Skip to main content

துறைமுகம் என்னுரை

 நாளை என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பான துறைமுகம் வெளியாகிறது. வழக்கம் போல சென்னை இக்சா மையத்தில்...

சமர்ப்பணம்

அம்மாவுக்கு….


நன்றி

சொல்வனம்

தமிழினி

ஆவநாழி

ஓலைச்சுவடி

வாசகசாலை

மற்றும் இந்தத்தொகுப்பிற்கு பிழை நோக்கியவர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.



பெருங்கடலில் அவரவருக்கான கரைகள்


இந்தத்தொகுப்பில் இரண்டு கதைகளைத் தவிர மற்ற கதைகள் இந்த ஆண்டில் எழுதப்பட்டவை. எழுத்தில் ஒரு சிறிய  திசை திரும்பல் உள்ளதை கதைகளைத் தொகுக்கும் போது உணரமுடிகிறது. புத்தகங்கள் வாசிக்கும் போது வரலாற்றில் உள்ள மனிதர்களின் வாழ்வின் சில தருணங்கள் மனதிற்குள் கிடந்து தொந்தரவு செய்ததால் பாலாமணி பங்களா,அந்த கிச்சிலி மரத்தடியில், சுவடிகள்,துறைமுகம்,இலையுதிர் காலத்து மழை போன்ற கதைகளை எழுதினேன். 

ஒரு நாவலுக்கான முன்னுரை சிறுகதை எழுதுவதற்கான தூண்டுதலாக இருக்கும் என்பது வியப்பு தான். போரும் அமைதியும் நாவலில் ஹீயூ வால்போல் எழுதியிருக்கும் முன்னுரை என்னை மிகவும் கவர்ந்தது. போரும் அமைதியும் நாவல் எப்படி அவரின் பதின்வயதில் அவரை ஆட்கொள்கிறது பின்னர் வாழ்நாளின்  இக்கட்டான போர்க்கால காலக்கட்டத்தில் அவர் மனதுடன் துணையிருக்கிறது என்று எழுதியிருப்பார். ஒரு அதிகாலையில் அவரின் மனநிலையை கதையாக எழுதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அதே போலவே ட்ராமா குயின் பாலாமணி அம்மாள்,கணித மேதை ராமானுஜம்,புனிதர் ஜான் மற்றும் நாடகஆசிரியர் சங்கரதாச சுவாமிகள் ஆகியோர் தங்களின் இயல்பால், தங்களின் தேடுதல்களினால்,தங்களின் செயல்பாடுகளால் என் மனதை பரவசம் கொள்ள செய்தார்கள். இவர்களை பற்றி வாசித்தப்பின் பலநாட்களுக்கு எழுத வேண்டும் என்ற உந்துதல் உள்ளே இருந்து இந்தக்கதைகளை எழுத வைத்தது.

பள்ளியில் கணக்குப்பாடம் எனக்கு சவாலானது. படிக்கும் காலத்தில் கணக்கு பாடத்தால் வகுப்பறைகளில் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். வேலைக்கான தேர்விலும் கணக்குப்பாடத்தால் மட்டுமே எனக்கு கட் ஆஃப் சரிந்தது. ஆனால் கணித மேதை ராமனுஜரை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் வாசித்த ராமானுஜரின் வாழ்க்கை வரலாறே எனக்கு கணிதத்தின் மீதிருந்த வெறுப்பை நீக்கி ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியது. கணிதத்தின் மீதான ஏக்கம் அவரால் வந்ததுதான். ஆனால் கணிதம் வரவில்லை. அவரை கதையில் எழுதும் போது அத்தனை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். 

ஒருநாள் இரவு தெருவில் கூத்து நடந்தது. அந்த கூத்தில் ராணவனராக நடித்தவரின் நடிப்பு மனதை விட்டு அகலவில்லை.  அது மூங்கில்காடு கதைக்கான உந்துதலாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே கதையாக எழுத முடிந்தது. மறுபாதி கதைகள் கிராமத்துக் கதைகள்.

