக் கிடந்தாள். கூப்பியக்கரங்களை கீழிறக்காது ஈரமான கண்களுடன் அன்னாந்து பார்த்தபடி இருந்தாள். இரவு அணைந்து விண்மீன்கள் பூக்கத்தொடங்கிய பொழுதில் திடுக்கிட்டு கண்களை மாற்றி தேவாலயத்தின் மேற்கு வாயிலைப் பார்த்தாள். எரிவதாலேயே அவை விண்மீன்கள் என்று சொல்லி சிரித்தபடி யுவான் அவளிடம் வந்தான். அவளின் தோளை பற்றியிருந்த அவன் கைகளின் குளுமை அவளை சிலிர்க்க வைத்தது. அந்தத்தொடுகையில் எப்போதும் இருக்கும் ஆறுதலை உணர்ந்தவளாக அவள் அவனுடன் அந்த இருள் மின்னும் ஒற்றையடிப்பாதையில்  வீட்டைநோக்கி நடந்தான். நடந்த வழியெங்கும் இவன் இப்படியே இருந்துவிட்டால் என்ன? என்று அவள் மனம் விம்மிக்கொண்டிருந்தது. அவள் கண்களில் மீண்டும் மீண்டும் ஈரம் சேர்ந்தது. அந்த ஈரம் அவள் கண்களை எரித்து மறைக்க இன்று அவள் கண்முன்னால் அவன் சூரியனின் வெள்ளை வெயிலிற்குள் மறைந்து, எங்கோ தான் தேடும் தொலைவை நோக்கி சென்றிருந்தான்.

****

அந்த வசந்தகால தொடக்கத்திற்கு அனைவரும் தயாராக இருந்தனர். தானியங்களை அரைத்து மாவாக்கி வைத்திருந்தார்கள். இரவெல்லாம் கணப்பின் முன் அமர்ந்து உலர்ந்த மாவை இனிப்பிட்டு பிசைந்தார்கள். மாவை உருண்டைகளாக்கினார்கள்.  குறைத்து எரியவிட்ட கணப்பின் கல்சுவரில் மாவுஉருண்டைகளை  வில்லைகளாக தட்டி வைத்தனர். பக்குவமான வெப்பம் தொடத்தொட மாவு பூரித்து எழுந்தது. அவர்கள் தங்களின் தேவனிற்காக கடல் வழிவிட்ட நிகழ்வை பாடல்களாக படியபடி தங்கள் அப்பங்களுக்கு தேவையான பழங்களை எடுத்து  விண்மீன்களைப்போல சிறுசிறு துண்டங்களாக்கி தட்டுகளில் வைத்தார்கள். 

அந்த நகரத்து தேவாலயத்தில் பாதிரியான யுவான் தன்னுடைய தேவாலயத்தில் பரவசமாக இருந்தார். அவர் தன்னுடைய ஏடுகளில் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர்களிடம் சிக்கியிருந்ததை கூட கவனிக்காதவராக அவர் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருந்தார். சாலமனின் வரிகள் அவருக்குள் ஒரு ஊற்று போல பிய்ச்சி அடித்துக்கொண்டிருக்க அதை தாளாத அவர் எப்போதும் சிரித்தபடியும், அந்தப்பாடல்களை பாடியபடியும் வலம் வந்து கொண்டிருந்தார்.

‘உமது பெயரோ உன் வாசனையைவிட

மேலாக எங்கும் பரவியுள்ளது..

திராட்சை ரசத்தைவிட மேலானது

உனது காதல்..

திராட்சை ரசத்தைவிட தூயது

உன்னுடைய காதல்’ என்ற சாலமனின் வரிகளை அப்போது அவர் பாடிக்கொண்டிருந்தார்.

உறைந்த பனி அமைதியாய் இருளில் நிற்க, கவிதை வழிந்து பெருகும் நெஞ்சத்துடன் யுவான் தன் கைகளை கட்டிக்கொண்டு இருளை பார்த்தபடி நின்றார். உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒன்று அவரை ஆட்கொண்டிருந்தது. 

‘கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன்..

அங்கேயல்லவா உன் தாய் உன்னை வலித்துப்பெற்றாள்..

உன் நெஞ்சில் என்னை முத்திரையாக பொறித்துக்கொள்..

உன் கைகளில் என்னை இலச்சனையாய் அணிந்துகொள்..

ஆம் காதல் சாவைப் போலவே மகத்தானது’

என்ற சாலமனின் கவிதையை பாடத்தொடங்கினார். அந்த கவிதையில் வரும் தலைவி நானே என்று கூவினார்.

மேலும் மேலும் அந்த சூரியன் பனிவெளியை தன் கதிர்களால் தொட்டு உருக வைத்துக் கொண்டிருந்தது. பனியாக உறைந்திருந்த நீர் உருகி வழிய நகரவாசிகள் தங்கள் அப்பங்களை மற்றவருடன் பகிர்ந்து கொண்டார்கள். யுவான் மேலான பரவசத்தில் ‘ஆம் காதல் சாவைப்போலவே மகத்தனது’ என்று பாடிக்கொண்டிருந்தார். அன்று அந்த மேலான காதலே அவர் சாவை தொடங்கி வைத்திருந்தது.

