புத்தக அறிமுகம்

 [அகழ் இதழில் வெளியான புத்தக அறிமுகம்]

மனதின் இசை

சுத்தமான இசை என்ற அளவுகோலில் பார்த்தால்,அவர் முதல் வரிசை மேதைகளில் இடம் பெறமாட்டார். …….அவர் பாணியில் தனித்துவமானதாக ஒன்று உண்டு என்றால் அது ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடிகள், ராமனாதன்கள் தம் அறிவால் அறிவிற்காக பாடிய போது அவர் தனது மனதால் மனதுக்கு பாடினார்.

        எம். எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு             

ஆங்கிலத்தில்: டி.ஜே.எஸ்.ஜார்ஜ்

தமிழில்: சுப்பாராவ்

ஒரு காலகட்டத்தில் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளின் மனதில் நிற்கும் மிக பிரபலமான ஆளுமையின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் சிறுமியின் தீவிரமான மனகவனமும், வெகுளித்தனமும், கடின பயிற்சியும் [இங்கு விடாத தேடல் என்று கொள்ளலாம்], தன்னை சுற்றி உள்ள கூட்டத்தை கவனத்தில் கொள்ளாத தன்மை அவசியம்.

இன்றுவரை கர்நாடக சங்கீதத்தின் மிகமுக்கியமான பாடகி, அன்றைய சினிமாவின் பிரபலமான நட்சத்திரமான எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற ஒருவரை எழுதுவதற்கு டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்ற ஒரு பத்திரிகையாளருக்கு மேற்சொன்ன இத்தனை விதமான தகுதிகளும் தேவைப்பட்டிருக்கும். 

ஒரு வாழ்க்கை வரலாறு எதற்காக எழுதப்படுகிறது? ஒரு வாழ்க்கை வரலாறு  எழுதுவதற்கு மிக அடிப்படையானது என்ன? ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம் தன்னளவில் கொள்ள வேண்டிய நியாயம் என்ன?

ஒரு ஆளுமையின் மேல் சமூகமோ,எழுதுபவரோ கொண்ட பற்றுதலினால் எழுதப்படுகிறது. அந்த ஆளுமை எழுதுபவரை எந்த வகையிலோ தீவிரமாக தன்வயப்படுத்தியிருக்க வேண்டும். அடிப்படையில் அந்த வயப்படுத்துதலே ஆளுமை பற்றி எழுத, அதற்கான தகவல்களுக்கான தீராத தேடலின் தீயை அணையவிடாமல் காக்கிறது. இரண்டாவதாக ஒரு வாழ்க்கை வரலாற்று நூலின் மிக அடிப்படையானது ‘உண்மை’. மிகவும் நேர்மையாக எழுதப்பட வேண்டியது. தன்னை ஆகர்ஷித்த ஒருவரை குறித்து சமரசமின்றி எழுதவேண்டும். மூன்றாவது மற்ற இரண்டையும் விட மிக முக்கியமானது. வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன் என்ற பெயரில் அந்த ஆளுமையின் பிம்பத்தை சிதைத்துவிடலாகாது.

இந்த வகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் இந்த மூன்று அடிப்படைகளுக்கும் நியாயம் செய்யும் படி இந்த நூலை எழுதியுள்ளார். 

பாடகி சுப்புலட்சுமி என்ற  ஆளுமையை சுற்றி கட்டப்பட்டுள்ள கோட்டையை ஒரு காற்றின் லாகவத்துடன் கடந்து திரை விலக்கும் அனுபவம் இந்த வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்ததும் நமக்கு ஏற்படுகிறது. விலக்கிய திரை வழியே காணும் உண்மையின் தரிசனம் இந்த புத்தகத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குகிறது. அங்கு நம் முன்னே நிற்கும் ரத்தமும் சதையும், ஏக்கமும், புன்னகையும், விடாப்பிடியான பொறுமையும்,இசை ஞானமும் கொண்ட சுப்புலட்சுமி, ஜார்ஜை எந்த அளவுக்கு பாதித்தாரோ அதே அளவுக்கு வாசிப்பவரையும் பாதிக்கிறார். 

எம்.எஸ் பிறந்த குடும்பத்தையும், சமூக சூழலையும், இந்திய தென்னிந்திய தமிழக சமூக பின்ணனியில் இருந்து ஜார்ஜ் துவங்குகிறார். இசை சார்ந்து, அதன் ஆன்மா நிலைகொண்டிருந்த இசை வேளாள வகுப்பு பெண்களின் சமூக சூழலை நம்முள் ஆழப்பதியவிட்டப் பின்னே  ஜார்ஜ் தன் நாயகியின் வாழ்கையை சொல்லத் தொடங்குகிறார். ஆனாலும் ஜார்ஜ்க்குள் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் அவ்வளவு உணர்ச்சிவப்படுபவர் அல்ல. மிகக்கறாரானவர். இந்த இரண்டு ஜார்ஜ்களும் சேர்ந்தெழுதிய இந்த நூல் எம்.எஸை உண்மைக்கு பாதகமில்லாத வகையில் வாசிப்பவருக்குள் கடத்துகிறது. 

