Skip to main content

வெளிச்சம் கதை பற்றிய உரையாடல்

 [அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.]

கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு...

கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின்  சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்பற்றி எழுதப்போகிறேன் என்பது இன்னும் வருத்தப்படுத்துகிறது.

நான்:

பகிர்ந்தது குறித்து நன்றிம்மா. சாகித்ய அகாதமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற நூல்வரிசையில் கே.பாரதி அவர்கள் எழுத்தாளர் சூடாமணி பற்றி எழுதிய நூலை அடிப்படையாக வைத்து வெளிச்சம் கதையை எழுதினேன். கதையில் வரும் ஆசிரியர்கள் பெயர்கள் உண்மை. மற்றபடி கதை நிகழ்வுகள் புனைவு. அந்த நூலில் சூடி என்று அவரை அழைப்பது பல இடங்களில் உள்ளது. மேலும் இது முற்றிலும் நேர்மறையான கதை. அறப்பிழை என்று சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை என்று நம்புகிறேன். அவருடைய குடும்பத்தார் வாசிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் நான் இந்தக்கதையை எழுதவில்லை.

 எழுத்தாளர் சூடாமணி எதோ ஒரு வகையில் என் மனதின் ஆழத்தில் விழுந்துவிட்டார். அதனால் தான் எழுதினேன். ஒரு வகையில் அவருக்கு செய்த மரியாதை என்றே நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மிகப்பெரிய  ஆளுமைகள். அவர்கள் புனைவாவது இயல்பானது. 


                 [எழுத்தாளர் சூடாமணியும் நானும். கொலாஜ் செய்த படம்.]

இதில் உங்களுக்கும், ரவிசங்கர் அவர்களுக்கும் மாற்று கருத்து இருந்தால் அதைப்பற்றி கண்டிப்பாக  எழுதுங்கள். நீங்கள் பகிராவிட்டால் இந்த விவாதம் பற்றி எனக்கு தெரிந்திருக்காது. அதற்காக உங்களுக்கு அன்பு.

இன்னும் இந்த விவாதம் அரவிந்த் வடசேரி என்பவரின் கருத்துடன்  தொடர்ந்தது. அதற்கு பதிலாக நான் கூறியது.

தொடர்ந்து இது போன்ற கதைகளை எழுதுவேனா என்று தெரியவில்லை. மனதை பாதிப்பவர் பற்றி மட்டுமே எழுதமுடியும் இல்லையா..

எழுத்தாளர் அம்பை:

இல்லை கமலதேவி. இது கட்டாயம் அறமற்ற செயல். நேர்மறையாக இருந்தாலும். இது அந்த மோனோ கிராஃபை  வைத்து  எழுதியது என்று புரிந்துவிட்டது. மனதை பாதிப்பவர் குறித்து கட்டுரை எழுதலாம். கதை எழுத You have no moral right. குடும்பத்தார் அவரை சூடி என்று அழைத்தது உண்மை தான். உண்மையை எழுதுவதால் அது சரியான செயலாகிவிடாது.

அப்படி என்றால் நீங்கள் எழுதியது சரிதான் என்று நீங்கள் கருதுகிறீர்கள். வருந்துகிறேன்.

நான்:

இதில் என்ன பிழை உள்ளது என்று கண்டிப்பாக யோசிக்கிறேன். அதுவரை உண்மை ஆளுமைகள் பற்றி கதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன்.

♦♦♦


நான் எழுத்தாளர் சூடாமணி பற்றி கதை எழுதியது அறம்இல்லை என்று சொல்லப்படுவதால் மட்டுமே இதை தளத்தில் பதிவிடுகிறேன். நான் வேறெந்த எந்த சமூகஊடகங்களையும் பயன்படுத்துவதில்லை.

மற்றபடி எழுத்தாளர் சூடாமணி ஒரு மயிலிறகு போல என் மனதில் விழுந்தவர். 

கதை எழுதும் மனம் ஓடிவரும் நீர் போன்றது. அதற்கு முன்னால் எதிர்ப்படும் எதுவும் அந்த நீரை இன்னும் பெரிய நதியாக மாற்றும். அது எங்கோ எதையோ யாரையோ, எதுவாகவோ யாராகவோ மாற்றிக்கொள்ளும்.

எழுத்தாளர் சூடாமணியின் காலம் 1931 _2010  என்றாலும் கூட இந்தக்கதை  வரலாற்று புனைவு என்ற வகைமையின் கீழ் வரும். 

[எழுத்தாளர் அம்பையிடம் உரையாடலை வலைதளத்தில் பதிவிடுவதாக சொல்லியபின்பே பதிவிடுகிறேன்]

இந்த பதிவிற்கான பதில் பதிவு


https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post_4.html







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...