Skip to main content

முதல் குயிலோசை


 எப்பொழுதும் கோடை முடியும் தருணத்தில் ஜூன் மாதத்துவக்கத்தில் குயிலின் முதல் குரல் கேட்கும். ஒரு வாரமாக தினமும் மதிய நேரத்தில் மழை துவங்கி பெய்வதும் நிற்பதுமாக இருக்கிறது. திடீரென்று நல்ல மழை. பின் தூரல். வெயில் இல்லாத புழுக்கம்.

இன்று காலையில் சமையலறையில் இருக்கும் போது கூகூகூ என்று இந்த ஆண்டின் முதல் குயில் குரல். ஒரே ஒரு கூவல் தான். பின்பு கேட்கவில்லை. வீட்டின் மேற்கு புறம் பின்வாசலின் பக்கவாட்டில் பெரிய காலிஇடம் உண்டு. முருங்கை ,தென்னை, பெரிய நுணா மரம், செடிவகைகள் வளர்ந்த இடம். அங்கு குயில்களை பார்க்கமுடியும். 

குயில் குரலை கேட்தும் முதலில் 'ஐ' என்று ஒரு குதூகலம். அது ஒரு வெயிலின் குரல் என்று என் மனதில் பதிந்துவிட்டது. ஒரு ஆண்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம்படி பலமுறை தொடங்கும். சிலருக்கு அவர்களின் பிறந்தநாள். சிலருக்கு வேலை கிடைத்தநாள். பலருக்கு திருமண நாள் என்று பலவிதங்களில் மீண்டும் மீண்டும் நம்மை புதிதாய் துவக்கிக்கொள்ள முயல்கிறோம். 

எப்போதும் ஓடக்கூடிய வண்டி என்றாலும் காற்று குறைவது போல...டயர் மாற்றுவது போல...ரயில் தண்டவாளங்களை பழுது பார்ப்பது போல ஒன்று. அவரவர் மனநிலைக்கு ஏற்ப.

எனக்குள் எப்போதும் உள்ள சிறுமிக்கு ஜூன் மாதம் ஒரு தொடக்கம். அதில் இந்த குயிலின் குரலுக்கு முக்கிய பங்குண்டு.  பள்ளி முடித்து பல ஆண்டுகள் ஆனாலும் எனக்கு ஜூன் மாதம் என்றால் ஒரு திருப்பம். வாழ்வில் பெரிதாக எதுவும் நடக்க வேண்டும் என்றில்லை.

இப்போதும் ஒன்றுமில்லை. என்றாலும்... குயிலின் முதல் குரல் சட்டென்று ஒரு மகிழ்ச்சியை தருகிறது. அது வெறுமையின் குரல் அல்லது தாபத்தின் குரல். அது நாம் நினைக்கும் அன்றாட தளத்தின் தாபம் அல்ல.

பூஜ்ஜியத்தில் எதை சேர்த்தாலும் மதிப்பு என்பதை போன்ற ஒன்று. செயலுக்கு நம்மை அழைப்பது. ஒரு மழை பெய்து கடும் கோடை மாறி நிலம் துளிர்ப்பதை போன்றது. 

ஒரு வட்டத்தின் முடிவும் துவக்கமும் ஒன்று என்பது போல. கோடை அதன் முழு தீவிர அர்த்தத்தில் இருந்து இந்த ஆண்டு விடைபெற்றுவிட்டது. 

 ஒவ்வொரு பருவமும் மாறும் தருணம் அழகானது. எத்தனை இழப்புகளுக்குப் பிறகும் கவிஞன் சொல் நம்முடன் இருக்கிறது. பாரதி சொல்வது போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...










Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...