Skip to main content

விண்மீன்

 ‘அவன்

தலைகீழாய்ப்

புரட்டி வைக்கும்

மணற் கடிகாரத்தில்

முடிவுறாக் குழந்தைமையில்

என் முதற்கணமெனச்

சொட்டும் ஒரு

துகள்.’

                            ___________

எதையேனும் மறக்க

முனைந்தே கழிகிறது

என் பொழுது

ஒரு நாள்

ஒரு ஆள்

ஒரு ஊர்.

மறதியின் முதல்கல் இடறி

கலையும் தேன்கூடென

வரிசையில் வந்து தாக்கும்

நாட்கள் ஊர்கள்

மற்றும் மனிதர்கள்

                      

                           கவிஞர் எம்.யுவன்

வாழ்வுடன் காலம் கொண்டுள்ள ஒட்டுதலில்லா உறவின் முன் நின்று விதிர்க்கும் மனதை யுவன் கவிதைகளில் உணரமுடிகிறது. அவர் காலத்தையும், வெளியையும் தீராத தாபத்துடன் அணுகும் மனம் கொண்டவராக கவிதைகளில் தெரிகிறார். இதை தர்க்கம் என்று கவிஞர் சொல்லக்கூடும். கவிதைவாசகர் அதை நம்ப வேண்டியதில்லை. தர்க்கம் மேலும் மோசமாக சென்று முட்டி நிற்பது தீவிரமான உணர்வு நிலைகளையே. [மோசமாக என்பது நேர்மறையான பொருளில்]. துறவியாக போவது என்பது அன்பின் மிகவிரிந்த எல்லை என்பதைப்போல தர்க்கப்பூர்வமாக செல்வது இந்தக்கவிதைகளில்  மேலும் விரிந்த உணர்வுபூர்வமான தளத்தை உணர்வது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

 தர்க்கத்திற்கு என்று ஒரு ‘உணர்வுபூர்வ கிறுக்கு’ உள்ளதை இவர் கவிதைகளில் காணமுடிகிறது.

திறந்து கிடக்கும் கூண்டுந்து கிடக்கு

பறந்துவிட்டது.

திறந்து கிடக்கிறது கூண்டு.

எத்தனை பழங்கள்

எத்தனை பருக்கைகள்

எத்தனை கனவுகள்

திறந்து கிடக்கிறது கூண்டு.

வீட்டின் பகுதியாய் கூண்டும்

கூண்டின் பகுதியாய் வீடும்’

வீட்டை பறவையின் கூண்டின் பகுதியாகக் காண்பதுடன், பறந்து சென்ற ஒன்றின் இருப்பின்மையின் வாதை இந்தக்கவிதையில் உள்ளது. காலிக்கூண்டை எந்தவிதமாக சொன்னாலும் அதன் வெற்றிடம் மனதை அறையவே செய்கிறது.

இவர் கவிதைகள் தர்க்கத்திற்குள் நிற்கும் போது மேலும் மேலும் கவித்துவத்தின் சிறகில் ஏறிப் பறக்கின்றன.

கொண்டு வந்த கடல்

இந்த முறை சங்கு கொண்டு வந்தேன்.

சென்ற முறை சிப்பி.

அதற்கு முன்னால் சோழி

பாலிதீன் பைகளில்

செதில் கலந்த மணலும்,

கரைக்கோயில் குங்குமும்

கொண்டு வந்ததுண்டு.

ஒரு முறைகூட

கடலின் பரிதவிப்பை

பரிவை ஆறுதலை

கொண்டு வரமுடிந்ததில்லை.’

 உணர்வுகளால் அரற்றும் மனம் ஒன்று தான் காணும் அனைத்திலும் ஒரு பிடிமானத்தை தேடி கண்டடைகிறது. ஆனால் பிடிமானத்தின் நிலையின்மையால் மேலும் மேலும் அலைவுறுகிறது.

அறிவு, தர்க்கம் என்பவை தீவிரஉணர்வுநிலை என்ற தளத்திற்கு நகர்வதை, தர்க்கம் என்ற பிரக்ஞை பூர்வ தளத்தில், உணர்வு அதிதீவிரம் அடைவதை அதன் வாதையை இந்தக்கவிதைகளில்  அடையமுடிகிறது.

அழுகவிருக்கும்

பழத்தைச் சூழ்

கொண்டது

அப்போதுதான் பூத்த மலர்’

 மூதாதை, தான், பின்னால் வருகிறவர் என்ற காலக்கோடுகளை கடந்த உணர்வை எட்டும் இடத்தில் யுவன் கவிதைகள் ஆதிகவியின் ‘யாதும்’ என்ற உணர்வு நிலையை தொடுகிறது. ஆனால் அது அன்பை தொடும் இயல்பான தன்மையுடன் நம்முள் உறையும் மாறாத வன்முறையை தொடுகிறது.


