Posts

Showing posts from November, 2023

சுவடிகள்

Image
 [அக்டோபர் 2023 ஆவநாழி இதழில் வெளியான கதை] அந்த செம்மண் நிலமெங்கும் சித்திரையின் அனல் அடித்து  இரவும் பகலும் தகித்திருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நிலம் புழுதியாகிப் பறந்தது. அதிகாலையின்  மெல்லிய தண்மையும்  நிலம்கூடாத அந்த கருக்கல்  பொழுதில், கழுத்து வியர்வையின் நசநசப்பில் கரையாளருக்கு முழிப்பு தட்டிவிட்டது. திண்ணையில் இருந்து திரும்பிப் படுத்து கிழக்குப் பக்கமாகப்  பார்த்தார். வானம் மீன்கள்பூத்து நிறைந்திருந்தது. இனி கண்கூட்டி தூங்கமுடியாது. எழுந்து அமர்ந்து கைக்கால்களை நீட்டி மடக்கியப்பின் பின்பக்கமாக  சென்றார். பின்புற சுவரில் சாய்ந்திருந்த பெரிய மண்பானையை உற்றுப்பார்த்தார். கரிய மினுமினுப்பாக நீர் தெரிந்தது. குட்டிச்சுவர்களை தாண்டிக்கொண்டு முள்காட்டிற்குள் சென்று திரும்பும்போது வானம் வெளுக்கத் தொடங்கியது. பானையில் இருந்த தண்ணீரை மண்ணாலான  உலைமூடியால் அள்ளி அள்ளி உடலில் ஊற்றிக்கொண்டார். உடலில் தண்ணீர் வழிய வழிய மனம் விழித்துக்கொண்டது. இன்னைக்கு இந்தக்கடனை அடைக்கனும் என்று நினைத்தவராக உடலின் ஈரம்  காயும் வரை  நின்றார்.  எட்டின தொலைவு வரை முள்காடு. குட்டிச்சுவருக்கு அந்தப்பக்கமிரு

நித்யகன்னி

Image
 எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி நாவலை வாங்கி புத்தகஅடுக்கில் வைத்து இரண்டு ஆண்டுகளாகிறது. நேற்று மழையை வேடிக்கை பார்த்தபடி நின்ற போது கண்ணில் பட்டதும் எடுத்தேன்.  எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் விஸ்வாமித்திர முனிவரின் சீடரான காலவர் கல்வி நிறைவு பெறுகிறார். குருதட்சணை தருவேன் என்று பிடிவாதமாக கேட்பதால் விஸ்வாமித்திரர் ஒரே மாதிரி நிறமுள்ள எண்ணூறு குதிரைகளை தட்சணையாக கேட்கிறார். ஆபூர்வ நிறம் கொண்ட குதிரைகள் அவை. தர்மத்தில் உயர்ந்த அரசரான யயாதியிடம் காலவர் சென்று தானமாக கேட்கிறார். யயாதி தன்னிடம் அந்த மாதிரி குதிரைகள் இல்லாததால் தன்மகளான மாதவியை தனமாக அளிக்கிறார். குழந்தை பெற்று முடித்ததும் கன்னித்தன்மைக்கு மீளும் வரம் பெற்ற அவளைக்கொண்டு அபூர்வகுதிரைகள் வைத்துள்ள மூன்று அரசர்களுக்கு திருமணம் செய்வித்து குதிரைகளை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். முதல் பார்வையிலேயே மாதவி காலவர் மீது காதல் கொண்டுவிடுகிறாள்.  மூன்று அரசர்களிடமிருந்து குதிரைகளை பெறுவதும்,மீதம் இருநூறு குதிரைகளுக்காக யாரை மணக்க வேண்டிருந்தது? என்றும் ,இறுதியில் மாதவியின் காதல் என்னவானது என்பதும் நாவலின் கதை. கா

அணையா தீபம்

Image
 ஊரில் வழக்கம் போல கார்த்திகை மாத பயிர்ப்பொங்கல்.  வரிசையாக சிறுதெய்வங்களுக்கும், வயல்தெய்வங்களுக்கும் வழிபாடுகளும் பலிகொடுத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. நாளை கோட்டைப்பிள்ளையாருக்கும்,ஊமைப்பிடாரிக்கும் பொங்கல் என்று நேற்று ராஜேந்திரன் அண்ணா தண்டோரோ போட்டுவிட்டு சென்றார். சின்னய்யாவின் பள்ளித்தோழர். சின்னய்யாவின் இறப்பால் ஒரு ஆண்டுக்கு கோவில்கள் வழிபாடுகள் வீட்டில் விழாக்கள் வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கள் தலைமுறையில் சின்னய்யா வீட்டில் முதல் இழப்பு. அய்யாவின் திருமணத்திற்கு முன்பு தாத்தா இறந்தார்.  காரியத்தன்று புரோகிதர் அண்ணா 'இந்த வருஷம் உங்களுக்கு அமாவாசை விரதம் தவிர எதுமில்லை..மனசை காத்துண்டிருக்கனும்' என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது சாதாரணமாக இருந்தது.  [ஆனால் இந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை 'வீட்ல எல்லாவளும் எப்படி இருக்கேள்...'என்றபடி வந்துவிட்டார். இவரும் ,இவர் அப்பா கண்ணன் அய்யாவும், பாட்டனார் சப்தரிஷிதாத்தாவும் மிகவும் உற்சாகமானவர்கள். வரும் போதே உற்சாகத்தை அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு வருபவர்கள்] ஆனால் இந்த நான்கு மாதங்களில் 'மனசை க

