Skip to main content

அறம்: தாயார்பாதம்

 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும். 

நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என்  முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை. 


'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும்.

இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும். 

அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்கு மிக நெருக்கமான கதை. பெண்ணை பாடிய எந்த இதிகாசத்திற்கும் குறையாத உணர்வு எழுச்சி கொண்ட நவீனக்கதை என்று தோன்றும்.

அவளுக்கென்று ஊரில்லை. அவளுக்கென்று தெய்வமில்லை. அவளுக்கென்று தாய்தகப்பனில்லை. அவளுக்கென்று கணவனில்லை. இறுதியில் அவளுக்கென்று அவள்  மனம் கூட இல்லை. 

இருப்பதெல்லாம் கைகள் மட்டும் தான். வேலை செய்யும் கைகள். துடைத்து கழுவிக்கொண்டே இருக்கும் கைகள். தன் மீது விழுந்த அசிங்கத்தை துடைத்து துடைத்து மாளாத கைகள். அத்தனைக்குப் பிறகும் எஞ்சியிருக்கும் அது என்ன? கதையில் கூறப்பட்டுள்ள மலம் என்பது மலம் மட்டுமா? அதை அன்றே குழந்தை தன் மடியில் இருந்த மலமாய் சுத்தப்படுத்தியிருப்பாள். பெண்ணென அவள் மீது வைக்கப்பட்டவற்றை அனுதினமும் சுத்தப்படுத்துகிறாளா? 

தோற்றம் என்று சொல்லப்படும் மாயையா, தன் சங்கீதத்தை நிறுத்திய ஆணவத்தையா,தன் தந்தை மீது விழுந்த அவமரியாதையையா,செல்வமில்லாத தன் வறுமையின் மீது விழுந்த அதிகாரத்தையா,ஒரு பெண் என தன்கணவனின் அலட்சியத்தையா,காதல் அறியாத தன்னுடலில் படிந்த கரங்களையா? மனுசி என்றே தன்னை உணராதவர் தந்த தாய்மையின் வடுக்களையா? என்று எதை அவள் துடைக்கிறாள். 

சிற்றுடலையும் மடித்து குறுஉடலாக்கி அவள் இந்த பூமியில் தேடுவது எதை?

அவள் கைகள் அத்தனை சுத்தப்படுத்தியும் மாறாத ஒன்று எத்தனை களிம்பேறியிருக்க வேண்டும். இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டும்... அந்த களிம்பை அகற்றி அதனுள் உறையும் ஆதியை காண்பதற்கு. 

கொட்டி பரவி அவள்மனதை கொன்ற விஷம் எது?

இந்த அனைத்தையும் அவளை யாருமறியாமல் கடித்த கருந்தேள் அறிந்திருக்கக்கூடும்.

காதல் ஒருபுறம் பொய்யான ஒன்றாகவே கிடக்கட்டும். அன்பு இல்லாத மனதில் எங்கிருக்கிறது ஔி? கனியாத ஒன்றில் எங்கிருக்கிறது இனிமை? பூக்காத ஒன்றில் எப்படி வந்து அமர்கிறது தெய்வம்? 

மனம் இல்லாத இடத்தில் சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?

இந்தக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரைக்கும் கேள்வி இதுதான்.  சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...