 மனித இயல்புகள், நிகழ்வுக்கான சாத்தியங்கள், அவர்களுக்குள் இருக்க சாத்தியமான இன்னொரு அவர்கள்,அவர்களுக்குள் இருக்கும் தீவிரங்களே இந்தக்கதைகளை எழுத வைத்தன.

இங்கு அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்..

பெண்குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை விட தாய்க்கே சவால் அதிகம். அம்மாவுக்கு பதினெட்டு வயதில் நான் பிறந்தேன். நான் உடல் அளவிலும், கிறுக்குத்தனங்களிலும் சவாலான பிள்ளை. 

நான் வாசிக்கத்தொடங்கியதில் இருந்து மூன்று முறை வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நெருக்கடியான வீட்டில் எனக்கு வாசிக்க, எழுத ஒரு இடம் ஒதுக்குவதில் அம்மா அதிக கவனம் எடுத்துக்கொள்வார்.  கொஞ்சம் பெரிய பழமையான நடுத்தர குடும்பத்தில் அனைத்தும் பொதுவானவை. குடும்பத்தலைவருக்கே கூட சலுகைகள் இருக்காது. ஆனால் புத்தகம் வாங்குவதற்கான பணம் பதினெட்டு வயதில் இருந்து என் கைகளில் இருந்து கொண்டே இருக்கிறது. அய்யாவுக்கு பிறகு அம்மா இதில் கவனமாக இருப்பார். 

திட்டிக்கொண்டே இருந்தாலும் நான் புத்தகத்தை கைகளில் எடுக்கவில்லை என்றால்  உடம்பு சரியில்லையோ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார். எதாவது மனசஞ்சலத்தில் இரண்டுநாள் புத்தகம் எடுக்காமல் இருந்தால் கடுப்பாகி ‘..நீ படிக்க வேண்டியது தானே..அகத்தால அழிஞ்சானாம் ராவணனன்..பிடிவாதத்தால வாழ்ந்தாளாம் சீதை…பொம்பளைப்பிள்ளைக்கு பிடிவாதம் வேணும்,’ என்று சொல்வார். அம்மா பேச்சில் பழமொழிகள் சரளமாக வரும்.

அவர் எட்டாம் வகுப்பு வரை படித்த எளிய  கிராமத்து பெண். ஆனால் சாதாரண அம்மா இல்லை. தன் எல்லைக்கு மீறி என்னை போன்ற ஒரு கிறுக்குத்தனம் மிக்க பிள்ளையை புரிந்து கொள்பவர். எப்போதும் அடுக்கி வைக்கும் இயல்புள்ள அம்மாவுக்கு கலைத்துப்போடும் இயல்புள்ள பெண் நான். ஆனால் என்னை அடுக்க வைப்பது எப்படி என்று அவருக்குத் தெரியும்.

நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் அம்மா. நான் என் சூழலில் பார்க்கும் மற்ற அம்மாக்கள்,பெரியம்மாக்கள், சித்திகள் போல அம்மாவும் இருந்திருந்தால் என்னால் எழுதத்தொடங்கியிருக்க முடியாது.

பதின் வயதிலிருந்து பெண் பிள்ளைகளுக்கு அம்மாவுடன் சின்னதாக எப்போதும் முட்டிக்கொள்ளும் தன்மை இருக்கும். திருமணமாகி அம்மாவை பிரிந்து சென்றதும் அப்பாக்கள் குழம்பி மண்டையில் தட்டிக்கொள்ளும் வகையில் அம்மாவுடன் பேரன்பாகி விடுவார்கள். ஆனால் எங்களுக்குள் அந்த பிரிவில்லை. அனுதினமும் Tom and Jerry நட்புதான் என்றாலும் அன்பு மாறாமல் இருந்து என்னை புரிந்து கொள்ள எப்போதும் முயற்சி செய்யும் அம்மாவுக்கு இந்த சிறுகதைத் தொகுப்பு சமர்ப்பணம்..

இந்த நேரத்தில் எழுத்து மூத்தவர்களை வணங்குகிறேன். அவர்கள் மீது கொண்டுள்ள அன்பே என்னை வழிநடத்துகிறது.

                                   அன்புடன்,

                                   கமலதேவி

                   பா.மேட்டூர் [20/12/2023]





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...