Skip to main content

அரிதாரம்

 ஊரில் ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கூத்து நடக்கிறது. சாயுங்காலமானால் ஒலிப்பெருக்கியின் ஆதிக்கம் துவங்கிவிடும். இன்னொரு பக்கம் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள். நான் எங்கள் ஊர் பள்ளியில் தற்காலிக ஆசியராக பணி செய்த போது பணியில் சேர்ந்த ஆண்டின் ஆண்டுவிழாவி்ன் போது விழித்துக்கொண்டு நின்றேன். அது வரையான தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர் தலைகுனியும் நேரம்.

நடனமாட தெரியாது..ஒப்பனை செய்யதெரியாது . 'புது டீச்சருக்கு லிப்ஸ்டிக் கூட போட்டுவிட தெரியல," என்று வாயில் கை வைத்து பிள்ளைகள் என்று சிரித்தன. உண்மையிலேயே பெண்ணாய் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது.

" ஏம்மா...இந்த புடவைங்களையாவது பிள்ளைகளுக்கு கட்டி விடேன்..." என்று சகஆசிரியைகள் சலித்துக்கொண்டார்கள்.

கல்வியியல் கல்லூரி படிக்கும் போது இருபத்துநான்கு வயதில் முதன்முதலாக சேலை கட்டிப்பழகினேன். இன்று வரை எனக்கு புடவை வசதியான உடை இல்லை. நான் தவிர்க்கும் உடையாகவே இருக்கிறது. 'புடவை ஒரு கன்வீனியன்ட்டான டிரஸ் இல்லை' என்பது என் கருத்து. கவுன், மிடி, பாண்ட் டீசர்ட் ,தாவணி,சுடிதார் என்று கடந்து வந்ததில் இன்றுள்ள அனார்கலிகுர்தா தான் எனக்கு மிகவும் பிடித்த உடை என்று சொல்வேன். அடுத்ததாக தாவணியும் சேர்க்கலாம். அதற்கு பெயரே சிற்றாடை. பதின் வயதில் வசதியான ஆடை. ஆடிகுதிப்பது என்றாலும் அமைதியாக 'சிவனே' என்று இருப்பதற்கும் ஒத்துபோகும் தாவணிபாவாடை. அனார்கலி குர்தா நம்மை சிறுமியாக்குவது. சிறு வயதில் பாவாடையை சுற்றி பூப்போலாக்கும் தருணத்தை பல ஆண்டுகள் கழித்து அனார்க்கலி குர்தா மீண்டும் தருகிறது . இந்த ஆடையில் ஆடை பற்றிய எந்த கவனமும் தேவை இல்லாமல் நம் இயல்பில் நாம் இருக்கலாம்...பையன்கள் இருப்பது போல. 

கல்லூரி விடுதியில் சேலை கட்டி பழகுவது என்பது ஒரு வித்தை மாதிரி தான். கல்வியியல் கல்லூரி விடுதி வித்தியாசமானது. இருபது பேர் கொண்ட அறையில் இடப்பாற்றாகுறை காரணமாக அவரவர் படுக்கை மீது ஏறி நின்று தான் புடவை கட்டமுடியும். உண்மையில் கல்வியியல் கல்லூரிகளின் விதிமுறைகள் நாங்கள் படிக்கும் போது மிகவும் கெடுபிடியானது. உடுத்துவதில், நேரம் கடைபிடிப்பதில், பேசுவதில் என்று அனைத்திலும் மிடுக்காக, கட்டுப்பாடாக மாறிவிடும் காலம் அது. பெரும்பாலும்  கிராமத்து நடுத்தர குடும்பத்து இளம்பெண்கள் நிமிர்ந்து பார்த்து நடக்கதொடங்கியதே ஆசிரியப்பயிற்சிக்கு சென்ற போதுதான். அது ஒரு பொன்னான காலம் என்று சித்திகள் அம்மாக்கள் காலத்து மூத்தவர்கள் சொல்வதுண்டு.

முந்தானையை செருகி கையில் புத்தகத்தை எடுத்தாலே மிலிட்ரி தோரணை வந்துவிடும் என்ற கிண்டல் செய்வார்கள்.  அவசரமான காலைகளில் நாசுக்காக புடவை உடுத்துவது என்பதற்கு ஜகஜால கில்லாடித்தனம் வேண்டும். அதற்கு நாம் வழக்கமாக புடவை உடுத்தும் விதம் ஒத்து வராது. ஒரு சாகசவீரனின் லாவகத்துடன் சட்டென்று உடுத்தும் பழக்கம் எங்களில் சிலருக்கு இருந்தது. அது பெரியார் மணியம்மை கல்லூரி 'மரபில்' உருவான முறை. என் தங்கை மணியம்மையில் பயின்றவள் என்பதால் எனக்கு அந்த முறையை சொல்லிக்கொடுத்திருந்தாள்.  

