Skip to main content

சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு. 
அப்படி ஒரு சொல் அறம்.


மேற்கண்ட பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது. 
அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.


ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது.

மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்று எப்படியும் எழுத்தாக்கலாம். இலைமறை காயாக சொல்வதோ, அம்பலத்தில் எடுத்து வைப்பதோ அந்த புனைவு கோருவதை எழுதுபவர்கள் செய்கிறோம்.
 
வரலாற்று நிகழ்வுகளோ, மனிதர்களோ காலகாலமாக புனைவாகிக் கொண்டிருக்கிறார்கள். புனைவு எழுதுவது என்பது புறம்பேசுதல் அல்ல.
ஒரு எழுத்தாளர் எழுதும் போது  இதற்கெல்லாம் அப்பற்பட்டவர். 

அரசரிலிருந்து எளிய மனிதர்கள் வரை யாராயிருந்தாலும் எழுத்தாளரின் மனதில் விழும் போது எழுத்தின் கருவாகிறார்கள். அந்த படைப்பை விமர்சிக்கலாம். அதை படைப்பே இல்லை என்றும் சொல்லலாம். அதை ஒதுக்கலாம்.

ஆனால் எழுதவே கூடாது என்று இங்கு எதுவுமில்லை. எழுத்தாளருக்கு எழுத்தே அறம்.

எழுத்தில் அறம் என்பது சமன்வயத் தன்மை.  இன்னும் மேலே சென்றால் இருளை சொல்லும் போது குறிப்புணர்த்தலாம். வெளிச்சம் அப்பட்டமானது. எழுத்தாளர் சூடாமணி தன் வாழ்வில் எழுத்தின் வழியே தரிசிக்கும் வெளிச்சத்தை நான்  கதையாக்கியது எந்த வகையிலும் அறமற்ற செயல் ஆகாது.

இனி வரலாற்று ஆளுமைகளை எழுத எனக்கு எந்த தயக்கங்களும் இல்லை.








Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...