திடீரென்று அவரின்  உள்ளுக்குள் ஓடிய சாலமனின் வரிகள் நின்றுவிட்டிருந்தன. அவர் கண்கள் நிறைந்து கொண்டிருக்க கண்களை மூடித்திறந்தார். அந்த தேவாலயத்தின் பெரிய முற்றத்தில் வெயில் வழிந்து அந்த பனிவெளியை தொட்டதும் அவர் உடலை உலுக்கிக்கொண்டார். ஔி விழுந்த இடத்தின் பனி உருகிக்கரைந்தது. அந்த நீரில் ஔி கலந்து சிவப்பு நிறமாய் தன்னைக் காட்டியது. கிச்சிலி பழங்களின் புளிப்பானது  இனிப்பாய் மாறும் காலம் அது. கிச்சிலி மரத்தின் பச்சைபழங்களில் இனிமை ஊறத்தொடங்கும் காலை அது. அவர் அவரை அறியாது அவரின் பாடலை பாடத்தொடங்கியிருந்தார்.

***

யுவான் எங்கோ ஒரு இருள் வெளிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே ஒலிகள் இல்லை. அவர் தன்னுள் ஔிர்ந்த மிகப்பெரிய வெளிச்சத்தால் தன் கண்களை மூடியபடி இருந்தார். அவர் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன. அங்கே அவரை தரையில் மண்டியிட செய்தார்கள்.

“நீ சொல்வது உண்மையா யுவான் ,”

“ஆம்,”

“அதை மீண்டும் சொல்,”

“நான் அந்த ஆண்டவரின் காதலி…இந்த நாளில் அதை நான் இந்த உலகிற்கு அறிவிக்கிறேன். காதலியாகியே அவரை நான் முழுமையாக சென்று அடைகிறேன்.  மூத்தவர்களே..அது பொறியில்  எழுந்த நெருப்பாகும்,”என்று அவர் சொல்லும் பொழுதே அவரின் மேல் அங்கி கலையப்பட்டது. அவரின் வெற்று முதுகில் சாட்டையின் கரம் சூளீர் என்று தொட்டது. 

‘பெருங்கடலும் அணைக்காது பெருங்காதலை’ என்று மீண்டும் சொன்னார்.

“இது அந்த மாமன்னரின் வரிகள்..ரகசியமாக ஒழிக்கப்பட்டது என பேரட்டில் பார்த்துள்ளான். அந்தப் பக்கங்களை இவன் பார்த்துவிட்டான்.  ஔித்தாலும்,அழித்தாலும் அவை வந்து சேர்ந்துவிட்டன  இவனை,”

“அதை அடைந்தவனுக்கு இங்கே சாவைத்தவிர வேறு ஒன்றில்லை,”

“இல்லை…இவன் அத்தனை உயர்ந்தவனில்லை. இவன் பித்தன்..காமுகன். சிறையில் அடைந்து கிடக்கட்டும்,”

அவரின் முதுகை அவர்களின் சாட்டைகளால் சிவப்பாக்கிக் கொண்டிருந்தன. அவர் ‘ஆம் காதல் சாவைப்போல மகத்தனது’ என்றே முனகிக் கொண்டிருந்தார். அவரை அவர்கள் அந்த இருட்டு அறையில் தள்ளி கதவுகளை என்றைக்குமாக  மூடினார்கள். முதுகுத்தண்டில் மின்னல் வெட்டுவதைப்போல வலி மின்னிக்கொண்டிருக்க அவர் குளிர்ந்த தரையில் கிடந்தார். அந்த வலி கால்களில் பரவியது. உடல் துடித்துத் துள்ளியது. உடலெங்கும் குளிர் நிறைந்து உறைந்தது. அவருக்கு சிறிய கோதுமை அப்பமும், தண்ணீரும் ஒரு சதுரவழி வழியே தரப்பட்டன. சிலநாட்களில் அவர் காதுகள் தரைக்குக்கீழே நடமாட்டத்தை உணர்ந்தது.

அவருக்கு தன் கால்களால்  ஒருஅடி எடுத்துவைப்பது அத்தனை கடுமையானதாக இருந்தது. நேராக நிற்பதற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. மனம் ஊற்றாக பொங்கிக் கொண்டிருந்தது. உடலெங்கும் வலியைத் தாண்டிக்கொண்டு ஏதோ ஒன்று அவரை நிலைகொள்ளாமல் ஆக்கியது.

‘ஓர் இருண்ட இரவில்

காதலால் எரிந்தபடி

நான் என் வீட்டை விட்டுச் செல்கிறேன்

எத்தனை இனிய வாய்ப்பு!’

என்று அவர் தனக்குத்தானே பாடிக்கொண்டார். 

