Skip to main content

இந்த ஆண்டின் ஆசி

 கமல தேவி சிறுகதைகளை எம். கோபால கிருஷ்ணன் தான் அறிமுகம் செய்தார்.

வெளியூரில் நீண்ட காலம் தங்க நேர்ந்துவிட்ட என்னிடம், வாசிப்பதற்குப் புதிய/ பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை.  ( இந்த முகவரியில் கிடைத்த  என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான, ' மேலும் கீழும்  பறந்த படி' யை, நான் எத்தனை முறைதான் படிக்க முடியும்?!,)


[எழுத்தாளர் அம்பையும் எழுத்தாளர் வண்ணதாசனும்]

வாசகசாலை இணைய இதழ் 86 இல் என் சிறுகதை  ஒன்றும் வந்திருப்பதால், அந்த இதழில் வந்திருக்கும் மற்றச் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன் .  அதில் இருக்கும் கதைகளில் கமலதேவியின் ' பாட்டும் தாளமும்' ஒன்று.


வாசக சாலையில்  வெளிவந்திருக்கும் அவருடைய மேலும் சில கதைகளை வாசிக்கத் துவங்கினேன். தமிழினி இணைய இதழில் தேடினேன். அங்கே  ஏழு கதைகளை வாசிக்க முடிந்தது.


பாட்டும் தாளமும்,நாயகி,துறைமுகம் ,பாலாமணி பங்களா,இள நகை, இலையுதிர் காலத்து மழை, அந்தக் கிச்சிலி மரத்தடியில், அரும்பு, கீறல், பங்காளி, மீண்டுமொரு சந்திப்பு,  ஜீவா... இப்படி ஒன்றின் சாயலில் மற்றொன்றில்லாத, வேறு வேறு களங்களில்  எழுதப்பட்ட   இந்தப் பன்னிரெண்டு கதைகளின்  வாசிப்பு  அனுபவம்  நிறைவாக இருந்தது. இதுவரை வாசக சாலை அமைப்பே ஆறு தொகுப்புக்களை வெளியிட்டிருப்பதாக  அறிகிறேன். வாசிக்க வேண்டும்.

[இது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு]

[அவருக்கு நான் எழுதிய மின்னஞ்சல்]

அன்புள்ள வண்ணதாசன் அய்யாவிற்கு,


வணக்கம். நலம் விழைகிறேன்.
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கமலதேவி. நீங்கள் என் கதைகளை வாசித்தது குறித்து முகநூலில் எழுதியிருந்ததை நண்பர்கள் பகிர்ந்தார்கள். நான் முகநூலில் இல்லைங்கய்யா. இங்கு ஊர்ப்பக்கம் அய்யா என்பது பொதுவாக மூத்தவர்களை ,இளையவர்களை, அப்பாக்களை அழைக்கும் இயல்பான சொல். 

கதை தலைப்புகளை குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கதைக்கு உங்கள் வாசிப்பு கிடைத்ததை ஆசியாக உணர்கிறேன். 
எங்கேயோ ஒரு அறையில் தனியே அமர்ந்து எழுதுகிறோம். அதே போல வாசிப்பும் அந்தரங்கமானது. மொழியால் இன்னொரு மனதிற்குள் செல்ல முடிவதை பற்றிய வியப்பு எனக்கு தீர்வதில்லை. மொழி எவ்வளவு அழகிய மனித கண்டுபிடிப்பு என்று எப்போதும் எனக்கு வியப்பு உண்டு. யாரிடமும் இதை கூறினால் 'இதென்னா அதிசயமா' என்று கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று... என் கதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கதைகளை குறித்துக் கூறும் போது இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

நீங்கள் என் கதைகளை வாசித்ததை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்கள் கதைகளை முதன்முதலாக என் பள்ளிக்கூட வயதில் தமிழ் துணைப்பாடத்தில் வாசித்தேன். அந்த வயதில் எழுத்தாளர்கள் எனக்கு ஹீரோக்கள். இன்று எழுத வருபவர் வரை எனக்கு அந்த மனநிலை மாறவில்லை. 

ஒரு அழகிய, மென்மையான,என் மதிப்பிற்குரிய எழுத்தாளரிடம் இருந்து கிடைத்த சொற்களை மனநிறைவுடன் பரவசத்துடன் பிடித்துக்கொள்கிறேன். 
அந்த சொற்களுக்காக எப்போதும் அன்பு.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...