Skip to main content

இந்த ஆண்டின் ஆசி

 கமல தேவி சிறுகதைகளை எம். கோபால கிருஷ்ணன் தான் அறிமுகம் செய்தார்.

வெளியூரில் நீண்ட காலம் தங்க நேர்ந்துவிட்ட என்னிடம், வாசிப்பதற்குப் புதிய/ பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை.  ( இந்த முகவரியில் கிடைத்த  என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான, ' மேலும் கீழும்  பறந்த படி' யை, நான் எத்தனை முறைதான் படிக்க முடியும்?!,)


[எழுத்தாளர் அம்பையும் எழுத்தாளர் வண்ணதாசனும்]

வாசகசாலை இணைய இதழ் 86 இல் என் சிறுகதை  ஒன்றும் வந்திருப்பதால், அந்த இதழில் வந்திருக்கும் மற்றச் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன் .  அதில் இருக்கும் கதைகளில் கமலதேவியின் ' பாட்டும் தாளமும்' ஒன்று.


வாசக சாலையில்  வெளிவந்திருக்கும் அவருடைய மேலும் சில கதைகளை வாசிக்கத் துவங்கினேன். தமிழினி இணைய இதழில் தேடினேன். அங்கே  ஏழு கதைகளை வாசிக்க முடிந்தது.


பாட்டும் தாளமும்,நாயகி,துறைமுகம் ,பாலாமணி பங்களா,இள நகை, இலையுதிர் காலத்து மழை, அந்தக் கிச்சிலி மரத்தடியில், அரும்பு, கீறல், பங்காளி, மீண்டுமொரு சந்திப்பு,  ஜீவா... இப்படி ஒன்றின் சாயலில் மற்றொன்றில்லாத, வேறு வேறு களங்களில்  எழுதப்பட்ட   இந்தப் பன்னிரெண்டு கதைகளின்  வாசிப்பு  அனுபவம்  நிறைவாக இருந்தது. இதுவரை வாசக சாலை அமைப்பே ஆறு தொகுப்புக்களை வெளியிட்டிருப்பதாக  அறிகிறேன். வாசிக்க வேண்டும்.

[இது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு]

[அவருக்கு நான் எழுதிய மின்னஞ்சல்]

அன்புள்ள வண்ணதாசன் அய்யாவிற்கு,


வணக்கம். நலம் விழைகிறேன்.
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கமலதேவி. நீங்கள் என் கதைகளை வாசித்தது குறித்து முகநூலில் எழுதியிருந்ததை நண்பர்கள் பகிர்ந்தார்கள். நான் முகநூலில் இல்லைங்கய்யா. இங்கு ஊர்ப்பக்கம் அய்யா என்பது பொதுவாக மூத்தவர்களை ,இளையவர்களை, அப்பாக்களை அழைக்கும் இயல்பான சொல். 

கதை தலைப்புகளை குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கதைக்கு உங்கள் வாசிப்பு கிடைத்ததை ஆசியாக உணர்கிறேன். 
எங்கேயோ ஒரு அறையில் தனியே அமர்ந்து எழுதுகிறோம். அதே போல வாசிப்பும் அந்தரங்கமானது. மொழியால் இன்னொரு மனதிற்குள் செல்ல முடிவதை பற்றிய வியப்பு எனக்கு தீர்வதில்லை. மொழி எவ்வளவு அழகிய மனித கண்டுபிடிப்பு என்று எப்போதும் எனக்கு வியப்பு உண்டு. யாரிடமும் இதை கூறினால் 'இதென்னா அதிசயமா' என்று கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று... என் கதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கதைகளை குறித்துக் கூறும் போது இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

நீங்கள் என் கதைகளை வாசித்ததை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்கள் கதைகளை முதன்முதலாக என் பள்ளிக்கூட வயதில் தமிழ் துணைப்பாடத்தில் வாசித்தேன். அந்த வயதில் எழுத்தாளர்கள் எனக்கு ஹீரோக்கள். இன்று எழுத வருபவர் வரை எனக்கு அந்த மனநிலை மாறவில்லை. 

ஒரு அழகிய, மென்மையான,என் மதிப்பிற்குரிய எழுத்தாளரிடம் இருந்து கிடைத்த சொற்களை மனநிறைவுடன் பரவசத்துடன் பிடித்துக்கொள்கிறேன். 
அந்த சொற்களுக்காக எப்போதும் அன்பு.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...