Skip to main content

சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு. 
அப்படி ஒரு சொல் அறம்.


மேற்கண்ட பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது. 
அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.


ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது.

மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்று எப்படியும் எழுத்தாக்கலாம். இலைமறை காயாக சொல்வதோ, அம்பலத்தில் எடுத்து வைப்பதோ அந்த புனைவு கோருவதை எழுதுபவர்கள் செய்கிறோம்.
 
வரலாற்று நிகழ்வுகளோ, மனிதர்களோ காலகாலமாக புனைவாகிக் கொண்டிருக்கிறார்கள். புனைவு எழுதுவது என்பது புறம்பேசுதல் அல்ல.
ஒரு எழுத்தாளர் எழுதும் போது  இதற்கெல்லாம் அப்பற்பட்டவர். 

அரசரிலிருந்து எளிய மனிதர்கள் வரை யாராயிருந்தாலும் எழுத்தாளரின் மனதில் விழும் போது எழுத்தின் கருவாகிறார்கள். அந்த படைப்பை விமர்சிக்கலாம். அதை படைப்பே இல்லை என்றும் சொல்லலாம். அதை ஒதுக்கலாம்.

ஆனால் எழுதவே கூடாது என்று இங்கு எதுவுமில்லை. எழுத்தாளருக்கு எழுத்தே அறம்.

எழுத்தில் அறம் என்பது நடுநிலை தன்மை. இன்னும் மேலே சென்றால் இருளை சொல்லும் போது குறிப்புணர்த்தலாம். வெளிச்சம் அப்பட்டமானது. எழுத்தாளர் சூடாமணி தன் வாழ்வில் எழுத்தின் வழியே தரிசிக்கும் வெளிச்சத்தை நான்  கதையாக்கியது எந்த வகையிலும் அறமற்ற செயல் ஆகாது.

இனி வரலாற்று ஆளுமைகளை எழுத எனக்கு எந்த தயக்கங்களும் இல்லை.








Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...