இந்த நூலில் ஜார்ஜின் சமர்ப்பணமே நூலின் ஆன்மாவை சொல்லிவிடுகிறது. அதை நோக்கியே எம்.எஸ் தன் முழு வாழ்க்கையை செலுத்தியிருக்கிறார். ‘சுரண்டப்பட்ட சமூகத்தின் கண்ணியத்திற்கான ஏக்கம்..’ என்று அந்த சமர்ப்பணம் தொடங்குகிறது. 

ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு என்று ஒரு நுண்ணுணர்வு தேவைப்படுகிறது. அதுவும் அவர் ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர்.[ பொதுவாக எதிர்பாலரை எனவும் கொள்ளலாம்]. அவரே சொல்வதைப்போல ஜார்ஜ் ஒரு ‘வெளிஆள்’. எம்.எஸ் என்ற தனிநபரின் வரலாற்றின் வழி கர்னாடக இசை வரலாறு,தமிழ் சமூகத்தில் இசை,அன்றைய அரசியல் என்று விரியும் ஒரு வரலாறு இந்த நாவலின் சிறப்பம்சம். மேலும் அறியப்படாத வரலாறு, சிதறல்களாக  இந்நூலில் அங்கங்கே பரவலாக இருக்கிறது. உதாரணத்திற்கு பிரபல இதழான கல்கி தொடங்கி நடத்தப்பட்ட சித்திரம் உள்ளது. இசை ஆளுமைகள்,  அரசியல் ஆளுமைகள் என்று வரலாற்றின் நாயகர்கள்  அங்கங்கே வந்து போவதால் எம்.எஸ் வாழ்வுடன்,அவர் வாழ்ந்த காலகட்டத்தின்  முழுசித்திரத்தை வாசித்த அனுபவம் கிடைக்கிறது. தமிழ் இந்திய இசைக்கலைஞர்கள் ,தமிழக இந்திய அரசியல்,சமூக மனநிலை,நாடகக்கலை,சினிமா,காந்தி நேரு ராஜாஜி,பாலசரஸ்வதி, எம்.எல் வசந்த குமாரி, படே குலாம் அலிக்கான், அலாதீன் கான் போன்ற இசை மேதைகள் என்று பரந்த தளத்தில் நூல் விரிகிறது. நூலை வாசித்து முடிக்கும் போது எம்.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாற்றுடன்,இந்திய தமிழக வயலாற்றின் ஒரு சென்சிடிவ்வான பக்கத்தை வாசித்த உணர்வும் நமக்கு ஏற்படுகிறது. 

நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு உறுத்திய ஒரே விஷயம்… எஸ்.எஸின் கணவரான சதாசிவத்தை பற்றி ஐார்ஜ் உருவாக்கும் பிம்பம். எவ்வகையில் உண்மைக்கு நெருக்கமாக எழுதப்பட்டாலும் வாழ்க்கை வரலாற்றில் சிறிய புனைவம்சத்தை தவிர்க்க முடியாது. எம்.எஸின் சித்திரத்திலும் அது இருக்கக்கூடும். ஆனால் ஜார்ஜ் சதாசிவத்தை பற்றி சொல்லும் போதெல்லாம் அவரை திறன் மிகுந்த வியாபாரியாக, திட்டமிட்டு அனைத்தையும் வெற்றி கொள்பவராக,மதியூகியாக கிட்டத்த ஒரு ப்ளாஸ்டிக் தன்மை கொண்டவராக சொல்வதாக தோன்றியது. எம்.எஸ் ஸின் ஆழத்தை தொட முடிந்த ஜார்ஜால், சதாசிவத்தின் ஏதோ ஒரு நுண்ணிய பகுதியை சரியாக எட்டமுடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் [1930 களில்] ஒரு ஸ்மார்த்தர், வேளாள இசைக்கலைஞரை தன் சொந்த சமூகத்தின் முன், தன் சொந்த குடும்பத்தின் முன் முறைப்படி மனைவியாக்கிக் கொள்ளுதலில்,மனைவியை அவரின் கலையில் ஆகச்சிறந்த இடம் வரை செல்ல துணையிருந்து அங்கே நின்று, ‘ இதுதான் நான் நீண்டகாலமாக கனவு கண்டு வந்தது.  அவளை உலக மேடையில் நிறுத்துவது. என் பெரிய லட்சியம் நிறைவேறியது’ என்று நிறைவடையும் ‘தான்’ இல்லாத  அன்பின் கிறுக்குத்தனம் இவ்வளவு ப்ளாஸ்டிக் தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நூலில் உள்ள உண்மை தன்மையினால் வாசிப்பவரால் அதை தொட்டுவிட முடிகிறது. அதன் குறையை அதுவே ஈடு செய்யும் ஒன்று நூலில் உள்ளது.


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்