அவர் வெளியேறி சென்ற வழியெங்கும் பனி அவருக்கு வழிவிட்டு சென்றது. அவர் பனிமீது நடந்து கொண்டே தன் உயிர் எரிக்கும் வெம்மையை பற்றி பாடினார். அவர் அந்த வெம்மையில் தானே எரிந்து சுடர்ந்து கொண்டிருந்தார். எங்கும் முடியாத சாலைகளில் தன் கால்களை இழுத்து இழுத்து நடந்தபடி அவர் சென்று கொண்டேயிருந்தார்.

அவர் தனக்கு மேலானவனை, எங்கோ இருப்பவனைத் தேடி அடையும் காதலியானார். எந்த நேரமும் அவர் விழிகள் வானத்தைக் கண்டு புன்னகைத்தன. தன்னை பித்தன் என்றவர்களுடன் இணைந்து தானும் சிரித்தார். பனி படர்ந்த கிராமங்களில் மடாலயங்களில் தங்கினார். மடாலயங்கள் இல்லாத ஊர்களில் தன் தச்சுஉளியை அவர் கையிலெடுக்கும் தோறும் அவருக்குள்ளே பாடல்கள் பெருகின. அவரின்  கைகளில் இருந்து சின்னஞ்சிறு சுடரைப் போன்ற மடாலயங்கள் எழுந்து வந்தன. அவர் முழுமையாக அவனின் காதலியானார். 

அவரின் பாடல்களில் அவன் ஔியானான்.

‘என்னைக் கொண்டு சேர்க்கும்

என்னைக்காத்திருக்கும் ஒருவனிடம்.

நான் நன்கறிந்தவன். என் உள்ளத்திற்கு இனியவன்.

எவருமே இல்லாத இடத்தில் எனக்காக காத்திருப்பவன்’

 என்று இருளை ஒளியாக்கினார். பாடல்களை தன்னை அவன் அருகில்  கொண்டு சேர்க்கும் ஔிமிக்க பாதையாக்கிக் கொண்டார்.


அவரின் வழி எங்கும் பாடல்களால் அவனை நோக்கியே சென்று கொண்டிருந்தார். உள்ளுக்குள் பொங்கிய ஊற்று அவரின் உடல் வலிகளை பாடல்களாக மாற்றியது. தன் பாடல்களில் அவருக்கானவனாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தான். வழியெங்கும் பனிநிலத்தில் குளிர்முட்கள் தங்களின் கூர் முனைகளுடன் அவருக்காக  காத்திருந்தன. அவரின் சொற்களே அவரை வேட்டையாடின. 

மீண்டும் ஒரு உறைபனி காலத்தில் அவர் வயிற்றுக்குள் உண்டாகிய கத்தி தொண்டை வரை குத்திப்புண்ணாக்கி அவரை அறுக்கத் தொடங்கியது. எங்கும் வலி. அவன் நிறைந்து ஊறும் ஊற்றானது அவர் உடல். நோயும் வலியும் கூட அவனே என்று அவர் பாடினார்.

***

நான் தாயுடன் வாழ்ந்த அந்த ஊரைப்போன்ற இந்த ஊரிலிருந்து என்னால் விலகிச்செல்ல முடியவில்லை. இந்த வாழ்வில் நடந்து செல்வதற்கான வழிகள் இங்குடன் முடிகிறது என்று என் மனம் சொல்கிறது. தீராத தாகம். அருகில் யாரும் இல்லை. கேட்கவும் தோன்றவில்லை. அவனுக்கான பல்லாயிரம் ஆலயங்களில் ஏதோ ஒன்றின் மூலையில் கிடக்கிறேன்.

‘அவனுடைய கரம் மிக மென்மையாக

என் தொண்டையை வெட்டிச்செல்கிறது. 

என் உணர்வுகள் குருதியென வழிந்தோட நான் நினைவிழந்தேன்.

என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்.

என் தலைவன் தோள் சாய்ந்து என்னை உணர்கிறேன்.

இதோ எல்லாம் மறைகின்றன.

எஞ்சியவை எல்லாம்

என் ஆசைகள் முழுக்க.

ஏன் நானேகூட!

நான்  இறந்த அந்த லில்லிமலர் வெளியில்

அனைத்துமே தொலைந்து போயின!’

என் உடல் குளிர்ந்து கொண்டிருக்கிறது. என் கால்களில் வலியில்லை. கைகளில் வலி இல்லை. வயிற்றிலிருந்த கத்தி எங்கோ கிழித்து வெளியேறியிருந்தது. மெல்ல மெல்ல நான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன். லில்லி மலர்கள் வெண்மையாய் பூத்திருக்கும் காட்டின் எல்லையில் கையில் ஒரு லில்லி மலருடன் அவன் நிற்கிறான். அந்த கிச்சலி மரத்தடியில் நான் கண்டு கொண்டது இவனைத்தான். இன்றூ அவன் எனக்காகத்தான் நிற்கிறான். நான் இதற்காகவே என் வீட்டைவிட்டு வெளியேறி இத்தனை தொலைவு வந்தேன்.











Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்