'இடமாற்றம்'

உலகமொன்றும்

புதிதில்லை எனக்கு.

இன்றைய சமுத்திரம்

அன்றைய மேகமாய்க்

கிடந்தநாளில்

பார்த்திருந்தவன் நான்.

மரங்களும் மலைகளும்

உறைந்த யுகத்தில்

குகைக்குள் பனித்துகளாய்

ஒடுங்கியிருந்ததும் நானே.

நடக்க ஊன்றிய கைகள்

உயர்ந்து நிமிர்ந்த போது

கதிர் அறுக்கப்போனேன்.

மானை முயலைத் துரத்திப் பின்

வதக்கி உண்டதில்

பின்னும்

வளர்ந்தவன்.

இரையைத் துரத்துவது ஓய்ந்து

அணுவைத் துரத்தியதும்

நிலவில் சென்று நான்

இறங்கி நடந்ததும்

யாவரும் அறிந்ததே.

புதைந்த காலங்களில்

அமிழ்ந்த வன்முறை

மட்டைக்கும் பந்துக்கும்

இடம் மாறி

மைதானமங்கும் பரவுவதை

கலர் டி.வி.யில்

வியந்தவண்ணம்

காத்திருக்கிறேன்

தற்சமயம்.’

கவிதையில் தர்க்கம் ஒரு மணல்வெளி. ஆனால் இந்தக்கவிதைகளில் அது ஆற்று மணற்பரப்பு போல கைவைக்கும் இடத்தில் எல்லாம் ஊற்று கசிகிறது. இந்தக்கவிதைகளில் தர்க்கம் என்பதே அந்த ஈரத்தை காயவிடாத ஒரு களிம்பாக படலமாக மாறும் விந்தை நடக்கிறது. 

நூற்றாண்டு நிழலில்

உறங்கி விழித்த குழந்தை

கனவில் தொலைந்த

பொம்மைக்காக

அழுங்கிறது ஏங்கி’

காலத்தை,வெளியை  சிந்தனை செய்யும் அறிவாளி மனமும்,உணர்வுபூர்வமான கவிமனமும் சேர்ந்து,

குடியேறின மூணாம் மாசம்

தானும் வந்து சேர்ந்தது

அந்தக்குருவி….

….அந்தக்குருவியின் வீட்டில்தான்

இப்போது  குடியிருக்கிறேன்’

என்று சொல்கிறது. அன்றாட உலகத்தில் இருந்து கொண்டு அந்தக்குருவியின் வீட்டில் குடியிருக்கிறது.


காலம் நழுவிச்செல்லும் ஏக்கத்தை,அது கொடுத்து செல்லும் நிலையின்மையை இவற்றிற்கு மாறாக அந்த பள்ளத்தில் ஊரும் அன்பை தர்க்கம் என்று சொல்லி கண்சிமிட்டும் சிறுவனிடம் நாமும் கண்சிமிட்டி சரி என்று தலையாட்டலாம். யுவன் தன்னுள்ள உணரும் காலம், வெளி, நிலையின்மை பற்றிய பதற்றத்திற்கு மாற்றாக அனைத்திலும் தன்னை காணும் பேதமற்ற தன்மை எய்தும் இந்தக் கவிதை விண்மீன்கள் போல காலத்தின் அந்தரத்தில் நிற்கின்றது.

யாதுமாகி

அப்போது

பட்டாம் பூச்சியாயிருந்தேன்

கணக்கற்று மலர்ந்தவற்றில்

தன் பூ தேடி

சிறகு துடிக்க அலைகிறது

பட்டாம்பூச்சி.

பின் ஒரு பூவானேன்

இள் நிழல் காணா

நதியின் கரையில்

அன்றாடம் மலரும்

ஒரு பூ

கொஞ்ச காலம்

நதியாயுமிருந்தேன்.

தனக்குள் தான் விரையும்

நதியின் விசையில்

அசையும் பூ மேல்

அமர்ந்தது பூச்சி’

எழுதுபவர்கள் இங்கே அன்பும் வன்மமும் ,கருணையும் சகிப்பும், காமமும் காதலும், வன்முறையும் அலைவுறுத்தலுமான வதைபட்டுக் கொண்டிருக்கும் போது தர்க்கம் என்ற இருபக்கமும் கூர் உள்ள வாளை ஏந்தி நிற்கும் களிக்கும் விரலைக் கண்டு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ஆனால் அங்கேயும் இதே வதைதான் என்பதில் ஆசுவாசம். [ ஆசுவாசம் என்பதற்கு பதிலியாக ஜாலி என்று எழுதலாம்]

நான் பார்வையாலும்

நீ தானியத்தாலும்

அவன் அம்பாலும்

அணுகுவது ஒரே

பறவையை

                          கவிஞர் எம்.யுவன்

விஷ்ணுபுரம் விருது பெறும் யுவன்சார்க்கு அன்பும் வணக்கங்களும்.









Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...