Skip to main content

அறம்: தாயார்பாதம்

 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும். 

நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என்  முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை. 


'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும்.

இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும். 

அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்கு மிக நெருக்கமான கதை. பெண்ணை பாடிய எந்த இதிகாசத்திற்கும் குறையாத உணர்வு எழுச்சி கொண்ட நவீனக்கதை என்று தோன்றும்.

அவளுக்கென்று ஊரில்லை. அவளுக்கென்று தெய்வமில்லை. அவளுக்கென்று தாய்தகப்பனில்லை. அவளுக்கென்று கணவனில்லை. இறுதியில் அவளுக்கென்று அவள்  மனம் கூட இல்லை. 

இருப்பதெல்லாம் கைகள் மட்டும் தான். வேலை செய்யும் கைகள். துடைத்து கழுவிக்கொண்டே இருக்கும் கைகள். தன் மீது விழுந்த அசிங்கத்தை துடைத்து துடைத்து மாளாத கைகள். அத்தனைக்குப் பிறகும் எஞ்சியிருக்கும் அது என்ன? கதையில் கூறப்பட்டுள்ள மலம் என்பது மலம் மட்டுமா? அதை அன்றே குழந்தை தன் மடியில் இருந்த மலமாய் சுத்தப்படுத்தியிருப்பாள். பெண்ணென அவள் மீது வைக்கப்பட்டவற்றை அனுதினமும் சுத்தப்படுத்துகிறாளா? 

தோற்றம் என்று சொல்லப்படும் மாயையா, தன் சங்கீதத்தை நிறுத்திய ஆணவத்தையா,தன் தந்தை மீது விழுந்த அவமரியாதையையா,செல்வமில்லாத தன் வறுமையின் மீது விழுந்த அதிகாரத்தையா,ஒரு பெண் என தன்கணவனின் அலட்சியத்தையா,காதல் அறியாத தன்னுடலில் படிந்த கரங்களையா? மனுசி என்றே தன்னை உணராதவர் தந்த தாய்மையின் வடுக்களையா? என்று எதை அவள் துடைக்கிறாள். 

சிற்றுடலையும் மடித்து குறுஉடலாக்கி அவள் இந்த பூமியில் தேடுவது எதை?

அவள் கைகள் அத்தனை சுத்தப்படுத்தியும் மாறாத ஒன்று எத்தனை களிம்பேறியிருக்க வேண்டும். இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டும்... அந்த களிம்பை அகற்றி அதனுள் உறையும் ஆதியை காண்பதற்கு. 

கொட்டி பரவி அவள்மனதை கொன்ற விஷம் எது?

இந்த அனைத்தையும் அவளை யாருமறியாமல் கடித்த கருந்தேள் அறிந்திருக்கக்கூடும்.

காதல் ஒருபுறம் பொய்யான ஒன்றாகவே கிடக்கட்டும். அன்பு இல்லாத மனதில் எங்கிருக்கிறது ஔி? கனியாத ஒன்றில் எங்கிருக்கிறது இனிமை? பூக்காத ஒன்றில் எப்படி வந்து அமர்கிறது தெய்வம்? 

மனம் இல்லாத இடத்தில் சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?

இந்தக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரைக்கும் கேள்வி இதுதான்.  சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?







Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...