இப்படி தலைகீழாக உடுத்தி பழகிய முறையில் புடவையை மற்றவர்களுக்கு உடுத்திவிடுவது சிரமம். அதனால் பள்ளி ஆண்டுவிழாவின் போது பிள்ளைகளுக்கான ஒப்பனை நேரத்தில் தேமே என்று நின்றேன். பின் போட்டுவிடுவது,பூ வைப்பதற்கு பின்களை எடுத்துக்கொடுப்பது,காலடிகளில் அமர்ந்து சேலை மடிப்புகளை சரி செய்வது போன்ற 'அடியாள்' வேலை எனக்கு.

வாராது வந்த மாமணியாய் வந்த எழுத்தே இந்த சூழலில் என்னை காத்து ரட்சித்தது.  சின்ன சின்ன நீதி நாடகங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. அதை மற்ற ஆசிரியர்கள் பெரிதாக அங்கரிக்கவில்லை. பிள்ளைகளுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்வதை விட நடனமாடுவது பிடித்தது.


பிள்ளைகள் நடனமாடும் முன் அவர்கள் ஆடும் நடனம் பற்றியும், பாடல்கள் குறித்தும் மேடையில் சில வரிகள் பேச வேண்டும். அதை எழுதுவது என் வேலை.  எழுத்துக்கென்ற மாரியாதை கிடைக்கும். ஓரமாக ஒரு மேசை,சில தாள்கள்,ஒரு பேனா. ஆண்டுவிழா என்பது திருமணம் போல ஒரு கூட்டு முயற்சி. ஆளாளுக்கு பரபரத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டு விழா நாளில் பெரும்பாலும் என் கைளில் மட்டும் தான் பேனா இருக்கும். ' பேனா குடும்மா...ஏய் பசங்களா டீச்சர்க்கிட்டருந்து அந்த பேனாவ வாங்கு' என்று ஆசிரியர்கள் கேட்ட நாட்களை புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன். 

ஆண்டுவிழா நாட்களில் 'எதாச்சும் மேக்கப் போட கத்துக்கலாமில்லம்மா.. இந்த டீச்சருக்கு ஒன்னும் தெரியலன்னு பிள்ளைங்க நினைப்பாங்க..' என்று என் ஆசிரியர் கவலைப்படுவார். [எனக்கு ஆசிரியராக இருந்தவர்] . நான் பாடல்களுக்கான வசனங்களை எழுதி அவரிடம் தருவேன். கவனமாக வாசித்துக்காட்டி 'சரியாம்மா..' என்று கேட்டப்பின் மேடையில் வாசிப்பார். அவருக்கு புதுபாடல்கள் பற்றி எதுவும் தெரியாது. 'வரியே காதுல விழல' என்பார். 

 மூன்று நாட்களுக்கு முன்பு பக்கத்துஊர் பள்ளியிலிருந்து ஆண்டுவிழாவிற்கு வசனம் எழுதித்தரும்படி வெள்ளி கிழமை சாயுங்காலம் ஒரு தற்காலிக பள்ளிஆசிரியை வந்து கேட்டார். மிகவும் இளம் பெண். இந்த ஆண்டுதான் கல்வியியல் கல்லூரி முடித்ததாக சொன்னார். அன்று இருந்த என்னை பார்த்தது போல இருந்தது. இரண்டுநாட்களாக மேசைமீது அவள் கொடுத்த தாள்கள் இருந்தன. இந்த சிலஆண்டுகளில் என்எழுத்து வெகுவாக மாறியிருக்கிறது. பாடல்களுக்கான குறிப்பு எழுத முடியுமா என்று சந்தேகம். பத்து பாடல்கள். காலையில் எழுந்ததும் கடகட வென்று மருந்து குடிப்பது போல எழுதி வைத்து விட்டேன். 

நாம் ஆதியில் உடை அணிந்ததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.  நம்மில் வெளிப்படும் விலங்கை மறைப்பது அதில் ஒரு காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆடை அத்தியாவசியம் என்ற நிலை மாறி அழகிற்காக பின் அலங்காரத்திற்காக என்று மாறி,இதற்கு அடுத்த நிலையில் மனிதன் தன்னை வேறொன்றாக வெளிப்படுத்திக்கொள்ளும் [தானே வேறொன்றாக மாறும்] கருவியாகும் போது அரிதாரமாகிறது. புறத்தை மாற்றுதல் [அல்து புறத்தை வனைதல்] என்பது உன்னதமாகும் இடம் அரிதாரம். அங்கே அது கலையாகிறது.


                 [ நடிகர் கமல்ஹாசன்]

உத்தமவில்லன் திரைப்படத்தில் கமல் தன் முகஒப்பனையை அழிக்கும் இடம் ஒன்று உண்டு. அதில் கருப்பு மஞ்சள் சிவப்பு வண்ணங்கள் குலைந்து குழம்பி அழியும். அந்த இடம் என்னை பொருத்த அளவில் தமிழ்சினிமாவில் ஒரு உன்னதமான இடம். கண்ணீரில், துயரில், நிலையின்மையில், காலத்தின் முன்பு, அன்பின்முன்பு அழிந்து குலையும் மனித அகம் ஒன்று அங்கே முகம் காட்டும். அந்த காட்சி அந்த திரைப்படத்தின் சூழலுக்குள் காட்டும் அர்த்தத்தை விட அந்த எல்லையை தாண்டி பலமடங்கு விரியக்கூடியது.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...