விண்மீன்

Image
 ‘ அவன் தலைகீழாய்ப் புரட்டி வைக்கும் மணற் கடிகாரத்தில் முடிவுறாக் குழந்தைமையில் என் முதற்கணமெனச் சொட்டும் ஒரு துகள்.’                             ___________ எதையேனும் மறக்க முனைந்தே கழிகிறது என் பொழுது ஒரு நாள் ஒரு ஆள் ஒரு ஊர். மறதியின் முதல்கல் இடறி கலையும் தேன்கூடென வரிசையில் வந்து தாக்கும் நாட்கள் ஊர்கள் மற்றும் மனிதர்கள்                                                    கவிஞர் எம்.யுவன் வாழ்வுடன் காலம் கொண்டுள்ள ஒட்டுதலில்லா உறவின் முன் நின்று விதிர்க்கும் மனதை யுவன் கவிதைகளில் உணரமுடிகிறது. அவர் காலத்தையும், வெளியையும் தீராத தாபத்துடன் அணுகும் மனம் கொண்டவராக கவிதைகளில் தெரிகிறார். இதை தர்க்கம் என்று கவிஞர் சொல்லக்கூடும். கவிதைவாசகர் அதை நம்ப வேண்டியதில்லை. தர்க்கம் மேலும் மோசமாக சென்று முட்டி நிற்பது தீவிரமான உணர்வு நிலைகளையே. [மோசமாக என்பது நேர்மறையான பொருளில்]. துறவியாக போவது என்பது அன்பின் மிகவிரிந்த எல்லை என்பதைப்போல தர்க்கப்பூர்வமாக செல்வது இந்தக்கவிதைகளில்  மேலும் விரிந்த உணர்வுபூர்வமான தளத்தை உணர்வது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.  தர்க்கத்திற்கு என்று ஒரு ‘உணர்வுபூர்வ கி

பசியற்ற வேட்டை

Image
காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது.  உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து  தப்பித்து  இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது.  மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான். இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே.  ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும்

இலக்கியத்திற்கான கடவுச்சீட்டு

Image
 நேற்று யூட்யூபில் எழுத்தாளர் சுந்தரராமசாமியின் ஆவணப்படம் பார்த்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் கி.ரா, சு.ரா, ஜெயகாந்தன் ஆவணப்படங்களை ஒரே நாளில் சேர்த்து பார்த்திருக்கிறேன்.  ஜெயகாந்தனின் சிரிப்பும் அந்த தலைப்பாகைக்கட்டும் மனதில் இருந்து அகலவே அகலாது. யோசித்தால் மூவரின் குரலும் சிரிப்பும் பேச்சும் இன்று வரை அவர்களை நினைக்கும் போதெல்லாம் மனதை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து வரிசையாக யூடியூபில் கிடைக்கும் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போது அவ்வப்போது இடைஇடையே மனஎழுச்சியினால் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். அம்மாவுக்கு ஜெயகாந்தனை தெரியும். அவரைப்பிடிக்கும். அவரின் ஒன்றிரண்டு கதைகளை இளம்வயதில் வாசித்திருக்கிறார்.  சு.ராவிற்கு வார்த்து எடுத்ததைப் போன்ற குரல். ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யும் இளம் பெண்ணுடன் சு.ரா பேசும் இடம் அழகானது. அதே போல படம் துவங்கும் போது ஆற்றும் உரை.  சு.ராவை பள்ளி வயதில் முதலில் வாசித்தேன். 'உழவுமாடும் கோயில் காளையும்' சிறுகதை பாடப்பகுதியாக இருந்தது. அதற்கு முன்பே 'ஜன்னல்' கதை வாசித்த

கடல் சூழ்ந்த கவிஞன்

Image
 [செப்டம்பர் 2023 கவிதைகள் இதழில் வெளியான கட்டுரை] நான் வண்ணத்துப்பூச்சியாகிவிட்டேன் கடந்தகாலம் இரண்டு சிறகுகளாக வளர்ந்து என் தோளில் அசைகிறது நான் எழுதுகிறேன் வானம் சிறுகுழந்தையாகி என்னெதிரே துள்ளித்துள்ளி இறங்குகிறது நல்ல வேளை நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாகியிருக்கிறேன் நன்றி கடந்த காலமே இனி என் உண்ணாவிரதம் ஒரு புன்னகையால் முடியும்       _ஜெ. பிரான்சிஸ் கிருபா                 கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா ஆழ்மனதுடன் கொண்ட உறவால் தான் நாம் கவிதையை நெருக்கமாக உணர்கிறோம். காலகாலமாக  மானசீகமான ஒரு உணர்வுக்கடத்தல் கவிதை வழியே தொடர்ந்து வருகிறது. கவிதை மனிதஉணர்வுகளின் மொழிவடிவம் என்பதாலேயே கவிதை மற்ற இலக்கியவடிவங்களை விட மனதிற்கு நெருக்கமாகிறது. நம்முடைய ஆழ்மனம் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள் நம் மூளையில் அச்சம்,குரோதம்,காமம்,வன்மம் மற்றும் அன்பு போன்ற உணர்வுகளால் உருவானது. அவற்றை சுற்றியுள்ள இயற்கையுடன் இணைத்து மனித மனம் மொழி என்னும் படிமங்களின் தொகுப்பாகிறது. அந்த தொகுப்பில் உள்ள கூட்டு மனதின் ஆழ்மனப்படிமங்கள் தொடர்ந்து கவிதையில் வேறொன்றாக மாறிக்கொண்டிருக்கும் போது ஒரு கவியின் கவியுலகு விரி