Skip to main content

வெளிச்சம் கதை பற்றிய உரையாடல்

 [அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.]

கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு...

கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின்  சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்பற்றி எழுதப்போகிறேன் என்பது இன்னும் வருத்தப்படுத்துகிறது.

நான்:

பகிர்ந்தது குறித்து நன்றிம்மா. சாகித்ய அகாதமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற நூல்வரிசையில் கே.பாரதி அவர்கள் எழுத்தாளர் சூடாமணி பற்றி எழுதிய நூலை அடிப்படையாக வைத்து வெளிச்சம் கதையை எழுதினேன். கதையில் வரும் ஆசிரியர்கள் பெயர்கள் உண்மை. மற்றபடி கதை நிகழ்வுகள் புனைவு. அந்த நூலில் சூடி என்று அவரை அழைப்பது பல இடங்களில் உள்ளது. மேலும் இது முற்றிலும் நேர்மறையான கதை. அறப்பிழை என்று சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை என்று நம்புகிறேன். அவருடைய குடும்பத்தார் வாசிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் நான் இந்தக்கதையை எழுதவில்லை.

 எழுத்தாளர் சூடாமணி எதோ ஒரு வகையில் என் மனதின் ஆழத்தில் விழுந்துவிட்டார். அதனால் தான் எழுதினேன். ஒரு வகையில் அவருக்கு செய்த மரியாதை என்றே நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மிகப்பெரிய  ஆளுமைகள். அவர்கள் புனைவாவது இயல்பானது. 


                 [எழுத்தாளர் சூடாமணியும் நானும். கொலாஜ் செய்த படம்.]

இதில் உங்களுக்கும், ரவிசங்கர் அவர்களுக்கும் மாற்று கருத்து இருந்தால் அதைப்பற்றி கண்டிப்பாக  எழுதுங்கள். நீங்கள் பகிராவிட்டால் இந்த விவாதம் பற்றி எனக்கு தெரிந்திருக்காது. அதற்காக உங்களுக்கு அன்பு.

இன்னும் இந்த விவாதம் அரவிந்த் வடசேரி என்பவரின் கருத்துடன்  தொடர்ந்தது. அதற்கு பதிலாக நான் கூறியது.

தொடர்ந்து இது போன்ற கதைகளை எழுதுவேனா என்று தெரியவில்லை. மனதை பாதிப்பவர் பற்றி மட்டுமே எழுதமுடியும் இல்லையா..

எழுத்தாளர் அம்பை:

இல்லை கமலதேவி. இது கட்டாயம் அறமற்ற செயல். நேர்மறையாக இருந்தாலும். இது அந்த மோனோ கிராஃபை  வைத்து  எழுதியது என்று புரிந்துவிட்டது. மனதை பாதிப்பவர் குறித்து கட்டுரை எழுதலாம். கதை எழுத You have no moral right. குடும்பத்தார் அவரை சூடி என்று அழைத்தது உண்மை தான். உண்மையை எழுதுவதால் அது சரியான செயலாகிவிடாது.

அப்படி என்றால் நீங்கள் எழுதியது சரிதான் என்று நீங்கள் கருதுகிறீர்கள். வருந்துகிறேன்.

நான்:

இதில் என்ன பிழை உள்ளது என்று கண்டிப்பாக யோசிக்கிறேன். அதுவரை உண்மை ஆளுமைகள் பற்றி கதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன்.

♦♦♦


நான் எழுத்தாளர் சூடாமணி பற்றி கதை எழுதியது அறம்இல்லை என்று சொல்லப்படுவதால் மட்டுமே இதை தளத்தில் பதிவிடுகிறேன். நான் வேறெந்த எந்த சமூகஊடகங்களையும் பயன்படுத்துவதில்லை.

மற்றபடி எழுத்தாளர் சூடாமணி ஒரு மயிலிறகு போல என் மனதில் விழுந்தவர். 

கதை எழுதும் மனம் ஓடிவரும் நீர் போன்றது. அதற்கு முன்னால் எதிர்ப்படும் எதுவும் அந்த நீரை இன்னும் பெரிய நதியாக மாற்றும். அது எங்கோ எதையோ யாரையோ, எதுவாகவோ யாராகவோ மாற்றிக்கொள்ளும்.

எழுத்தாளர் சூடாமணியின் காலம் 1931 _2010  என்றாலும் கூட இந்தக்கதை  வரலாற்று புனைவு என்ற வகைமையின் கீழ் வரும். 

[எழுத்தாளர் அம்பையிடம் உரையாடலை வலைதளத்தில் பதிவிடுவதாக சொல்லியபின்பே பதிவிடுகிறேன்]

இந்த பதிவிற்கான பதில் பதிவு


https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post_4.html







Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...