Skip to main content

இந்த ஆண்டின் ஆசி

 கமல தேவி சிறுகதைகளை எம். கோபால கிருஷ்ணன் தான் அறிமுகம் செய்தார்.

வெளியூரில் நீண்ட காலம் தங்க நேர்ந்துவிட்ட என்னிடம், வாசிப்பதற்குப் புதிய/ பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை.  ( இந்த முகவரியில் கிடைத்த  என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான, ' மேலும் கீழும்  பறந்த படி' யை, நான் எத்தனை முறைதான் படிக்க முடியும்?!,)


[எழுத்தாளர் அம்பையும் எழுத்தாளர் வண்ணதாசனும்]

வாசகசாலை இணைய இதழ் 86 இல் என் சிறுகதை  ஒன்றும் வந்திருப்பதால், அந்த இதழில் வந்திருக்கும் மற்றச் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன் .  அதில் இருக்கும் கதைகளில் கமலதேவியின் ' பாட்டும் தாளமும்' ஒன்று.


வாசக சாலையில்  வெளிவந்திருக்கும் அவருடைய மேலும் சில கதைகளை வாசிக்கத் துவங்கினேன். தமிழினி இணைய இதழில் தேடினேன். அங்கே  ஏழு கதைகளை வாசிக்க முடிந்தது.


பாட்டும் தாளமும்,நாயகி,துறைமுகம் ,பாலாமணி பங்களா,இள நகை, இலையுதிர் காலத்து மழை, அந்தக் கிச்சிலி மரத்தடியில், அரும்பு, கீறல், பங்காளி, மீண்டுமொரு சந்திப்பு,  ஜீவா... இப்படி ஒன்றின் சாயலில் மற்றொன்றில்லாத, வேறு வேறு களங்களில்  எழுதப்பட்ட   இந்தப் பன்னிரெண்டு கதைகளின்  வாசிப்பு  அனுபவம்  நிறைவாக இருந்தது. இதுவரை வாசக சாலை அமைப்பே ஆறு தொகுப்புக்களை வெளியிட்டிருப்பதாக  அறிகிறேன். வாசிக்க வேண்டும்.

[இது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு]

[அவருக்கு நான் எழுதிய மின்னஞ்சல்]

அன்புள்ள வண்ணதாசன் அய்யாவிற்கு,


வணக்கம். நலம் விழைகிறேன்.
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கமலதேவி. நீங்கள் என் கதைகளை வாசித்தது குறித்து முகநூலில் எழுதியிருந்ததை நண்பர்கள் பகிர்ந்தார்கள். நான் முகநூலில் இல்லைங்கய்யா. இங்கு ஊர்ப்பக்கம் அய்யா என்பது பொதுவாக மூத்தவர்களை ,இளையவர்களை, அப்பாக்களை அழைக்கும் இயல்பான சொல். 

கதை தலைப்புகளை குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கதைக்கு உங்கள் வாசிப்பு கிடைத்ததை ஆசியாக உணர்கிறேன். 
எங்கேயோ ஒரு அறையில் தனியே அமர்ந்து எழுதுகிறோம். அதே போல வாசிப்பும் அந்தரங்கமானது. மொழியால் இன்னொரு மனதிற்குள் செல்ல முடிவதை பற்றிய வியப்பு எனக்கு தீர்வதில்லை. மொழி எவ்வளவு அழகிய மனித கண்டுபிடிப்பு என்று எப்போதும் எனக்கு வியப்பு உண்டு. யாரிடமும் இதை கூறினால் 'இதென்னா அதிசயமா' என்று கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று... என் கதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கதைகளை குறித்துக் கூறும் போது இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

நீங்கள் என் கதைகளை வாசித்ததை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்கள் கதைகளை முதன்முதலாக என் பள்ளிக்கூட வயதில் தமிழ் துணைப்பாடத்தில் வாசித்தேன். அந்த வயதில் எழுத்தாளர்கள் எனக்கு ஹீரோக்கள். இன்று எழுத வருபவர் வரை எனக்கு அந்த மனநிலை மாறவில்லை. 

ஒரு அழகிய, மென்மையான,என் மதிப்பிற்குரிய எழுத்தாளரிடம் இருந்து கிடைத்த சொற்களை மனநிறைவுடன் பரவசத்துடன் பிடித்துக்கொள்கிறேன். 
அந்த சொற்களுக்காக எப்போதும் அன்பு.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...