Skip to main content

இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம்.

அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன்.


இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்கு முன்பு இருந்த களத்தின் முன்னால் இருக்கும் தோப்பு இது. அம்மாச்சி இந்த இடத்தை எனக்காக அடர்ந்து போகாமல் சீர் செய்து வைத்திருப்பார். கால்களை நீட்டினால் வயலிற்கு தண்ணீர் பாயும் வாய்க்கால். நேரடியாக குடிக்கக்கூடிய தூய தண்ணீர். கண் முன்னால் பச்சை மலை குன்று.

இந்த இடத்தில் எழுத்தாளர் நீலபத்மநாபனின் தேரோடும் வீதி,பள்ளிகொண்டபுரம் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் இன்று வரை மனதிற்கு பிடித்த நாவல். அலையோசையிலிருந்து விஷ்ணுபுரம்,துயில் நாவல்கள் வரை நிறைய நாவல்களை இங்கு வாசித்தேன். லா.சா.ராவின் அபிதா என்று பல நாவல்கள். பதிமூன்று வயதிலிருந்து,என் முதல் புத்தகமான சக்யை சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு வரை இங்கு அமர்ந்து வாசித்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக.

இன்று அதிகாலையில் இந்த இடம் கனவில் வந்தது. மனதிற்குள் அத்தனை பரவசம். இந்த இடம் எனக்கான இடம். இதை யாரும் பயன்படுத்தியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் தென்னை அடியில் எப்போதோ போடப்பட்ட கல். நான் வாசிக்கும் போது மதிய உணவிற்காக அம்மாச்சி களத்தில் நின்று அழைப்பார்.

அந்த கல்லில் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடி வந்து சாப்பிட்டப்பின் களத்தில் குதித்து ஓடி வாய்க்காலை தாண்டி கல்லில் அமரும்போது அம்மாச்சி சிரிப்பார். 

" இந்த பிள்ளைக்கு சோறு தண்ணிக்கு மேல ருசிப்பட்டது," என்பார். அங்கங்கே நான் போட்டு வைக்கும் புத்தகங்களை அத்தனை பவ்யமாக எடுத்து வைப்பார். ஒரு விடுமுறையில் மறந்து விட்டு வந்த புத்தகத்தை எடுத்து அவருடைய இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்தார்.


         [பச்சைமலையின் மம்மலை குன்று]

என்னுடன் வாசிக்கத் தொடங்கியவர்கள் முதல் ,கல்லூரி வயதில் என்னுடன் போட்டிப்போட்டு வாசித்த மூவர் வரை யாரும் இன்று வாசிப்பதில்லை. அனைவருமே பொருளாதாரத்தில், இடவசதியில்,நேர வசதியில் என்னை விட மேம்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவோ அவர்களை விட்டு போய் விட்டது. இசையரசிக்கு வெளிநாட்டு வாழ்க்கை,கலைக்கு அரசியல் சார்ந்த வீட்டு சூழல்,சுகுணாவிற்கு நம்பிக்கை இழப்பு என்று காரணங்கள்.

வாசிப்பதில் இன்றுவரை அந்த சுவை குறையவில்லை என்பது காலம் எனக்கு அளித்த ஆசி என்று தோன்றுகிறது.

இலக்கியம் என்பது எந்த வயதிலும் மாறாத ருசி கொண்டது இல்லையா...

Comments

  1. என்றென்றும் இந்த மதுரம் நீடித்து நிலைக்கட்டும்... ஆம் அவ்வாறே ஆகுக.

    ReplyDelete
  2. அன்பும் நன்றியும் சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...