Skip to main content

இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம்.

அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன்.


இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்கு முன்பு இருந்த களத்தின் முன்னால் இருக்கும் தோப்பு இது. அம்மாச்சி இந்த இடத்தை எனக்காக அடர்ந்து போகாமல் சீர் செய்து வைத்திருப்பார். கால்களை நீட்டினால் வயலிற்கு தண்ணீர் பாயும் வாய்க்கால். நேரடியாக குடிக்கக்கூடிய தூய தண்ணீர். கண் முன்னால் பச்சை மலை குன்று.

இந்த இடத்தில் எழுத்தாளர் நீலபத்மநாபனின் தேரோடும் வீதி,பள்ளிகொண்டபுரம் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் இன்று வரை மனதிற்கு பிடித்த நாவல். அலையோசையிலிருந்து விஷ்ணுபுரம்,துயில் நாவல்கள் வரை நிறைய நாவல்களை இங்கு வாசித்தேன். லா.சா.ராவின் அபிதா என்று பல நாவல்கள். பதிமூன்று வயதிலிருந்து,என் முதல் புத்தகமான சக்யை சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு வரை இங்கு அமர்ந்து வாசித்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக.

இன்று அதிகாலையில் இந்த இடம் கனவில் வந்தது. மனதிற்குள் அத்தனை பரவசம். இந்த இடம் எனக்கான இடம். இதை யாரும் பயன்படுத்தியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் தென்னை அடியில் எப்போதோ போடப்பட்ட கல். நான் வாசிக்கும் போது மதிய உணவிற்காக அம்மாச்சி களத்தில் நின்று அழைப்பார்.

அந்த கல்லில் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடி வந்து சாப்பிட்டப்பின் களத்தில் குதித்து ஓடி வாய்க்காலை தாண்டி கல்லில் அமரும்போது அம்மாச்சி சிரிப்பார். 

" இந்த பிள்ளைக்கு சோறு தண்ணிக்கு மேல ருசிப்பட்டது," என்பார். அங்கங்கே நான் போட்டு வைக்கும் புத்தகங்களை அத்தனை பவ்யமாக எடுத்து வைப்பார். ஒரு விடுமுறையில் மறந்து விட்டு வந்த புத்தகத்தை எடுத்து அவருடைய இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்தார்.


         [பச்சைமலையின் மம்மலை குன்று]

என்னுடன் வாசிக்கத் தொடங்கியவர்கள் முதல் ,கல்லூரி வயதில் என்னுடன் போட்டிப்போட்டு வாசித்த மூவர் வரை யாரும் இன்று வாசிப்பதில்லை. அனைவருமே பொருளாதாரத்தில், இடவசதியில்,நேர வசதியில் என்னை விட மேம்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவோ அவர்களை விட்டு போய் விட்டது. இசையரசிக்கு வெளிநாட்டு வாழ்க்கை,கலைக்கு அரசியல் சார்ந்த வீட்டு சூழல்,சுகுணாவிற்கு நம்பிக்கை இழப்பு என்று காரணங்கள்.

வாசிப்பதில் இன்றுவரை அந்த சுவை குறையவில்லை என்பது காலம் எனக்கு அளித்த ஆசி என்று தோன்றுகிறது.

இலக்கியம் என்பது எந்த வயதிலும் மாறாத ருசி கொண்டது இல்லையா...

Comments

  1. என்றென்றும் இந்த மதுரம் நீடித்து நிலைக்கட்டும்... ஆம் அவ்வாறே ஆகுக.

    ReplyDelete
  2. அன்பும் நன்றியும் சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...