Skip to main content

அறம்: தாயார்பாதம்

 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும். 

நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என்  முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை. 


'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும்.

இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும். 

அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்கு மிக நெருக்கமான கதை. பெண்ணை பாடிய எந்த இதிகாசத்திற்கும் குறையாத உணர்வு எழுச்சி கொண்ட நவீனக்கதை என்று தோன்றும்.

அவளுக்கென்று ஊரில்லை. அவளுக்கென்று தெய்வமில்லை. அவளுக்கென்று தாய்தகப்பனில்லை. அவளுக்கென்று கணவனில்லை. இறுதியில் அவளுக்கென்று அவள்  மனம் கூட இல்லை. 

இருப்பதெல்லாம் கைகள் மட்டும் தான். வேலை செய்யும் கைகள். துடைத்து கழுவிக்கொண்டே இருக்கும் கைகள். தன் மீது விழுந்த அசிங்கத்தை துடைத்து துடைத்து மாளாத கைகள். அத்தனைக்குப் பிறகும் எஞ்சியிருக்கும் அது என்ன? கதையில் கூறப்பட்டுள்ள மலம் என்பது மலம் மட்டுமா? அதை அன்றே குழந்தை தன் மடியில் இருந்த மலமாய் சுத்தப்படுத்தியிருப்பாள். பெண்ணென அவள் மீது வைக்கப்பட்டவற்றை அனுதினமும் சுத்தப்படுத்துகிறாளா? 

தோற்றம் என்று சொல்லப்படும் மாயையா, தன் சங்கீதத்தை நிறுத்திய ஆணவத்தையா,தன் தந்தை மீது விழுந்த அவமரியாதையையா,செல்வமில்லாத தன் வறுமையின் மீது விழுந்த அதிகாரத்தையா,ஒரு பெண் என தன்கணவனின் அலட்சியத்தையா,காதல் அறியாத தன்னுடலில் படிந்த கரங்களையா? மனுசி என்றே தன்னை உணராதவர் தந்த தாய்மையின் வடுக்களையா? என்று எதை அவள் துடைக்கிறாள். 

சிற்றுடலையும் மடித்து குறுஉடலாக்கி அவள் இந்த பூமியில் தேடுவது எதை?

அவள் கைகள் அத்தனை சுத்தப்படுத்தியும் மாறாத ஒன்று எத்தனை களிம்பேறியிருக்க வேண்டும். இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டும்... அந்த களிம்பை அகற்றி அதனுள் உறையும் ஆதியை காண்பதற்கு. 

கொட்டி பரவி அவள்மனதை கொன்ற விஷம் எது?

இந்த அனைத்தையும் அவளை யாருமறியாமல் கடித்த கருந்தேள் அறிந்திருக்கக்கூடும்.

காதல் ஒருபுறம் பொய்யான ஒன்றாகவே கிடக்கட்டும். அன்பு இல்லாத மனதில் எங்கிருக்கிறது ஔி? கனியாத ஒன்றில் எங்கிருக்கிறது இனிமை? பூக்காத ஒன்றில் எப்படி வந்து அமர்கிறது தெய்வம்? 

மனம் இல்லாத இடத்தில் சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?

இந்தக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரைக்கும் கேள்வி இதுதான்.  சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?







Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...